வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அறிஞர் சித்திலெப்பை

From மரபு விக்கி

Jump to: navigation, search

முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் மறுமலர்ச்சியை உருவாக்கிய அறிஞர் சித்திலெப்பை


இன்று 172வது பிறந்த தினம்


அறிஞர் எம். சி. சித்தி லெப்பை எனும் நாமம் நினைவுகூரப்படும் போது சிந்தையில் உதிப்பது இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி எழுச்சி பற்றிய விடயமே. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் குறிப்பாக கல்வி வரலாற் றில் குறிப்பிடத்தக்க ஒரு மறுமலர்ச்சி உருவாக காரணகர்த்தாவாக விளங் கியவர்தான் சித்திலெப்பை அவர்கள்.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் இலங்கையின் முப்பெரும் சமூகங்களினதும் கல்வி வளர்ச்சிக்கான முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் தான் அநகாரிக தர்மபால, ஆறுமுகநாவலர், சித்திலெப்பை ஆகிய மூவருமாவர். இவர்களுள் முதலிருவர்களதும் சேவைகள் பல்வேறு மட்டங்களில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.


எனினும் இதுகால வரை மதிப்பீடுகளுக்கு உட்படாத இந்நாட்டு முஸ்லிம் கல்வி, கலாசார, சமூக விவகாரங்களில் அக்கறை காட்டி விழிப்புணர்ச்சியை விட்டொளிரச் செய்த அறிஞர் சித்திலெப்பை அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
இற்றைக்கு 172 ஆண்டுகளுக்கு முன் கண்டியில் பிறந்தவர் அறிஞர் சித்திலெப்பை. பிரபலமிக்க அரேபிய வர்த்தக சமூகமொன்றுக்கு உரித்தான பெருமகன் இந்த சித்திலெப்பை. அரேபிய மண்ணிலிருந்து வர்த்தக நோக்கில் ஈழமணித் திருநாட்டில் பொருள் தேடிவந்த முல்க் ரஹ்மதுல் லாஹ் பார்பரீன் என்றிடும் முஸ்லிம் களின் இறங்கு துறையின் முக்கிய தளங்களிலொன்றான அளுத்காமம் எனும் பகுதியில் குடியேறி அங்கேயே திருமணம் புரிந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது பரம்பரை யைச் சேர்ந்தவரே முஹம்மது காசிம் சித்திலெப்பை எனும் இன்றைய கதாநாயகர் ஆவார்.


முல்க் ரஹ்மதுல்லாஹ்வின் புதல் வரான முஹம்மது லெப்பையும் தந்தை வழியில் வர்த்தகம் புரிந்து வாழ்க்கை நடத்தியவராவார். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் எனும் மன்னன் கண்டியை ஆண்டு வந்த காலகட்டத்தில் வியாபார நடவடிக்கைகளுக்காக கண்டிக்கு வந்த இவர் இங்கேயே திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.


அன்னாருக்குப் பிறந்த ஆண் மகவு தான் முஹம்மது லெப்பை சித்தி லெப்பை ஆவார். 1833ம் ஆண்டில் இந்நாட்டின் முதல் முஸ்லிம் வழக் கறிஞராக நியமனம் பெற்ற இன்னா ருக்கு மூன்றாவது குழந்தையாக 1838 ஜூன் 11ல் கண்டியில் பிறந்த முஹம்மது காசிம் சித்திலெப்பை அவர்கள்தான் பிற்காலத்தில் முஸ்லிம் சமூக மேம்பாட்டுக்கு அர்ப்பணங்கள் பல புரிந்த அறிஞர் சித்திலெப்பை என்பவராவார்.


இளவயதிலிருந்தே நுண்ணறிவுள்ள குழந்தையாக வளர்ந்த முஹம்மது காசிம் சித்திலெப்பை அவர்கள் துடிப்புள்ள இளைஞராகவும் விளங்கினார். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்ற காலகட்டத்தில் குர்ஆன் ஓதல், மார்க்க சட்ட திட்டங்கள் பற்றிய அறிவு பெற்றதோடு தமிழ் மொழியிலும் பாண்டித்தியம் அடைந்தார். ஆங்கில மொழியைக் கற்பதிலும் கரிசனை கொண்டு அதனையும் கற்றுத் தேறினார். அரபு, தமிழ், ஆங்கிலம் எனும் மும் மொழிகளிலும் அதிதிறமையாக விளங்கிய அன்னார் தந்தையைப் போன்றே சட்டக் கல்வியிலும் சிறந்த விளங்கினார்.


