வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

இறைவனைக் காண்போம்-தும்பி நம் நண்பன் தம்பி 31

From மரபு விக்கி

Jump to: navigation, search

 இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (39) தும்பி நம் நண்பன் தம்பி

தும்பி ஒரு அழகான பூச்சி. இதை மனிதனின் நண்பன் என்றே சொல்ல வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் தானே? நமக்கு எதிரி கொசுக்கள். கொசுக்களின் எதிரி தும்பி. கொசுக்களே தும்பியின் பிரதான உணவு.



சிற்றூர்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் பகலெல்லாம் எங்கோ நீர் நிலைகள் அருகே குச்சிகளின் மீது அமர்ந்திருந்த தும்பிகள் நூற்றுக் கணக்கில் ஊருக்குள் வந்து தெருவில் வெகு வேகமாக இங்கும் அங்குமாகப் பறந்திடுவதை. அவை அப்படிப் பறந்திடும் போதே கொசுக்களை ஆயிரக் கணக்கில் பிடித்துத் தின்னும்.



பகலில் நீர் நிலைகள் அருகே உட்கார்ந்திருக்கும் போது தும்பி அவ்வப்போது பறந்து சென்று மீண்டும் அதே குச்சியில் வந்து உட்காருவதையும் பார்த்திருப்பீர்கள். அப்படிச் செய்வது கொசு மற்றும் பறந்திடும் சிறு பூச்சிகளைப் பிடித்துத் தின்னுவதற்கே.

தும்பியின் கண்கள்.jpg


அறிவாளியான ஒருவரைப் பற்றிப் பேசும் போது, “அந்த ஆளுக்கு தலெ பூரா மூளெ இருக்குதுப்பா” என்று சொல்வதுண்டு. தும்பி பற்றி சொல்ல வேண்டுமானால் “தும்பிக்குத் தலெ பூரா கண்ணுன்னு” சொல்லணும். காரணம் இவற்றின் தலையில் முக்கால் பாகம் கண்களே. கீழே உள்ள படத்தில் நீல நிறத்தில் கட்டம் கட்டமாகத் தெரிந்திடுவது பூராவும் கண்கள்! ஒரு கண்ணில் சுமார் 34,000 ‘லென்சுகள்’ இருக்கின்றனவாம்! அனேகமாக மனிதன் மற்றும் எல்லா மிருகங்கள் இவற்றின் கண்களில் இருப்பதோ கண்ணுக்கு ஒரு ‘லென்சே’.




பூச்சி இனங்களிலே மிக வேகமாகப் பறந்திடும் பூச்சி தும்பி. ஒருவர் கணக்குப் படி அவை தேவையான போது சுமார் மணிக்கு 60 கிலோ மீடர் வேகத்தில் பறக்கக் கூடியவை. தும்பிகள் மனிதன் படைத்த ஹெலிகாப்டர் போல ஒரே இடத்திலோ, முன்னும் பின்னுமோ, மேலும் கீழுமாகவோ, அல்லது வலப் புறம் இடப் புறமாகவோ பறக்கக் கூடியவை.



தும்பியின் இறகுகள் சற்றே வினோதமானவை. அவை மிக மெல்லிய ரேகைகள் கொண்ட கண்ணாடி போன்றவை. பக்கத்துக்கு இரண்டு என மொத்தம் நான்கு இறகுகள் உண்டு தும்பிக்கு. அவற்றில் முன் இறகுகள் சிறுத்து நீளமானதாகவும் பின் இறகுகள் நீளம் குறைந்து ஆனால் அகலமானதாகவும் இருக்கும்.


Dragon fly-1.jpg

உட்கார்ந்திருக்கும் போது தும்பிகள் தங்கள் இறகுகளை கீழ் நோக்கியும், சற்றே முன் புறமாகவும் வைத்துக் கொள்ளும்.



ஆறு கால்கள் இருந்தும் தரையில் நடக்க முடியாத ஜந்து தும்பி.

தும்பிகள் நீர் நிலைகள் அருகே காணப் படுவது ஏன்?

தும்பிகள் முட்டைகள் இடுவதோ, அவற்றின் குஞ்சுகள் வளர்வதோ தண்ணீரில்.

இந்த உண்மை பற்றி அறிந்திடாதிருந்த போது ஒரு நாள் நாணல் ஒன்றின் நுனியில் உட்கார்ந்திருந்த தும்பி ஒன்று நாணலைப் பிடித்த படி மெல்ல நடந்து தண்ணீருள் சென்றதைப் பார்த்து நினைத்தேன், அந்த தும்பிக்குப் பயித்தியம் பிடித்து விட்டது. தற்கொலை செய்து கொள்ளப் போகிறது என்று. பின்னர் தும்பிகள் பற்றிப் படித்த போது தான் தெரிந்து கொண்டேன் அந்தத் தும்பி தண்ணீருள் சென்றதின் காரணத்தை.

தும்பி நம் நண்பன். தும்பிகளைப் பிடித்து அவற்றுக்குத் தொந்திரவு கொடுப்பதோ, கொல்வதோ கூடாது.

இறைவன் படைப்புகளில் உள்ள வினோதங்களைக் கண்டு நாம் ரசித்திட வேண்டுமே ஒழிய அவற்றை அழித்திடக்கூடாது.

(படங்கள் விக்கிபீடியா தளத்தில் இருந்து)

 நடராஜன் கல்பட்டு


--Geetha Sambasivam 22:57, 10 பெப்ரவரி 2012 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 10 February 2012, at 23:00. This page has been accessed 1,920 times.