ஆடி மாத மாரியம்மன் பண்டிகைமரபு விக்கி இருந்துஆனி மாத இறுதியிலேயே சேலத்தில் ஒரு வித பரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்படும். ஆடி மாத மாரியம்மன் பண்டிகையை எதிர்பார்த்தே இந்த பரப்பரப்பு. ஒரே சமயத்தில் சேலத்தில் எட்டு இடங்களில் பண்டிகை களைகட்டும். சேலம் கோட்டை மாரியம்மன், செவ்வாய்பேட்டை,அன்னதானப்பட்டி, குகை, டவுன் சின்ன மாரியம்மன் ,ஆட்டையாம்பட்டி ,அம்மாபேட்டை ,தாதகாப்பட்டி ஆகிய கோவில்களில் ஒரே சமயத்தில் பண்டிகை நடைபெறும். இங்கு நான் விவரிக்கப் போவது செவ்வாய் பேட்டையில் நடைபெறும் பண்டிகையை பற்றியே. நான் அருகே இருந்து ரசித்தது இங்குதான். ஆடி மாத முதல் செவ்வாய் கிழமை அல்லது இரண்டாவது செவ்வாய்கிழமை பூச்சாட்டல் நடைபெறும். அன்று நகரின் முக்கிய வீதிகளில் கோவில் சார்பாக பூக்கள் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு ,பின் கோவிலில் அம்மனுக்கு அந்த பூவை சமர்பிப்பார். அதற்கு அடுத்த நாள், கம்பம் நடுதல். இதற்காக ஏற்கனவே வெட்டி ,பால் மார்க்கெட் அருகில் உள்ள ஒரு கிணற்றில் இறக்கி வைத்திருப்பர். அங்கிருந்து எடுத்து வந்து அம்மன் சந்நிதிக்கு நேராக நடப்படும். அன்றிலிருந்து பக்தர்கள் தினமும் அந்த மரத்திற்கு காலையில் தண்ணீர் ஊற்றலாம். அதாவது மரத்தை அம்மனாக உருவகித்து அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்வது போல்.
வீதி உலா துவங்கிய வாரத்திற்கு மறுவாரம் செவ்வாய் கிழமை காலை, அலகு குத்தி வருவார்கள். சாதரணமான வேல் அலகில் இருந்து காவடி அலகு, வண்டியில் தொங்கியப் படி அலகு குத்தி வருவது போன்று தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அலகு குத்திவருவார்கள். மாலையில் பூஞ்சட்டி ஏந்தி வருவார்கள். இதன் பின் சக்தி அழைப்பு நடைபெறும். அருகில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வருவார்கள். ஒரு குதிரையில் மஞ்சள் மூட்டை வைத்து அழைத்து வருவார்கள். சக்தி அழைப்பு கடந்து சென்றவுடன் அந்த வீதியில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். இது ஒரு வித்யாசமான நிகழ்வு என்று எண்ணுகிறேன். இது போல் வேறு எங்கும் உள்ளதா என்றுத் தெரியவில்லை. அதாவது, தங்கள் வேண்டியக் காரியம் நிறைவேறி இருந்தால், தெருவில் சூறைக் காய் உடைப்பார்கள். யாரவது ஒரு பத்து பேர் அப்படி செய்வார்கள் என்று எண்ணாதீர்கள். அந்த வீதி முழுவதுமே தேங்காய் ஓடுகளாய் நிறைந்திருக்கும். சக்தி அழைப்பு முடிந்தவுடன், அடுத்து கோவிலில் அங்கப் பிரதக்ஷணம் நடைபெறும். கோவிலின் வெளி ப்ரகார மார்பிள் தரையில் தான் இது நடைபெறும். சக்தி அழைப்பு முடிந்து பூஜைகள் முடிய நள்ளிரவை தொட்டுவிடும். பின்புதான் அங்கப் பிரதக்ஷணம். இதற்காக, ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நிற்பார்கள். சில சமயம் இந்த வரிசை, கடைத்தெருவை தொட்டுவிடும். விடிய விடிய அங்கப் பிரதக்ஷணம் நடைபெறும். காலை ஆறுமணி அளவில் பொங்கல் வைப்பவர்கள் அதற்கான வேலைகளை துவங்குவார்கள். அங்கு பொங்கல் வைத்து படைப்பவர்கள் ஒருபுறம் இருக்க, வீட்டில் மாவிளக்கு மாவு போட்டு கோவிலுக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைப்பவர்கள் மறுபுறம். அன்று அம்மன் பல வித ஆபரணங்களில் ஜொலித்துக் கொண்டிருப்பாள். இங்கு உயிர் பலி கிடையாது. இதற்கு அடுத்த நாள் ஊஞ்சல் உற்சவம். வெள்ளிகிழமை அம்மன் தேரோட்டம் நடைபெறும். வெள்ளிக் கிழமை அதிகாலையிலேயே அம்மன் விக்ரகம் தேருக்கு எடுத்து செல்லப்படும். பின் ஒன்பது மணியளவில், முதலில், லீபஜார் தொழிலாளர்கள் வடம் பிடித்து இழுக்க அம்மன் செவ்வாய்ப்பேட்டைமக்களுக்கு தரிசனம் அளிப்பாள். முக்கிய பெரிய வீதிகளான பாத்திரக்கடை வீதி, பின் சின்ன எழுத்துக்கார தெரு வழியாக சென்று அங்கிருந்து சந்தைபேட்டை ரோடு வழியாக முக்கோணம் பகுதி சென்று கடைவீதி வழியாக தேர் நிலைக்கு வர நடுப் பகல் ஆகிவிடும். அன்று மாலை வரை அம்மன் தேரில் இருந்தே மக்களுக்கு காட்சி அளிப்பாள். இப்பொழுது இங்கு இருப்பது சமீபத்தில் செய்யப்பட புதியத் தேர். பழையத் தேர் சில வருடங்களுக்கு முன் எரிந்து சாம்பலாகிவிட்டது. இதோடு பண்டிகையின் முக்கியப் பகுதிகள் முடிவடைந்துவிடும். தேரோட்டம் முண்டித அடுத்த வாரம், கம்பம் அகற்றப்பட்டு விழா முடியும். பண்டிகையின் ஒரு பகுதியாக, நகரப் பேருந்து நிலையத்தை ஒட்டிய மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறும்.
karthik.lv@gmail.com |