வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சித்தர் வழியில் 7 அருணகிரிநாதர்

From மரபு விக்கி

Jump to: navigation, search
Imagesஅருணகிரிநாதர்.jpg

தமிழ் இலக்கியத்தில் சந்தக்கவிக்கு அடித்தளமிட்டவர் அருணகிரிநாதர் என்றால் அது மிகையாகாது. இவர் 15-ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும், அருணகிரியார் திருவண்ணாமலையைசேர்ந்தவர் என்றாலும் அனைத்து திருத்தலங்களுக்கும் கால்நடையாகச் சென்று திருப்புகழ் பாடி அருளி திருப்புகழ் சித்தர் ஆனார்.


இவரது தந்தை வெங்கட்டார், தாய் முத்தம்மை. இவர் எப்போது தனது தமக்கையுடன் திருவண்ணாமலைக்கு வந்தார் என்று தகவல் இல்லை.15 - ம் நூற்றாண்டின் மத்தியபகுதி என்று தெரிய வருகிறது. திருவண்ணாமலையில் தனது தமக்கை பராமரிப்பில் செல்லமாக வளர்ந்து வந்தார்.
தனது இளமை வயதிலேயே தாய், தந்தை இழந்து விட்ட காரணத்தால் தமக்கையே தாயாகவும், தந்தையாகவும் இருந்து திருமணம் செய்துக்கொள்ளாமல் தம்பியை தன் மகனாகவே பாவித்து அன்போடு வளர்த்தார். இருந்த போதும் அருணகிரிநாதருக்கு கெட்ட சகவாசமே மிகுந்து இருந்தது. அவரிடம் இல்லாத கெட்ட சகவாசமில்லை எனலாம். இரவு நேரங்களில் தாசி இல்லம் நாடிச் செல்வதில் மிகுந்த நாட்டமிருந்தது. இரவில் தாசி இல்லம், பகலில் சூது, சீட்டாட்டம் என்று பொழுது கழிந்தது. இதனால் அவரது செல்வம் மெல்ல,மெல்லக் கரைந்தது.


தாசியின் இல்லமே கதியாக கிடந்த அருணகிரிநாதருக்குக் குஷ்ட நோயும் வந்தது. ,இதனால் முன்பு கவர்ந்த தாசிகள், இப்போது வெறுத்து ஒதுக்கி கதவையும் மூடினார்கள். குஷ்ட நோயுடன் காமவேட்கையில் தத்தளித்து மனைவியை நெருங்கிய அருணகிரியை அவரது மனைவியும் வெறுத்து ஒதுக்கினாள். தனது தமைக்கையிடம் தனது வேட்கையைக் கூறி தன்னை தாசி இல்லம் அழைத்துச் செல்ல வேண்டினார். இதனால் வெறுத்துப் போன அவரது தமக்கை தன்னையே பெண்டாளுமாறு கூறினார். தமைக்கையின் இந்த வார்த்தையால் கலக்கமும், நடுக்கமுமடைந்து,மனம் நொந்த அருணகிரிநாதர் தனது வாழ்க்கையை இப்படி வீணடித்தோம், தனது நடத்தையால்
குடும்பத்தின் மானமே போனதை எண்ணி நிலையே தடுமாறி வாழ்க்கையின் எல்லையான விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டார்.


இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அருணகிரிநாதர் தனது கால் போன போக்கில் சென்றார். வழியில் அவரை ஒரு முதியவர் தடுத்து நிறுத்தி குன்றுதோறும் வாழும் முருக கடவுளின் பெருமைகளைக் கூறி, சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரத்தையும் அதன் பொருளையும் உபதேசித்தார். அந்த பெரியவர் அண்ணாமலையார் என்றும், முருகக் கடவுள் என்றும் கூறுகின்றனர். முதியவரின் உபதேசத்தை பெற்ற அருணகிரி மனம் தெளிவடைந்தது என்றாலும் சூழ்ந்திருந்த குழப்பம் அவரைச் சாவின் எல்லைக்குத் தள்ளியது. நேராக அண்ணாமலையார் கோயில் வல்லாள மகாராஜா கோபுரத்தில் உச்சியை அடைந்து அங்கிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்ய முயல்கிறார். கீழே பூமியை நோக்கி வந்த அருணகிரியை திடீரென இரண்டு கரங்கள் தாங்கி நின்று, “ அருணகிரியே ! நில்! “ என்ற உத்தரவுடன், “ உனக்கு இங்கு நிறைய பணி காத்திருக்கிறது அந்த பணியினை முடித்து விட்டு எம்மை வந்தடைவாக “  என்று கூறிய வண்ணம்  மயில் மேல் அமர்ந்த குமரக்கடவுள் காட்சியளித்தார்.


