வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சித்தர் வழியில் குரு நமச்சிவாயர் 22 A

From மரபு விக்கி

Jump to: navigation, search

குகை நமச்சிவாயர் மாணவரை நோக்கி, "நீர் பெருமான் எழுந்தருளியிருக்கும் சிதம்பரத்திற்குச் சென்று பொன்னம்பலத்தின் முன்னே நின்று கூத்த பெருமானை வணங்கி நிற்ப்பீராக! அங்கே, அப்பெருமான் நம்மைப் போல் தரிசனம் கொடுத்தால் இருப்பீராக; இன்றேல் இவ்விடம் வந்து சேர்க!" என்று நவின்று பத்துப் பாடல்களால் ஆசிரியர்க்கு வணக்கம் தெரிவித்து நின்றார். ஆசிரியரிடமிருந்து, "புறப்படலாம்" என்ற சொல் பிறந்தது. உடனே குரு நமச்சிவாயர் தனியாக சாயுங்கால நேரத்தில் புறப்பட்டுக் கிழக்கு நோக்கி ஒரு காத தூரம் நடந்தார். இருள்வந்தது. அங்கு தங்கத் தகுதியானதொரு இடம் பார்த்து ஒரு ஆலமரத்தின் கீழ் சிவயோகத்தில் அமர்ந்தார். பின் பசி மேலிட்டு, உண்ணாமுலை அம்மையாரை நோக்கி ஒரு வெண்பா பாடினார்.

Imagesguruve.jpg

"அண்ணாமலையாரகத்துக்கினியாளே

உண்ணாமுலையே உமையாளே-நண்ணா
நினைதொறும் போற்றி செய நின்னடியருண்ண
மனை தொறும் சோறு கொண்டு வா..."


என்று குரு நமச்சிவாய சுவாமிகள் இவ்வெண்பாவினைப் பாடிய நேரத்தில் அண்ணாமலையாருக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து பொன் தாம்பாளத்தில் இட்டு நிவேதித்துக் கோயிலில் வைத்து அதனை எடுத்துச் செல்ல மறந்தவராய்க் காப்பிட்டு அர்ச்சகர் முதலியோர் அவரவர் வீடு சேர்ந்தனர். அதனை அறிந்த உண்ணாமுலைத் தாயார் அந்நிவேதனத்தைத் தட்டுடன் கொண்டு வந்து குரு நமச்சிவாய மூர்த்திக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார். விடிந்த பின் அர்ச்சகர் முதலியோர் கோயிலுக்குச் சென்று கதவைத் திறந்து பார்த்தபோது, பொற்றாம்பாளம் காணப்படவில்லை. அர்ச்சகர்களும், ஊரில் உள்ள பெரியோரும் திகைப்புற்று, "யாரோ கள்வர்தாம் களவாடி இருக்கவேண்டும்" என்று கருதி ஆராய்ந்து பார்க்கலாயினர். இதனால் இருபது நாழிகை மட்டும் கோயில் பூசை நடைபெறாமல் இருந்தது. அப்போது அங்கிருந்த ஒரு அர்ச்சகர் சிறுவனுக்குத் தெய்வம் வந்து, "நமச்சிவாய மூர்த்தி சிதம்பரத்திற்குச் செல்லும் வழியில் ஒரு ஆலமரத்தின் கீழ் இருக்கிறார். அவருக்கு உண்ணாமுலைத் தாயார் அமுது கொண்டு போய்க் கொடுத்தார். அங்கே தாம்பாளம் கிடக்கிறது. எடுத்துக்கொண்டு வரவும்!" என்றான்.

Imagesஅண்ணாமலை.jpg

அதனைக் கேட்ட அர்ச்சகர்களும் பிறரும் இறைவனை வாழ்த்தி அவ்விடம் சென்று தாம்பாளத்தைக் கண்டெடுத்துக்கொண்டு அண்ணாமலைக்கு வந்து சேர்ந்தனர். மறுநாள் பகலவன் தோற்றமாகும் போது குரு நமச்சிவாயர் எழுந்து தன் ஞானாசிரியரைத் தொழுது கிழக்கு நோக்கிச் செல்லும்போது, இருடிவனம் என்பதொரு திரு நகரினைக் கண்டார். அந்நகரில் அம்மையும், அப்பனும் அர்த்த நாரீஸ்வர வடிவத்தில் எழுந்தருள்யுள்ளனர். அவ்வடிவம் அகத்திய முனிவரால் பூசிக்கப்பெற்றதாகும். அங்கு ஐயாயிரம் கொண்டான் என்றொரு புனித தீர்த்தம் உண்டு. அதில் நீராடி பூசை முடித்துத் தூய மனத்துடன் சுவாமியைத் துதித்துச் சிவயோகத்தில் இருக்கும்போது பசி வந்தது. அப்போது அன்னை பராசக்தியை நோக்கி,


"தாயிருக்கப் பிள்ளை தளருமோ தரணியில்
நீயிருக்க நான் தளர்தல் நீதியோ-வேயிருக்கும்
தோளியோ விண்ணோர் துதிக்கும் திருமுத்து
வாளியே சோறு கொண்டு வா!"


