வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

இந்தியா ஒரு அதிசய நாடு

From மரபு விக்கி

Jump to: navigation, search

 தமிழ் இலக்கியத்தில் இருந்து சுவைமிகு காட்சிகள்


ச.சுவாமிநாதன்., எம்.ஏ., (பிரித்தானியா).


இந்தியா ஒரு அதிசய நாடு


இந்தியா ஒரு அதிசய நாடு. இதை எண்ணி எண்ணி வியப்படைகிறேன். அப்படி என்ன அதிசயங்களைக் கண்டுவிட்டீர்கள் என்று கேட்கிறீர்களா? இதோ ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறேன்.


1. இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் என்று ஒரு புனிதத் தலம் இருக்கிறது. அங்கே ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பனிக்கட்டி லிங்கம் தோன்றுகிறது. இதை வழிபட நாடு முழுவதிலிருந்தும் சிவ பக்தர்கள் கூடுகிறார்கள். சுமார் எட்டு அடி உயரத்திற்கு வளரும் இந்த “ஐஸ்” லிங்கம் பின்னர் தானாகக் கரைந்துவிடும். இந்த இயற்கை அதிசயத்திற்குக் காரணம் என்னவென்றால் இமயமலைக்குகையின் மேலுள்ள ஒரு துவாரம் வழியாக தண்ணீர் சொட்டுச் சொட்டாக வருவதாகும். அது ஒன்றன் மீது ஒன்றாக விழுந்து குளிரும்போது ஐஸ் கட்டியாக மாறிவிடுகிறது. ஆனால் அது ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட சீசனில் வருவதும் லிங்க வடிவில் வளருவதும் தான் அதிசயம்.


2. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு எலிக்கோவில் இருக்கிறது. இந்தக்கோவிலில் அம்மன் சிலையைச் சுற்றிப் பல்லாயிரக்கணக்கான எலிகள் ஓடிய வண்ணம் இருக்கும். அம்மனுடன் இந்த எலிகளையும் பக்தர்கள் வணங்குகிறார்கள். எலி என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது “பிளேக்” என்னும் கொள்ளை நோய்தான். ஆனால் அதிசயம் என்னவென்றால் பல்லாயிரக்கணக்கான எலிகள் இருந்தும் இதுவரை ஒரு நோயும் தோன்றியதில்லை.


3. இந்தியாவின் தலைநகரமான தில்லியில் ஒரு இரும்புத்தூண் இருக்கிறது. இது ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் குப்தர் காலத்தில் கட்டப்பட்டது. மழையிலும் வெய்யிலிலும் மாறி மாறி நனைந்து காய்ந்தபோதிலும் இது துருப்பிடிக்கவேயில்லை. உலோகவியல் விஞ்ஞானத்தில் அந்தக்காலத்தில் இந்தியா இவ்வளவு முன்னேற்றம் கண்டது வியப்புக்குரியது.


4. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பாலான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் நீண்டகாலம் வாழ்ந்தால், இரத்தப்புரட்சி அல்லது ஆயுதப்புரட்சி வெடிக்கும். ஆனால் இந்தியர்கள் எவ்வளவு வறுமையில் வாடியபோதிலும் புரட்சி வெடித்ததில்லை. அதுமட்டுமல்ல, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகித் திகழ்ந்து வெற்றிகரமாக தேர்தலையும் நடத்திக்காட்டுகிறது.