பரவச நிலையை  அடைந்த அருணகிரியின் நாவில் சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை எழுதினார். அத்துடன் யோக மார்க்கங்கள், மெய்ஞானம், சித்தி, கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையை அருளி, எம்மைப் பாடுவாயாக! என்று கூறி மறைந்தார். பாடல் புனையும் திறன் தனக்கு இல்லாததை எண்ணித்  திகைத்த அருணகிரியை நோக்கிய தமிழ்க் கடவுள் முருகன் ‘’ முத்தைத்தரு பத்தி திருநகை” என்ற அடியை எடுத்துக் கொடுத்துப் பாடுவாயாக என்று அருளி மறைந்தார். அன்று பிறந்தது தமிழுக்கு சந்தக்கவி என்ற அற்புத நடையிலான பாடல் இலக்கியம். அதன்பிறகு  கம்பத்து  இளையனார் சந்நிதியை தனது இடமாகக் கொண்ட அருணகிரியார் பெரும்பாலும் கந்தனை
நினைந்து தவத்தில் ஆழ்ந்தார். தவம் களையும் வேளையில் அழகிய சந்தப் பாடல்களால் முருகனைப் போற்றிப் பாடினார்.இந்தப் பாடல்களே அருணகிரியின் திருப்புகழாகப் பரிமளித்தது. பரிபூரண யோக நிலையை அடைந்தவர்களுக்கே அருணகிரியின் திருப்புகழ் பாடல்களின் அர்த்தம் புரியும்.


அருணகிரியாரின் புகழ் அது முதல் தமிழகம் எங்கும் பரவியது. அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்த விஜயநகர குறுநில மன்னன் பிரபுடதேவராயன், அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் முருகன் காட்சி கிடைக்கும் பாக்கியத்தை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதுமுதல் அரசனுக்கும் அருணகிரிக்கும் இடையில் அழ்ந்த நட்பு வேர்விட்டது. அப்போது ஆஸ்தான பண்டிதனாக இருந்த தேவி உபாசகர் சம்பந்தாண்டானுக்கு அருணகிரி மீது பொறாமை வளர்ந்தது. மேலும் அருணகிரியின் சீடராக மன்னன் பிரபுட தேவராயன் மாறியதும் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றிய மாதிரி ஆகியது. மன்னன் பிரபுட தேவராயனிடம் சென்று சம்பந்தாண்டான், “ மன்னா..., அருணகிரியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. தாசி வீடே கதியென்று கிடந்தவன். அதனால் தன் தமைக்கை, மனைவி, குடும்பத்தார் உறவினர் எல்லோரும் வெறுத்து ஒதுக்கினர். அதன் பின் ஏதோ மாய வேலைகளால் அவனது குஷ்டநோய் மறைந்திருக்கலாம். அதனை மறைத்து தனக்கு முருகன் காட்சி கொடுத்தான், நாக்கில் அட்சரம் எழுதினான் என்று பொய் சொல்லி திரிகிறான். அவனை நம்ப வேண்டாம் ” என மெய்யைத் திரித்துப் பொய்யைக் கூறினான்.


மன்னன் அறிவான் எது உண்மையென. பிரபுட தேவராயன் சம்பந்தாண்டானுக்கு அருணகிரியின் பெருமையை உணர்த்தவும், புரிய வைக்கவும் இதுவே சரியான தருணம் என்று தோன்றவே, இருவருக்கும் ஒரு போட்டியை வைத்தார்.யார் தங்கள் யோக,பக்தி பலத்தால் அவரவர் வணங்கும் தெய்வங்களை காட்சி தரச் செய்கின்றனரோ அவரை நான் நம்புகிறேன் என்று கூறினான். இதனை ஏற்று சம்பந்தாண்டான், தேவி
பராசக்தியை காட்சி தருமாறு நெஞ்சுருக வேண்டினான். அந்த வேண்டுதலில் செருக்கு இருந்ததை அறிந்தாள் பராசக்தி. இருந்த போதும் பக்தனின் வேண்டுதலைத்  தவிர்க்க இயலவில்லை. அதே போன்று அருணகிரி,அண்ணாமலையார் கோயிலின் வடக்கு மண்டல தூணில் முருகனைக் காட்சி தருமாறு நெஞ்சுருக வேண்டினார். சம்பந்தாண்டான் அம்பாளின் பெருமையை புகழ்ந்து பாடலானான். அதே வேளையில் அம்பாள் முருகனை தன் மடியில் இருத்தி, நகரவிடாமல் அணைத்திருந்தாள்.