கண்டி மாவட்ட நீதி மன்றத்திலே 1862ல் வழக்கறிஞராக நியமனம் பெற்ற சித்திலெப்பை அவர்கள் 1864ம் ஆண்டில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உயர் நியமனம் பெற்றார். சமகாலத்தில் பிரசித்த நொத்தாரிசாகவும் பணிபுரிந்த இவரால் எழுதப்பட்ட காணி உறுதிகள் பல இன்றும் பலரிடம் உள்ளதாக அறிய முடிகிறது. கண்டி மாநகர சபை நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் கடமை யாற்றிய இவர், சிறிது காலம் மாநகர சபை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.


தனது தொழில் மற்றும் வருமான வழி முறைகள் மூலம் வாழ்க்கைச் சுக போகங்களை சுகித்தால் மட்டும் போதும் என்ற சுயநல நோக்கு கொண்டவ ராக சித்திலெப்பை அவர்கள் வாழவில்லை. முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம் முழுமை பெற ஆக வேண் டியவை பற்றி சிந்தையில் திளைத்திருந்த அவருக்கு கல்வி மேம்பாடு ஒன்றுதான் இதற்கு ஒரே வழி எனும் ஞானம் பிறந்தது.


இதன் அடிப்படையில் கல்வியை முன்னிருத்தி சமுதாயத்தை மேம்படச்செய்யும் முயற்சிகளில் தீவிரமாக அவர் ஈடுபட்டார். கல்வியின் முக்கியத்துவ த்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிக்க அரும்பாடுபட்டார். முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த ஒரு பத்திரிகை தேவை எனும் கொள்கையில் ஊறிய அறிஞர் சித்திலெப்பை அவர்கள் மிகுந்த பிரயாசைகளுக்கு மத்தியில் ‘முஸ்லிம் நேசன்’ எனும் பெயரில் பத்திரிகை ஒன்றினை வெளியிட்டார்.


‘முஸ்லிம் நேசனை ‘ வெளியிட்டதன் மூலம் முதல் முஸ்லிம் பத்திரிகையாளர் என்ற பெருமைக்குப் பாத்திரமான இவர் ‘அசன்பே சரித்திரம்’ எனும் நூலை வெளிக்கொணர்ந்ததன் மூலம் ஈழத்தின் முதல் தமிழ் நாவலாசிரியர் என்ற பெருமையையும் அடைந்தார்.


முஸ்லிம் பத்திரிகைத் துறை முன்னோடியான எம். சி. சித்திலெப்பை அவர்கள் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். முஸ்லிம் சமுதாயத்தின் கல்விக்கு உயிர் கொடுத்து எதிர்கால சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இற்றைக்கு 130 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உழைத்த பெருமகன் சித்திலெப்பை அவர்களின் பணிகளை சமுதாயம் ஒரு போதும் மறக்க மாட்டாது.


அறிஞர் சித்திலெப்பை அவர்களின் சமகால சகாக்களான எகிப்து நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு கண்டியில் வாழ்ந்த ஒறாபி பாஷா அவர்களும் வாப்பிச்சி மரிக்கார் அவர்களும் உடனிருந்து அவரின் சமூகப் பணிகளுக்கு உறுதுணை புரிந்தனர்.


முஸ்லிம்களின் பிரச்சினை களை இனம் கண்டு வழிப்படுத்திய சித்திலெப்பை அவர்கள் கல்வியே அனைத்துக்கும் அடிப்படை என்பதை உணர்ந்து செயலில் ஈடுபட்டார். நாட்டிலே ஏனைய சமுதாயங்கள் கல்வியிலே அக்கறை கொண்டிருக்க முஸ்லிம் சமுதாயம் மட்டும் அதிலே கோட்டைவிட்டு ஆர்வமற்று இருப்பதையிட்டு வேதனையுற்று சமூகக் கரிசனையோடு பணியாற்றினார்.


