வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

உணவும் அனுபவமும் மருந்தாகும் - பகுதி - 1

From மரபு விக்கி

Jump to: navigation, search

தமிழ்த்தேனீ


 


உணவே மருந்து,மருந்தே உணவு "மிகினும் குறையினும் நோய்செய்யும்."


”உணவு இடைவேளை ”என்பது ஒரு முறை உண்பதற்கும் அடுத்த முறை உண்பதற்கும் உள்ள இடைவேளை நேரக் கணக்குதான். குறைந்த அளவு ஐந்து மணி நேரத்துக்கு இடைவேளை விடுவது நல்லது. ஆகவே காலை எழுந்தவுடன் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு ஐந்து மணி நேரம் இடைவேலைவிட்டு மதிய உணவை உண்பது ஆரோக்கியமாகும்.

 

காலையில் சிற்றுண்டி ,மதியம் வயிறு நிறைய உணவு இரவு எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய பழம், பால், அல்லது எளிமையான உணவுகளை சற்றே குறைவாக உண்டுவிட்டு சற்று நேரம் காலார நடந்துவிட்டு அதன் பிறகு படுத்தல் நிம்மதியான தூக்கத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

 

”தலைவாழை இலை போட்டு விருந்து வைத்தேன்
தலைவா உன் வருகைக்கு தவமிருந்தேன் ” என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது

 

நம் முன்னோர்கள் தலைவாழை இலையை சுத்தமான நீரினால் கழுவி அந்த இலையின் நுனிப்பக்கம் உணவு உண்ண உட்கார்ந்திருப்பவரின் இடது கைக்கு நேரே இலையின் நுனிப்பக்கமும், வலது கைக்கு நேரே இலையின் விரிந்த பகுதியும் வருமாறு இலையைப் போடுவர்.


இதற்கு முக்கியமான காரணம் பெரும்பான்மையோர் வலது கையால் உண்ணும் பழக்கம் உள்ளவர்கள்.

 

அது மட்டுமல்லாது நம் கைக்கு வாகாக இலையின் நுனிப்பக்கம் சர்க்கரை கலந்த வாழைப்பழமும், தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போன்றவைகளையும் பறிமாறுவர். இலையின் விரிந்த பக்கத்தில் காய்கறிகள், கூட்டு வகைகள், பச்சடி வகைகளைப் பறிமாறுவர்.

 

பொறித்த அப்பளம் வற்றல், வறுவல் போன்றவைகளை இரு பிரிவாக இருக்கும் இலையில் நம்பக்கமாக பறிமாறுவர். நம் முன்னோர்கள் இலையை தரையில் விரித்து உணவு வகைகளைப் பறிமாறிவிட்டு மணைப்பலகை போட்டு அதில் உட்கார்ந்து உண்ணுவர். இதன் ப்ரதான காரணம் நம் வயிறு கொள்ளும் அளவு நாம் குனிந்து உண்ணும் போது சரியான அளவைக் கொள்ளும்.

 

அதேபோல நீர் அருந்தும் போது நம் உதடுகள் பாத்திரத்தில் படாதவாறு மேலே தூக்கி கழுத்தைப் பின்பக்கமாக சாய்த்து அருந்துவர். கழுத்தை பின்பக்கமாக சாய்த்து நாம் நீர் அருந்தும்போது உணவுக் குழல் மடங்காமல் சீராக நீரை உள்ளே அனுப்பும் வகையில் சமனமாக தடையில்லாமல் இருக்கும்.

 

தலைவாழை இலயைப் போட்டு அந்த இலையைச் சுற்றிலும் நீரால் வட்டம் போடும் பழக்கம் இருந்தது. இதற்கு என்ன காரணம் என்றால் தரையில் ஊறும் பூச்சிகள் இலைக்கு வராமல் தடுக்கவே இந்த நீர்வட்டம்.

 

அதன் பிறகு இலையில் சூடான அன்னத்தைப் பரிமாறுவர். அந்த சாதத்தின் மேல் நெய்யை சிறிதளவு சேர்ப்பர். உண்ணத் தொடங்கும் போது நம் முன்னோர் அந்த அன்னத்தை நெய்யுடன் கலந்து சற்றே குறைவான அன்னத்தை வாயில் படாமல் நேரிடையாக உணவுக் குழல் மூலமாக இரைப்பைக்குள் அனுப்புவர்.

