வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்:ஜூலை 13

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்


கல்வி அறிவை வளர்க்கும். என்ன புதிசா மஹாவாக்யம் சொல்லிவிட்டீர்கள், புல்லட்டீன் போர்டில் போடுவதற்கு? ஒரு தாரதம்யம் வேண்டாம்? என்றெல்லாம் எள்ளி நகையாடுகிறீர்களா? அது உங்கள் உரிமை. எனினும், யான் சொல்லத்துணிவது யாதெனில், ‘கல்வி அறிவை வளர்க்கும்.’ என்று ஏகோபித்த அபிப்ராயமாக பகர்ந்துவிட்டு, கல்வியை மட்டம் தட்டுவதில் -அதாவது, அதை வளரவிடாமல், ‘மொழி வெறி’ என்ற த்வம்சுக்கட்டையால் மட்டம் தட்டி, மார் தட்டிக்கொள்கிறார்களே சமூக மார்க்கபந்துக்கள், அது நல்லது அன்று, என்பதே.


சான்றாக, இன்றைய தேதியில், 1869 நடந்த நிகழ்வு ஒன்று.


                                                                                                                           
Navalar.jpg


அவர் ஒரு சிவப்பழம். ஆசாரசீலர். சைவ சமய/ தத்துவ விசாரனையிலும், போதனையிலும், சைவ சம்பிரதாயங்களை கண்ணின் மணியென போற்றியவருமான அந்த சான்றோனின் தமிழ்பற்று, தமிழறிவு, தமிழ் ஞானம், தமிழ் படைப்பாற்றல் கரை கடந்தது. மூலநூல்களை பரிசோதித்து, ஒப்புமை ஆராய்ந்து, களையெடுத்து, பதிப்பாசிரியாக பேரும், புகழும் படைத்த அன்னாரின் மாணவர் ஶ்ரீல ஶ்ரீ.நா. கதிரைவேற்பிள்ளை அவர்களும், அவரது சீடரும், என்னுடைய மானசீக குருநாதருமான தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும், அன்னாரின் வழியை பின்பற்றியதும், நம் கொடுப்பினை. பேசப்படுவது, ஶ்ரீல ஶ்ரீ. ஆறுமுக நாவலர் (18 12 1822 - 05 12 1879) என்பது வெளிப்படை. அவரை பற்றி முழு விவரமும் அறிய, நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிவு செய்துள்ள கட்டுரையை சுட்டியிருக்கிறேன். அந்த கலோனிய காலத்து கட்டாயங்கள், வழக்கங்கள், நடைமுறைகளை புரிந்து கொண்டால், நாவலரின் விவிலிய மொழிபெயர்ப்பு பற்றியும், அவரது ‘சைவதூஷணபரிகாரம்’ போன்ற நூல்களின் தாக்கமும் புரிந்து கொள்வது எளிது. அவரது ‘போலியருட்பா மறுப்பு‘ என்ற நூலை பற்றி பேசும் இடமிது இல்லை. நான் சொல்ல வருவது நான்கு விஷயங்கள், ‘கல்வி அறிவை வளர்க்கும்.’ என்றுணர்ந்து ்ஶ்ரீல ஶ்ரீ. ஆறுமுக நாவலர் அவர்கள் இயங்கிய விதம்:


அவரது 60 நூல்களில் பாலபாடம் என்ற நான்கு தொகுப்புக்கள் நம்மை வியக்கவைக்கின்றன, எளிமையான, பளிங்கு நீர் போன்ற திண்ணைப்பள்ளிக்கூட தமிழ். சமச்சீர் கல்வி சர்ச்சையாளர்களே. சற்றே, அவற்றை பார்க்கவாவது பாருங்கள்.
ஶ்ரீல ஶ்ரீ. ஆறுமுக நாவலர் அவர்கள் பல சமயங்களில் சொந்தச்செலவில் பள்ளிகள் நடத்தியிருக்கிறார். யாசகம் வாங்கத்தயங்கவில்லை.
தமிழில் நிறுத்தக் குறியீடுகளை, ஆங்கில முறையைப் பின்பற்றி, இடமறிந்து முதன்முதலில் பயன்படுத்தியவர் இவரே என்று சொல்லப்படுகிறது.


13 07 1869: வண்ணார் பண்ணையில் ஒரு ஆங்கிலேயர் நடத்திய ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் வீபுதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை நிறுவி நடத்தினார். ( ஒரு இடத்தில், இது நடந்தது 1872 தை மாதம் என்ரும் குறிப்பும் உள்ளது.) எந்த தேதியாக இருந்தாலும், நாவலர் அவர்கள் ஆங்கிலப்பாடசாலை நிறுவியதின் நோக்கத்தை, தீர்க்க தரிசனத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.


ஆங்கில ஒழிப்பு, ஹிந்தி எதிர்ப்பு, தெலுங்கை பரிஹசிப்பது, மலையாளத்தை குறை கூறுவது, கன்னடதை உடைப்பது என்று பேச்சுப்படினின்...


எதற்கும், சிந்தனைக்கு ஒரு கருத்து:


“எந்த எல்லை வரை நாம் சமூகத்தின் விதிகளை பின்பற்றவேண்டும்? அதாவது, ‘ஊருடன் ஒத்து வாழ்வது’ எப்போது ஒவ்வாத செயல் ஆகி விடுகிறது? இதற்கு விடை காணும் போது தான், மனசாட்சி வாய்மையுடன் இயங்குகிறது.”


கென்னெத் டைனன், விமரிசகர் & எழுத்தாளர் (1927 -1980)


இன்னம்பூரான்

13 07 2011



உசாத்துணை:

http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=354&Itemid=467

http://ta.wikipedia.org/wiki/ஆறுமுக_நாவலர்








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:47, 13 ஜூலை 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 13 July 2011, at 06:55. This page has been accessed 1,895 times.