வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சித்தர் வழியில் போகர் 3

From மரபு விக்கி

Jump to: navigation, search

Contents

- போகர் 

Images2போகர்.jpg

நாள் தோறும் பக்தி வெள்ளத்தில் மிதக்கும் பழனி மலை முருக ஆண்டவரை உருவாக்கிய ஒருவரைப் பற்றி இன்று நம் சிந்தையினை செலுத்துவோம். துணிகளை வெளுக்கும் ஏழை சலவைத் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தவர் அதுவும் தமிழ்நாட்டில் இல்லை, சீனாவில். படிப்பறிவில்லா பாமர பெற்றோருக்கு..சித்தர்களில் மனிதகுலத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டு, அவர்களுக்காவே வாழ்ந்தஉன்னதச் சித்தர்..., அவர்தான் போகர்.


அறிவாளிகளை, ஆன்றோர்களை, மகான்களை, சித்தர்களை முதலில் அவமானப்படுத்தி பின்அவர்கள் காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்பது நமது பழக்கம்.. அத்தகைய புனிதரை அறிந்து கொள்ளாமல் அவமதிப்புக்கு உள்ளானவர் போகர்.தாகத்துக்கு தண்ணீர் கேட்டு ஒர் அக்ரஹாரத்திற்கு புகுந்தார் போகர். பரட்டைத் தலை,கந்தை கோவணம், குளிக்காத  உடல். கும்பல் கும்பலாக வேதம் ஓதிக் கொண்டிருந்த அந்தணர்கள்

இவரின் தோற்றம் கண்டு கோபத்துடன் விரட்டினர். தகாத வார்த்தைகளை வீசிய அவர்களைக் கண்டு மனம் நொந்தார்.மனம் நொந்த போகர், அவ்வழியே சென்ற பூனையை குறும்பாக அழைத்து அதன் காதில் ஏதோ ஓதினார். தெருவின் மத்தியில் அமர்ந்த பூனை அழகாக, அற்புதமாக வேதம் ஓதத்தொடங்கியது.


உண்மையை உணர்ந்த அந்தணர்கள் ‘தெரியாமல் உங்களை அவமதித்துவிட்டோம். எங்களைமன்னித்து அருளுங்கள்’ என்ற வேண்டி போகர் காலில் வீழ்ந்து வணங்கினர்.போகரைப் போன்ற சித்தர்களுக்கு இப்படிச் சித்து வித்தை காட்டி மக்களை மயக்க அவசியமில்லை.. சில,பல சமயங்களில் இப்படி செய்து காட்டி அவர்களை நல்வழிப்படுத்தவே..சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் வேடிக்கைக் காட்டி உணவு ஊட்டுவது போல்..போகரின் முன் மக்கள் குவிந்தனர். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.’சுவாமி, மிகக் கொடிய வறுமையையும், பசியையும் நாங்கள் எதிர் நோக்கியுள்ளோம். மரணத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். அதன் வலியை மறக்கவே நாங்கள் வேதம் ஓதுகிறோம்,

என்றனர். பிணிகளில் மிகக் கொடியது இந்த பசிப்பிணி. எங்களது வறுமையை நீக்கி எங்கள் உயிரை உயிர்பிக்க வேண்டுமென சூழ்ந்திருந்தவர்கள் வேண்டினர்.

Imagesபோகர்.jpg
சூழ்ந்திருந்தவர்களை நோக்கி, உங்கள் வீடுகளில் உள்ள உலோகப் பாத்திரங்களை கொண்டுவாருங்கள் என்றார்.. உடன் அனைவர் வீட்டிலிருந்த பாத்திரங்கள் யாவும் கொண்டு வந்துகுவித்தனர். அந்தப் பாத்திரம் பண்டங்கள் மீது விராட்டிகளை அடுக்கி நெருப்பு மூட்டினார்.பாத்திரங்கள் யாவும் நன்கு பழுக்கக் காய்ந்து கொண்டிருந்த போது தன் இடுப்பிலிருந்தகுப்பியை திறந்து அதிலிருந்த அதிரசத்தை எடுத்து சில துளிகளை அவற்றின் மீது தெளித்தார்.பாத்திரங்கள் யாவும் சொக்க தங்கமாயின. மக்கள் அதிசயித்து ஆனந்தம் அடைந்தனர்.. போகர் அந்தப் பொன்னை எல்லாம் அவர்களிடமே கொடுத்து விட்டார். .பண்புள்ள மக்களுக்கு மனத்தெளிவு, மூலிகை ரகசியம், வைத்தியசாஸ்திரம் போன்றவைகளை

