வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சிலம்பும், பெரிய புராணமும் - பகுதி - 3

From மரபு விக்கி

Jump to: navigation, search

பவள சங்கரி 


பூசலார் நாயனார்


நீதி, நேர்மை போன்ற நற்குணங்கள் கொண்ட பெருங்குடிமக்கள் வாழ்கின்ற தொண்டைநாட்டில், திருநின்றவூர் என்றொரு கிராமம். அங்கு நம்பி ஆரூரர், “ மன்னிய சீர்மறை நாவல் நின்றவூர் பூசல்” என்று போற்றிப் புகழ்ந்த மகான் பூசலார் என்பார் வாழ்ந்து வந்தார். ஆன்மார்த்த பூசையில் பெரும் ஈடுபாடு கொண்டவர். சிவபெருமானுக்கு பெரும் ஆலயம் எழுப்ப ஆவல் மேலிட அதற்கான நிதி வசூல் செய்ய முற்பட்டு, அது நடவாமல் போக மனம் நொந்த பூசலார், மறையோனுக்கு உள்ளத்திலேயே ஆலயம் எழுப்ப எண்ணி, நிதி வசூலும் பெற்று, கட்டிடம் எழுப்புவதற்குத் தேவையான சகல பொருள்களும் வாங்கி ,மனத்திலேயே, அடித்தளமும் அமைத்து, உயரமாக ஆலயமும் எழுப்பி விட்டார். அதேசமயம் பல்லவ மன்னன், காடவர்கோன், காஞ்சி மாநகரில், கைலாயநாதர், ஆலயம் கட்டி முடித்திருந்தார். குடமுழுக்கு செய்வதற்கான நல்ல நேரமும் குறித்தார். ஒரு நாள் சிவபெருமான் பல்லவ மன்னனின் கனவில் தோன்றி,


“நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
நன்று நீ டால யத்து நாளைநாம் புகுவோம்; நீஇங்(கு)
ஒன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய்” என்று
கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில்கொண்டருளப் போந்தார்.


உறக்கம் தெளிந்த மன்னன் பேராச்சரியம் கொண்டு, பூசலார் நாயனாரின் ஆலயம் நாடிச் சென்றார். ஊரெல்லாம் விசாரித்தும் ஒருவரும் அக்கோயில் பற்றி அறிந்திலர். பூசலாரைத் தேடி அவர் இருக்கும் இடம் சென்றடைந்து அவரை வணங்கி அவர் ஆலயம் இருக்கும் இடம் குறித்து வினவினார். மன்னன் பணிந்து கேட்பதைக் கண்டு அஞ்சி , தனக்கு ஆலயம் எழுப்ப நிதி வசதி இல்லாதலால், சிவபெருமானின் பேரருளால், உள்ளத்திலேயே ஆலயம் அமைத்ததை எடுத்துரைக்க, ஆச்சரியம் கொண்ட பேரரசன், பூசலாரின் பக்தியைக் கண்டு பேரானந்தம் கொண்டு நெடுஞ்சான்கிடையாக அவர் தாமரை மலர்ப் பாதம் தொட்டு வணங்கினார்.


அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத் தரனார் தம்மை
நன்பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தி னோடும்
பின்புபூ சனைக ளெல்லாம் பெருமையிற் பலநாட் பேணிப்
பொன்புனை மன்று ளாடும் பொற்கழல் நீழல் புக்கார்.



இளங்கோவடிகள், இசைப்பாட்டு வகைகள், உரைப்பாட்டு மடை, நாட்டிய சாத்திரம், கனா நூல், களவு நூல், சிற்ப சாத்திரம், சோதிடம் போன்று பல்வேறு பகுதிகளை தீவிரமாகவும், மிகவும் நுணுக்கமாகவும், எடுத்தாண்டிருந்தாலும், பத்தினி தெயவ வரலாறு என்பதற்கு இக்காப்பியத்தில் ஒரு மேன்மையான இடம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கணவன் , பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பினால், கொலையுண்டபோது, கோபாவேசத்தில் மதுரையை தீக்கிரையாக்கியபோது....


கண்ணகிக்குக் கடவுள் மங்கலம் செய்தல்


மதுரை மூதூர் மாநகர் கேடு உற
கொதிஅழல் சீற்றம் கொங்கையின் விளைத்து,
நல்நாடு அணைந்து நளிர்சினை வேங்கை

பொன் அணி புதுநிழல் பொருந்திய நங்கையை
அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி,
சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று
மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினி கோட்டத்து.

இமையவர் உறையும் இமையச் செல்வரைச்
சிமைய சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வத்து படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றுஇழை நன்கலம் முழுவதும் பூட்டிப்

பூப்பலி செய்து, காப்புக் கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்து
கடவுள் மங்கலம் செய்க என ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறுஎன்.



பல்வகைப் பிறவியினும், தவம் செய்து பெற்றது மனிதப் பிறவி என்பர் பெரியர். அவ்வரியப் பிறவியை அறிந்து கொள்வதில் செலவிட்டு அறிய வேண்டியதை அறிவதே அறிவார்ந்த செயலன்றோ? ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு பாடிவைத்துச் சென்ற, வேடிக்கைப் போன்ற இந்த வினயப் பாடலைக் காணும் போது, இக்காலத்திற்கும் அது பொருந்துவதாகவே அமைந்திருப்பது, வியப்பாயினும், மானுட மனம் நிலையானதோ , காலத்திற்கேற்ற மாற்றம் அடிப்படை குணத்திற்கு பொருத்தமற்ற ஒன்றோ என்றும் எண்ணத் தோன்றுகிறது!

