வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சீனா! சில நாள் குறிப்புகள்... (பகுதி - 4)

From மரபு விக்கி

Jump to: navigation, search

நா.கண்ணன் 


ஆசிரியர் தினக் கொண்டாட்டத்திற்கு முன் சீனா, வடகொரியா எல்லை நிலத்தைக் கண்டுவரச் சென்றோம். யாஞ்சியிலிருந்து மிக அருகில் (30 கி.மீ.க்குள்). துமியன் ஆறு இந்த இரு நாடுகளையும் எல்லை வகுக்கிறது. வடகொரியா ஒரு காலமுரண். உலகமே ஒரு திசையில் போய் கொண்டிருக்கும் போது இது வேறொரு திசையில் போய்க் கொண்டிருக்கிறது.


வடகொரியாவில் ஒரு கால் சீனாவில் ஒரு கால்!

NC-CN-01.jpg

எல்லை நிலங்களைக் கண்டவர்களுக்குத்தான் அதன் கொடுமை தெரியும். நான் பெர்லின் சுவர் உடைந்த போது அங்கிருந்தவன். கிழக்கு ஜெர்மனியில் முன்பு பயணப்பட்டவன். தென்கொரியா, வடகொரியா எல்லை நிலத்தை (no man's land) பார்த்தவன். வடகொரியா, தென்கொரியா என்று குத்து மதிப்பாக 38 பாகையில் பிரித்துவிட்டாலும் சட்டப்படி இவ்விரு நாடுகளும் உண்மையில் யுத்த நிலையில் தான் இன்றும் உள்ளன. ஆனால், சீன, வடகொரிய உறவு என்பது சுமுகமாக உள்ளது. துமியன் ஆற்றைக் கடக்கப் பாலங்கள் உள்ளன. இப்பாலங்களே இவ்விரு நாடுகளையும் இணைக்கும் பாலங்களாகவும் உள்ளன.


ஒரு நாடு உண்மையில் வறுமையாக உள்ளது என்பதை எப்படிக் கண்டு கொள்ளலாமெனில், அந்த நாட்டின் குறிஞ்சி நிலம் எப்படி உள்ளது என்று பார்த்தால் போதும். ஒருபுறம் பசுமையான வனங்கள் நிரம்பிய குறிஞ்சி. அது சீனா. இன்னொருபுறம் முழுவதும் மொட்டை அடிக்கப்பட்ட அமண மலைகள். அது வடகொரியா. என்னப்பா இப்படி? என்றால். பசி, மலையை சாப்பிட்டு விட்டார்கள்! என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்கள். உள்ளே என்னமோ செய்கிறது!



என் வலதுகை வடகொரியாவையும், இடது கை சீனாவையும் சுட்டுகிறது!

NC-CN-02.jpg

இங்கிருந்து வடகொரிய நகரத்தை தொலைநோக்கி கொண்டு காணமுடிகிறது. ஆவியூர் (a haunted village) என்று சொல்லும்படி எவ்வகை நடமாட்டமும் இல்லாமல் இருக்கிறது! இங்கிருந்து சுற்றுலா மக்கள் அவர்களை ஏதோ வனவிலங்குகளை காட்சிக்கு வைத்திருப்பது போல் பார்க்கிறார்கள். அவர்கள் இதுகூட ஒரு கவன ஈர்ப்புதான் என எண்ணி தம் தலைவர் புகழ் பரப்பும் பெரிய போஸ்டர்களை வைத்துள்ளனர். அமெரிக்காவில் ஹாலிவுட் எனும் பெரிய மலை விளம்பரம் பிரபலம். அதுபோல் இங்கும் உள்ளது. ஆனால், எம் தலைவர் கிம் ஜோங்க் இல் வாழ்க! என்று இருக்கிறது!! என்ன செய்ய?


வடகொரியாவைத்தொடும் இரயில் தொடர்

NC-CN-03.jpg

பல நேரங்களில் நாம் பிறக்கும் போதுள்ள கிரக நிலைகள் முக்கியம் என்று தோன்றுகிறது. ஒரு கொரியக் குழந்தை இந்த எல்லைக்கு எப்புறம் பிறக்கிறது என்பதைப் பொறுத்து அதன் தலையெழுத்து தீர்மானமாகிறது. தென்கொரிய எல்லைக்குள் பிறந்துவிட்டால், முழு சுதந்திரம். உலகில் எங்கும் சுற்றலாம், என்னமும் பேசலாம், என்னமும் செய்யலாம். சீனாவின் ஜீலியன் (யாம்பியன்) பகுதியில் பிறந்துவிட்டால் சிறுபான்மை இனம். சீனா வழங்கும் சமகால சுதந்திரத்தை அனுபவிக்கலாம். ஏறக்குறைய சுதந்திரமான வாழ்வு. ஆனால், பாவம் வடகொரியாவில் பிறந்து விட்டால்? நரக வாழ்வு. எந்த சுதந்திரமும் கிடையாது. பேச்சுக்குத் தடை, எழுத்திற்குத் தடை. மூச்சு முட்டிப்போகும்!


நான் வருத்தப்பட்டுப் பேசிக்கொண்டிருக்கும் போது டாக்டர். சே (அதுதான் இரண்டு விரல் காட்டும் பெண்) சொன்னாள், நாங்கள் (சீனர்கள்) கூட 60 களில் இப்படித்தானே இருந்தோம்! மா சே துங் (இதை அவர்கள் உச்சரிப்பது அழகாக உள்ளது. நம்மைப்போல் கடித்து துப்புவதில்லை. துங் இல்லை dung!) புகழ் பாடிக்கொண்டு! என்றாள். அப்போது சுதந்திர ஒளி விண்மட்டும் எட்டியது போல் உணர்ந்தேன்!










--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:53, 11 நவம்பர் 2011 (UTC)












Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 11 November 2011, at 13:36. This page has been accessed 2,755 times.