5. இந்தியாவில் இருபதுக்கும் அதிகமான பெரிய மொழிகள் உள்ளன. பல்வேறு இன, மத பண்பாடுகளும் உள்ளன. ஆயினும் உலகில் ஏழாவது பெரிய நாடாகத் திகழும் இந்தியா இதுவரை சிதறாமல் ஒன்றுபட்டு நிற்பது அதிசயத்திலும் அதிசயம். ஐரோப்பாவும் ஏறத்தாழ இந்தியாவைப் போல பல மொழிகளைக் கொண்ட பிரதேசம் தான். ஆயினும் இதை ஒரு குடையின் கீழ் கொண்டுவர நெப்போலியனும் ஹிட்லரும் ஆசைப்பட்டனர். அதன் விளைவு பெரிய பெரிய போர்கள். இந்தியாவைப்போல இருந்த சோவியத் யூனியனும், யூகோஸ்லாவியாவும் நமது காலத்திலேயே துண்டு துண்டாகிவிட்டன. “செப்புமொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்று இந்தியா பற்றி பாரதி பாடியது எவ்வளவு உண்மை.


6. இந்தியா ஆயிரம் ஆண்டுகளுக்கு அந்நியர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்தது. பாரதியார் கூட ஒரு பாட்டில் ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி என்று பாடுகிறார்—சாடுகிறார். 700 ஆண்டுகளுக்கு சுல்தான்கள், மொகலாயர்கள் கீழும் 300 ஆண்டுகளுக்கு பிரிட்டிஷ்காரர்களுக்குக் கீழும் இந்தியா இருந்தது. ஆயினும் மதம் மாறியோர்—மாற்றப்பட்டோர் எண்ணிக்கை பத்து சதவீதத்துக்கும் குறைவு. ஆனால் உலகில் கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களோ ஆண்ட வேறு எல்லா நாடுகளிலும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் மதம் மாறினர். எல்லோரும் இகழ்ந்து பேசும் ஜாதி முறைதான் இந்தியா மதம் மாறாததற்குக் காரணம் என்று புகழ்ந்து பேசுகிறார் உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் எல்.பாஷம். இவர் எழுதிய இந்தியா ஒரு அற்புத நாடு (The Wonder That was India) என்ற புத்தகத்தை உலகெங்கிலுமுள்ள பல்கலைக்கழக வரலாற்று மாணவர்கள் இன்றும் பயிலுகின்றனர்.


7. அறிவியல் முன்னேற்றத்திலும் இந்தியா சளைக்கவில்லை. வளரும் நாடுகளுக்குள் முதல் முதலில் அணுகுண்டு வெடித்தது இந்தியா. விண்கலத்தை ஏவியதும் இந்தியா. உலகில் கம்ப்யூட்டர் ‘சாஃப்ட்வேர்” தயாரிப்பில் அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் அடுத்தபடி நிற்பது இந்தியா தான்.


8. இந்தியாவில் கல்கத்தாவிலும் சென்னை (அடையாறு) யிலும் உள்ள ஆலமரம் உலகில் பெரிய மரங்களில் இடம்பெறுகின்றன. ஆயினும் இதை விடப் பெரிய ஆலமரம் ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் இருப்பதாக “கின்னஸ் சாதனை நூல்” கூறுகிறது. 2300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்த மாமன்னன் அலெக்சாண்டர் ஆலமரத்தைக் கண்டு அதிசயித்துப் போனதாக கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளார்கள்.


9. தமிழ்நாட்டிலுள்ள மதுரை மீனாட்சி கோயிலை நூறு உலக அதிசயங்களில் ஒன்றாக பிரிட்டனில் வெளியான செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. கார் ஓட்டும் அனைவருக்கும் அறிமுகமான “ஏஏ(AUTOMOBILE ASSOCIATION) வெளியிட்ட நூறு உலக அதிசயங்கள் என்ற நூலில் தாஜ்மஹாலும் மதுரைக்கோவிலும் இடம் பெற்றுள்ளன. ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை வெளிநாட்டினர் அறிவர். ஆனால் மீனாட்சி கோவிலைப் பலரும் அறியார். அற்புதமான கலைகளைக் கொண்ட ஆயிரம் கால் மண்டபம், பூகோளம்-ககோளம் எனப்படும் உலக ஜாதக வரைபடம், பாடும் கற்றூண்கள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு மிக்க தங்க –நவரத்தின நகைகள், பிரம்மாண்டமான தேர், 365 நாட்களும் உற்சவம் எல்லாவற்றுக்கும் மேலாக 30,000 சிலைகளைக்கொண்டது மதுரை மீனாட்சி கோவில். இதனுடைய தெற்குக்கோபுரத்தின் உச்சிக்கு ஏறிச் செல்வோர் முன்னோர்களின் பொறியியல் அறிவை எண்ணி எண்ணி விம்முறுவர்.


