வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 4

From மரபு விக்கி

Jump to: navigation, search
குருமகா சந்நிதானம் அவர்களின் 80 ஆண்டு நிறைவு விழா

16--5--2003 அன்று சுவாமிகளின் பிறந்த நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திரத்தன்று காலை ஆயுசு ஹோமம், கணபதி ஹோமம், நவக்ரஹ சாந்தி ஹோமம் ஆகியவற்றுடன் அருள்மிகு திருநெல்லை கொற்றவாளீசர் திருமூர்த்தங்களுக்கு அபிஷேஹ ஆராதனையுடன் வெகு விமரிசையாக நிறைவேறி சுவாமிகட்கு புனித நீராட்டும் நடைபெற்றது.  பெங்களூர் கைலாச ஆஸ்ரமம் திருச்சி மஹா சுவாமிகள், பூஜ்யஶ்ரீ ஸ்வாமி தயாநந்த சரஸ்வதி ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தார்கள்.  பெங்களூர் நித்தியானந்த கிரி சுவாமிகளும் மரியாதை செய்து சுவாமியிடம் ஆசி பெற்றார்கள்.  ஏறக்குறைய பத்தாயிரம்  அன்பர்கள் கூடி குருமகா சந்நிதானத்தின் ஆசி பெற்றார்கள்.  யாவர்க்கும் அன்னம் பாலிக்கப்பட்டது.

மாலை வாழ்த்தரங்கம் நடைபெற்றது. திருச்சி மஹா சுவாமிகள், பூஜ்யஶ்ரீ ஸ்வாமி தயாநந்த சரஸ்வதி, குன்றக்குடி அடிகளார் தவப்பெருந்திரு பொன்னம்பல சுவாமிகள், பேரூர் ஆதீனம் இளையவட்டம் மருதாசல அடிகள் ஆகியோர் குருமகா சந்நிதானம் நாச்சியப்ப சுவாமிகளின் குணநலன்களையும் செய்து வரும் பல்வேறு அறப்பணிகளையும் பாராட்டிப் பேசி வாழ்த்தினார்கள்.  மிகப் பெருவாரியான தமிழறிஞர்களும், சாதுக்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வித்வத் சதஸ் (2004)

சுவாமிகள் பட்டம் ஏற்பதற்கு முன்னரே இரண்டு பெரிய கருத்தரங்கங்கள்--வேத ஆகமம் பற்றி நடத்தி உள்ளார்கள்.  பின்னர் 1996, 1998, 2000 ஆகிய ஆண்டுகளில் வேத ஆகம சதஸ் நடத்தினார்கள்.  பட்டம் ஏற்ற பின்னர் 1997 இல் சிலப்பதிகார விழாவும் 2001 இல் திருக்குறள் மகாநாடும் நடத்தினார்கள்.

2004 மே மாதம் நான்காவது வேத ஆகம திருமுறை சிற்ப நாதஸ்வர வித்வத் சதஸ் ஒன்று கோவிலூரில் கூட்டினார்கள்.  தமிழகத்தின் மிகச் சிறந்த வேத விற்பன்னர்களும், தலை சிறந்த சிவாசாரியர்களும் பங்கேற்றனர்.  சிற்ப அரங்கத்தில் பத்மஶ்ரீ முத்தையா ஸ்தபதி, மாலைகண்டான் லெக்ஷ்மண ஸ்தபதி பங்கேற்றார்கள்.  நாதசுவரக்  கருத்தரங்கில் மதுரை எம்.பி.என் பொன்னுச்சாமி, கீழ்வேளூர், கணேச பிள்ளை, பொறையார் வேணுகோபாலப் பிள்ளை போன்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.

திருமுறை அரங்கில் சுவாமிகளின் வெளியீடான தேவார ஒலிப் பேழைகள் ஒன்பதும்--சுவாமிகள் வெளியிட மதுரை கயிலை மணி மு. கண்ணப்பச் செட்டியார் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.  ஒலிப் பேழைகளில் பாடியுள்ள தமிழகத்தின் தலை சிறந்த பனிரெண்டு ஓதுவார்களும் கெளரவிக்கப்பட்டார்கள்.