Imagesமுருகன்.jpg

இதனை அறிந்த அருணகிரி அம்பாளைப் புகழ்ந்து  பாமாலை பாட அதில் அம்பாள் லயித்து இருந்த சமயம் முருகன் நழுவி,தன் பக்தனின் பெருமையினைப்  பறைசாற்ற மயில் மீதமர்ந்து வடக்கு மண்டலத் தூணில்  காட்சி அளித்தார்.  இதனால் சம்பந்தாண்டானுக்கு அருணகிரியைப் பழிவாங்க வேண்டும்  என்ற குரோத எண்ணம் இன்னும் மேலோங்கி நின்றது.இந்தச் சமயத்தில் மன்னனுக்கு கண் நோய் ஏற்பட்டது. இதுவே சரியான சமயம் என, மற்றும் சிலரையும் கூட்டு சேர்த்து ‘கண் நோய்க்கு’ பாரி ஜாத மலர் கொணர்ந்தால் நோய் தீரும் எனவும், அதனை முடிக்க அருணகிரியால் முடியும் என வேண்ட, பாரிஜாத மலரை கொண்டு வருவதாக அருணகிரியும் வாக்களித்தார். அண்ணாமலையார் கோயிலின் நான்காம் பிரகாரத்தின் கீழ் திசையில் காணப்ப்டும் கோபுரத்தின் மேல் நிலையின் உட்பகுதியில் தனது கூடு விட்டு கூடு மாறும் கலையின் மூலம் தனது உடலை பத்திரமாக ஒரு மூலையில் கிடத்தி  அங்கு இறந்து கிடந்த பச்சைக்கிளியின் உடலில் தனது உயிரைச் செலுத்திக் ,கிளி வடிவம் தாங்கி தேவலோகம்  சென்று பாரிஜாத மலரை எடுத்து வருவதற்குள் சம்பந்தாண்டானும், சூழ்ச்சிக்காரர்களும் அருணகிரியின் உடலை எரித்து விட்டனர்.


பாரிஜாத மலருடன் வந்த அருணகிரி தனது உடலை காணாமல் திகைத்து, நடந்த சம்பவத்தை அறிந்து கிளி வடிவாகவே கோபுரத்தில் தனக்கு விதிக்கப்பட்ட காலம் வரை வாழ்ந்தார். இதனால் அந்த கோபுரம் கிளி கோபுரம் என்றுதான் அழைக்கப்படுகிறது.  கிளி வடிவில் இவர் பாடியது கந்தர் அநுபூதி நூலாகும்.



கந்தர் கலிவெண்பா
***********************

.துருவு மருவு முருவருவு மாகிப்
பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முக்தியளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்

துருவு மருவு முருவருவு = உருவம், அருவம், அருவுருவம்
பருவ வடிவம் = அடியார் மனப்பக்குவத்திற்கேற்ற திருமேனி
இருள்மலம் = ஆணவ மலம்
மோகம் = மயக்கம்
மலபாகம் = மலங்கள் நீங்கும் நிலை(பக்குவம்)
தேகமுற = உருவெடுக்கும்படி


ஆதிமுதலாகிய ஒரு வடிவத்திலே நின்று,உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வடிவங்களாகி

(அடியாருக்கு அவர்தம் மனப்பாங்குக்கு ஏற்றவாறு வெளிப்படும்) பெரிய வடிவங்கள் பலவற்றை உடையவனே!

அறியாமைக்குக் காரணமான பாசத்துள் உழன்று மயக்கத்தில் முழுகியுள்ள எல்லா உயிர்களுக்கும்

வீடுபேற்றைத் கொடுப்பதற்கேற்றபடி, அந்தப் பாசங்கள் நீங்கத் திருவருள் வைப்பவனே!
--

தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்
--

--Geetha Sambasivam 09:05, 26 பெப்ரவரி 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 26 February 2011, at 09:11. This page has been accessed 7,155 times.