10. மத்திய இந்தியாவில் அஜந்தா குகையிலும், தமிழ்நாட்டில் சித்தன்னவாசலிலும் உள்ள குகை ஓவிய நுணுக்கங்களைக் கண்டு வியக்காதோர் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி கோவிலிலுள்ள ஒரு பிள்ளையார் ஓவியம் பற்றிப் பலருக்குத் தெரியாது. இந்தப் பிள்ளையாரை எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் நம்மையே பார்ப்பது போலத் தோன்றும்.


11. இந்தியாவின் இமயமலை உலக அதிசயங்களில் ஒன்றாகும். சுமார் 1500 மைல் நீளமுள்ள இமயமலையில் ஏராளமான பனிமூடிய சிகரங்களும் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரமும் உள்ளன. கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா என்ற 3 பெரிய நதிகளுக்குத் தோற்றுவாயான இமயமலை, ஒரு காலத்தில் கடலுக்கடியில் இருந்தது. நடுக்கும் குளிர் வீசும் இடங்களில் வெப்ப நீர் ஊற்றுக்களும் உள்ளன! இதில் அரிசியைப் போட்டால் சோறாகி வெளிவரும். அடுப்பே வேண்டாம். கைலாஷ் என்னும் சிவலிங்க வடிவிலான அற்புத சிகரமும், மானசரோவர் என்னும் மனோரம்யமான எழில் மிக்க ஏரியும் அங்கே உள்ளன. இந்துக்களுக்கு மிகவும் புனிதமான கயிலாய மலை தற்போது சீன எல்லைக்குள் உள்ளது.


12. இந்தியாவில் தமிழ், சமஸ்கிருதம் என்னும் இரு பழமையான மொழிகள் உள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்விரு மொழியில் எழுதப்பட்ட நூல்களை ஒரு தராசுத்தட்டில் வைத்து உலகின் வேறு எந்தப் பழைய மொழி இலக்கியத்தையும் வைத்தால் நமது தட்டு “கனம்” காரணமாகி தாழ்ந்து நிற்கும். உலகிலேயே மிக நீளமான இதிஹாசமான மகாபாரதத்தில் மட்டுமே ஒரு லட்சம் பாடல்கள் உள்ளன. உலகிலேயே மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் மட்டும் ஆயிரம் பாடல்கள் உள்ளன. இதில் பெரிய அதிசயம் என்னவென்றால் வேதங்களை ஒரு எழுத்துக் கூட மாறாமல் வாய்மொழி மூலமாகவே இன்று வரை காப்பாற்றி வருகின்றனர்.


13. இந்தியாவிலுள்ள புனித கங்கை ஆற்றின் நீர் நீண்ட காலத்துக்குக் கெடுவதேயில்லை. அந்தக் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல்கள் கல்கத்தா துறைமுகத்திற்கு வருகையில் கங்கை நீரை ஏற்றிச் செல்லும். வேறு எந்த நதியின் நீரையும் விட இது நீண்ட காலத்திற்குக் கெடாமலிருக்கிறது என்று ஆங்கிலேயர்கள் எழுதி வைத்துள்ளனர். இன்றும் கூட இந்துக்கள் வீடுகளில் பூஜை அறைகளில் பாட்டில்களிலோ சிறிய குப்பிகளிலோ இதை வைத்திருப்பதைக் காணலாம்.


