மின்னாடல்: 001
சீதாலக்ஷ்மி, எட்டயபுரம்
பேட்டி கண்டவர்கள்: மின் தமிழ் குழுவினர்
காலம்: நவம்பர் 2009
1.பெயர்: விஜய்
கேள்வி: முதல் முறை பொன்னியின் செல்வன் எந்த வயதில் படித்தீர்கள்,
படித்தபோது உங்கள் அனுபவம்
பொன்னியின்செல்வன் முதன் முதலில் கல்கியில் தொடராக வரும்பொழுதே
படித்தேன். சிவகாமியின் சபதம் முதல் கல்கியில் வரும்
தொடர்களைப் படித்து வருகின்றேன். நேற்று கூட அருள்மொழிவர்மர் தஞ்சைக்குள்
நுழையும் காட்சியைப் படித்துக் கொண்டிருந்தேன்.
நான் ரசித்து உணர்ந்தவைகளை எழுதப் புகுந்தால் அது பொன்னியின் செல்வனைவிட
நீண்டதாக அமைந்துவிடும்.
2. பெயர்: திவாகர்
கேள்வி: ஏன் நடுவே எழுதுவதையே (புத்தகங்களில்) நிறுத்திவிட்டீர்கள்..
1958 ல் எழுத ஆரம்பித்து தொடர்ந்து பல வாரப் பத்திரிகைகள், மாதப்
பத்திரிகைகளில் எழுதினேன். 63 சிறுகதைகள் வெளி
வந்திருகின்றன. ஐந்து ஆண்டுகளில் எழுத்துலகில் உலா வந்தேன். 63ல் பல
மாறுதல்கள் வந்து என்னைக் கட்டிப்போட்டு விட்டன.
தொடர்ந்து எழுதவில்லையெ தவிர எப்பொழுதாவது தலை காட்டுவேன்.
3.பெயர் கீதாசாம்பசிவம்*
எந்தப் பெயரில் எழுதி, அவை புத்தகங்களாய் வந்திருக்கின்றனவா?
சீதாலட்சுமி என்ற பெயரில்தான் எல்லாக் கதைகளும் வந்திருக்கின்றன. ஆனந்த விகடனில் முத்திரைக்கதை வந்திருக்கின்றது வைதேகி என்ற பெயரில் சில வந்திருக்கின்றன. கவிதைப் புத்தகம் மேழிச்செல்வி என்ற பெயரிலும் சிறுகதைத் தொகுப்பு சீதாலட்சுமி என்ற பெயரிலும் வந்திருக்கின்றன
4.பெயர்: இன்னம்பூரான்
கேள்வி: மனதைக் கவர்ந்த முதல் நிகழ்வு எது?
7 வயதில் முதன் முதலில் ராஜாஜி அவர்களையும் கல்கி அவர்களையும் சந்தித்து ஆசி பெற்றதும் அவர்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்ததும் மறக்க முடியாதவை.என் மனத்தில் என்றும் பசுமையாக வாழும் ஓர் நினைவைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
பணிக்காலத்தில் சம்பளமில்லா விடுப்பு எடுத்து கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு 200 ரூபாய் மணியார்டரில் வந்தது. அனுப்பியவன்என்னிடம் வேலை பார்த்த ஒரு டிரைவர். பெயர் துரைராஜ்..
தலித் இனம். சம்பளம் இல்லாமல் இருப்பதால் நான் கஷ்டப் படுவேனாம். அதற்காக அவனால் முடிந்த பணத்தை அனுப்பினானான். 5 குழந்தைகளுக்குத் தகப்பன். நான் ஊட்டியில் வேலை பார்க்கும் பொழுது என்னிடம் டிரைவராக வேலை பார்த்தவன். அவன் வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டிருக்கின்றேன். முகாம் செல்லும் பொழுது அவனுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துப் போவேன். இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். பெறாத பிள்ளை. பொருளாதாரத்தில் அவன் ஏழை. ஆனால் அன்பில் அவன் குபேரன் அவனை நினைக்காமல் இருக்க முடியுமா?
