வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அபிராமி அந்தாதி விளக்கவுரை 18

From மரபு விக்கி

Jump to: navigation, search

பாடல் அறுபத்து மூன்று

Srikamesa.jpeg

தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே

விளக்கம் :

நற்கதிக்குச் செல்லவேண்டிய இடத்திற்கு நாம் தேறிச் சென்றடைவதற்குரிய வழியைக் காட்டுபவள் அன்னை அபிராமியே ஆகும். ஆறு
சமயங்களுக்கும் தலைவியாய் இருப்பவள் இவளே என்று அறிந்திருந்தும், வேறு சமயங்கள் உண்டு என்று கொண்டாடும் வீணர்களின் செயலானது ஒரு மலையை சிறு தடியினைக் கொண்டு தகர்க்கும் முட்டாள்த்தனமான செயலைப் போன்றதாகும்..சமயச் சண்டைகள் அக்காலத்திலேயே மிகவும் பயங்கரமானதாக நடைபெற்றிருக்கின்றன.. பெரும்பாலும், சமண சமயத்திற்கும், சைவ சமயத்திற்கும் இடையேயான பூசல்கள், சைவத்திற்கும், வைணவத்திற்கும் இடையேயான பூசல்கள் என சமயப் பூசல் தொடர்ந்து கொண்டேயிருந்திருக்கின்றன... இந்து சமயத்தை நெறிப்படுத்திய ஆதி சங்கரர் ஆறு வகையான வழிமுறைகளை முறைப்படுத்தினார், அவை, சக்தியை முதன்மைப் படுத்தும் சாக்தம், சிவபெருமானை முதன்மைப் படுத்தும் சைவம், திருமாலை முதன்மைப் படுத்தும் வைணவம், கணபதியை முதன்மைப் படுத்தும் காணபத்யம், முருகனை முதன்மைப் படுத்தும் கௌமாரம், சூரியனை முதன்மைப் படுத்தும்
சௌரம்.


அபிராமிப் பட்டர் இவ்வாறு சமயங்களுக்கும் தலைவியாய் இருப்பவள் அன்னை அபிராமியே எனக் குறிப்பிடுகின்றார். "தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக் கூறும் பொருள் " நற்கதிக்குச் சென்றடைவதற்கு, தேறுவதற்குரிய நெறிமுறைகளைத் தருபவள் அன்னை
அபிராமியே.... "சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்" அவளால் நெறிப்படுத்தப் பட்ட ஆறு சமயங்களுக்குத் தலைவியாய் இவளே இருப்பதை அறிந்திருந்தும்... “வேறும் சமயம் உண்டு என்று” வேறு சமயங்கள் உண்டு.. அவையே உயர்ந்தது என்று ..”கொண்டாடிய வீணருக்கே..” கொண்டாடும் வீணர்களின் செயலானது... “குன்றில் கொட்டும் தறி குறிக்கும்” மலையை சிறு தடியைக்
கொண்டு தகர்க்கும் முட்டாள்த்தனமான செயலுக்கு ஒப்பானதாகும்..இன்றைக்கு இந்தியாவில் நிகழ்ந்து வரக்கூடிய மோசமான நிகழ்வு இதுதான்..


கல்லையும் மண்ணையும் கடவுளென்று வணங்காதீர்கள்.. எங்களிடம் வாருங்கள்..உண்மையான கடவுளைக்காட்டுகிறேன் என்று பேசி மதமாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி பெரும்பாலும் நடந்து வருகின்றது.. அந்தக் காலத்திலேயும் இதைப் போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.. அதைத்தான் அபிராமிப் பட்டர்.. எங்கள் அன்னை வழிப்படுத்திய சமயங்கள் ஆறு... அவை ஆறுக்கும் தலைவி இவளே...
இதை விடுத்து வேறு சமயங்களைப் பரப்ப நினைக்கும் அறிவிலிகளே... உங்களால் அது முடியாது... உங்கள் செயல் முட்டாள்த்தனமானது.. மலையை சிறுதடியைக் கொண்டு தகர்க்க நினைக்கும் செயலைப் போன்றது.. எனவே அம்முட்டாள்த்தனத்தை விட்டொழியுங்கள்.. என்கிறார்..