என்று ஒரு வெண்பாவினை இயற்றினார். அம்மை அதனைத் திருச்செவியில் ஏற்று, "குரு நமச்சிவாயா! நான் இடப்பாகம் பிரியாமல் இருப்பவும் நீ என்னை பிரித்துப் பாடியது முறையோ? இப்போது உன் வாக்கினால் சேர்த்துப் பாடவேண்டும் என்று கூற குரு நமச்சிவாய மூர்த்தி

,
"மின்னும்படி வந்த மேக களத்தீசருடன்
மன்னும் திருமுத்து வாளியே-பொன்னின்
சுவையாளே!தாயே! என் கன்மனத்தே நின்ற
மலையாளே! சோறு கொண்டு வா!"


என்று ஒரு வெண்பாவினைச் சேர்த்துப் பாடினார்.


உடனே அம்மையார் அமுது கொண்டு வந்து கொடுத்தார். அதனை உட்கொண்டு புறப்பட்டு விருத்தாசலம் வந்து பழமலை நாதரையும், பெரியநாயகி அம்மையையும், வழிபட்டு ஒரு குளக்கரையில் சிவயோகத்திலிருக்கும்போது பசி அணுகிற்று. அப்போது,


"நன்றி புனையும் பெரிய நாயகியே நுங்கிழத்தி
என்றும் சிவன்பாலிடக் கிழத்தி-நின்ற
நிலைக்கிழத்தி மேனி முழுநீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறு கொண்டு வா!"


என்ற வெண்பாவைப் பாடினார். அம்மையார் தண்டூன்றி விருத்தாம்பிகையாய் வந்து குரு நமச்சிவாயரைப் பார்த்து, "என்னப்பா! உன்னுடைய சொல்லினால் என்னைக் கிழத்தி, கிழத்தி என்று பாடுதல் நலமா? கிழவிக்கு நடக்க இயலுமா? தண்ணீர் எடுக்கக் கூடுமோ? உனக்குக் கட்டுப்பட்டு உணவு கொண்டு வர உடலில் உரம் இருக்குமோ?" என்றார்.


உடனே குரு நமச்சிவாயதேவர்,


"அன்னையே! ஆண்ட கோடி ஈன்ற பின்னும் கன்னி என மறைபேசும் ஆனந்த ரூப மயிலே! பாலகாசியில் பாலாம்பிகை; இது விருத்த காசி; நீர் பெரிய நாயகி; இங்குள்ள இறைவனும் பழமலை நாதர்; அது பற்றியே யான் அவ்வாறு சொல்லினேன்." என்றார்.


அடியவர் கூறியன கேட்ட அம்பிகை, "என் அருமை மகனே, நமச்சிவாயம்! உன்னுடைய இனிய வெண்பாவிலே என்னை இளமையாக வைத்துப் பாடுக!" என்றார். குரு நமச்சிவாயர் ,"கருணைக்கடலே! இரண்டு அம்மையார் ஆகக்கூடுமே!" என்று சொல்ல அம்மையார் , "அதனால் பிழை ஒன்றும் இல்லை பாடுக!" என்றார். உடனே குரு நமச்சிவாயர் பின்வரும் வெண்பாவினைப் பாடி மகிழ்ந்தார்.

Images.jpgஅம்பிகை.jpg

"முத்தாநதி சூழும் முதுகுன்றுறைவானே
பத்தர் பணியும் பதத்தாளே!
அத்தர் இடம் தாளே மூவா முலைமேல் எழிலார
வடத்தாளே சோறு கொண்டு வா!"


இவ்வெண்பாவினைச் சொல்லியவுடன் அம்மையார் பாலாம்பிகையாக மாறிச் சோறு கொண்டு வந்து கொடுத்தார். அதனை உட்கொண்டு வழி நடந்த குரு நமச்சிவாயர் புவனகிரிக்கு வந்து ஆனந்தத் திருநடனம் புரியும் ஐயன் தில்லை அம்பலவாணபெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கோயில் கோபுரம் கண்டு வணங்கினார்.

எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்


--Geetha Sambasivam 09:59, 24 மார்ச் 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 25 March 2011, at 08:14. This page has been accessed 2,416 times.