போதித்தார். ஏராளமான சீடர்களை உருவாகினார். மக்களூக்கு முடிந்த வரை நன்மைகள் செய்தார். அவரை துயரப்படுத்திய ஒரு நிகழ்வு அவரை மிகவும் துயருறச் செய்தது. மரணம்மனிதனை எப்படி மிக அற்பமாக ஆட்டிப் படைக்கிறது. பதுங்கிருந்து மெல்ல பாயும்

போது இந்த மானுடம் அஞ்சுகிறது.திருமணமான சில நாட்களிலேயே கணவன் இறந்துவிட்டான். இளம்பெண்ணான மனைவி கதறினாள். உறவினர் ஒப்பாரி வைத்து வருந்தினர்..


போகர் மனம் கலங்கினார். என்ன கண்டுபிடித்து என் பயன். இறந்தவர்களை மீண்டும் உயிர்பிக்கும் வழிவகை இல்லையே என வருந்தினார்.இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் ‘சஞ்சீவினி’மார்க்கத்தை அறிந்தால் மாண்டவர்களை உயிர்ப்பு செய்யலாம் என அறிந்து அம்மந்திர சக்திபெற மேருமலையில் சித்தியடைந்திருக்கும் நவ சித்தர்களை நாடினார். சமாதி கண்ட ஒன்பதுசித்தர்களும், போகருக்கு தரிசனம் தந்தனர்.’சித்தர் பெருமக்களே! மாண்டவர்களை மீளச்செய்யும் மந்திரத்தை நீங்கள் எனக்கு அருளவேண்டும்.’ என்று மண்டியிட்டு வேண்டினார்.

இயற்கைக்கு மாறாக செயல்பட நினைக்கும் உனக்கு தெய்வ குற்றம் வந்தடையும் என நவசித்தர்கள் வெகுண்டார்கள். இதனால் நீ கற்ற வித்தைகள் யாவும் மறந்து போகாட்டும் !"என ஒரு சித்தர் சாபமிட்டார்..


’’மக்கள் தொண்டாற்றுவதும், இறைவனின் படைப்பின் மீது இரக்கம் கொள்வது பாவம் என்றால்... நான் மகிழ்ச்சியுடன் இந்த சாபத்தினை ஏற்று இங்கேயே இறந்துவிடுகிறேன்”என்றார். இதனை கேட்டு சித்தர்கள் திடுக்கிட்டு, போகர் மீது இரக்கம் கொண்டனர்.‘போகரே, காயகல்ப முறைகளை நன்கு அறிந்தவன் நீ. இறந்தவர்களை உயிர்ப்பிப்பதுசரியல்ல. இயற்கைக்கு மாறானது. ஆண்டவனின் அருள் பெற்றவர்களே முடியும். ஆனால்,

அதற்கு மாற்றாகத் தகுதியுள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நீண்ட நாட்கள் வாழும்காயகல்ப முறைகளைச் சொல்லிக்கொடு.அவர்களை நீண்ட நாள் வாழவழிவகைகளை செய்.உன் மீது கொண்ட அன்பினால் சொல்கிறோம், என மேலும் சில காயகல்ப முறைகளை விளக்கினார்கள்.. இதுவரை தான் அறிந்தவற்றை, அனுபவங்களை அத்தனையும் நூல்களாகத் தொகுக்கத் தொடங்கினார். தன் சீடர்களுக்கும் போதித்தார்.இறவாமல் இருந்தால் பிறவாமையும் உறுதி. ஆகவேதான் சித்தர்கள் பிறவாமையை இறைவனிடம் வேண்டி நின்றனர்.’நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடு போய் எல்லை வாசல் கண்டபின் இனிப்பிறப்பதில்லையே’என சிவ வாக்கியரும் உபதேசித்தார்.


