வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சித்தர் வழியில் குதம்பைச் சித்தர் 23

From மரபு விக்கி

Jump to: navigation, search
Imagesநந்திசித்தர்.jpg


மாங்காய்ப்  பால் உண்டு

மலைமேல் இருப்போர்க்கு

தேங்காய்ப் பால் ஏதுக்கடி? – குதம்பாய் !

தேங்காய்ப் பால் ஏதுக்கடி?


ஆழ்ந்த பொருள் கொண்டதும், மிக எளிமையானதுமான பாடல். சிந்தனைக்குச்  சவால் விடும் பாடல்.இப்பாடலைப் பாடி பாமர மக்களிடமும் நன்மதிப்பு பெற்றவர்தான் குதம்பைச் சித்தர்.  இப்பாடல் பல்வேறு அறிஞர்களையும் திகைக்க வைத்தது. அனுபவத்தாலன்றி இதன் பொருள்

புலப்படாது. சித்தர் பாடல்கள் அனைத்தும், அனுபவத்தில் முகிழ்ந்தவையே ஆகும். எனவேதான்,சித்தர்களின் பாடல்களுக்குப் பொருள் எழுதுவது மிகவும் சிரமமான, கடின செயலாகும்.குதம்பைச் சித்தர் அரிய கருத்துக்களை கொண்ட பாடல்கள் பல புனைந்துள்ளார்.


குதம்பை என்பது பெண்கள் காதுகளில் அணியும் ஒரு வகை அணிகலன். அவ்வணிகலன் அணிந்த பெண்ணை முன்னிறுத்திப் பாடியதால் இவர் குதம்பைச் சித்தர் என அழைக்கப்பட்டார். வேறு சிலர் இச்சித்தர் தமது மனதையே குதம்பையாக உருவகித்துப் பாடியதால் இவர் குதம்பையாகச் சித்தர் என அழைக்கப்பட்டதாகவும் கூறுவர். ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்தி அவளுக்கு அறிவுரை கூறும் விதத்தில் பாடல் புனைவது தமிழ் இலக்கியத்தில் ’மகடூஉ முன்னிலை’ எனப்படும்.குதம்பைச் சித்தரின் பாடல்கள் தமது அமைப்பாலும், எளிமையான தன்மையாலும் சாகாவரம் பெற்றவை.



கண்ணிகள் :-- இரண்டு மலர்களை எடுத்து மாலைத் தொடுத்தல் போல், இரண்டு அடிகளால்பாடப்படும். இலக்கிய வகை ‘கண்ணி’ இவ்விலக்கிய வகை சொல்லப்படும் கருத்தை மிக எளிதாக மக்கள் நெஞ்சில் பதிக்கப் பயன்படுகிறது. தாயுமானவர் இயற்றிய ‘பராபரக்கண்ணி’

 குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் இயற்றிய ‘நிராமயக்கண்ணி’ இலக்கியக் கண்ணி  வகை நூல்களாகும். இவ்வகையில் குதம்பைச் சித்தரின் பாடல்களும் அடங்கும். குதம்பைச் சித்தரின் பாடல்களை ‘குதம்பைக்கண்ணி’ எனப் புதிய  பெயரிட்டு அழைக்கலாம்.


வெட்ட வெளியில் மெய்யென்று இருப்போருக்குப்

பட்டயனம் ஏதுக்கடி? – குதம்பாய்

பட்டயனம் ஏதுக்கடி?


மெய்ப்பொருள் கண்டு விளங்குமெய்ஞ் ஞானிக்குக்

கற்பங்கள் ஏதுக்கடி? குதம்பாய்!

கற்பங்கள் ஏதுக்கடி?


காணாமற் கண்டு கருத்தோடு இருப்பார்க்கு

வீணாசை ஏதுக்கடி? குதம்பாய்

வீணாசை ஏதுக்கடி?

…………………………………………………………………………………………………………………………………………………………………………….


நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியமில்லா கோபாலன் தம்பதிகள்  யாதவ கிருஷ்ணனை வேண்டி நின்றனர். அந்த வேண்டுதலின்

அருள்பாலிப்பாக ’ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் கோபாலனின்’ மனைவிஒரு அழகான ஆண் குழந்தையை ஈன்றாள். ’ஆடி மாதம் விசாகத்தில்’ பிறந்ததால் இவன் ஒரு சிறந்த ஆன்மீகவாதியாக புகழ் பெறுவான்’ என சோதிடர் குறித்தனர். வாராது வந்த மாமழைப்போல் குழந்தை பிறந்ததால் அவனுக்கு விதவிதமான அலங்காரம்,ஆடைகள்,அணிமணிகளைப்  பூட்டி மகிழ்ந்தனர். காதில் கம்மல் { குதம்பை } பூட்டினர், பெண் பிள்ளைப் போல்அலங்கரித்தனர். காதில் குதம்பை ’பளிச்சென’ மின்னுவதைக் கொண்டு… ’ வா…. குதம்பாய் …,என அழைத்தனர்.  அப்பெயரே இறுதிவரை குதம்பையாக நிலைத்துவிட்டது.


சிறு வயது முதலே இறைவனிடம் மாறா  அன்பு பூண்ட குதம்பை காலை, மாலை தவறாது ஆலயம் சென்று ஆண்டவனுக்கு நடக்கும் பூசனைகளை, ஆகம் விதிகளை உன்னிப்பாகக் கவனித்தான். இல்லம் திரும்பியபின்னும் ஆலய நினைவுகளை மனதில் நிறுத்தி இன்புற்று மகிழ்வான். தினம் இந்நிகழ்வுகள் நடைபெற்று வரும். குல வழக்கப்படி மாடுகளை மேய்ப்பார். கிராமத்து வழியாக தலயாத்திரைச் செல்லும் முனிவர்கள், ரிஷிகளுக்கு தம் இல்லத்தில் தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்து, வணங்கி வழி அனுப்பி வைப்பார். ஏழைகளுக்குத், துன்பமுற்றோர்களுக்கும் உதவுவார். ஒருநாள் பொழுது ஒரு சித்த யோகி குதம்பை அழைத்து வாசியோகத்தினையும், ஊதுகின்ற மூச்சினை

அறிந்த சித்தன் என்று வாசியின் நுட்பங்களை, காயத்திரி மந்திரத்தையும், உடலைப்  பொன்னாக மாற்றக்கூடிய விந்தையை விளக்கி ஆசீர்வதித்தார்,


உள்ளம் தழுதழுத்து, உடல் சிலிர்த்து. ‘ஐயனே,எளியேன் எம்மையும் பொருட்டாக எண்ணி அருளாசி வழங்கியதற்கு ஏது செய்வேன் “ என நிற்க, ‘காரணம் காரியமின்றி எதுவும் இவ்வுலகில் நடப்பதில்லை.உனது கடந்த வினைப்பயன், பிறவிப் பயன் இப்போது தொடர்கிறது. போன பிறவின் போது உத்தமனாகசிவ சிந்தனையுடன் கடும் தவம் புரிந்தாய். ஆனால், தவம் முடிவடையும் முன்பே உனது ஆயுள் முடிந்து விட்டது. இந்த பிறவியில் உன்னிடம் எம்மைக்  கொண்டு சேர்த்திருக்கிறது. இனி நீ பெற்ற ஞானம், அறிவு மக்களுக்குப்  பயனாக அமையட்டும். அதுவே உன் பணியாக தொடரட்டும்’ என்று வாழ்த்திச்  சென்றார்.


சித்த யோகி சொன்னதை வேத வாக்கியமாகக் கொண்டு மக்களுக்கு உபதேசித்தார். தமது ஆற்றலை ஆன்மீகத்தை, மக்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டினார். உயிர்பலி கொடுப்பதையும், மக்களின் அறியாமை, மூடப்பழக்க வழக்கங்களைக்  கண்டு மனம் வாடி, அதனைச்  சாடி தனது பாடல் மூலம் அறிவுறுத்தினார்.சாதி,மத வேற்றுமைகளை, பிரிவினை,உயர்வு தாழ்வுகளைக்  கடுமையாக விமர்சித்தார். இறுதியில் மாயூரத்தில் சமாதி நிலைப் பெற்றார்.


முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்

சத்தங்கள் ஏதுக்கடி? – குதம்பாய் !

சத்தங்கள் ஏதுக்கடி>


உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு

இச்சிபிங்கு ஏதுக்கடி? குதம்பாய்

இச்சிபிங்கு ஏதுக்கடி?

Imagesசதுரகிரி.jpg

[ நன்றி - நூல் குறிப்பு உதவி :- இறவா சித்தர்கள், சித்தமெல்லாம் சிவம்]

எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்


--Geetha Sambasivam 15:28, 26 மார்ச் 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 29 March 2011, at 08:41. This page has been accessed 3,892 times.