அன்றொரு நாள்: ஆகஸ்ட் 26From மரபு விக்கிஇன்னம்பூரான்
‘முனிவராக’ பிரகடனப்படுத்தும் நாள் நெருங்குகிறது. பணிவுடன் பகிர்ந்து கொள்ளும் சில நினைவலைகள்: ~ மால்கம் மக்கரிட்ஜ் என்ற நிருபர் (ஓரளவுக்கு நாத்திக மனப்பன்மையுடன் எனலாம்.) 1970 இல் இவரை பார்க்க வந்தவர். ஒரு உரையாடல். மக்கரிட்ஜ்: இதெல்லாம் தினசரி பணிகளா” அன்னை: ஆம். இது என் லக்ஷியம். இறைவன் தொண்டு. ம: எத்தனை மாதங்களாக இதை செய்து வருகிறீர்கள்? அ: மாதம்! 18 வருடங்களாக. ம: தெருத்தெருவாக 18 வருடங்களா? அ: ஆம். இது என் கொடுப்பினை. இவர்கள் எங்கள் மனிதர்கள். ஆண்டவன் அருளிச்செயலிது. ம: களைத்தது இல்லையோ, நீங்கள்? வயதாகிறதே. யாரிடமாவது கொடுத்து விட்டு விலகலாம் என்று தோன்றியது உண்டோ? அ: இல்லை. இது இறையாணை. எனக்கு மகிழ்ச்சி அளிப்பது. யெளவனாமாக இருக்கிறேன். எல்லாம் அவன் செயல்; என் பாக்கியம். ம: (தனி மொழி):‘என்னால் இந்த மாதரசியை மறக்க முடியாது ~ அந்த முகம், ஒளி, கண்கள்: அவை பிரதிபலிக்கும் கனிவு, கருணை, அன்பு. ஒரு தேவதை முன் நிற்பதை உணர்ந்தேன். நான் பழைய ‘ம’ அல்ல. மாறி விட்டேன். அதை வருணிக்க இயலாது. 1971 இல் அவர் எழுதிய ‘கடவுளுக்கு ஒரு எழில் அர்ப்பணம்: அன்னை தெரெஸா’ என்ற நூலை படித்தபோது, அன்னையின் அறையில் ஒரு பரிபூரணானந்த வெளிச்சத்தையும், அன்னையின் ஒளிவட்டத்தையும் தான் பார்த்ததாக எழுதியிருந்ததை படித்த ஞாபகம். அவர் கிருத்துவராகவும் மாறி விட்டார். இதை சொல்வதின் காரணம், அன்னை பெற்ற நன்கொடைகளை பற்றி, மத மாற்றம் செய்வது எல்லாம் பற்றி பிற்காலம் சர்ச்சைகள் எழுந்தது என்பதையும் குறிப்பிடுவதால்.
~ ஹைதராபாதில், வஸந்தாவும் நானும் நிர்மல் ஹ்ருதயத்தில் அநாமதேயப்பணி செய்யும் போது, அதிகாரி ஒருவர் அடிக்கடி வருவார். யாருடனும் பேசாமல், வயோதிகர்களுக்கும், அநாதைகளுக்கும் நகம் வெட்டி, குளிப்பாட்டுவது போன்ற அணுக்கத்தொண்டு செய்வார். அவருக்கு முன் துரும்புகளாக எங்களை நினைத்துக்கொள்வோம். அடுத்த படியாக, கல்கத்தாவில் அன்னையை தரிசிக்க போனபோது, தரிசனம் கிடைக்கவில்லை. ஒரு பணி செய்ய எதிர்பாராத தருணம் கிடைத்தது.
