வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: மே 12

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்

 எங்கிருந்தோ வந்தாள்!


சென்னை மந்தைவெளியில் ஒரு குடில். நூறாண்டுகளுக்கு மேல், ஒரு வரலாற்று நாயகனாக, நிறைவுடன் வாழ்ந்து, ஒரு அமைதியான, உலகளாவிய, இந்திய தொன்மை பண்பின் சிகரமாகத் திகழும் யோகமந்திரத்தை நிறுவிய மஹான் திருமலை கிருஷ்ணமாச்சாரியாரிடம், ஒரு சினிமாக்காரி வருகிறாள்.
அந்த யோகமந்திரம் இன்றளவும், மன/தேஹ/ஆத்ம ஆரோக்கியத்துக்கு அரிய சேவை செய்து வருகிறது. தந்தைக்கு உகந்த மகனார், திரு. தேசிகாச்சாரியார். முதுகு வலியா?, நொந்த மனமா?,உளம் குழம்பிய குளம் ஆயிற்றா? நிவாரணம் உண்டு. அங்கு போனால், பதஞ்சலி மஹரிஷியின் ஆசியில், நல்லதெல்லாம் நடக்கும். எல்லா பணியாளர்களும் வாலெண்டியர்கள். ஸ்தாபகரின் மறுமகன் யோக குரு பீ.கே.எஸ். ஐயங்கார் அவர்கள் புவியனைத்திலும் யோகமந்திரத்தை ஒலிக்கச்செய்தார். இது ஒரு பக்கம்.

இந்த தொந்தம் பந்தம் எல்லாம் ஸ்வர்க்கத்தில் படைத்தது என்று நினைக்கிறேன். இல்லாவிடின், பால் ப்ரண்டன் காஞ்சி முனிவரிடம் வருவானேன்? அவர் பால் ப்ரண்டனை பகவன் ரமண மகரிஷியிடம் அனுப்புவானேன்? நரேந்திரன் மஹரிஷியிடம் போவானேன்? அதன் நற்பயனாக, ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் போவானேன்? பாமரர்களான நமது வரத்துப்போக்குகளில் கூட, இது சில சமயங்களில் காணக்கிடைப்பதாக தெரிய வருகிறது. 1926ல், இன்றைய கதாநாயகி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரையை கேட்க வருகிறாள்.
(11 05 1918 அவருடைய ஜன்மதினம். எழுத விழைந்தேன், அவரை பற்றி. ‘அன்றொரு நாள்: மே 11: பரிவட்டம் துறந்த ஆசார்யன்’ என்ற தலைப்பில் கண்ணனை எழுத பணிக்கலாம் என்று நினைத்தேன். கண்ணனோ லண்டன் டவுனை ரவுண்ட் அடித்த வண்ணம்! நினைத்ததெல்லாம் நடப்பதில்லை.)
ஜேகே அவர்கள் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகத்தை ஒலிக்கிறார். மகுடிக்கும் மயங்கிய அரவம் போல, அவளும் செயலிழந்து விடுகிறாள்.

‘ என்றோ விட்டுப்போன அழைப்பு அல்லவோ இது? எனக்கு பழக்கமானது தான். ஆனால் வெகு தூரத்திலிருந்து, இப்போது. எனக்கு இது வாழ்வின் புதிய அத்யாயம்.புதிய பாதை. ஆம். அவருடைய உரையை கேட்க சென்றதே எனக்கு புரியாத செய்கை.’

