வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 4

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்


நான் எதிர்பாராத வகையில், முந்திய/பிந்திய கட்டுரைகளுடன் ஒரு தொடர்பு, சில சமயம் தென்படுகிறது, நேற்று குறிப்பிட்டது போல். அதுவும் நம் நாட்டுப்பற்று பற்றி.

                                                                                                          
0104.jpg

இன்று தன் இளவயதில் ‘இந்தியாவின் நம்பிக்கை நக்ஷத்ரமாகவும்’, பிற்காலம் ‘இந்தியாவின் பெரும்கிழவனார்‘ என்றும் போற்றப்பட்ட தாதாபாய் நெளரோஜி அவர்களின் அவதார தினம். ஆம். இந்தியாவின் விடுதலை பெறவே இவர் அவதரித்தார் என்று சொல்லப்பட்டது உண்டு். ஸெப்டம்பர் 4, 1825 அன்று பிறந்து, தனது 92வது வயதில் ஜூன் 30, 1917 அன்று மறைந்த அவரின் வாழ்க்கை, பல நிறைகுடங்களின் அணி ~ வணிகம், இந்தியாவிலும், இங்கிலாந்திலும் குடும்ப நிர்வாஹம், சமயத்தொண்டு, இரு நாட்டு அரசியல், பெண்ணியம், லாஹிரி வஸ்து கட்டுப்பாடு, இந்தியக்கூலியின் அவலம், இதழியல், பார்லிமெண்ட் கடமைகள், இத்யாதி. கல்யாணச்சாவு. அவருடைய வாழ்வு ஒரு பூர்ணாஹூதி. இன்றும் கட கட என்று அவரின் பெருமையை சொல்லி விடுகிறேன். அது எல்லாம், பல இணைய தளங்களில். நீங்களே படித்துக்கொள்ளலாம். அவரை பற்றிய நூல் ஒன்றை பற்றி எழுதி விட்டு, கை ஒத்தடம்!

தாதாபாய் நெளரோஜி புனித வாழ்நெறி, வாய்மை, கொடை, அசாத்திய துணிச்சல், தேசபக்தி ஆகியவைக்கு உருவகமாக திகழ்ந்தார். பார்ஸி மைனாரிட்டி சமூகம். நான்கு வயதில் தந்தையை இழந்த இந்த குழவிக்கு நற்குண முலைப்பால் ஊட்டியவள், அன்னை மாணிக்பாய். எல்லாற்றிலும் முதல், 97 வருடங்களும். கல்லூரியின் முதல் பட்டதாரி. 25 வயதில் அங்கு கணக்கு & தத்துவ பேராசிரியர். பார்சி மதபோதனையில் முதல் ஸ்தானம். இந்திய தேசிய காங்கிரஸ்ஸுக்கு மும்முறை அக்ராசனர்~1866, 1893, 1906. இந்திய இதழியலின் முன்னோடி. வணிகத்துறையில் இங்கிலாந்தில் மேன்மை, 1855லிருந்து. தர்ம ஸம்ஸ்தாபானார்த்தாய (தர்மராஜாவாக) அதிலிருந்து விலகியதில், மேன்மை உன்னதமாயிற்று. இங்கிலாந்து மக்களால் 1892 இல் ஃபின்ஸ்பரி தொகுதியில் பார்லிமெண்டுக்கு அனுப்பபட்ட முதல் இந்தியர். அங்கு நற்பெயர். இங்கிலாந்தில் இந்தியாவுக்காக போராட்டம்; உதவி முகம்மது அலி ஜின்னா ( அவரும் காங்கிரஸ் அக்ராசனராக இருந்தவர் தான்.) 1852 லிருந்தே அரசை, பலவழிகளில் சாடியவர். ‘இந்தியாவின் வறுமை, இங்கிலாந்தின் சுரண்டல்’ என்று இவர் எழுதிய ஆய்வு நூல் இன்றும் போற்றப்படுகிறது. மக்களின் அறியாமையை குறைக்க, ஞ்யான் ப்ரகாஷ் மண்டல் என்ற அமைப்பை நிறுவினார். அண்டர்லைன் செய்து கொள்ளுங்கள்: 1906 லியே வெளிப்படையாக, ஸ்வராஜ்யம் வேண்டும் என்று முழங்கினவர்.