 

இந்த நெய்யுடன் கலந்த அன்னம் நம் தொண்டைக் குழாயை சுத்தம் செய்து வழுவழுப்பாக அன்னம் தடையின்றி உள்ளே செல்லத் தக்கதாக மாற்றும். ஆமாம் நம் உடலும் இயந்திரமே
அவ்வப்போது இது போன்ற (Lubrication) எண்ணையிடுதல் தேவைப்படுகிறது.

 

அதன் பிறகு அன்னத்தை நன்றாக நொறுக்கிப் பிசைந்து அந்த அன்னத்தின் நடுவில் சற்றே குழிவாக ஆக்கி குழம்பை ஊற்றிக்கொள்வர். குழம்பு இலையைவிட்டு ஓடாமல் இருக்க இந்த அமைப்பு உதவும். சிறிது சிறிதாக அன்னத்தை அந்தக் குழம்புடன் கலந்து கவலம் கவளமாக உணபர். அவ்வப்போது கறி ,கூட்டு இவைகளைக் கலந்து ருசியான உணவாக மாற்றி உண்பர்.
’நொறுங்கத் தின்றால் நூறு வயது ” என்றொரு சொல்வழக்கு உண்டு. வாயில் அன்னத்தை இட்டு பற்களால் நன்றாகக் கடித்து நொறுக்கும் போது நாவிலிருந்து சுரக்கும் உமிழ்நீருடன் கலந்து நன்றாக அறைபட்டு உணவு இரைப்பைக்கு செல்லும்போது ,மீண்டும் உணவை அரைக்கும் இயந்திரமான இரைப்பைக் எந்தவித கடினமும் இல்லாமல் இப்படி உணவை அரைத்து உண்பதால் இரைப்பை நெடுங்காலம் சீராக வேலைசெய்ய தடையில்லாமல் இருக்கும் என்பதே நோக்கம்.


சாதாரணமாக நாம் உண்ணும் உணவில் நம்முடைய பெரியவர்கள் எல்லாவித மருந்துகளையும், அதாவது இயற்கையாக நமக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் அளிக்கக்கூடிய அத்துணை காய் கறிகள், பழங்கள்,இலைகள், அனைத்தையும் நம் உணவோடு இரண்டற கலந்து அவைகளையே உண்டு வந்தனர். தலை வாழை இலையில் உணவு உண்ணும்போது அதில் பறிமாறப்படும் சூடான சாதம், காய்கறிகள்,கூட்டுகள் ஆகிய உணவு வகைகள் இயற்கையாகவே தங்களுடைய சூட்டினால் வாழை இலையில் இருக்கும் வாழைச் சாறை க்ரகித்துக் கொண்டு அதுவே நமக்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருக்கும் விஷத்தன்மையை நீக்கிவிடும்.மற்றும் நம்முடைய உணவு வகைகளில் நமக்குத் தேவையான அத்துணை சக்தியையும் அளிக்குமாறு சமைத்தனர்.


1.பொங்கலில் பாசிப்பருப்பு குளிர்ச்சியையும், நெய் கொழுப்பையும் அரிசி மாவின் ஊட்டச் சத்தையும், அளிக்கும் ,அவைகள் நமக்குத் தேவையான புரதச் சத்துக்களை அளிக்க வல்லவை ஆனால் மிகைப்பாடாக நம் உடலில் சேரும் கொழுப்பு போன்றவைகளைக் கரைக்க அந்த உணவிலேயே இஞ்ஜி, மிளகு, கருவேப்பிலை போன்றவற்றை அதில் போட்டு நம் புரதச் சத்துக்களை நமக்குத் தேவையான அளவுக்கு கிடைக்கும்படி செய்தனர்.


2. அனைத்துக் காய்கறிகளையும் போட்டு செய்யும் கூட்டுகளில் நமக்குத்தேவையான அத்துணை புரதச் சத்துக்களும் கிடைக்கும்.


3.குழம்பு,அல்லது சாம்பார் என்று சொல்லப்படும் வகைகளில் மிளகு, சீரகம் வெந்தயம், போன்றவை கலக்கப் படுவதால் அவைகளும் நமக்கு நல்லதே செய்யும்.