14. இன்று நாம் எழுதும் 1,2,3 என்ற எண்களைக் கண்டுபிடித்தது இந்தியர்கள் தான். இது அராபியர் வழியாக ஐரோப்பாவுக்குச் சென்றது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் வரை, ஐரோப்பியர்கள் ரோமன் எண்களையே (I, II, III) பயன்படுத்தி வந்தனர் . பெரிய எண்களை எழுதுகையில் இது பெரும் குழப்பத்தை விளைவித்தது. இதனால் இந்திய எண்களை விரைவில் உலகம் ஏற்றுக்கொண்டது.


15. சதுரங்கம் (CHESS), ஆடு புலி ஆட்டம், பரமபத சோபன படம் (SNAKES & LADDERS) முதலிய அட்டை விளையாட்டுக்களைக் கண்டு பிடித்தது இந்தியர்கள் தான் என்று பிரிட்டிஷ் மியூசியம் கூறுகிறது. அங்கு செல்வோர் இது பற்றி மேலும் அறியலாம். சிற்றூர்களில் வயதான பாட்டி, தாத்தா விளையாடும் பல்லாங்குழி விளையாட்டு ஆப்பிரிக்கா வரை சென்றுவிட்டது. சில ஆப்பிரிக்க நாடுகளில் அரசாங்கத் தலைவர்களின் பொழுது போக்கு பல்லாங்குழி விளையாட்டாகும்.


16. சாகர், சுஸ்ருதர் எழுதிய பழங்கால மருத்துவ நூல்களில் நூற்றுக்கணக்கான ஆபரேஷன் கருவிகள் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. வாத்சாயனர் எழுதிய காம சாஸ்திரம் இன்றும் மேலை நாடுகளில் சூடாக விற்பனையாகிறது. ஆர்யபட்டர், பாஸ்கரர், லீலாவதி போன்றோர் எழுதிய வான சாஸ்திர, கணித நூல்களில் பல புதிய இரகசியங்கள் உள்ளன. திருமூலர் எழுதிய 3000 திருமந்திரப் பாடல்களில் பல இரகசிய விஷயங்களைக் கூறுகிறார். பாணினி எழுதிய வடமொழி இலக்கண நூல் இன்றைய கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் கச்சிதமாக எழுதப்பட்டதைக் கண்டு உலகமே வியக்கிறது. சித்த மருத்துவ, ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப்படும் மூலிகை இரகசியங்களை மேல்நாட்டார் கூடப் பயன்படுத்தத் துவங்கி விட்டனர். இரத்த அழுத்தத்திற்கும், மஞ்சட்காமாலைக்கும் இந்திய மூலிகைகளையோ, அதிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட இரசாயனங்களையோதான் பயன்படுத்துகின்றனர்.


17. இந்தியாவிலுள்ள நாடி சோதிடக்காரர்கள் ஒருவரின் கைவிரல் ரேகையைப் பார்த்து அவரது ஜாதகத்தைக் கணித்துக் கூறிவிடுகின்றனர். பிறந்த நாளன்று கிரக நிலை எப்படி இருந்தது என்பதை ஜாதகத்தைப் பார்க்காமல் கூறுவது விஞ்ஞானம் விளக்க முடியாத அதிசயம்.


18. இந்தியாவிலுள்ள சத்யசாயிபாபாவையும், திருப்பதி வெங்கடேசப் பெருமாளையும், சபரிமலை ஐயப்பனையும் தரிசிப்போர் எண்ணிக்கை, லூர்து, வாதிகன் நகர பக்தர்களைப் போல் பன்மடங்கு என்பது “போகஸ்” (FOCUS) பத்திரிகைப் புள்ளி விவரத்தைப் படித்தால் புரியும்.


இப்படி எத்தனையோ அதிசயங்கள். புத்தகமே எழுதலாம். விரிவஞ்சி விடை பெறுகிறேன்.


--Geetha Sambasivam 20:43, 9 டிசம்பர் 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 9 December 2011, at 20:43. This page has been accessed 3,604 times.