மண்ணில் வீழ்ந்து அழிந்து போகக் கூடிய உடலை அழியா கல்ப தேகமாக்கி காலம் கடந்து வாழ்ந்து வந்த சித்தர்களின் அருட்கொடையாக போகர் எண்ணற்ற வைத்திய நூற்களைஎழுதினார்.இலகிமா சித்து என்பது கனமான இந்த உடலை இலகுவான பஞ்சு போலாக்குவது. இந்த

சித்தியால் புவி ஈர்ப்பு விசையை விஞ்ச இயலும். நினைத்த மாத்திரத்தில் தன் உடல் எடையைகுறைத்து இலகுவாக்கி பஞ்சு போல் சித்தர்கள் ஆகாயத்தில் சஞ்சரிக்க முடிகிறது. மனித உடல்ஒரு அற்புதம் வாய்ந்தது. இந்த உடல் மேல் நோக்கி நகரக்கூடிய தன்மைக்கு ஆதாரமாக இருக்கிற உதானன்(காற்று) எனும் வாயுவை வெற்றி பெற்றால் இலகிமா சித்தியாகும். ஆகாயம்உடல் இந்த தொடர்பை இவ்வகையில் சம்யமம் செய்யும் போது இந்த வித்தை கைகூடுகிறது.நமது உடல் இலேசாகிறது.


ஆகாய வானில் நடப்பது, படுப்பதும், நிற்பதுமான ககனப் பயிற்சில் போகர் வல்லவராக திகழ்ந்தார். இந்த இலகிமா சித்தியால் போகர் அவ்வப்போது சீன நாட்டுக்கு நினைத்த நேரத்தில் சென்று வந்தார். சீனாவில் வாழ்ந்த காலத்தில் சீன மக்களுக்கு இவ்வகை சித்துக்கள் மூலம் பல்வேறு உதவிகள் செய்திருக்கிறார். கடற்பயணம் செய்ய நீராவிக்கப்பலையும், பறக்கும்இயந்திரம் ஒன்றையும் உருவாக்கித் தந்துள்ளார்.

சித்த இரகசியங்களை பொதுவுடமை யாக்குவதில் அலாதி ஆர்வம் கொண்டவராய் போகர்இருந்த காரணத்தால் பல்வேறு சங்கடங்கள் இருந்தன.மூத்த சித்தரான சிவபெருமான் ஒருமுறை சவுக்காரத்தின் பெருமையை அன்னைக்குச் சொல்ல,அன்னை அதனை நந்திக்கு உபதேசித்தாள். நந்தி திருமூலருக்குக் கூறி அவர் அதனைக் காலாங்கிநாதருக்கு உபதேசிக்க அவர் அதனை போகருக்கு இரகசியமாய் உரைத்தார். ஆனால், போகர் சவுக்காரத்தின் இரகசியம் மிகக் கடினமானதாகவும் யாரும் எளிதில் புரிந்துகொள்ள இயலாமற்

இருந்ததால் எல்லோரும் அறிந்துக்கொள்ளட்டும் என்று எளிமையாக வெளிப்படையாகமூடுமந்திரமின்றி எழுதிவிட்டார்.


இப்படி வெளிப்படையாக எழுதிவிட்டதை கண்டு மற்ற சித்தர்கள் யாவரும் அலறினர்.இதனை கூர்மமுனிவர் அகத்தியரிடம் புகார் செய்தார்.. அகத்தியர் இதற்கு தீர்ப்பு செல்ல வேண்டியர்கைலாசநாதர். அவரிடமே முறையிடுவது சரியான வழி என்று கைலாயம்சென்றனர்.

