வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கச்சாலீஸ்வரர் திருக்கோவில் - சென்னை

From மரபு விக்கி

Jump to: navigation, search

 * அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவில் - சென்னை.

                                                                            
T 500 27.jpg


மூலவர் : கச்சாலீஸ்வரர்
 அம்மன்/தாயார் : அழகாம்பிகை
தல விருட்சம் : கல்யாணமுருங்கை
தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம்
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
-ஊர் : பாரிமுனை, பாரிஸ்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு


தல சிறப்பு:

இத்தலத்தில் நவக்கிரகங்கள் தனிமண்டபத்தில் நின்ற வடிவில் உள்ளன. கிரகங்களின் மத்தியில் உள்ள சூரியன், தனது மனைவியர்களான உஷா, பிரத்யுஷா ஆகியோருடன் இருக்கிறார். மண்டப மேற்கூரையில் 12 ராசிகள், 28 நட்சத்திரங்கள், 60 வருடங்கள், நான்கு யுகங்கள், அஷ்டதிக் பாலகர்கள் ஆகியோர் சிற்பவடிவில் உள்ளனர். கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அவை நீங்கும். அறுபதாம் திருமணம் செய்பவர்கள் இந்த நவக்கிரகங்கள் முன்பாக திருமணம் செய்கிறார்கள். இவ்வாறு செய்தால் ஆயுள் மேலும் நீடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்குள்ள விமானம் சதுரங்க விமானம்.

தலபெருமை:

அம்பாள் அழகாம்பிகையின் சன்னதிக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் உள்ளனர். ஒரேநேரத்தில் இம்மூன்று சக்திகளையும் வணங்கினால் கல்வி, செல்வம், ஆற்றல் பெறலாம். சபரிமலையில் உள்ள ஐயப்பன் சன்னதி தீக்கிரையான போது, தமிழகத்தில் இருந்து புதிய சிலை எடுத்துச் செல்லப்பட்டது. அந்தச் சிலையை இந்தக் கோயிலுக்கு பூஜைக்காக எடுத்து வந்தனர். பூஜை முடிந்ததும் சிலையை அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், பல காரணங்களால் தடங்கல் ஏற்பட்டு மூன்று நாட்கள் இங்கேயே சிலை இருந்தது. மூன்று நாட்களும் ஐயப்பனுக்கு பூஜை நடத்தப்பட்டது. அதன் நினைவாக இங்கு ஐயப்பனுக்கு தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது. சபரிமலையில் ஜோதி தரிசனத்தின்போது, இங்கும் ஜோதி தரிசன விழா நடக்கிறது. கச்சபேஸ்வரருக்கு முன்புறம் சிங்கவாகனத்தின் மீது ஐந்து முக ஹேரம்ப விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு அருகில் சித்தியும், புத்தியும் நின்ற கோலத்தில் உள்ளனர். இவ்விநாயகரை வணங்கினால் கணவன், மனைவிடையே ஒற்றுமை பெருகும் என்பது ஐதீகம். இங்கு 63 நாயன்மார் மண்டபம், தத்தாத்ரேயர்,துர்க்கை, ஆதிசங்கரர், மூலகேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.

தல வரலாறு:

பக்தர் ஒருவர், காஞ்சிபுரத்தில் உள்ள கச்சாலீஸ்வரரை வணங்கிவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. அவருக்கோ ஊரில் பல வேலைகள் பாக்கியிருந்தது. "என்ன செய்வேன் இறைவா!' என தவித்து நின்றார். ஆனால், மழையோ ஒரு வாரம் விடாப்பிடியாகக் கொட்டிய பின் தான் அடங்கியது. வெள்ளம் வடிய இன்னும் ஒரு வாரம் பிடித்தது.பக்தர் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பின் ஆற்றுக்குள் இறங்கி ஊர் வந்து சேர்ந்தார். என்ன அதிசயம்! அவர் செய்ய வேண்டிய அத்தனை பணிகளும் ஒன்று விடாமல் முடிக்கப்பட்டிருந்தன, தன் பக்தனுக்காக எல்லா வேலைகளையும் இறைவனே பக்தனின் வடிவில் வந்து செய்து முடித்து விட்டார். பின்னர் அவ்வூரில் சிவலிங்க பூஜை செய்தார் பக்தர். காலப்போக்கில் அங்கு கோயிலும் எழுப்பப்பட்டது.

பஞ்சவாகன சிவன்: பாற்கடலை கடைந்தபோது, மத்தாகப்பயன்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கவே மகாவிஷ்ணு, ஆமை வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்டார். அவர் வழிபட்ட சிவன் என்பதால், "கச்சபேஸ்வரர்' என்றும், "கச்சாலீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். "கச்சபம்' என்றால் "ஆமை' என பொருள். இங்குள்ள லிங்கம், கூர்மம் (ஆமை), நாகம், சிம்மம், யுகங்கள், பத்மம் ஆகிய ஐந்து ஆசனங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் சிவன் காட்சி தருவது அபூர்வம். நாகதோஷம், விஷ ஜந்துக்களால் பயம் கொண்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வணங்கலாம். இந்த லிங்கத்திற்கு பின்புறம் கருவறை சுவரில் சதாசிவ மூர்த்தி இருக்கிறார். ஒரே கருவறையில் சிவனின் உருவமான இவ்வடிவையும், அருவுருவமான லிங்கத்தையும் வணங்கிட பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவிழா:

சித்திரையில் பிரம்மோற்ஸவம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:44, 21 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com மற்றும் Ksubashini

This page was last modified on 26 May 2011, at 17:40. This page has been accessed 4,413 times.