'5. 'பெயர்: ரெ.கா.*
கேள்வி: இப்பவும் நாவல் படிக்கிறீர்களா? கடைசியாகப் படித்த நாவல்?
புத்தகங்கள் படிப்பதை என்னால் நிறுத்த முடியாது. சென்னைக்கு வந்தால் தமிழ்ப் புத்தகங்கள். அமெரிக்காவில் இருக்கும் பொழுது ஆங்கிலப் புத்தகங்கள். ஒரு மாதமாக நூலகம் போகவில்லை. நாவல்கள் நிச்சயம்
படிப்பேன். சொல்லப் போனால் mills and boon புத்தகங்களைக் கூட படிப்பேன். இப்பொழுது படித்துக் கொண்டிருப்பது இராஜாஜிஅவர்கள் எழுதிய வியாசர் விருந்து .. இராமாயணமும் பாரதமும் எத்தனை முறை படித்தாலும் புதியதாக ஏதாவது தெரியும். தினமும் பார்ப்பது குறளும் பாரதியும்.
6. பெயர்: தி.க.திருவேங்கடமணி
கேள்வி: என்ன மனிதர்கள் இவர்களெல்லாம்? என்று முதலில் சலித்துக் கொண்டது எப்போது? யாரைப் பார்த்து?
சலிப்பு. நம்மீது கூட நமக்கு சலிப்பு வரும். முரண்பாடுகளின் மொத்த வடிவம் மனிதன். நான் கோபக்காரி. சலிப்பும் வெறுப்பும் வந்தால், எப்படியும் முயன்று சரி செய்யப் பார்ப்பேன். விலக மாட்டேன். ஆனால் ஒன்றுசலிப்பு என்று ஒரு தனி மனிதன் மேல் இல்லை. சமுதாயத்தில் ஏமாற்றித் திரியும் கூட்டம் மீது உண்டு. சம்ஸ்கிருதம்
செத்துப் போன பாஷை என்று சொல்லுகின்றார். அதே நேரம் அது தமிழை அழிக்கின்றது என்றும் பேசுகின்றார். ஆங்கிலப் பாம்பு தமிழை உண்பதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் கூட்டத்தை என்ன சொல்வது? சாதியை ஒழிக்கின்றோம் என்று நூற்றுக்கணக்கான சாதிகளை உண்டு பண்ணிவிட்டு சமுதாயத்தை பின்னப் படுத்தும்
கூட்டத்தை என் செய்வது.? இப்படித்தான் சமுதாயத்தின் அமைதியை அழிக்கும் செயல்களைக் காணும் பொழுது சலிப்பும் கோபமும் வருகின்றது. ஒன்றும் செய்ய முடியவில்லையே என்றும் என் மேல் சலிப்பு வருகின்றது.
7. பெயர்; ஷைலஜா
கேள்வி; உங்கள் இளமைக்காலத்திலேயே பொதுவாழ்க்கையில் பல பிரபலங்களை சந்தித்திருக்கிறீர்கள் அப்படிப்பார்த்துப்பழகியவர்களில் நீங்கள் உயர்வாய் மதித்த அல்லது பிரமித்த மனிதர் யார், எதனாலென்று கூற இயலுமா?
உன் கேள்விக்குப் பதில் சொல்லுவது எளிதல்ல. நான் பழகியவர்கள் மற்றவர்களுக்குப் பிரபலங்கள். ஆனால் எனக்கு அவர்கள் நண்பர்கள். சாவி, மணியன், வணங்காமுடி ஜெயகாந்தன் சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களிடம் பிரமிப்பு ஏற்படவில்லை கலைஞரை மிகவும் ரசித்திருக்கின்றேன். அவரை முதல்வராகவோ, அரசியல்
தலைவராகவோ நான் நினைத்ததில்லை. ஓர் கலைஞனாய், தமிழ்ப் பித்தனாய் ரசித்திருகின்றேன். எனக்கு பிரமிப்பு கிடையாது. எம்.ஜி. ஆர அவர்களின் மனித நேயத்தைப் பார்த்திருக்கின்றேன். அங்கும் பிரமிப்பு தோன்றவில்லை. அறிஞர் அண்ணாவிடம் போராளியாய்ப் போய் நின்றேன். அவரின் பரிவு மகிழ்வைக் கொடுத்தது. வெண்தாடிக் கிழவரிடம் சென்றேன். நேரில் பார்க்கவும் ஓர் பாச உணர்வே பிறந்தது. என்னைப் பிடிச்சிருக்கு என்றார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை இந்திரா காந்திபோல் வளர்க்கின்றேன் என்று என் அப்பா சொல்லுவார்.