’’அய்யனே! போகமுனிவர் சித்தர்களுகெல்லாம் பெருந்துரோகம் இழைத்துவிட்டார். வெடியுப்பு,இரவாதம், யோக மார்க்கம், ஞானமார்க்கம் போன்ற இரகசியங்களை வெளிப்படையாக வெளிப்படுத்திஇருக்கிறார்’’, என புகார் செய்தனர்.‘போகா! நீ பூனைக்கு வேதங்களை உபசேத்தித்துள்ளாய்., விதிப்படி வறுமையில் துன்பப்பட்டவர்களுக்கு அவர்களின் துயரை நீக்கியுள்ளாய். இறந்தவர்கள் உயிர்ப்பிக்கத் துடிக்கிறாய். நான் பார்வதி தேவிக்கு உபதேசத்த தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழுகாண்டமாக எழுதியிருக்கிறாயாமே!’ என சிவபெருமான் கேட்டார்.


‘ ஆம் அய்யனே, தாங்கள் அறியாததா ?’ என்றார் பணிவாக.‘ அதெல்லாம் சரி இப்படி தேவரகசியங்களை வெளிப்படையாக வெளியிடுவது சரியா?அதுவும் எல்லோரும் எளிதில் புரியும்படியாக எழுதியுள்ளீராமே, உண்மைதானா?


‘ஆம்.. அய்யனே’


’சரி அதனை நம்மிடம் காட்டவும். நான் படித்துப் பார்க்கிறேன்’


‘ அய்யனே, தங்களுக்கு அந்தச் சிரமம் வேண்டாம்.. நானே படித்துக் காட்டுகிறேன்’ என்று போக முனிவரே படித்துக் காட்ட தொடங்கினார். தான் எழுதிய உரையை பதம் பிரித்து விளக்கிடதக்ஷிணாமூர்த்தி பேரானந்தம் கொண்டார்.


‘’அற்புதம் போகரே! சித்த இரகசியங்களை இவ்வளவு எளிமையாக, வெளிப்படையாக எழுதவில்லை.இவைகளை பத்திரமாக மலைக் குகைகளில் வைத்து காக்க வேண்டும்’’


” அய்யனே! நான் ஏற்கனவே இதனை எல்லாம் வெளிச்சமாக்கி விட்டேன்”


“ அதுவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான். நல்ல காரியங்கள் செய்துள்ளீர்கள்.ஞானத்தின் பெருமையை,செல்வாகும் பிறருக்கு தெரிவிப்பது உலக நன்மைக்கே ” என்று போகரை பாராட்டினார்.


போகர் எல்லோரையும் வணங்கிவிட்டு பொதிகை மலைக்கு ககனக மார்க்கமாக சென்று, தனது கூர்மநாடியில் தியானத்தை நிலைத்து தவத்தில் அமர்ந்தார்.கூர்ம நாடியில் சம்யமம் செய்யும் போது மனம் நடுங்காது நிலைத்து நிற்கச் செய்ய இயலும்.இந்நாடிஆமை வடிவில் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது தொண்டைக் குழிக்கும் கீழே அமைந்துள்ளது.இதில் சமயமம் செய்து வந்தால் மனம் அசைவின்றி நிலை பெற்று சுகம் பெறலாம்.நமது உடலில் சுமார் 72 ஆயிரம் நாடிகள் உள்ளன. நாடிகளின் உயிர்ச் சத்தாக,இயக்கமாக பிராண வாயுஉடலெங்கும் ஏந்தி வியாபிக்கிறது. நாடிகளை தொடர்ந்து நரம்பு மண்டலத்திற்கு மின்னாற்றலையும், துரிதஇயக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. மனதை ஆளுமை செய்யக்கூடிய வல்லமையுடையது. தியானத்தின்அடிப்படையான மனதினை ஒருமுகப்படுத்த சித்தர்கள்,ஞானிகள் இதனை வெற்றி கொண்டதினால் அனைத்துசித்திகளும் பெற்றனர்..