~சென்னையில் அவரை பார்க்க விழைந்தோம். ஒரு முறை முன்னறிவிப்பு கிடைத்து ராயபுரம் சென்றோம். அச்சமயம் வஸந்தா மிக பலவீனமாக இருந்தாள். அன்னை தெரஸா எப்படியோ அவளை கூப்பிட்டு, பூமாலையை வாங்கி அணிந்து கொண்டு, ‘குழந்தாய்’ என்று அழைத்து, சிரம் மீது கை வைத்து ஆசியளித்தார். இதெல்லாம் சொல்வது கிடையாது, சொல்ல நேரிட்டால், தடுத்து நிறுத்தவும் இயலாது. என்ன சொல்கிறீர்கள்? 2.‘கை சுத்தம் கிருமி நாசனம்’ என்ற லிஸ்டர் பிரபுவின் அறிவுரையிலிருந்து மருத்துவ சாதனைகள் பலவற்றை யாம் அறிவோம். ஒவ்வொன்றும் மைல்கற்கள் என்க. ஆகஸ்ட் 26, 1994 அன்று மின்கலத்தால் இயங்கும் இதயம் ‘லப் டப்’ அடிக்கத் தொடங்கியது, இங்கிலாந்தில் உள்ள உலக பிரபல பாப்வொர்த் ஆஸ்பத்திரியில். அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இந்த டிட்டானியம்-ப்ளாஸ்டிக் கருவியின் பெயர்: Left Ventricular Assist Device (LVAD). இது ஒரு மின்சார பம்ப். இதன் விலை 40 ஆயிரம் பவுண்டு. இங்கிலாந்தில் 1979லியே முதல் இதய மாற்று சிகிச்சை செய்த டாக்டர் ஸர் டெரன்ஸ் இங்க்லீஷ் தலைமையில் ஒரு 11 பேர் அடங்கிய குழு இந்த அறுவை சிகிச்சையை நான்கு மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்தனர். ஒன்பதே மாதங்களில் சிறுநீரகக்கோளாற்றினால் அந்த நோயாளி இறந்தார் என்றாலும், ஆறே வருடங்களில் இந்த மின்சார பம்ப் ஒரு நீண்டகால பணி செய்யும் திறனுடன், ஒரு ஆக்ஸ்ஃபோர்ட் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டது.
3.‘சாக்கா? சபைனா?’ பட்டி மன்றங்களும், கசப்பான விதண்டா வாதங்களும் மருத்துவ உலகுக்கு புதிது அல்ல. இளம்பிள்ளை வாதம் ஒரு கொடிய வியாதி. பரவலாக அது இருந்ததையும், அது கிட்டத்தட்ட மறைந்து போனதையும் நாம் அறிவோம். அதற்கான தடுப்பு மருந்துகளில் செத்தது (Salk) ஒரு வகை; சாகாதது (Sabine) ஒரு வகை. முதல் வகையை ஊசியால் செலுத்தவேண்டும். இரண்டாவது சொட்டு மருந்து. அதை 20 வருட ஆராய்சிக்கு பின் கண்டுபிடித்த டாக்டர் ஆல்பெர்ட் ப்ரூஸ் சபைன் போலந்தில் பிறந்த தினம், ஆகஸ்ட் 26, 1906. 25 வயதிலேயே நியூ யார்க் நகரை தாக்கிய இளம்பிள்ளை வாத தொடர் நிகழ்வினால், இந்த் ஆராய்ச்சியில் இறங்கிய சபைனின் முதல் பிரச்னை, அவருடைய ‘உள்ளது உள்ளபடி உரைப்பது’. தன்னுடைய 86 வயதில், மார்ச் 3, 1993 இல் இறக்கும் வரை இடை விடாத ஆய்வு, உலகெங்கும் புகழ், இடை விடாத சர்ச்சை. சின்சினாட்டி பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்த சபைன் அந்த தடுப்பு மருந்தை தனக்கும், தன் குடும்பத்துக்கும் கொடுத்து ஆய்வு செய்த பின்னரே சம்மதித்த கைதிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு சோவியத் ரஷ்யாவில் லக்ஷக்கணக்கான மக்கள் பயன் அடைந்தனர். இவர் சீண்டாத அரசு இல்லை எனலாம். ஆனால், இவர் எப்போதும் உண்மை பேசுபவர். டெங்கு போன்ற பல வைரல் (viral) வியாதிகளின் பரம வைரியான டாக்டர் ஆல்பெர்ட் ப்ரூஸ் சபைன் அவர்களை போற்றுமோவாக.
“... நம்மிடம் உள்ள அறிவு/ஆய்வு/ திறன் மக்களின் இன்னல்களை குறைக்குமானால், மனிதநேயம் கொண்ட எந்த விஞ்ஞானியும் அதை பூட்டி வைக்க மாட்டான்...”
~ டாக்டர் ஆல்பெர்ட் ப்ரூஸ் சபைன்
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:19, 27 ஆகஸ்ட் 2011 (UTC) |

