வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சங்கரன் கோயில், சங்கர நாராயணர் 1

From மரபு விக்கி

Jump to: navigation, search
Gomathy.jpg
சங்கரன் கோயில் 1


தேவர்க்கெல்லாம் தேவநுயர்
சிவபெருமான்பண்டோர் காலத்திலே
காவலினுலகளிக்கும் – அந்தக்
கண்ணனும் தானுமிங்கோருருவாய்
ஆவலொடருந்தவங்கள் –பல
ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேனி நின்றருள் புரிந்தான் – அந்த
வியப்புறு சரிதையை விளம்புகின்றேன்.””


பாரதியார் கோமதி மஹிமை என்ற தலைப்பின் இந்த மூன்றாவது பாடலில் சங்கரன் கோயில் சங்கரநாராயணர் பற்றியும் தவம் புரிந்த அன்னையைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். ஆனால் எட்டாம்பாடல் மூன்றே வரிகளுடன் நின்றுவிட்டது. இந்தப் பாடல் தொகுப்பு முற்றுப் பெறவில்லை. என்ன எழுத நினைச்சாரோ தெரியலை. சங்கரன் கோயிலை பாரதியார் “புகழ் வளர்த்திடும் சங்கரன் கோயில்” என்று சொல்லி இருக்கிறார். உண்மைதான். சங்கரன் கோயில் பாண்டிய நாட்டின் பஞ்சபூதத் தலங்களில் ப்ருத்வி(மண்) தலமாகக் கருதப் படுகிறது. மற்றத் தலங்கள் தேவதானம்(ஆகாயம்), தென்மலை(வாயு), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்த நல்லூர்(நெருப்பு). இந்த சங்கரன் கோயில் ராஜபாளையம் என்னும் ஊருக்குத் தெற்கே அங்கிருந்து ஒருமணிநேரப் பிரயாணம், சுமார் முப்பது மைலில் உள்ளது. ரயில் மார்க்கம் என்றால் விருதுநகர்-தென்காசி மார்க்கத்தில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து அறுபது மைல் இருக்கலாம். இந்தப் பக்கத்தில் எல்லாவீடுகளிலும் ஒரு சங்கரலிங்கமும், ஒரு கோமதியும் இருப்பார்கள். சிலர் ஆவுடையப்பன் என்றோ, ஆவுடைநாயகி என்றோ அல்லது ஆவுடை என்று மட்டுமோ பெயர் வைத்துக் கொள்வார்கள். உள்ளூர் மக்களும், சுற்றுவட்டாரக் கிராம மக்களும் ஆஅவுடையம்மன் கோயில் என்றே சொல்வதாய்ச் சிலர் சொல்கின்றனர்.


சங்கரநயினார் கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. இந்த ஊருக்கு பூகைலாயம் என்ற பெயரும் உண்டு என்கின்றனர். இந்த ஊரில் குடி கொண்டிருக்கும் சங்கரநாராயணர் மேல் போற்றிப் பாடிய பல நூல்கள் இருப்பதாயும் கேள்விப் படுகிறோம். கோமதி அம்மன் மேல் ஒரு பிள்ளைத் தமிழும் பாடப் பட்டிருக்கிறது. எழுதியவர்கள் யாரெனத் தெரியவில்லை. என்றாலும் கோமதி அம்மை தவ மகிமையை அம்மானையாக மதுரை ராமலிங்கம்பிள்ளை என்பவர் பாடியுள்ளார். ஸ்ரீசங்கரநாராயண க்ஷேத்ர மான்மியம் என்ற வடமொழி நூலில் இருந்து மொழிபெயர்க்கப் பட்ட நூலில் இருந்து இந்தக் கோயிலின் தல புராணம் தெரியவருகிறது. திருக்குற்றாலக் குறவஞ்சியில் “புன்னைக்காவு” என்று சொல்லப் பட்ட ஊர் இந்த சங்கரநயினார் கோயில் தான் என்றும் இந்த ஊர் முன் காலங்களில் புன்னைக்காடாக இருந்தது என்றும் சொல்கின்றனர். இதைத் தவிர மேலே சொன்ன பாரதியாரின் கோமதி மகிமை என்னும் ஏழுபாடல்கள் கொண்டு முற்றுப் பெறாத ஒரு தொகுப்பும் கிடைக்கிறது.


இந்தக் கோயிலில் அம்பாள் தவம் இருந்து ஈசனை வழிபட்டதாகப் புராணங்கள் சொல்கின்றன. அம்பாளைத் தவிர, இந்திரன், பைரவர், சூரியன், அக்னி ஆகிய தேவாதிதேவர்களும், அகத்திய முனியும், வழிபட்ட தலம் இது. இந்திரனின் மகனான ஜெயந்தன் சீதாதேவியைத் துன்புறுத்தியதால் இழந்த ஒரு கண்ணின் பார்வையை இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசங்கரலிங்கத்தை வழிபட்டு சுய உருவைப் பெற்றதோடு இழந்த கண்பார்வையும் கிடைக்கப் பெற்றான். உறையூர்ச் சோழன் வீரசேனன், பிரகத்துவஜ பாண்டியன் போன்ற மன்னர்களாலும் வணங்கப்பெற்ற தலம் இது. இனி இந்தக் கோயிலின் தல புராணங்கள் சொல்லும் தகவலைப் பார்க்கலாம்.


இந்தக் கோயில் தலபுராணம் சீவலப்பேரி பாண்டியன் சீவலமாற பாண்டியன் என்பவனால் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டதாய்ச் சொல்கின்றனர். இன்னும் சிலர் அருணாசலக்கவிராயர் என்றும் சொல்கின்றனர். இப்போது தலபுராணம் பார்ப்போமா??? திருக்கைலை, அம்மை, அப்பன் தனித்திருந்த ஒரு நாளில் அம்மை, அப்பனைப் பார்த்து, “ஐயனே, ஹரி, ஹரன் ஆகிய உங்கள் இருவரில் யார் பெரியவர்? யார் சிறியவர்?” எனக் கேட்டாள். அனைத்தும் அறிந்த அம்மைக்கு இது தெரியாமலா இருக்கும்? ஐயன் முகத்தில் குறுநகை பூக்க, அம்மையைப் பார்த்து “அவ்வளவு சுலபமாய்த் தெரிந்து கொள்ளமுடியுமா?? தவம் இயற்று. அதிலும் பூலோகம் சென்று தவம் இயற்று. பூலோகத்தில் பசுக்கள் நிறைந்த புன்னைவனம் சென்று தவம் இயற்று. அங்கே யாம் வருவோம். உன் சந்தேகத்தைத் தீர்த்து வைப்போம்.” என்றார். அம்மையும் புன்னைவனம் சென்று தவத்தில் ஆழ்ந்தாள். தவமும் கலையவில்லை. ஐயனும் வரவில்லை.

--Geetha Sambasivam 11:22, 21 ஏப்ரல் 2011 (UTC)



Contributors

Geetha Sambasivam

This page was last modified on 23 April 2011, at 08:49. This page has been accessed 2,653 times.