தியானத்திலிருந்த போகரை அம்பாள் உமாதேவி. ’’போகா… நீ பழனி மலைக்கு சென்று முருகனை நினைந்துதவம் செய்.. முருகன் உனக்கு வழி காட்டி அருள் புரிவான்” என வழி காட்டினாள். தியானத்திலிருந்து விடுபட்டுஎழுந்த போகர் பழனிக்குச் சென்றார். அங்கு போகர் முருகனுக்கு பழனியாண்டவராக,தண்டபாணியாகக் காட்சியளித்து உபதேசித்தார். பக்தர் அனைவரும் தன்னை வணங்கும்படியாக எவ்வாறு பிரதிஷ்டை செய்து வணங்க வேண்டும் என்பதைமுருகன் போகருக்கு போதித்தார். பழனி ஆண்டவர் கூறியபடியே 9 நவபாஷாணத்தில் தண்டபாணி திருவுருவம் செய்யத் துவங்கினார்.போகரது சீடர் புலிப்பாணி இறுதி வரையிலும் பழனி ஆண்டவர் திருவுருவம் செய்யும் பணியில் போகருக்குத் துணையாக, உதவியாக இருந்தார்.



பாஷாணத்தில் 64 வகையுண்டு. [பாஷாணம் என்றாலே விஷம்] 64 பாஷாணத்தில் நீலி என்பது ஒரு பாஷாணம்.இந்த நீலி எனும் பாஷாணம் 63 பாஷாணங்களின் விஷத்தன்மை முறிக்கக்கூடியது.பழனியாண்டர் சிலை 9 வகை பாஷாணத்தை கொண்டு சேர்த்து அதனை நீர் வடிவாக்கி, பின் திடப்பொருளாக்கிபின் சிலையாக உருவாக்கப்பட்டது.பழனி மலை முருகப் பெருமான் தண்டாயுதபாணி காட்சி அளிக்கும் சிலை மேல் ஊற்றி, ஊறி வரும் எந்தஅபிஷேகப் பொருளும், பால், விபூதி, பஞ்சாமிர்தம் யாவும் பிரசாதமாகும். பிரசாதம் நோய் நொடிகள்,வியாதிகள்

அணுகாமலிருக்க முருகனின் திருவருளாகும்.பழனியாண்டரிடம் சிலை செய்யும் போது எழும் ஐயங்களை தீர்த்துக்கொள்ள சன்னதிக்கும், தனதுஇருப்பிடத்திற்கும் ஒரு சுரங்கப்பாதையினை அமைத்துக்கொண்டார்.


‘’புலிப்பாணியாரே! எனக்குப் பின் பழனியாண்டவரை அபிஷேக ஆராதனை செய்து பராமரிப்பது உமது பணி’’எனக் கூறிவிட்டு முருகனுக்கு அருகிலேயே போகர் சமாதி நிலையினை பெற்றார்.போகர் தாம் பிறந்த சீன தேசத்திற்கு அடிக்கடி சென்று தங்கி வருவதும் உண்டு. சில,பல காலம் அங்கேயேதங்கியதும் உண்டு. போ யாங் என்ற பெயர் கொண்ட போகர், சீனாவில் வா ஒ சியூ என்ற பெயரில்சிறந்த ஞானியாகவும் இருந்துள்ளார். போகரின் ஏழாயிரத்தில் பல வகையான மருத்துவம் பற்றி செய்தியும்,மாற்று மருந்தும்,மூலிகை அதனிலிருந்து சாறு ரசம் தயாரிப்பது, வேர்,தண்டு,இலை,காய், பூ இவைகளின்வேதியில் பண்புகளை விரிவாக ஆராய்ந்து குறிப்பு எழுதியுள்ளார்.


[ நன்றி - நூல் குறிப்பு உதவி :- இறவா சித்தர்கள், சித்தமெல்லாம் சிவம்]





எளியெனின் நன்றிகள்,வணக்கம்

அன்பொடு, கிருஷ்ணன்,சிங்கை

--Geetha Sambasivam 16:07, 8 பெப்ரவரி 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 25 March 2011, at 08:32. This page has been accessed 8,243 times.