அவர்களிடமும் சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கொடுத்தது. நான் பேச முடியாமல் இருந்த இடம் ஒன்றுண்டு. காஞ்சியில் நான் 4 ஆண்டுகள் பணியாற்றி. இருக்கின்றேன். அவரைப் பார்க்கப் போவேன். எட்ட நின்றே பார்ப்பேன். மணியனுடனும் போயிருக்கின்றேன். நான் சமூக சேவகி. ஆன்மீகவாதியல்ல. என்னைச் சிலையாக்கியவர் காஞ்சியில் வாழ்ந்த மகாப்பெரியவர்தான். இன்னும் காரணம் புரியவில்லை.
8. பெயர்: நா.கண்ணன்
கேள்வி: உங்களது வித்தியாசமான (out of the ordinary) வாழ்க்கைப் பயணத்தில் தாங்கள் வித்தியாசமானவர் என்று எப்போது உணர்ந்தீர்கள்? பின் வித்தியாசமாக வாழ்வது, சிந்திப்பது, செயல்படுவது என்பது வழக்கமாகிப் போனதா? இல்லை தாங்கள் உணர்ந்து அவ்வாறு இருக்க முயன்றீர்களா?
கண்ணா, நான் ஒரு சுயம்பு. இதுதான் நான். ஒன்று தெரியுமா? எப்பொழுதும் வித்தியாசமானவைகளின் மீது ஓர் ஈர்ப்பு சக்தி இருக்கும். அதனால்தான் இத்தனை நண்பர்களோ?. சாதாரணமானவளாக இருக்க முயன்றும் முடியவில்லை. சில சமயங்களில் என் வாழ்க்கைக் கணக்கைப் போட்டுப் பார்ப்பேன். வெற்றியா தோல்வியா? என் காலம் முடியப் போகின்றது. மலரும் நினைவுகள் மன நிறைவைக் கொடுக்கின்றது.
9.பெயர்: மரபூர் ஜெய. சந்திரசேகரன் (எ) ரீச் சந்திரா
இப்போது என் கேள்வி: தமிழ் எழுத்தாளர்களின் நிலை ஏன் உலகளாவி நிற்கவில்லை? ஒரு புத்தகம் மட்டும் எழுதிக் கோடியாய் பெறும் பல எழுத்தாளர்களைப்போல் ஏன் தமிழரில் இல்லை? அச்சகத்தாரின் அடக்குமுறையா, குறுகிய நோக்கா, வியாபாரத் திறமையின்மையா, அல்லது எழுத்தாளர்களின் தேக்கமா? எது? அதிகப்ரசங்கித்தனமாய் இன்னொரு கேள்வி: பெண்ணியம் : உங்கள் விளக்கம்,இன்றைய பெண்களுக்கு. ?
