கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 18

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

சிவதருமம் பாலிப்போர்


சொக்கு சுப்பிரமணியன்


கோவிலூர்; கோமேவு வன்னிவனக் கொற்றவாளீசர் வாழும் தலம்; நேரறிவு மயமான நெல்லை நாயகி வளரும் திருக்கோயில்; ஞாலம் போற்றிடும் ஞானியர்கள் அருள்பாலித்த ஞானபீடம்; வெய்யவினை தீர்த்து அடியவர்கள் ஐயம் திரிபை அகற்றிய மெய்த்தவ நல்லாசிரியர்கள் நடம் பயின்ற கலைக்கோயில்; மேலாய துறவினுக்கோர் துணையாகி நின்ற மேன்மக்கள் வாழ்ந்த புண்ணிய பூமி.  நூல் யாவும் உணர்ந்த நுண்ணறிவு மிக்க மெய்யன்பர் மால் அவனும் காணா மறை முதல்வன் புகழ் பாடும் இசை வளரும் நிலயம்; அறவொழுக்கம் வளர்த்திடவே துறவொழுக்கம் கடைப்பிடித்த தூயவர்கள் மறவொழுக்கம் கடிந்து நல்லறவொழுக்கம் வளர்த்த தமிழ்ப் பேரூர்;  பாலாய சிவதருமம் பற்றறப் பாலிப்போர் இத்திருத்தலத்தில் அருள் பாலித்தார்கள்.

கோவிலூர்த் தலம் 'சமிவன க்ஷேத்திரம்' என்று அழைக்கப்பட்டது.  தமிழில், 'வன்னி வனம்', என்பர்.  இந்த 'வன்னிவனத்' தலத்தின் வரலாற்றை வடமொழியில் ஸ்காந்த புராணத்திலிருந்து மொழி பெயர்த்து சமிவன க்ஷேத்திர மான்மிய வசனம் என்னும் நூல் ஒன்று வெளியாகி உள்ளது.  கி.பி. 1928-இல் சுதான விபவ ஆண்டு கார்த்திகைத் திங்கள் வெளியான இந்த நூலைத் திருவிடைமருதூரைச் சேர்ந்த பிச்சு சாஸ்திரி சுவாமிகள் என்பவர் மொழி பெயர்த்திருக்கிறார்.  காரைக்குடி மேல மடத்தைச் சேர்ந்த சேவு. பழ. பழநியப்பய்யா குடும்பத்தார் சென்னையில் சூளையில் இருந்த ஶ்ரீ பாரதி அச்சியந்திர சாலையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள்.

தலங்களுக்குள் தலையான இந்தக் கோவிலூர்த் தலத்திற்குப் பல பெயர்கள் உண்டு என்பதும், கழனிவாசல், சாலிவாடி, ஶ்ரீ வல்லபம், வன்னிவனம் என்பவை அவை என்பதும் இந்நூல் தெரிவிக்கும் முக்கியச் செய்தியாகும்.  ஜீவர்களின் பஞ்சமா பாதகங்களைப் போக்கி நன்னெறி உய்விக்கும் ஆண்டவர் அருட்கோயில் கொண்டிருப்பதால் இத்தலம் மானுடப் பிறப்பெடுத்தோருக்கு எல்லாம் மறை முதல்வனின் நற்பேற்றைப் பெற்றுத் தருவதாக அமைந்திருக்கிறது.  இங்குள்ள மது புஷ்கரணி தீர்த்தம் வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் வல்லமை பெற்றது என்பதையும் கோயிலூர்ப் புராணம் வெளிப்படுத்துகிறது.

சத்திய ஞானானந்தராய், சர்வ பரிபூரணராய், சர்வ சொரூபராய், சர்வ சக்தியுள்ளவராய், ஜனப்பிரியராய் சர்வ பலன் கொடுப்பவராய், சந்திர சேகரராய், மான் மழுதாரியாய் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் திரிபுவனேசுவரர் தயா சமுத்திரம் என்று இந்த நூல் வருணிக்கிறது.

இந்தத் தலத்தில் எழுந்தருளி இருக்கும் நெல்லையம்மை சத்திய ஞானானந்த ரூபி என்றும், சர்வாத்ம சொரூபி என்றும், சமரச வடிவு என்றும், சர்வபூரணி என்றும் நிரஞ்சனை என்றும், நித்திய சுத்த புத்தமுத்த அகண்ட அத்துவித சொரூபி என்றும் இந்தக் கோயிலூர்ப் புராணம் குறிப்பிடுகிறது. நேரறிவு மயமான நெல்லை நாயகி அருளைச் சிறப்பிக்கின்றது.

கோவிலூர்த் தலத்தின் சிறப்பை விளக்கும் இந்நூல் ஒரு நல்ல புத்தகம் என்பதில் ஐயமில்லை.  இது போன்ற நூல்கள் மக்கள் மன்றத்தில் பரவ அன்னையின் அருளைப் பாலிக்கும் அனைவரும் முயல வேண்டும்.

1978 கும்பாபிஷேஹ மலர்

--Geetha Sambasivam (பேச்சு) 11:29, 16 பெப்ரவரி 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2014, 11:30 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,312 முறைகள் அணுகப்பட்டது.