சுதர்ஸன ஹோமம்

2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 முதல் 11 ஆம் நாள் வரை மூன்று நாட்கள் மஹா சுதர்ஸன ஹோமம் நடைபெற்றது.  இதற்கான பட்டாச்சாரியார்கள் திருப்பதியில் இருந்து வந்திருந்தார்கள்.  ஶ்ரீதேவி, பூதேவியுடன் உடனாய பெருமாள் திருமூர்த்தங்களும், விசேஷமாகத் திருப்பதியில் இருந்து கொண்டு வரப் பெற்று அபிஷேஹ ஆராதனைகள் நடைபெற்றன.

பெங்களூர் கைலாச ஆஸ்ரமம் திருச்சி மஹா சுவாமிகள் வந்திருந்து சுதர்ஸன ஹோமத்தை முன்னிருந்து நடத்தித் தந்தார்கள்.  மூன்று நாட்களும் பல்லாயிரக் கணக்கான அன்பர்கள் வந்து தரிசனம் செய்து திருவருள் பெற்றார்கள்.  மூன்று நாட்களும் அனைவர்க்கும் அன்னம் பாலிக்கப்பட்டது.

ஆயிரத்தெட்டுக் கலசாபிஷேஹத்துடன் கூடிய அதிருத்ர ஹோமம்

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 முதல் 20 ஆம் தேதி வரை ஆறுகால பூஜையுடன் --1008 கலசங்கள் தாபித்து, 150 சிவாசாரியார்கள் 250 மாணவர்கள் வேத மந்திரம் ஓத மூன்று நாட்கள் அதிருத்ர ஹோமம் நடைபெற்றது.  பிள்ளையார்பட்டி டாக்டர் பிச்சைக் குருக்களும் மாயவரம் சபேசக் குருக்களும் தலைமைக் குருக்களாக இருந்து நடத்தித் தந்தார்கள்.  மஹா மண்டபமாக யாகசாலை அமைந்திருந்தது கண்கொள்ளாக் காட்சி.  வேதாந்தத்தின் தலையாய குருவாகத் திகழ்கின்ற பூஜ்யஶ்ரீ ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள், மேலை நாடுகளில் ஆன்மிகத்தைப் பரப்புகிற திருத்தொண்டை மிகச் செம்மையாகச் செய்து வருகிற ஜெர்மனி அன்னை மீரா அவர்கள், கைலாச ஆசிரமத்தின் தற்போதைய மடாதிபதி ஜெயேந்திரபுரி சுவாமிகள் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

ஹோமம் பூர்த்தியானவுடன் புனிதக் கலசங்களின் நீரால் அருள்மிகு திருநெல்லை அம்மனுக்கும் அருள்மிகு கொற்றவாளீசருக்கும் அபிஷேஹம் செய்யப் பெற்றது.

எல்லா நாட்களும் பல்லாயிரக் கணக்கான அன்பர்கள் தரிசித்துக் குருவருளும் திருவருளும் பெற்றார்கள்.  

புனித நீராட்டு விழா நடந்து முடிந்த உடனே இதுவரை இப்பகுதி காணாத அளவில் மழை பொழிந்து விண்ணோர்கள் ஆசியினைத் தெரிவித்தது நெகிழ்வான, மறக்க முடியாத அனுபவம்.

ஆன்மிக வேதாந்தக் கருத்தரங்கு

2005 நவம்பர் 20 முதல் 22 வரை அதிருத்ர ஹோமத்தைத் தொடர்ந்து ஆன்மிகக் (20--11--05 மதியம் ஹோமம் நிறைவுற்றது--மாலை முதல் கருத்தரங்கம் நடைபெற்றது.) கருத்தரங்கு 22 ஆம் தேதி மாலை வரை நடைபெற்றது.  20 ஆம் தேதி மாலை குரு மகாசந்நிதானம் அருட் தலைமையில் ஜெர்மனி மதர் மீரா அவர்கள் புதிதாகக் கட்டிய நூலகக் கட்டிடத்தில் கோவிலூர் ஆண்டவர் நூலகத்தைக் குத்து விளக்கேற்றித் திறந்து வைத்தார்கள்.  தமிழ்ச்செம்மல் பேராசிரியர் முனைவர் சுப. அண்ணாமலை அவர்கள் நூலகங்களின் சிறப்புப் பற்றியும் தேவை பற்றியும், ஆண்டவர் பெருமானின் அருட்செயல்கள், வேதாந்த நுண்ணறிவு, தமிழ்ப் புலமை பற்றியும் பாராட்டிப் பேசினார்கள். "பயன்மிகு வாழ்விற்கு வேதாந்தம்" என்னும் தலைப்பில் ஜெயேந்திரபுரி சுவாமிகளும், பூஜ்யஶ்ரீ சுவாமி தயாநந்த சரஸ்வதி அவர்கள் 'கர்ம யோகம்' தொடர் சொற்பொழிவை ஆறாவது வேளையாகச் சிறப்புரை ஆற்றினார்கள்.