அந்த அனுபவம் உந்த, இந்தியா முழுதும் பயணம். அவளுக்கு பல இடங்கள் முன் பரிச்சியமாகத்தான் (deja vu ) தோன்றுகின்றன. பிரபல நர்த்தகி ஏனாக்ஷி ராமராவிடம் பயிற்சி. குறுகிய காலத்திலேயே, அவரிடமிருந்து பூரணத்துவம் அடைந்ததாக நற்சான்று. இந்த யோக வாழ்க்கை பாதை, அவ்வப்பொழுது தான், போடப்படுகிறதோ? சென்னை வந்தாள், இந்த நாட்டியக்காரி. பிரும்மஞான சபையில் இவளது நடனம். அது ஜவஹர்லால் நேருவின் கவனத்தை கவர்கிறது. பகவதி பிரசாத் மிஸ்ராவும், பிருத்வி ராஜ் கபூர் கதாநாயகனாக நடிக்கும் ஷேர்-ஏ-அராப் என்ற படத்தில் நடிக்க அழைக்கிறார். அந்த படம் ஜனவரி 1930ல் வெளிவந்தவுடன், இந்த நாட்டியக்காரி உலகப்புகழ் சினிமாக்காரியானாள். புதிய புனைப்பெயர்: இந்திரா தேவி, மே 12 1899 அன்று லாட்வியாவின் ரீகா என்ற நகரில் பிறந்த யூஜீன் பீட்டர்சனுக்கு. 15 வயதில் ‘யோகம்: 14 பாடங்கள்’ என்ற நூல் அவளுள் உறைய தொடங்கியது. இந்தியா தான் தன்னுடைய தாயகம் என்று உணர்ந்தாள். தன்னுடைய காதலனிடம் மோதிரத்தைத் திருப்பிக்கொடுத்து விட்டு, தன்னுடைய சில்லரை நகைகளை விற்று, அந்த பணத்தில், இந்தியாவுக்கு கிளம்பி விட்டாள்.
ஜான் ஸ்ட்டிரகட்டி என்ற செக்கோஸ்லாவக்கிய தூதரக அலுவலரை மணந்தாள். ஒரே பார்ட்டி மயம். ரபீந்தரனாத் தாகூர், நேரு, ரோரிச் தம்பதி ( அவர்களை தெரியுமோ?) போன்றோருடன் நட்பு.
ஒரு இனம் புரியாத வகையில் யோகத்தின் மூலமாக ஒரு நண்பரின் இதயநோயை குணப்படுத்துகிறார், பாரதமாதாவின் இந்த அபிமான புத்திரி. ஆனால் தனக்கு வந்த இதயநோய்க்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அவரே சொல்லட்டும்.
இந்திரா தேவி:
‘என்னுடனிருந்த ஒரு யோகா மாணவர் யோகிகளை அணுகச்சொன்னார். திருமலை கிருஷ்ணமாச்சிரியார் அவர்கள் மைசூரில் 1937 காலகட்டத்தில் மைசூர் யோகசாலை நடத்திக்கொண்டிருந்தார். அங்கு போய் சேர்ந்தேன். ஒரு கூரிய பார்வை. உதறிப்போனேன். என்னை திரஸ்கரித்து விட்டார். ‘பெண். அதுவும் விதேசி. தகுதியில்லை’ மூஞ்சியில் அடித்தமாதிரி. அவர் ஒரு யோகபுருஷன். தன் இதயத்துடிப்பை நிறுத்துவார். தொலைவில் உள்ள விளக்கை கண் பார்வையால் ஏற்றுவார். ஆனால், என்னை புறக்கணிக்க முடியவில்லை. மைசூர் மஹாராஜா வேறே சிபாரிசு. தயவு தாக்ஷிண்யமில்லாமல், ஆணென என்னை பாவித்து, கடுமையாக வேலை வாங்கினார்.
ஒரு நாள், ‘நீ பல படிகளை தாண்டி விட்டாய்’ என்று சிலாகித்து, என்னை தனியே அழைத்து சென்று மர்மமும் சிக்கலும் நிறைந்த பிராணாயமம் எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.
கணவனுக்கு சைனாவுக்கு மாற்றல். ‘நீ என் வாரிசு. யோக குரு தகுதி பெற்று விட்டாய். சொல்லிக்கொடு, அங்கே’ என்றார். இது 1938. ஒரே வருடத்தில் உச்சாணிக்கிளையில். 1939: சீனாவின் அதிபர் சியாங்க் கே ஷேக் அவர்களின் வீட்டில் பள்ளி. மாஜி சினிமாக்காரி. மாஜி நர்த்தகி. மாஜி பார்ட்டி கேர்லாக இருந்த யூஜீன் பொண்ணு இப்போது மாதாஜி குரு இந்திரா தேவி. உலகம் முழுதும், அதுவும் ஆன்மிக காழ்ழ்ப்புணர்ச்சி ரஷ்யாவிலும், எதையும் பிடித்துக்கொள்ளும் அமெரிக்கா, எங்கும் மாதாஜி + யோக தரிசனம். சிவப்புச்சட்டை கிராம்யுகோவே மாதாஜி கீர்த்தி பாடுகிறேன். ரஷ்ய அதிபர் தன்னை சிஷ்யன் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். மாதாஜி புவனமாதா எனினும், பிறந்த ரஷ்யா, பாரதமாதா, புலன்பெயர்ந்த அர்ஜெண்டினா தான் அவருக்கு இஷ்டதெய்வங்கள். திடீரென்று ஒரு நாள், திடகாத்திரமாக இருந்த அவரது உடல் நிலை கவலைக்கிடமாயிற்று. வயது 102: ஏப்ரல் 25, 2002. ஹிந்து மரபு நல்லடக்கம்.
என்னமோ சாதனை இயலுமா என்று கேட்கிறீர்களே. மாதாஜியின் அவதாரத்தை பற்றி என்ன சொல்ல! எழுத எவ்வளவோ இருக்கிறது. 


இன்னம்பூரான்
12/13 05 2012
http://indrus.in/img/add/e51975d33.jpg


உசாத்துணை:


http://indrus.in/articles/2010/11/22/first_lady_of_yoga04910.html






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:49, 14 மே 2012 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 14 May 2012, at 10:54. This page has been accessed 1,472 times.