புத்தகங்கள் படிப்பவர்கள் கூட இரவல் புத்தகத்தை வாங்கிப் படிப்பது என்றால் புத்தகங்கள் நிறைய அச்சிட்டு என்ன பயன்? அடுத்து மொழியின் பயன்பாடு. அந்த மொழி தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் கருத்தில் கொள்ள வேண்டும். நான் முதல் முதலில் அமெரிக்கா வரும் முன்னர் மணியனையும் பகீரதனையும் பார்த்து , “அமெரிக்காவின் சிறப்பை ஒன்று கூறுங்கள். நான் போய்ப் பார்க்கின்றேன்” என்றேன். இருவருமே சொன்னது “நூலகம் போ” என்றார்கள். 10000 ஜனத்தொகை இருக்கும் இடத்திலும் ஓர் நூலகம் இருக்கும். நம்மூர் மாதிரி அது தூங்கு மூஞ்சி மடமாக இருக்காது. அமெரிக்காவில் நூலகங்களின் எண்ணிக்கை அதிகம். விற்பனையாகுமென்றால் அச்சகத்திற்கு ஏன் தயக்கம். நூலகங்களுக்கும் குறைந்த அளவே அனுமதிக்கப் படுகின்றது. அதிலும் ஆட்சியாளர்களின் பரிந்துரைப்படி தேர்வுகள். நம்மிடையே வெளியில் பிரபலமாகாத அரிய எழுத்தாளர்கள் உண்டு .
ஆர்வத்துடன் எழுதுகின்றவனும் நாளடைவில் உற்சாகம் இழந்துவிடுவான். எத்தனையோ பிரச்சனைகள்.
அடுத்து பெண்ணியம்பற்றி கேட்டிருக்கின்றாய். லட்சக்கணக்கான ஆண்டுகள் விலங்காய் வாழ்ந்த நிலை மாறி அமைதியான வாழ்க்கைக்குக் கண்டு பிடித்தது குடும்பம் என்ற ஸ்தாபனம். அதன் மூல விக்கிரகம் பெண். அதை ஆண், பெண் இருவரும் உணர வேண்டும்.. சமீப காலமாக ஓர் போக்கு காண்கின்றேன். பத்திரிகைகளிலும்
செய்திகள் வருகின்றன. திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது பாவமில்லை என்று இரு பாலாரும் பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். முதலில் பெண் ஒன்றை உணர வேண்டும். பெண்ணின் உடல்வாகு அவளுக்கு முதுமை சீக்கிரம் வரும். செக்ஸ் பாவமில்லாமல் இருக்கலாம். ஆனால் ஆரோக்கியமான தில்லை.
30 வயதுக்குள் தன் உடம்பைக் கெடுத்துக் கொண்டு சக்கையான பின் அவளுக்குக் கிடைக்கும் வாழ்க்கையில் அவள் நிம்மதி பெற முடியாது. நான் பேசுவது பெண்ணின் உடல் நிலைபற்றி. ஆணோ பெண்ணோ மனம், உடல்
இரண்டிலும் கட்டுப்பாடுடன் இருப்பவர்களின் இன்ப வாழ்க்கைக்கு ஆயுள் அதிகம். பெண்ணியம், சம உரிமை என்ற சொற்கள் இப்பொழுது தவறாக உபயோகப்படுத்தும் போக்குகாணப்படுகின்றது. இது வருந்தத்தக்கது..இது என் கருத்து.
10.பெயர்: சுபா
கேள்வி: தமிழகத்தின் பல மூலைகளில் அரசுப் பணியாற்றியிருக்கின்றீர்கள். பலமாநிலங்கள், நாடுகளுக்கும் சென்றிருக்கின்றீர்கள். அந்த அனுபவ அடிப்படையில் தமிழகத்தில் பெண்களின் நிலையில் சுதந்திரத்துக்குப்
பின்னர் எப்படிப்பட்ட மாற்றம் நிகழ்ந்துள்ளது? எவற்றை பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆரோக்கியமான வளர்ச்சியாகப் பார்க்கின்றீர்கள்?எந்த விஷயங்களில் பெண்கள் இன்றவும் பாதிப்புக்குள்ளாகும் நிலை இருக்கின்றது? எந்த விதமான மாற்றம் தமிழக பெண்களின் வள்ர்ச்சியில் மேலும் நன்மையை அளிக்கக் கூடும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்/நம்புகின்றீர்கள்?
நீங்கள் நிறைய கேள்விகள் கேட்டிருக்கின்றீர்கள் நான் எழுதிவரும் நினைவலைகள் மின் தமிழில் இடுகின்றேன். அதுவும் சமுதாய வரலாறுதான். எல்லோருடைய கேள்விகளுக்கும் பதில்கள் அந்தத்தொடரில் வரும்.
