இன்னம்பூரான்
“ வறுமையில் வாடும் நாடுகள் தான், ஐயகோ! செல்வத்தை ஏற்றுமதி செய்கின்றன.” [The poorest countries are often, perversely, net exporters of capital.] ~ ஜெஃப்ப்ஃரி சாக்ஸ், பொருளியல் நிபுணர்.
வறுமையும் செல்வநிறைவும் மனிதசமுதாயத்துடன் உடன் பிறந்தவை. பாணரும், விறலியும் கொடைவள்ளல்களிடமிருந்து பரிசில்கள் பெறுவதை, அதுவும் அமோகமாக பெறுவதை, பதிற்றுப்பத்து போன்ற சங்க இலக்கியங்களில் காண்கிறோம். ‘கடும்பசியாயினும், காகம் தனித்து உண்ணாது; கரகரவென கரைத்து, சுற்றம் கூட்டும்...’ எனப்படும் மரபுக்கிணங்க,ஏழை ஏழைக்கு உதவ விழையும் யதார்த்தத்தையும், மனிதசமுதாயத்துடன் உடன் பிறந்தததாக காண்கிறோம். இயல்மொழி வாழ்த்துத்துறையில், ஒழுகு வண்ணத்தில், கூந்தல் விறலியர் என்ற செந்த்தூக்கு பாடல் ஒன்றை படியுங்கள். படித்தாலே, பசி தீரும்! அப்படியெல்லாம் பேசித்தான் இது வரை ஏழைகளை ஏமாற்றி வந்தோம்.
‘உண்மின் கள்ளே! அடுமின் சோறே!
எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே!
வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப,
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்,
ஏந்து கோட்டு அல்குல், முகிழ் நகை, மடவரல்,
கூந்தல் விறலியர்! வழங்குக அடுப்பே!
பெற்றது உதவுமின்; தப்பு இன்று பின்னும்-
மன் உயிர் அழிய, யாண்டு பல துளக்கி,
மண்ணுடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி,
மாரி பொய்க்குவது ஆயினும்,
சேரலாதன் பொய்யலன் நசையே!
தமிழனுக்கே உரித்தான இந்த பழமை மரபு பின்னணியில், 1987ல் ஃபிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் ‘ஊருக்கிளைத்த பிள்ளையார் கோயிலாண்டிகளை’ பெருமை படுத்தும் விழாவில் நூறாயிரம் மக்கள் கூடியதையும், 1992 லிருந்து அக்டோபர் 17வது தினம் உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுவதையும், கூர்ந்து கவனித்தால், புலப்படும் உண்மைகள்:
மனிதனின் வாழ்க்கை வறுமையில் தான் தொடங்கியது;
பஞ்சமும், பற்றாக்குறையும், வியாதிகளும், கணக்கற்ற உபாதைகளும் அதை அதிகரித்தன;
குடிநீர், சத்துள்ள உணவு, தலைமேல் கூரை, சுத்தமான சூழல் போன்ற அத்தியாவசியங்கள் ஏழைகளின் உரிமையாக, உதட்டளவில் மட்டுமே பேசப்படுகிறது;
வறுமையினால் அநேகர் அல்பாயுசில் மரித்துப்போகிறார்கள்;
வறுமையை ஒழிக்க இயலாது;
அதை கணிசமாகத் தணிக்க இயலும்;
அதற்கு, உலக அளவில் கொடையுள்ளம், நிர்வாகம், தன்னார்வம் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டவேண்டும் என்பது, ஹார்வேர்ட் பொருளியல் நிபுணர் ஜெஃப்ஃப்ஃரி சாக்ஸ் அவர்களின் கருத்து.
1990 வது வருடநிலைமையுடன் ஒப்பிட்டு, 2025 க்குள் அடிமாட்டு வறுமையை பாதி அளவுக்கு தணிக்க முடியும் என்பதும், அதற்கு ஒரு பரந்த அளவுக்கு இலக்குகள் அமைத்து செல்வத்தில் ஒரு பங்கை செலவழிக்க வேண்டும் என்பதும் அவருடைய கருத்து. இந்தியாவிலும், சீனாவிலும் கணிசமான அளவு முன்னேற்றம் இருப்பதாக அவர் கூறுகிறார். அவருடைய ஆய்வு கூறுவது:
~செல்வமிகுந்த நாடுகளில், மக்கள் வறுமைக்கு ஏழைகள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்;
~முதலில் இனத்தை குற்றம் சாட்டினார்கள்;
~ பின்னர் கலாச்சாரம்; பின்னர் சமயப்பிரிவினைகள், பிறகு சாதி, பிறகு சுயசம்பாத்தியத்திலல் ஆர்வமின்மை, ஆணவம், அரசின் குறைகள், ஊழல் இத்யாதி.
~ பல நாடுகளின் புள்ளி விவரங்கள், காலத்தையும் குறித்துக் கிடைப்பதால், தர்க்கம் தொடர்ந்தாலும், அரசுகளின் தன்மை முக்கியம் என்றாலும், அத்துடன் பிரச்னை நிற்கவில்லை. சான்றாக, Transparency International நடத்திய சர்வேக்கள் மூலம், விரைவில் பொருளாதார வளர்ச்சி அடையும் ஆசிய நாடுகளில், மந்த கதி ஆஃபிரிக்க நாடுகளை விட லஞ்சலாவண்யம் பெருகி இருப்பதை அறிகிறோம். பூகோளம், இயற்கை வளங்கள், சீதோஷ்ணம், வணிக மார்க்கங்கள், சந்தை எல்லாம் முக்கியம் தான். 1776லியே ஆடம் ஸ்மித் போக்குவரத்து செலவினங்கள் படுத்தும் பாடு பற்றி சொல்லியிருக்கிறார் என்று சொல்லும் முனைவர் சாக்ஸ், இந்தியாவின் பசுமை புரட்சியையும், மக்களின் நகரத்துவத்தையும் சிலாகித்து, ஆஃப்பிரிக்காவின் பசுமை புரட்சி இல்லாததை சுட்டுகிறார். அந்த கண்டத்தில் இந்தியா போன்ற நதி பள்ளத்தாக்குப் பிராந்தியங்கள் இல்லை. அவர் முழு கண்டத்தை பற்றி பேசுகிறார். (நைல், சாம்பஸி போன்ற நதிகளிம் போக்கு வேறு. அதை நான் இங்கு விவாதிக்கவில்லை.) பருவமழையோ சொல்லமுடியாது. உரம் வாங்க காசு இல்லை, ஏழைகளிடம். தானிய உற்பத்தி குறைந்து வருகிறது; ஆஃப்பிர்க்காவில் கலோரி உட்கொள்வது மிகக்குறைவு. சோத்துக்கு வழியில்லை. முக்கால்வாசி கூலிப்பட்டாளம். வியாதிகளுக்கு பஞ்சமில்லை. மத்திய/தென் அமெரிக்க நாடுகளிலும், மத்திய ஆசிய நாடுகளிலும் அதே கதி. அவர் சொல்வதை கவனியுங்கள். அந்த நாட்டு செல்வந்தர்கள் வெளிநாடுகளில் தான் முதலீடு செய்கிறார்கள். டாக்டர்கள், எஞ்சினீயர்கள், விஞ்ஞானிகள் வெளிநாடுகளில் புகலிடம் தேடுகிறார்கள்.
ஏழையை செல்வந்தர் வஞ்சித்தார்களா? என்ற வினாவுக்கு அவரளிக்கும் விடை:
‘...பணக்கார நாடுகள் ஏழை நாடுகளை, அடிமைப்படுத்துவது, கலோனிய ஆட்சி, வஞ்சிக்கும் வணிக முறைகள் மூலம், திரும்பத்திரும்ப, சுரண்டின. சொல்லப்போனால், இந்த சுரண்டலுக்கு ஏழ்மை ஒரு காரணமில்லை. ஏழ்மை சுரண்டலின் விளைவு. தொழிலாளரின் உற்பத்தித்திறன் குறைந்ததால், ஏழ்மை. அது குறைவதற்குக் காரணம், தேக ஆரோக்கியமின்மை, திறனின்மையும் அதன் பின்னணியும், ரோடு, மின்சாரம், மற்ற வசதிகள், சந்தை, துறைமுகம் இல்லாமை, பட்டினி ஆகியவை. சுரண்டல் ஒரு காரணமென்றாலும், பூகோள குறைபாடுகள், வியாதிகள், சுற்றுப்புற சூழல் பாதிப்பு, எல்லா துறைகளிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய நிலைமை, சமாளிக்க முடியாத சவால்கள் எல்லாம் காரணங்களே. ஒட்டுமொத்தமாக, இவற்றை எல்லாம் பார்த்தால், வெளியிலிருந்து உதவி வேண்டியிருக்கிறது.
இது வரை நான் பேசவில்லை. அவர் பேசினார். முதலாளித்துவம்/ கம்யூனிசம்/ பொதுவுடமை/ மிக்சட் எகானமி/ என்றெல்லாம் தர்க்கம் செய்து, வாதத்திறனை வளைத்துப்போட்டு, விதண்டாவாதத்தை அனுமார் வால் போல் நீட்டி முழக்கி, பிரசார யுத்தம் ஒன்றையும் நான் செய்யப்போவதில்லை. இன்றைய தினத்தின் இடம், பொருள், ஏவல், நான் பெரிதும் மதிக்கும் (ஜான் கென்னடியும், நேருவும், உலகும் அவரை மதித்தார்கள்.) ஜான் கென்னெத் கால்ப்ரைய்த் அவர்களின் [அவர் கையொப்பமிட்டுக் கொடுத்த நூலை பற்றி சொன்னால் வியந்து விடுவீர்கள்!] எதிரொலியாக ஒலிக்கும் ஹார்வேர்ட் பொருளியல் நிபுணர் ஜெஃப்ஃப்ஃரி சாக்ஸ் அவர்களின் கருத்துக்களை முன் வைத்தேன். உசாத்துணையில், அவருடைய கட்டுரை உளது.
இன்னம்பூரான்
17 10 2011
http://www.lib.uct.ac.za/govpubs/images/IntDayPoverty.gif
உசாத்துணை:
http://www.unmillenniumproject.org/documents/Scientific_AmericanSept2005.pdf
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:02, 19 அக்டோபர் 2011 (UTC)