மறுநாள் 21 ஆம் தேதி காலை--மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தா மஹாராஜ், கோயம்புத்தூர் ஸ்வாமி சுதீராநந்தா சரஸ்வதி அவர்கள் "கைவல்ய நவநீதம்" பற்றியும் பூஜ்யஶ்ரீ தயானந்த சுவாமி அவர்கள் 'கர்ம யோகம்' பற்றித் தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றினார்கள்.

மாலை குருமகா சந்நிதானம் அருட் தலைமையில் பூஜ்ய ஶ்ரீ ஸ்வாமிகள் தயானந்த  சரஸ்வதி, "கர்மயோகம்" தொடர் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

அடுத்த நாள் 22 காலை --திருவேடகம் ஶ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்வாமி பரானந்தா அவர்கள் "தாயுமானவரும் வேதாந்தமும்" பற்றி உரை நிகழ்த்தினார்கள்.  பின்னர் தொடர்ந்து பூஜ்ய ஶ்ரீ ஸ்வாமி தயானந்தா அவர்கள்  கர்மயோக உரை ஆற்றினார்கள்.  மாலை பேரூர் ஆதினம் இளைய பட்டம் மருதாசல அடிகள் தலைமை ஏற்க, நம் குருமகா சந்நிதானம் கோவிலூர் மரபு வேதாந்த நூல்களை வெளியிட்டார்கள்.  முதற்படியைப் பெற்றுக் கொண்டு, கோவிலூர் மரபு வேதாந்த ஆசானும் நம் எட்டாவது பட்டம் ஶ்ரீலஶ்ரீ சோம சுந்தர ஞான தேசிக மாணாக்கரும் குமார பாளையம், ஆனந்தாஸ்ரமக் குரு முதல்வரும் ஆன  சோம. ஸச்சிதானந்த சுவாமிகள் (சோம. கோபால ஸ்வாமிகள்) கோவிலூர் வேதாந்த மரபு பற்றி மிக அருமையான சொற்பொழிவு ஒன்று நிகழ்த்தி அனைவரையும் மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்த்தினார்கள்.

ஆன்மிகக் கருத்தரங்கு நடைபெற்ற மூன்று நாட்களும் இடையறாத கனத்த மழை வெள்ளம் போல பொழிந்தும் தயானந்தாவின் கர்மயோகச் சொற்பொழிவைக் கேட்கத் தவறாது நூற்றுக் கணக்கானோர் வந்தது மிக ஆச்சரியம்.  கோவிலூர் வேதாந்த மரபு நூல்கள் வெளியிட்ட அன்று குமாரபாளையம் ஆனந்தாஸ்ரமச் சீடர்கள் வந்திருந்து சிறப்பித்தார்கள். கன மழையிலும் அரங்கம் நிரம்பி இருந்தது மிக மகிழ்வாக இருந்தது.

அதி ருத்ர ஹோமம், மற்றும் கருத்தரங்கம் நடைபெற்ற ஐந்து நாட்களும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  முதல் மூன்று நாட்கள் கல்லிடைக்குறிச்சியைச் சார்ந்த ஶ்ரீ துக்காராம் கணபதி மஹராஜ் அவர்கள் வாரக்கரீ சம்ப்ரதாய அபங்க நாம சங்கீர்த்தன ஹரிகதை நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக அனைவரும் பக்திப் பரவசம் அடையும் வண்ணம் நிகழ்த்தினார்கள்.  நான்காம் நாள் ஓதுவா மூர்த்திகள் திருக்களர் இரத்தின சபாபதி ஓதுவார், (கோவிலூர்) சிதம்பாம் ஞானப் பிரகாச ஓதுவார் மற்றும் திருத்தணி சுவாமி நாத ஓதுவார் திருமுறை இன்னிசை அளித்தனர்.  கடைசி நாளாக 22--11--2005 அன்று கர்நாடக இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.


--Geetha Sambasivam (பேச்சு) 09:54, 24 டிசம்பர் 2013 (GMT)

[[பகுப்பு:கோவிலூர் ஆதீனம்]]

Contributors

Geetha Sambasivam மற்றும் Vinodh

This page was last modified on 25 December 2013, at 00:55. This page has been accessed 2,266 times.