.

பாடல் அறுபத்து நான்கு


வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சி அன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே


விளக்கம் :

வீணாகப் பலிகளை வாங்கும் மற்ற தெய்வங்களிடம் சென்று அவர்களிடம் அன்பு செய்ய மாட்டேன்.. உன்னிடம் மட்டுமே அன்பு செய்வேன்.
உன்னைப் புகழும் புகழ்ச்சியைத் தவிர வேறு யாரையும் புகழ மாட்டேன்.. மண்ணிலும், விண்ணிலும், நான்கு திசைகளிலும்,  எல்லாவிடத்திலும் உனது திருமேனிp  பிரகாசத்தையன்றி வேறெதுவும் பார்க்க மாட்டேன்..கடந்த பாடலில் வேறு சமயங்கள் உயர்ந்தவை எனப்பேசும் வீணர்களின் செயலைப் பற்றி விமர்சித்த அபிராமிப் பட்டர் இப்பாடலில், மற்ற தெய்வங்களின் செயல்களைப் பற்றிப் பேசுகிறார்.. தேவையான நற்பலன்களை அளிக்க இயலாத தெய்வத்திற்கு செய்யப்படும் பூசனைகள், பலிகள் அனைத்தும் வீணே... அதைத்தான் வீணே பலிகவர் தெய்வம் எனக் குறிப்பிடுகின்றார்.


“வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று “ தனக்கு பலி கொடுப்பவனின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் வீணாக பலிகளை வாங்கும் சிறு தெய்வங்களிடம் சென்று “மிக்க அன்பு பூணேன் “ அவர்கள் மேல் அன்பு பூண மாட்டேன்.. எனக்குத் தேவையானவற்றைத் தருவதற்குரிய சக்தியில்லாத வேறு தெய்வங்களிடத்து நான் ஏன் அன்பு பூணவேண்டும். நான் அதைச் செய்ய மாட்டேன்.. ஏனெனில் “உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் “ நான் உன்மேல் அன்பு பூண்டு கொண்டேன்.. எனக்கு எல்லாமுமாய் இருக்கும் என் அன்பு அன்னையே...அபிராமியே... உன்மேல் மட்டுமே அன்பு பூண்டிருக்கின்றேன்.. “நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒரு பொழுதும்” எப்போதும் உன்னைப் புகழ்வதைத் தவிர வேறெதுவும் செய்ய மாட்டேன்.. வேறு யாரையும் புகழ மாட்டேன்..


“திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே”மண்ணுலகிலும் சரி..விண்ணுலகிலும் சரி.. நான்கு திசைகளிலும் சரி...எல்லாவிடத்திலும் சரி. உனது திருமேனிப் பிரகாசத்தையன்றி வேறெதுவும் காண மாட்டேன்... “எங்கெங்கு நோக்கினும் சக்தியடா” எனும் முண்டாசுக் கவிஞனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன... அன்னையின் திருமேனிப் பிரகாசமே எல்லாவிடத்திலும் தனக்குத் தென்படுவதாக உரைக்கும் அபிராமிப் பட்டரின் இப்பாடல் நம் பக்தியின் பலத்தை அதிகரிக்கும்... பாடிப் பாருங்கள். பக்தியில் இன்புறுங்கள்...
மீண்டும் சந்திப்போம்..


பாடல் அறுபத்தைந்து..


ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே

விளக்கம் :

மண்ணுலகமும், விண்ணுலகமும், இடைப்பட்ட பெருவெளியும் காணும்படி மன்மதனின் தேகத்தை தகனம் செய்த தவத்திற் சிறந்த சிவபெருமானுக்கு, நீண்ட வலிய திருக்கரங்கள் பன்னிரண்டும், செம்மையான திருமுகங்கள் ஆறும் கொண்ட சிறந்த அறிவுடைய திருமகனான முருகன் மகனாகப் பிறக்கும் சக்தியைக் கொடுத்தது அபிராமி அன்னையே உன் வல்லமை அல்லவா? காமதேவன் மன்மதனை ஐயன் தம் நெற்றிக்கண் திறந்தெரித்த திறமும், அத்திறம் அம்மையிடம் தோற்றுப் போன விதமும் மீண்டும் மீண்டும் அபிராமிப் பட்டரால்
பாடப்படுவதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? வாழும் கலை ஆழ்நிலைத் தியானப் பயிற்சி முகாமுக்குச் சென்றிருந்தபோது குருதேவர் கூறிய சில செய்திகள் இதற்குப் பொருந்துகின்றன. நம் உடலின் சக்திச் சக்கரங்களைப் பற்றி விளக்கும் போது சொன்ன சில செய்திகளின் சாராம்சம் இது.. ஒவ்வொரு சக்கரத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு என்பதை விளக்கிய அவர் ஒன்றிருந்தால் மற்றொன்றில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். காமம் இருக்கும் இடத்தில் ஆக்க சக்தி இருப்பதில்லை.. ஆக்க சக்தி இருக்குமிடத்தில் காமம் இருப்பதில்லை. இது ஸ்வாதிஷ்டனா சக்கரத்தின் இருபக்கங்கள் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

Rajeswari.jpeg

காமனின் தேகத்தை அழித்த ஐயனால் ஓர் அறிவுள்ள, அழகிய திருக்குமரனைப் பெற்றெடுக்க இயன்றது. காமனை அழித்த அதே நெற்றி நெருப்பே குமரன் பிறப்புக்கும் காரணமாய் அமைந்தது.. நம் மனத்தில் இருக்கும் காம இச்சைகளை, மன்மதக் கணைகளை நாம் விலக்கும் போது அவ்விடத்தில், அறிவு ஒளிபெற்ற கந்தன் பிறக்கின்றான். காமன் இடத்தைக் கந்தன் நிரப்புகின்றான்.. காமம் முற்றிலும் குடிகொண்டிருந்தால், கந்தன் பிறப்பதில்லை. இப்பாடலின் மூலம் நாம் பெறவேண்டிய கருத்து இதுதான். உலகம் மன்மதனுக்கு அடிபணிகின்றது.. எனவேதான் யாராலும் வெல்லப்படாத தன்மை அவனுக்குக் கிட்டியது... ஆயினும் அவன் ஈசனிடம் தோற்றான். தோற்றவன் அம்மை மூலம் அவ்வீசனையும் வென்றான்.. அது அம்மையின் சக்தி... "ககனமும் வானும் புவனமும் காண " மண்ணுலகமும், விண்ணுலகமும், இடைப்பட்ட உலகமும் காணும்படி...


ககனம் எனும் பதத்தைப் பற்றி கடந்த பதிவில் நாம் விளக்கவில்லை..இப்பதமானது சித்தர்களின் உலகத்தைக் குறிக்கின்றது. அவர்கள் மண்ணுலகிலும் இருப்பதில்லை.. விண்ணுலகிலும் இருப்பதில்லை. இடையில் அவர்களுக்கென்று ஒரு உலகம் உள்ளது. மண்ணுலகில் வாழ்வோருக்கும், விண்ணுலகின் அமரர்களுக்கும் ஒரு பாலமாக இவர்கள் செயல்படுகின்றனர். ஆகவே அனைவரும், அண்டசராசரத்தில்
உள்ள அத்தனை ஜீவராசிகளும் காணும்படி... " விற்காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு " கரும்பினாலான வில்லையுடைய காமனின் உடலை அன்று தனது நெற்றிக்கண் நெருப்பினால் எரித்த, தவத்திற்சிறந்த ஈசனுக்கு..."முந்நான்கு" "தடக்கையும்" நீண்ட வலிய பன்னிரு திருக்கரங்களும்,"இருமூன்று" "செம்முகனும்" ஆறு அழகிய சிவந்த திருமுகங்களும், "எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது " கொண்ட பெருமைகளையுடைய அறிவில்  முதிர்ந்த சிறந்த மகனான முருகன் மகனாகப் பிறந்தது "வல்லி நீ செய்த
வல்லபமே" "அன்றோ" அபிராமியே... அன்னையே.... உனது வல்லமையால் அன்றோ....? அழகிய திருக்குமரன் ஈசனுக்கு மகனாகப் பிறந்தது அம்மையின் வல்லமை என்பதை அழகுற விளக்கும் பாடல் இது..