அறிஞர் அவர்களின் விடா முய ற்சியும், அயராத உழைப்பும் காரணமாக முஸ்லிம்களின் கல்வி மாளிகையின் முதலாவது தூண் ‘மத்ரஸதுல் கைரியா’ எனும் நாமத்தோடு உருப் பெற்றது. இதற்கு முதன் முதலாக அஹமத் ஒறாபி பாஷா அவர்கள் நூறு ரூபாவை நன்கொடையாக வழங்கி இதன் வளர்ச்சிக்கு வித்திட்டார்.


கொழும்பு புதிய சோனகத் தெருவிலே உருவாக்கப்பட்ட இப்பாடசாலையின் திறப்பு விழாவன்று ஒன்றிணைந்து செயல்பட்ட முஸ்லிம்கள் தமது நீண்ட காலப்பிளவுகளை மறந்து வாழ்ந்தனர். காலப் போக்கில் மீள மூண்ட பிளவு காரணமாக கல்வியிலே சிறப்புற வேண்டும் என்று சிந்தித்த சித்திலெப்பையின் இலட்சியக் கனவுகள் கலைந்தன. எதிர்பார்ப்புகள் எட்டிச் சென்றன.


இலட்சிய புருஷர் சித்திலெப்பை கலங்கிய உள்ளத்தோடு மீண்டும் கண்டியை அடைந்தார். ஆனால் அவரது துணிச்சல் தளரவில்லை. அன்னார் இலட்சியங்களைக் கைவிட வுமில்லை. தனது பொதுப் பணிகளை ஆற்றுவதில் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். கண்டி முஸ்லிம்கள் சித்திலெப்பையின் இலட்சியங்கள் மீள் மலர்ச்சிபெற தியாக பூர்வமாக ஆதரவு நல்கினர். இதன் பிரதிபலனாக கண்டி - திருகோணமலை வீதியில் முதல் முஸ்லிம் பெண்கள் பாடசாலை நிறுவப்பட்டது. இதில் ஆசிரியையாக சித்திலெப்பையின் தங்கையே கடமையாற்றி வந்தார். இதைத் தொடர்ந்து கண்டி கட்டுகலை எனுமிடத்திலும் கம்பளை, உடுநுவர, பொல்கஹவெல போன்ற இடங்களிலும் மற்றும் ஹட்டன், குருநாகலை, கேகாலை, பதுளை, நுவ ரெலியா போன்ற இடங்க ளிலும் கல்விச் சாலைகளை அமைத்து பணியை முன் னெடுத்தார். அன்று சித்தி லெப்பை கண்ட ஒரு அரு ங்கனவு அன்னாரது எண்ணத் தின் பிரதிபலிப்புகளில் ஒன்றே கொழும்பு ஸாஹிறா கல்லூரியுமாகும்.


கல்வியோடு மட்டும் தனது பணிகளைக் கட்டிப் போடாத அறிஞர் சித்திலெப்பை அரசியல், சமூக, பொருளாதார, கலாசாரத் துறைகளிலும் சமுதாய உரிமைகளைப் பேணிட முன்னின்று பாடுபட்டார். வெற்றியும் கண்டார். என்னதான் பெருமை இருந்த போதிலும் அறிஞர் சித்திலெப்பை அரும்பணிகளின் பெறுமானங்கள் அன்னார் மறைந்து ஒரு நூற்றாண்டும் ஒரு தசாப்தமும் கழிந்து விட்டுள்ள போதிலும் கூட மதிப்பீடு செய்யப்படவில்லை என்றே கூறவேண்டும். இருபத்தோராம் நூற்றாண்டின் கல்விச் சிந்தனைகள் பற்றிய ஆய்வுகள் கண்டறியப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் அறிஞர் சித்திலெப்பை பற்றி, அன்னாரின் கல்விச் சிந்தனைகளைப் பற்றி இன்றைய சமுதாயம் உணர்வதோடு நாளைய சமுதாயத்தின் அறிவுக்கும் எட்டச் செய்வதற்கு ஆவண ரீதியிலேனும் பேணிட ஆவன செய்திட வேண்டும்.


அறிஞர் சித்திலெப்பை அவர்க ளின் இலட்சியப் பணிகள் காப் பாற்றப்பட வேண்டிய அதே சம யம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து இஸ்லாமிய தனித்துவங்களைப் பேணித் தந்திட்ட அன் னாரின் பெருமைகளையும் பரவிடச் செய்ய வேண்டும்.


நன்றி: தினகரன்

Contributors

Ksubashini

This page was last modified on 11 June 2010, at 13:46. This page has been accessed 3,566 times.