அன்றொரு நாள்: ஜனவரி:25: IIFrom மரபு விக்கிஇன்னம்பூரான்
“ சில சமயங்களில் நம்மால் அநியாயத்தைத் தடுக்க முடிவதில்லை; அதற்காக, எதிர்க்காமல் இருப்பதா? என்ன?.” ~ எலி வைசல்: நோபல் பரிசு பெற்றவர் ஜனவரி 26, 1950 இந்திய குடியரசு தினம். டில்லியில் விழா, வருடாவருடம். அந்த விழா ஏற்பாடுகளில், இரண்டு வருடங்கள் எனக்களிக்கப்பட்ட பொறுப்புகளை பற்றியும், நினைவலைகளை பற்றியும், ஜனாதிபதியின் உரையை பற்றியும் சம்பிரதாயமாக எழுதாமல், இந்த ‘வழக்கை’ தொடர்வதின் காரணம்: ~ ‘என் தரப்பு’ என்ற அந்த இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்த தன்னிலை விளக்கத்தில் உறையும் ஆவேசம், பரவசம், தேசாபிமானம், ஆழ்ந்த சிந்தனை, கல்வியின் தாக்கம் ஆகியவை அவை. அன்றும் தேவை; இன்றும் தேவை; என்றும் தேவை. என் தரப்பு: “...கோர்ட்டில் என் தரப்பைக் கூற அனுமதிக்கவில்லை...என் மேல் விதிக்கப்பட்ட பழிகள்: அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுபட இந்தியர்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறினேன்; “...நான் வன்முறையை ஆதரிக்கக்காரணமே, அரசின் வன்முறை நாகரீகம்...ஒடுக்கப்பட்டவர்களும், நசுக்கப்பட்டவர்களும் மேலாண்மையின் தத்துவபோதனையை கேட்டு விமோசனம் அடையப்போவதில்லை...யதேச்சதிகாரத்தை ஒழிக்க வலிமை வேண்டும்...ஆங்கில ஞானி பென்தாமும், ஹ்யூமும் நான் சொல்வதை ஆதரிக்கிறார்கள்... தற்கால கலோனிய ஆட்சிக்கு அரசியல் சாஸன அடித்தளம் இருக்கிறதா? ஆக மொத்தம், உங்கள் குருநாதர் சொல்படி பார்த்தால், மேல்தட்டு கூஜாக்களின் சம்மதம் எம்மை கட்டுப்படுத்தாது...புரட்சி என்ற புனித உரிமையை முதலில் நிலை நாட்டியது, உங்களுடைய இங்கிலாந்தில். ஒரு அரசனை சிரச்சேதம் செய்து, மற்றொருவனை இறக்கி, புரட்சி செய்த நாடு, உமது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு, எங்கள் உரிமையை மறுக்கிறீர்கள்? உமது அரசாட்சி சட்டத்தை மீறியது என்று குற்றம் சாட்டுகிறேன். அதை விரட்ட வன்முறை தேவைப்படும். எனக்கு தனிப்பட்ட முறையில் யாரும் விரோதியல்ல. நான் மனித உரிமையை நாடுபவன். வித்தல்பாய் படேல் அவர்கள் சொன்னமாதிரி, ஒரு புரட்சி வந்து கொண்டிருக்கிறது. என்னை கைது செய்ததே சட்டவிரோதம். நான் ஜவாபு சொல்ல இங்கு வரவில்லை. உலகமன்றத்தின் முன், அவ்வுலகத்தின் ஐந்தில் ஒரு பகுதியை ஆக்ரமித்ததற்கு, எம்மை கொள்ளை அடித்ததற்கு, எம் முன்னேற்றத்தைத் தடை செய்ததற்கு, உம்மை குற்றம் சாற்ற வந்துள்ளேன். உமது சுரண்டலால், இந்தியாவில் வறுமை மிகுந்தது. மரபு அழிந்தது. முடிபை கூறிவிடுகிறேன். உங்கள் அரசியல் தத்துவமேதை ஹ்யூம் அவர்கள் மக்களின் தற்காப்புப்புரட்சியை அடக்குவது அறிவின்மை என்கிறார். எனவே, இந்த வழக்கே அறிவின்மையின் விளைவு. “... உப்பரிகை வாசிகளான உமது நீதிபதிகள் ஹாம்ப்டன் என்ற புரட்சிக்காரன் மீது குற்றப்பத்திரிகை வாசித்தாலும், நாடு விழித்தெழுந்தது, ஐயா. நீதிபதியின் நீட்டோலை, மக்களின் கருணையின் முன் அருகதை இழந்தது, ஐயா..” என்றார், இங்கிலாந்தின் அரசியல் சாஸனத்தின் வரலாற்றாசிரியர், ஜான் ரஸ்ஸல் பிரபு. அவருடைய எச்சரிக்கையை உமக்கு நினைவுறுத்தி, என் தன்னிலை விளக்கத்தை முடித்துக்கொள்கிறேன்...’ (தொடரும்) இன்னம்பூரான் 26 01 2012 பி.கு. ஜனாதிபதியின் 2012 ம் வருட உரை உறைக்கவேயில்லை. அவர் உரைக்கவும் இல்லை.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:30, 31 ஜனவரி 2012 (UTC) |