இந்த பெரும்கிழவனாரை போற்றி: “... இந்திய வரலாற்றில் முக்கிய மனிதர்...1874 இல் பரோடா சமஸ்தானத்தில் பிரதமர். இங்கிலாந்தில் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் இவருக்கு ஆதரவு... இங்லாந்தில் இவரது அரசியல் கோட்பாடுகள்: இலவச கல்வி, தொழிற்சாலை கட்டுப்பாடு சட்டம், ஐரிஷ் மக்களுக்கு சுயாட்சி, இந்தியாவில் சீர்திருத்தங்கள். அங்கு இந்தியன் பார்லிமெண்டரி கட்சியை 1893ல் தொடங்குவதில் பெரும்பங்கு... 1888 ல் வாழ்க்கை சரித்திரங்கள் என்ற இங்கிலாந்து இதழ், இவரை ஒரு ஆன்மீகசெம்மல்; விவரிக்க இயலாத ஆளுமையும் நேர்மையான அரசியலும் இவரது அணிகள் எனக்கூறியது. 1892லியே, மாணவராக இருந்த ஜின்னா, இவருடைய தொண்டுகளில் பங்கேற்கத் தொடங்கினார்..‘ என்றெல்லாம், இவர் மறைந்த பின்னர் நடந்த நினைவு கூட்டத்தில் திரு. சந்திரவர்க்கர் புகழ்மாலை சூட்டினார்.

                                                                                                            
1993-Dadabhai Naoroji.jpg

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்று மன்றத்தின் இதழ் ஒன்றில் ஸுமிதா முக்கர்ஜி 2004ல் பதிவு செய்த ஆய்வு கட்டுரையிலிருந்து, கிட்டத்தட்ட 125 வருடங்கள் முன்னால், ஆங்கில தேசாபிமான பின்னணியுடன், முரண் ஒன்றுமேயில்லாமல், இந்திய தேசாபிமானத்தில் ஆழங்கால் பதித்த இந்த கிழவோனின் வாழ்நெறி இணையற்றது என்றும், இரு கலாச்சாரங்களையும் சுளுவாக தன் இயல்பாக அமைத்துக்கொண்ட இவரது தாராள மனப்பான்மையும், அங்கு நிலவிய இனவேற்றுமையின் இளித்த முகமும், அதை புன்னகையுடன் கேலி செய்த பன்ச் இதழும், இவை யாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்ட தாதாபாய் அவர்களின் நற்குணங்களும் வெள்ளிடை மலை என்று புரிகிறது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், மும்பையிலும், கராச்சியிலும், இங்கிலாந்து ப்ளும்ஸ்பரியிலும் சாலைகளுக்கு, இவரின் பெயர் சூடப்பட்டுள்ளது.

அந்த கட்டுரையின் உசாத்துணை கீழே. உசாத்துணையை அளிப்பதின் பொருத்தங்கள் நான்கு. 1. அவை என் தகவல் உரிமை கொள்கையை உறுதி படுத்துகின்றன; 2. இது தான் சான்றோர் மன்றங்களின் முறை, நாகரீகம்; 3. இஷ்டப்பட்டவர்கள் மேலும் ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்று சொல்லிக்கொண்டே பயிலலாம். 4. பிற்காலம் உதவும் என்று சிலர் கூறுகின்றனர்.


அமரர் தாதாபாய் நெளரோஜி ஜிந்தாபாத்!

இன்னம்பூரான்

04 09 2011









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:28, 4 செப்டெம்பர் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 4 September 2011, at 06:34. This page has been accessed 1,617 times.