” நந்தவ னத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி - யதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி”


என்ற பாடல் இன்றைய மனிதருக்கும் பொருந்துவதைப் பாருங்கள்!

ஒலிக்கும் கீதங்களே மக்களின் மனநிலையை பிரதிபலிக்கக் கூடிய ஒன்றல்லவா? அந்த வகையில், வேத ஓசை, வீணை, தேவர் துதி, பெண்களின் ஆடலிசை, முழவு இசை என இவையனைத்தும் ஒருங்கே ஒலிக்கும் ஒரு காலத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலையைக் கூறவும் வேண்டுமா?

சிலப்பதிகாரக் காலத்தில் , மக்கள் புலம் பெயரத் தேவையில்லாத வகையில்,பொதிகை, இமயம் போன்று நாட்டில் அனைத்து வளங்களும் நிறைந்திருந்ததாம். அனைத்துத் துறை வல்லுநர்களும் அங்கு கூடியிருந்ததால், பழங்குடிகள் சுகமாக வாழ்ந்த புகார் நகருக்கு என்றும் அழிவென்பதே இல்லை என்று அறுதியிட்டுக் கூறுவதும் சிறப்பு.

நீர்நிலைகளின் பெருமைகளைக் கூறும் போது காவிரி நதியை அடியவர்களுக்கு ஒப்புமை கூறுவது குறிப்பிடத்தக்கது. புனிதமான நதிகளும், ஆறுகளும் நறுமணமுடைய மலர்களைக் கொண்டு இரு கரையிலும் உள்ள அனைத்து ஆலயங்களையும் அணைத்து வழிபடுதலால் அவைகள் அடியவர்களுக்குச் சமம் என்று எடுத்துக் கொண்டு வாழ்ந்த காலமாதலால் மக்களிடையே பிரிவினை பேதமற்று, ஆண்டவன் படைத்த நீர் அனைவருக்கும் பொது என்ற மனப்பான்மையுடன் இருந்ததால் அமைதி நிலவிற்று!

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்பார்கள். மனுநீதி சோழர் காலத்தின் ஆட்சியாளரின் நேர்மையும், நீதியும் மக்களைக் காத்ததோடு ஆண்டவனையும் வரவழைத்தது.

தவறான தீர்ப்பு வழங்கிய மன்னனால், மதுரை மாநகரே தீக்கிரையானதும் அதனால் பல்லுயிர்களும் அழிந்ததுமே இதற்கான சான்று!

ஆண்டவனே ஆனாலும் நீதியின் முன் அனைவரும் சமம் என்று உணர்த்திய காலம் சேக்கிழார் பெருமான் வாழ்ந்த காலம். நம்பி ஆரூரர் வாழ்ந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, மூலவோலையோடு, படியோலையும் இருந்ததாகவும் அறிய முடிகிறது.

பதிவிரதைகளின் பதிபக்தியை தெள்ளென விளக்கிய காரைக்கால் அம்மை மற்றும் கண்ணகியின் வரலாறுகள்.

ஆயினும் அந்த காலத்திலேயே, தன்னைவிட உயர்ந்த நிலையில் இருக்கும் மனைவியை ஒரு கணவனால் ஏற்றுக் கொள்ள இயலாமல் போயிருக்கிறது, புனிதவதியார் நிலையைப் போன்று!

’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்’ என்ற நிலையும் கண்ணகி வரலாற்றின் மூலமாக தெளிவாகிறது!

துறவறம் பூண்ட நிலையிலும் இளங்கோவடிகள் , தம் காப்பியத்தில் பெண்களின் அங்க வர்ணனைகளை அத்துனை ஆழமாக அனுபவித்து எழுதிய பாங்கு, அக்காலத்திய துறவு நிலையின் அளவு கோல் சற்று பரந்து பட்டுதான் இருந்திருக்கும் என்ற எண்ணமும் தோற்றுவிக்கிறது. சேக்கிழார் பெருமானின் வர்ணனைகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதற்கு பூம்பாவையின் எழிலைப் பற்றிய வர்ணனையே சான்று.

உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்! ஆண்டவன் திருமுன் வறியவன், எளியன், செல்வந்தன், சாமான்யன், அரசன் என்றெல்லாம் பாகுபாடில்லாமல் அனைவரும் சமம் என்று தெளிவாகக் கடைபிடிக்கப்பட்ட வழமை கண்கூடு.

பதிபக்தியில் சிறந்து விளங்கிய பெண்டிரை தெய்வமாகத் தொழுத காலமாதலால், பெய்யெனப் பெய்யும் மழையாக நாடு சிறப்பாக இருந்ததும் சத்தியம்.


முற்றும்.








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:37, 30 டிசம்பர் 2011 (UTC)

நன்றி - பிரான்சு உலகத்தமிழ் மகாநாட்டின் மலர்

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 30 December 2011, at 12:37. This page has been accessed 1,631 times.