4.ரசம்என்று எடுத்துக் கொண்டால் ரசம்,அதில் பலவகை ரசங்கள் உள்ளன, மிளகு ரசம் ,வேப்பம்பூ ரசம், தேசாவர ரசம், சீரகரசம் ,திப்பிலி ரசம் ,பூண்டு ரசம், போன்றவை நமக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன. அதேபோல் நம் காய் கறிகளில், ,வாழைத்தண்டு,வாழைப்பூ போன்றவை மருந்தாகவே உபயோகமாகிறது. வாழை மரப் பட்டையிலிருந்து எடுக்கப் படும் சாறு பாம்புக்கடிக்கும் மருந்தாக உபயோகப்பட்டிருக்கிறது.பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்ய முன்பெல்லாம் பாம்புக்கடி பட்டவரை வாழைப்பட்டையில் படுக்கவைத்து, வாயில் வாழைச் சாற்றை செலுத்துவர்.


மரம் செடி கொடிகளிலிருந்துதான் அனைத்து மருந்துகளும் மூலிகை என்னும் பெயரில் கண்டு பிடிக்கப்பட்டன. மரம் என்னும் வார்த்தையிலிருந்து மருந்து என்னும் சொல் ஏற்பட்டிருக்கலாம். வேப்பிலையை மஞ்சளுடன் அரைத்து தோல்வியாதிகளைத் தீர்ப்பர். வில்வ இலையை பலவிதமான நோய்களுக்கு மருந்தாக உபயோகித்தனர். துளசி இலையை தேனில் அரைத்துக் கொடுத்து கபம் ,சளி போன்றவைகளுக்கு மருந்தாக உபயோகித்தனர். அதேபோல சர்ப்பகந்தி என்னும் செடி பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

 

சுக்கு மிளகு, சீரகம்,கருவேப்பிலை, கடுகு,வெந்தயம், பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, போன்றவைகளும் , வாழைக்காய், அவரைக்காய், வாழைத் தண்டு, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், போன்ற பழ வகைகளும், அதி மதுரம் என்னும் ஒரு மரப்பட்டை தொண்டைப் புண் போன்றவைகளை குணப்படுத்தும் மூலிகை,மற்றும் தூதுவளை
போன்ற செடியின் இலைகள், துளசிச் சாறும் தேனும் கலந்து குழந்தைகளுக்கு ஏற்படும் சளி போன்றவைகளை கொடுத்து குணப்படுத்தி இருக்கிறார்கள்.

 

வேப்பிலை ,மஞ்சள், இவைகளை அரைத்து உஷ்ணத்தால் ஏற்படும் தோல் வியாதிகளுக்கும் பயன் படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள்.

 

கொழுந்து வேப்பிலையை அறைத்துக் கொடுத்து குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் தேவை இல்லாத பூச்சிகளைக் கொன்று ஆரோக்கியத்தை மீட்டிருக்கிறார்கள்.

 

அதுவும் தவிர பண்டிகைக் காலங்களில் நமக்குத்தேவையான அளவைவிட அதிகமாக நம் உடலில் சேரும் தேவைஇல்லாத கொழுப்புகள்,போன்றவற்றைக் கரைக்க உபவாசங்கள்,  பத்திய உணவு வகைகள், தகுந்த காலத்தில் எள்ளிலிருந்து எடுக்கும் நல்லெண்ணைக் குளியல், போன்றவற்றைக் கண்டு பிடித்து, நம் உடல் ஆரோக்கியத்தை சமநிலையாக வைத்திருந்தார்கள். மிக முக்கியமாக நாம் உணவு உண்ணும்போது நம் கவனம் உணவில் மட்டுமே இருக்கவேண்டும். தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டே உண்ணுவது, நடந்து கொண்டே உண்ணுவது. மேசையின் மீது அமர்ந்து உண்ணுவது போன்றவை நிச்சயமாக தீமையைத்தான் செய்யும்.

 

காலப்போக்கில், நாம் அனைத்தையும் மறந்து விட்டு வைத்தியரிடம் ஓடிக்கொண்டிருக்கிறோம். மறந்தும் வைத்தியரிடம் போகாமல் மரம் செடி கொடி களில் கிடைக்கும் உணவை உண்டு ஆரோக்கியம் காப்போம்.நம் உடலில் எதையும் மிகவிடாமலும், குறையவிடாமலும் சமநிலையில் நம்மை வைத்திருக்க உதவும் காரணிகளை நம் முன்னோர் உணவு வகைகளிலேயே வைத்திருந்தனர்.


மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்."
என்று பாரதியார் சொன்னதன் பொருள் நம்மிடம் இருக்கும் திறமைகளை அயல்நாட்டாரும் மதிக்கும் வண்ணம் அவைகளை நாம் முறைப்படுத்த வேண்டும் என்பதே. ஆனால் நாம் அதைத் தவறாக அர்த்தம் கற்பித்துக் கொள்கிறோம். அயல்நாட்டார் மதித்தால்தான் நாமும் மதிக்க வேண்டுமென்று.

 

நமக்கு எப்போதுமே நம் நாட்டவர் சொன்னால் மதிக்காத குணமும் ,அதையே வெளிநாட்டவர் சொன்னால் மதிக்கும் குணமும் உண்டு.

 

ஒரு பழமொழி உண்டு ”தோட்டத்துப் பச்சிலை மூலிகையாகாது’ என்று.


நம் தோட்டத்தில் இருப்பதே தகுதிக் குறைவாய்ப் போகிறது. நம் தோட்டத்தில் இருக்கும் பச்சிலையை எதேச்சையாக பார்த்த வெளி நாட்டார் சொன்னால் உடனே அந்தப் பச்சிலைக்கு வேலி போடுவது நம் வழக்கம்.

 

மஞ்சள் நம் முன்னோர்களால் கண்டு பிடிக்கப்பட்ட கிருமி நாசினி, இங்கு அதை நாம் அதை உபயோகிக்கிறோமே தவிர ,அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு ஆராய்வதில்லை. ஆனால் அமெரிக்கா அதற்கு உரிமை கொண்டாடினால் மட்டும் நமக்கு கோவம் வரும், அப்போதுதான் அந்த மஞ்சளின் மகிமையே நமக்கு தெரியும்.


விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாதே என்று நம் முன்னோர்கள் அக்காலத்தில் மெய்ஞானம் என்றும், மூலிகை வைத்தியம் என்று சொல்லிச் சென்றார்கள்.

 

நாக்கிற்கு சுவையூட்டக்கூடிய சமையல் எதுவாயினும் அவை எல்லாமே வயிற்றுக்கும், நம் உடலுக்கும் ஏற்றதாக இருக்கும் என்று சொல்லிவிடமுடியாது. அப்படி அஜீரணம் அல்லது ஒவ்வாமை என்னும் நிலை வந்து அவதிப்படாமல் இருக்க ஒரு வழி சொல்லுகிறேன்.

 

இதுவும் முக்கியமாக சமையல் குறிப்பில் சேர்க்கப்படவேண்டியதே. மற்றும் நம்முடைய உணவு வகைகளில் நமக்குத் தேவையான அத்துணை சக்தியையும் அளிக்குமாறு சமைத்தனர்.


1.பொங்கலில் பாசிப்பருப்பு குளிர்ச்சியையும், நெய் கொழுப்பையும் அரிசி மாவின் ஊட்டச் சத்தையும், அளிக்கும் ,அவைகள் நமக்குத் தேவையான புரதச் சத்துக்களை அளிக்க வல்லவை ஆனால் மிகைப்பாடாக நம் உடலில் சேரும் கொழுப்பு போன்றவைகளைக் கரைக்க அந்த உணவிலேயே இஞசி, மிளகு, கருவேப்பிலை போன்றவற்றை அதில் போட்டு நம் புரதச் சத்துக்களை நமக்குத் தேவையான அளவுக்கு கிடைக்கும்படி செய்தனர்.