அந்தத் தொடர் எனக்கு சத்திய சோதனை. பதிய வேண்டியவைகளைப் பதிந்தாக வேண்டும். என் கடமையாகச் செய்கின்றேன். ஒரு வீட்டில் பெண்படித்திருந்தால் அந்த வீடே படிக்க ஆரம்பித்துவிடும். பெண்ணின் முன்னேற்றம் குடும்பத்தை, சமுதாயத்தைக் காக்கும் படியாக இருக்க வேண்டும். அவளையும் அழித்துக் கொண்டு குடும்பக் கோட்பாடாடியும் அழிப்பது பெண் விடுதலயல்ல. ஆணுக்குப்பெண் பினாமியாக இருக்கும் நிலையும் மாற வேண்டும். முதலில் பெண்ணுக்கு எதிரியாகப் பெண் வளர்வதும் சரியல்ல. ஒரு பக்கம் ஏறுமுகமும் இன்னொரு பக்கம் இறங்கு முகமும் காண்கின்றேன். இது ஒரு போக்கு. அடங்கி இருந்தவள் திசை தெரியாமல் போவதும்
இயல்பு. வருந்தத்தக்க மாறுதல்கள் வந்துவிட்டதைமறுப்பதற்கில்லை
11. தமிழ்த்தேனீ
கேள்வி: நளினமான, அழகான, மிருதுவான , பெண்மை நிறைந்த சீதாலக்ஷ்மி என்னும் வெகுளியான பெண்ணுள்ளே வீரமும் விவேகமும், துணிவும், புன்மை கண்டு பொங்கும ஆவேசமும், ,நேர்மையும் பல உயர்மட்ட கனவான்களையும், அடக்கியாளும் திறமை இருக்கும் சீதாலக்ஷ்மியை எந்த வயதில், எந்த அனுபவத்தின்வாயிலாக, எந்த தருணத்தில் கண்டுகொண்டீர்கள்?
தம்பி , நாம் சரோஜா வீட்டிற்குச் சென்றோமே, அவள் இன்று கார்கள், பங்களா வசதிகளுடன் இருப்பவள் அன்று ஏழையாய், 3 குழந்தைகளுடன் ஆஸ்பத்திரியில் கணவன் மாரடைப்பால் சாகக் கிடக்கும் பொழுது ஓடி வந்து அழுது நின்றாளே, அன்றுமட்டும் நான் அமைதியாக இருந்திருந்தால் இந்தக் குடும்பம் அழிந்து போயிருக்கும்.
கண்ணகியாய் மேலதிகாரியிடம் போய் கடுமையாகப் பேசினேனே, என்னைப் புரிந்து கொண்ட அதிகாரியாக இருந்ததால்தான் கடுமையான என் பேச்சைப் பெரிது படுத்தாமல் உடனே நடவடிக்கை எடுத்தார்கள். இந்த உணர்வு தானாக வரவேண்டும். இயல்பான என் துணிச்சல், சமுதாய அக்கறை, எனக்கேற்பட்ட அனுபவங்கள், என்னை மேலும் உருவாகிய வாய்ப்புகளே காரணமாகும். வெற்றிகள், தோல்விகள் இரண்டும் கண்டிருக்கின்றேன். கடவுள் என்னை எதற்குப் படைத்தாரோ அதன்படி எல்லாம் நடக்கின்றன.. நான் முருகனின் விளையாட்டு பொம்மை. அவ்வளவுதான்
*பின்னூட்டம்:
1.
