அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 3From மரபு விக்கிஇன்னம்பூரான் ஒலியாய் தோன்றி, ஓசையாய் மாறி, இசையென உருவெடுத்த பேசும் மொழி, எழுத்தில் வடிவமைந்தபோது தோன்றியது செய்யுள்; அடுத்து வந்தவை: நாட்டுப்பாடல்கள், எழுத்தில்; நாடக வசனம் போன்ற நடைமுறை வசனம். பின்னரே, உரைநடை. செய்யுளை கவிதை என்பர். கவிதை இலக்கியத்தின் அருமையே ரசனையில். மொழி யாதாயினும், ரசனையும், அதை தூண்டில் போட்டு இழுக்கும் கற்பனைத்திறனும், ‘சபை நடுவே’ என்க. ஆங்கில கவிதை ஒன்று, ஆனந்தரங்கம் பிள்ளை டையரி போல, தலைப்பில், ‘வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் ஸெப்டெம்பர் 3. 1802 இல் இயற்றப்பட்டது’ என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறது. கவிஞர் காதலியையும்,பத்து வயது வரை பார்த்திராத மகளையும் காணக் கடல் கடக்கிறார். அவளோ ஃப்ரெஞ்சுக்காரி. நாடுகளிடையே இணக்கமான உறவு இல்லை. திருமணம் கேள்விக்குறி ஆகிவிடுகிறது. இவர் வேறு ஒருவளை மணப்பதைப் பற்றி நைச்சியமாக சொல்லவேண்டும். இது தான் பின்னணி. கவிதைக்கும் அதற்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றவில்லை. (நிகழ்வு நடந்தது, பல நாட்கள் முன்பே!) இனி கவிதை: Composed upon Westminster Bridge, September 3, 1802 Earth has not anything to show more fair: Dull would he be of soul who could pass by A sight so touching in its majesty: This City now doth, like a garment, wear The beauty of the morning; silent, bare, Ships, towers, domes, theatres, and temples lie Open unto the fields, and to the sky; All bright and glittering in the smokeless air. Never did sun more beautifully steep In his first splendour, valley, rock, or hill; Ne'er saw I, never felt, a calm so deep! The river glideth at his own sweet will: Dear God! the very houses seem asleep; And all that mighty heart is lying still!
காலை எனும் மஸ்லின் பொன்னாடை தரித்த லண்டன் பட்டனமே! கோலாஹல கோயிலென்ன, குளமென்ன, கூட கோபுரமென்ன, மாட மாளிகையென்ன, காற்றினிலே வஸந்தம் அம்மா! தேம்ஸ் நதியிலே, கடலோடி, நாடோடி, தோட்டம் துரவெல்லாம் ‘காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே’ சரிகைக் கீற்றுகளாய், சல்லடை மஸ்லினை ஊடுருவி, மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா வேகத் திரைகளினால்..... அம்மம்மா! என் உயிரே! என்னுடலின் ஆவியே! ஆத்ம சொருபியே! கண் வளராய். மேதினியில் இவ்வழகை வேறெங்கும் யான் கண்டதில்லை. ‘மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் வந்து பரவுதல்போல், இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்தது போல் வானத்து’ சூரிய மகராசா! ஏழு குதிரை சாரட்டுக்கட்டி, ‘நீலக்கடலினுக்குள்ளிருந்தே’ உந்தன் ஒளி ‘நிமிர்ந்து நிமிர்ந்து பார்க்குதடி, நாலிலொருபங்கு தோணுதடி இப்போ நல்லதொருழகாய்க் காணுதடி கட்டுமரமொன்று காணுதடி அது கதிரவனை போய் முட்டப் போகுதடி கை கொட்டி அதை நிறுத்தங்கடி அது முட்டி விட்டால் பெரும் மோசமடி நாட்டுப்பாடலோடு, பரிபாடல் வரலாமோடி?! ‘ஏம இன் துயில் எழிதல் அல்லதை, மாமதுரை துயிலெழுந்தாலும், லண்டன் தூங்குதப்பா! மடி நிறைய நீர் சுமந்து நதியும் நகருகிறாள்.
[இத்தனை உரிமை எடுத்துக்கொண்டதை மன்னிப்பீர்களாக. ராஜத்திடம் ஒரு விண்ணப்பம். இந்த momentary அரைகுறை மொழியாக்கத்தை சீரும், சிறப்புமாக செய்து அளிக்கவேண்டுமம்மா. இன்றொரு நாள் இலக்கியநாளாக இருக்கட்டுமே. ] இந்தக்கவிதையை படிக்காத மாணவர்கள் குறைவு. புரிந்து ரசித்தவர்கள் இன்னும் குறைவு. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் என்ற கவியரசர் இயற்றியது. இந்த பெட்ரார்க்கியன் ஸானெெட்டின் (14 வரி) சீர் வரிசை: a~b~b~a~a~b~b~a~a~c~d~c~d~c~d. ஆங்கில புலவர்கள் இதை ‘கண்டதே காட்சி’ ('momentary')என்ற வகையில் இருக்கிறது என்பார்கள். எழுதியது, மனம். தெரிகிறது. எடுத்த எடுப்பில் அசை மழு; அது அவரின் கவிதை உரிமை. உணர்ச்சி பிரவாகம். ஆதவன், நதி என்று இயற்கையை வருணிக்கும் தருணத்தில், உப்பரிகைகளும், கப்பலும், அதுவும், இதுவுமான செயற்கையை உள்ளடக்கம் செய்த நுட்பத்தை ரசியுங்கள். முடிப்பது என்னமோ ‘ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ‘. அதான் பரிபாடலை எடுத்தேன்.
உசாத்துணை: நீலம்: மஹாகவி பாரதியார்: குயில்; ஊதா தெ.சி. தீத்தாரப்பன்(1942) அரும்பிய முல்லை: தீபன் (உபயம்: பொள்ளச்சி நசன்) மயில் கழுத்து: பரிபாடல் எட்டாவது. பச்சை: சொந்த சரக்கு.
http://www.youtube.com/watch?v=http://www.youtube.com/watch?v=nLSm5VHjp2A
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:10, 4 செப்டெம்பர் 2011 (UTC) |