.

பாடல் அறுபத்தாறு


வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே

விளக்கம் :

பசும்பொன்னாலான மேருமலையை வில்லாக வளைத்த ஈசனுடன் வீற்றிருக்கும் அபிராமி அன்னையே... நான் அருஞ்செயல்கள் செய்யும் வல்லமை ஒன்றும் இல்லாதவன். மிகவும் சிறியவன். நின் மலர்த்திருவடிகளை விடுத்து வேறொன்றின் மீதும் பற்றில்லாதவன். தீவினைகள் புரிபவனாகிய நான் பாடுகின்ற பாடல்கள் குற்றமுடையதாக இருப்பினும் அவை உன் திருநாமங்களைப் போற்றும் துதிப் பாடல்கள் என நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்..அபிராமி அந்தாதி எனும் களஞ்சியத்தை நமக்களித்த அபிராமிப் பட்டர் தம் பாடல்கள் குற்றம் நிறைந்தவை எனக் குறிப்பிடுவது நமது அகங்காரத்தின் மீது சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போன்றுள்ளது. பாடல்கள் பாடி அம்மையை நேரில் வரச்செய்யும் வல்லமை படைத்த அவர் தான் வல்லமை ஒன்றும் அறிந்ததே இல்லை என்கிறார். பக்தியிற் சிறந்த பெரியார் (இவ்விடத்துப் பெரியவர் எனப்
பொருள் கொள்க...), தம்மை சிறியவன் என்கிறார்.. ஆயினும் அன்னை மேல் கொண்ட பக்தியை உரைக்கையில் மட்டும் உண்மையை உரைக்கின்றார். உனது திருப்பாதங்களை விடுத்து வேறெந்த பொருள்மீதும் பற்றில்லை என்கிறார். தன் பாடல்கள் குற்றம் நிறைந்தவை எனக் குறிப்பிட்டவர் அவை அன்னையைத் துதி செய்யும் தோத்திரப் பாடல்கள் எனக் குறிப்பிடுகின்றார்.


"பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் " பசும்பொன்னாலான மேரு மலையை வில்லாக வளைத்த ஈசனோடு வீற்றிருக்கும் அபிராமி அன்னையே.. "வல்லபம் ஒன்றறியேன் " அருஞ்செயல்கள் புரியும் வல்லமைகள் ஒன்றும் அறியாதவன். "சிறியேன்" சிறியவன்." நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் " செம்மையான உனது மலரடிகளை விடுத்து வேறெந்த பற்றுமில்லாதவன். "வினையேன்" தீவினைகள் பல புரிந்தவனாகிய நான் "தொடுத்த சொல்" தொடுத்துத் தரும் இப்பாமாலை.."அவமாயினும்" குற்றம் நிறைந்ததாயினும், " நின் திருநாமங்கள் தோத்திரமே" அவை உனது திருப்பெயர்களை துதிசெய்யும் பாடல்களே... எனவே நீ அவற்றை வெறுக்காது, தள்ளாது ஏற்றுக் கொள்ள வேண்டும்.


எழுதித் தயாரித்தது திரு மு.கந்தசாமி நாகராஜன்.
Imagesகர்பரக்ஷாம்பிகை.jpg


--Geetha Sambasivam 13:39, 20 மார்ச் 2011 (UTC)


Contributors

Geetha Sambasivam

This page was last modified on 22 March 2011, at 09:12. This page has been accessed 2,881 times.