கீதா சாம்பசிவம்:
//சம்ஸ்கிருதம் செத்துப் போன பாஷை என்று சொல்லுகின்றார். அதே நேரம் அது தமிழை அழிக்கின்றது என்றும் பேசுகின்றார். ஆங்கிலப் பாம்பு தமிழை உண்பதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் கூட்டத்தை என்ன சொல்வது? //
பதில்கள் அனைத்துமே அருமை. உள்ளத்தில் இருந்து வருகின்றன வார்த்தைகள். இந்தக் கேள்விதான் எனக்குள்ளும் தோன்றுகிறது. செத்துப் போன மொழியைப் பார்த்து ஏன் கூக்குரல் இடவேண்டும்?? நிறையப் பேரிடம் கேட்டுவிட்டேன். நன்றி அம்மா அனைத்து பதில்களுக்கும், நான் கேட்க நினைத்த கேள்விகளே அனைத்தும்,. ஒரு
கேள்விதான் கேட்கணுமோனு நினைச்சு யோசிச்சு யோசிச்சுக்
கேட்டேன். :))))))
2.
ரெ.கார்த்திகேசு:
சீதாம்மா, உங்கள் ஒவ்வொரு பதிலின் சிறப்பையும் பற்றி பல பத்திகள் எழுதலாம். என்னுடைய கேள்விக்கான பதில் பற்றி மட்டும் சொல்லி அமைகிறேன்.என்னுடைய படிப்புப் பழக்கம் பற்றி பிறிதொரு கட்டுரையில் நான் எழுதிய
வரிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. "என் கைக்கு வரும் அச்சிட்ட எந்தத் தாளையும் நான் படிக்காமல் கீழே போடுவதில்லை." அப்படித்தான் நீங்களும்.வியாசர் விருந்தும், இராமாயணமும், பாரதமும் படிக்கின்ற மனதுக்கும் வயதுக்கும் இன்றைக்கு வருகின்ற நாவல்கள் பிடிக்குமா என்றுதான் அறிய விரும்பினேன்.
எனக்கு நாவல் சலித்து விட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன் வந்த நாவல்களைத் தீவிரமாகப் படித்துச் சலித்து விட்டேன். தலித் என்ற முத்திரையோடு எழுதப் படுகின்ற நாவல்கள் என் வாழ்க்கைக்கும் என் சமூகப் பின்னணிக்கும் சம்பந்தமில்லாதவையாகப் படுவதால் அர்த்தமில்லாமல் போய்விட்டன. பின்நவீனத்துவ நாவல்கள் மூளையைக் குழப்பி இருளாக்குகின்றன. இறுதியில் மிஞ்சும் அநுபவமும் இருளானதுதான். ஆகவே
மனநலம் கருதி அவற்றைப் படிப்பதில்லை.
ஜெயமோகன் அபூர்வ எழுத்தாற்றல் கொண்ட நவீன நாவலாசிரியர். ஆனால் அவர் கதைகள் மிக இருண்மை உடையவைதான். ஆகவே படித்தால் வியக்க முடிகிறதே தவிர ஓர் அழகியல் அநுபவமாகக் கருத முடியவில்லை.
இப்போதெல்லாம் கண்ணில் நீர்மல்கச் செய்யும் அழகியல் எழுத்துக்களை எழுதுவது ஆண்மையற்ற செயல் என எண்ணுவது போலத் தெரிகிறது. ஆனால் எழுத்தின் இறுதி வெற்றியைத் தீர்மானிப்பது வாசகனின் பெருமூச்சும் கண்ணீரும்தான் என்றே நான் இன்னும் நம்பியிருக்கிறேன். அதுதான் நாவல். வாசகனின் உணர்வைத் தொடாமல்
அறிவைச் சீண்டி என்ன பயன்? அதற்குத்தான் கட்டுரை இருக்கிறதே!
நீங்கள் கல்கியைச் சிலாகிக்கிறீர்கள். கல்கி போல ஒரு மாபெரும் கதை சொல்லும் சக்தி இன்றளவும் தமிழுலகத்தில் பிறக்கவில்லை. ஆனால் அன்று படித்த கல்கி அனுபவத்தை இப்போது படிக்கும்போது replicate பண்ண முடிவதில்லை. மாறாக தி.ஜா.வை- குறிப்பாக "மோகமுள்" - திரும்பப் படிக்க முடிகிறது. என்ன மாயம் இது?
வாசிப்பை தனது வாழ்வின் முக்கிய பகுதியாகக் கருதும் இன்னொரு ஜீவனின் மனதை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி.