வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஜூலை 9: I

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்

                                                                                                         
Innamburan.jpg
உங்களுக்கு ஜூலை 9, 1925 அன்று பிறந்த வஸந்த் குமார் சிவசங்கர் படுகோண் என்ற கொங்கணி சரஸ்வத் பிராமண சாதனையாளரை தெரியுமோ? ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஜப்பான் அங்கெல்லாம், ஐயா ரொம்ப பிரபலம். சாதனை என்ன சாதனை? கூடப்பிறந்த அதீத கற்பனாசக்தி, அருமையான படைப்பாற்றல், கூர்மையான சிந்தனைக்களம், உன்னதமே இலக்கு. ஆங்கிலத்தில் கல்ட்/ஐகான் என்பார்கள். அவ்வகையில் இவருக்கு ஆத்மார்த்தமான விசிறிகள். அமெரிக்காவில் ஆர்ஸன் வெல்லஸ் என்று ஒருவர் இருந்தார். ஹெ.ஜீ. வெல்ஸ்ஸின் ‘உலகங்களின் யுத்தம்’ என்ற நூலை (வெளியுலகத்திலிருந்து நமது பூமியின் மீது படையெடுப்பு) ரேடீயோ நாடகமாக்கி இயக்கவே, நிஜமாகவே நடக்கிறது என்று பீதியடைந்து, மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். அது பற்றி ஒரு நாள் எழுதவேண்டும். பார்க்கலாம். நம் படுகோண் ஐயாவும், இந்தியாவின் ஆர்ஸன் வெல்லஸ் எனப்படுவார். ஆர்ஸன் வெல்லஸ் பிரபல நடிகை ரீட்டா ஹேவொர்த்தை மணந்ததைப் போல் இவரும் ஒரு பிரபலத்தை மணந்தார். ஐயோ பாவம்! ஒர்க்கவுட் ஆகவில்லை.


1950களில் ஹிந்தி சினிமா கொடி கட்டி, பட்டொளி வீசி, பறந்தது. உலகெங்கும் இவருடைய புகழ் மூலமாக இந்திய சினிமாவின் புகழ் பரவியது. பிரபல அமெரிக்க இதழ் ‘டைம்’ ன் நிரந்தர புகழ் பெற்ற 100 சினிமாக்களின் பட்டியலில் இவருடைய ‘ப்யாஸ்’ (தாகம்) & காகஸ் கா பூல் (காகிதப்பூ) அடக்கம். சீ.என்.என். தேர்ந்தெடுத்த 25 சிறந்த ஆசிய நடிகர்களில் ஒருவர், இவர். இப்போது புரிந்து விட்டது, இவர் சினிமாக்காரன் என்று! ‘ஸாகேப், பீபீ அவ்ர் குலாம்’ என்ற இவருடைய சினிமாவை பார்த்து விட்டு வரும் போது கால் நொண்டியது! பின்னெ! மனம் நொண்டும்போது, கால் என்ன, உள்ளங்கை கூட நொண்டும்! என்ன சொல்ல வர்ரேன் என்றால், இவருடைய சினிமாப்படங்களில், ஒவ்வொரு காட்சியும் நம்மை உலுக்கி எடுத்து விடும். புதுமை பித்தன் சொல்வார், ‘என் கதை காகிதத்தை பொசுக்கி விடும்’ என்று. அந்த மாதிரி இண்டென்ஸிடி -அடர்த்தியான உணர்ச்சிக்களம், இவருடைய சினிமாக்கள். அப்பப்பா! அந்த ‘ஸாகேப், பீபீ அவ்ர் குலாம்’ல் சாகேப் குடித்து விட்டு, தொய்ந்து வருவார். அந்த காட்சி 50 வருடங்கள் கடந்தும், கண்முன் தத்ரூபமாக நிற்கிறது, இந்த க்ஷணம். அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் அவருடைய படங்களுக்கு மவுசு தான் -ஃபுல் ஹெளஸ்.


புரிஞ்சுடுத்து. எழுதறது, குரு தத் அவர்களை பற்றி என்று. ஆம். அவருடைய இயற்பெயர் தான் படுகோண். பலகோணங்களில் சினிமாவுக்கு இலக்கணம் வகுத்தவர். கேமரா கோணங்களில் புதுமை; அமரத்துவம் பெற்ற தனிக்காட்சிகள்;இசைநுட்பம், இசையும் சித்திரமும், அருமையான உரையாடல்கள், நவீன கருத்துக்கள், குணாதிசயங்கள், ஒளியும் நிழலுமாக, முகபாவங்கள் ஆகியவற்றின் வண்ணக்கலவை தான் இவருடைய சினிமா ரஸவாதம். இவரின் நடிப்புத்திறனும் அபாரம்.


விதி யாரை விட்டது? 1953. வருடம் கீதா ராய் என்ற பிரபல பின்பாடகியை காதலித்து மணந்தார். ஒத்து வரவில்லை. போதாக்குறைக்கு, வஹீதா ரஹ்மானுடன் இவரை இணைத்து வதந்திகள். பத்தே வருடங்களில் தனிமைப் படுத்தப்பட்டார். குடிப் பழக்கம் வேறு. அக்டோபர் 10, 1964: தூக்க மாத்திரை அதிகம். அமரரானர். அமரராகவே நம் மனதில் வாழ்கிறார்.


இன்னம்பூரான்

09 07 2011

உசாத்துணை:

http://www.webindia123.com/movie/legends/gurudutt/gurudutt.htm








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:14, 9 ஜூலை 2011 (UTC)







Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 9 July 2011, at 12:14. This page has been accessed 2,205 times.