2. அனைத்துக் காய்கறிகளையும் போட்டு செய்யும் கூட்டுகளில் நமக்குத்தேவையான அத்துனை புரதச் சத்துகளும் கிடைக்கும்,
அதுவும் தவிர பண்டிகைக் காலங்களில் நமக்குத்தேவையான அளவைவிட அதிகமாக நம் உடலில் சேரும் தேவையில்லாத கொழுப்புகள், போன்றவற்றைக் கரைக்க உபவாசங்கள்,பத்திய உணவு வகைகள், தகுந்த காலத்தில் எள்ளிலிருந்து எடுக்கும் நல்லெண்ணைக் குளியல், போன்றவற்றைக் கண்டு பிடித்து, நம் உடல் ஆரோக்கியத்தை சமநிலையாக வைத்திருந்தார்கள். காலப்போக்கில், நாம் அனைத்தையும் மறந்து விட்டு வைத்தியரிடம் ஓடிக்கொண்டிருக்கிறோம். மறந்தும் வைத்தியரிடம் போகாமல் மரம் செடி கொடிகளில் கிடைக்கும் உணவை உண்டு ஆரோக்கியம் காப்போம்.

 

நம் முன்னோர்கள் விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாத அக்காலத்திலேயே மெய்ஞானம் என்றும் , மூலிகை வைத்தியம்,பத்தியம், உண்ணா நோன்பு என்றும் பலவகைகள் ஏற்படுத்தி சென்றிருக்கிறார்கள்நமக்கெல்லாம் சில சமையம் நாம் சாப்பிடற உணவுப் பொருட்கள் ஒத்துக்காமலோ, அல்லது அதிகமா சாப்ட்டதுனாலே ஜீரணம் ஆகாம அஜீரணத்தாலேயோ காய்ச்சல் வரும் , அப்பிடிக் காய்ச்சல் வந்தால் பெரியவர்கள் சொல்லுவர் ஒரு வேளை வயிற்றை காயப் போடு நிறைய தண்ணீர் குடி அப்பிடீன்னு. அதுதான் ”லங்கணம் பரம ஔஷதம்” லங்கணம் அப்பிடீன்னா வெறும் வயிறு, ஒன்றும் சாப்பிடாமல் வயிற்றைக் காலியாக வைத்திருத்தல் அப்பிடின்னு பொருள்.

 

பரம ஔஷதம் அப்பிடீன்னா நல்ல மருந்து அப்பிடீன்னு பொருள். மாசத்துக்கு ஒரு வேளை சாப்பிடாம இருந்து வயித்துக்கு உணவை செரிக்கிற ஜீரண உறுப்புகளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தா காய்ச்சல் சரியாயிடும்னு சொல்லுவாங்க. இதை மனசிலெ வெச்சுண்டுதான் பெரியவங்க நமக்கு ஒரு சரியான வழியைக் காமிச்சிருக்காங்க, அது என்ன தெரியுமா ”விரதம்” . அப்படி என்றால் உண்ணா விரதம். ஆமாம் மாசத்துலெ ஒரு நாள் எதுவும் சாப்பிடாம விரதம் இருக்கறது,அதுக்குதான் சிவராத்திரி அன்னிக்கு , சூரிய கிரகணம் சந்திர கிரகணம், ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி,பௌர்ணமி, அமாவாசை இப்பிடீ ஒவ்வொரு மாசத்துக்கு ஒருநாள் எப்பிடியாவது ஒருநாள் எதுவும் சாப்புடாம இருந்துட்டு மறுநாள் நல்ல சாப்பாடு சாப்படலாம்,இப்பிடீ மாசத்துக்கு ஒருநாள் சாப்பிடாம இருந்தா நமக்கு வர நோய்கள்ளேருந்து ஓரளவு தப்பிக்கலாம்னு பெரியவங்க சொல்வாங்க. . அப்பிடி விரதம் இருக்கும் போது மனசைக் கட்டுப்படுத்தி ஒரு மாசம் பூரா நமக்கு சாப்பிடறதுக்கு எல்லாம் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லும்படியாக அந்த நேரத்திலே நமக்குத் தெரிஞ்ச நல்ல ஸ்லோகங்களை உச்சரித்தால் மனமும் உடலும் ஒருமைப்படும்


    சரியான வழிமுறைகளைக் கடைபிடித்தால் உணவே மருந்தாகும்
    இல்லையெனில் உணவே ஒவ்வாது.



அன்புடன்
தமிழ்த்தேனீ


--Ksubashini 12:01, 27 ஆகஸ்ட் 2011 (UTC)



 

Contributors

Ksubashini மற்றும் Coralsri.blogspot.com

This page was last modified on 29 August 2011, at 10:12. This page has been accessed 5,802 times.