சீனா! சில நாள் குறிப்புகள்... (பகுதி - 2)மரபு விக்கி இருந்துநா. கண்ணன்
நான் கிளம்பும் நேரத்தின் வானிலை அறிக்கை - கொரியாவில் மழை, புயல் என்பது. நல்ல வேளையாக நான் வடக்குப் பகுதிக்குப் பயணப்பட்டதால் தப்பிவிட்டேன். யாஞ்சியில் வந்து இறங்கியவுடன், தெளிந்த வானம், சில்லென்ற காற்று.
ஏர்சைனா விமானம் சர்வதேசப் பயணமென்றாலும் இது கொழும்பிலிருந்து பெங்களூரூ போவது போல்தான். எனவே சிறிய விமானம். இரண்டு மணி பிரயாணம்தான்.
தரை இறங்கியவுடனே ஒரு பரப்பு. எல்லோரும் அடித்துப் பரப்பிக் கொண்டு கீழே இறங்கினார்கள். சரிதான் மூன்றாம் உலகிற்கு வந்துவிட்டோம் என்று உணர்ந்தேன் :-) சென்னையில் வந்து இறங்கும் போதும் இதே பரபரப்புதான். நம்ம ஊரில் ரயில் டிக்கெட் எடுத்து, சீட்டெல்லாம் பதிவு செய்திருந்தாலும் ஒரு பயணப்பரபரப்பு இருக்குமே! அதுபோல்!
மேலும் இச்சிறிய விமான நிலையம் சென்னை போலவே தோற்றமளிக்கிறது. நான் இதைப் படம் பிடிப்பதற்குள் (பேட்டரி மாற்ற வேண்டியிருந்தது) எல்லோரும் போய் வரிசையில் நின்றுவிட்டனர். நான் கழிப்பறைக்குச் சென்றேன். நிச்சயம் இந்தியாவேதான் :-)
இந்த விதத்தில் வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் தெரிகிறது. ஐரோப்பாவில், ஜப்பானில் இறங்கும் போது இந்த பரபரப்பு இருக்காது, அடித்துப்பிடித்து ஓடமாட்டார்கள். கழிப்பறைகள் மிகச் சுத்தமாக இருக்கும். பெய்ஜிங்கில் கழிப்பறைக்குக் கூட சுத்தத்தின் அடிப்படையில் நட்சத்திர அந்தஸ்து கொடுக்கும் வழ்க்கம் உள்ளது.
சீனாவிற்கு என் பயணம் இப்படித் தொடங்கியது. தைவானுக்கு சிலமுறை. ஹாங்காங்கிற்கு சிலமுறை, பெய்ஜிங்க், சிந்தாவு (சில முறை), ஷங்காய். இப்போது யாஞ்சி.
விண்ணிலிருந்து பார்க்கும் போது யாஞ்சி மிக அழகாகத் தோற்றமளித்தது. நகரங்கள் எல்லாம் ஒன்றுதான். ஆனால் சுற்றுப்புற அழகு, சுகாதாரம் முக்கியம். ஏதோ மீண்டும் வேல்ஸ் வந்துவிட்டது போன்ற நினைப்பு. அழகிய மலைகள், ஆறுகள். இந்த விடுமுறை பருவத்தில் (இதுதான் கொரியா, ஜப்பானில் மிக நீண்ட விடுமுறை நாட்கள் (5)) கொரியா தனது முந்தைய ரிகார்டை உடைத்துவிட்டதாக நாளிதள் சொன்னது. அந்த சாதனையை உடைப்பதில் நானும் பங்கு கொண்டிருக்கிறேன் :-)
படங்களை வலைப்பதிவில் (மூன்றாம் கண்) போடலாமென்றால் சீனாவில் பிளாகர் தடை செய்யப்பட்டுள்ளது. கூகுளின் இலவச சேவைகள் எதுவும் இங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:05, 10 நவம்பர் 2011 (UTC) |
