வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

"வட சொல்" ... தொல்காப்பியர் அடிச்சுவட்டில் - 1

From மரபு விக்கி

Jump to: navigation, search

"வட சொல்" ... தொல்காப்பியர் அடிச்சுவட்டில் -- 1

ராஜம்


"வடசொல்" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதிலும் ஒருவகை எரிச்சல் ஏற்படுவதைப் பார்க்கிறேன், உணர்கிறேன்.

அவர்களுக்கு ஏன் அந்த எரிச்சல் என்பதற்கான தெளிவான விளக்கம் இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை.



எனக்குத் தமிழ் எலக்கணம் சொல்லிக்குடுத்த வாத்திமார் எல்லாரும் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவங்க -- பள்ளிக்கூடக் காலத்துலெர்ந்து. இது புரியலெ, இது தெரியலெ, இது வெளங்கலெ--னு எது கேட்டாலும் ... நக்கல், கிண்டல் ஒண்ணு இல்லாம அன்பா அமைதியா வெளக்கம் சொல்வாங்க. "அட, தெரியாம, புரியாமத்தானெ புள்ளெ கேக்குது" அப்டி நெனெச்சிருப்பாங்கபோல. ஏன் ... ரொம்ப ரொம்பப் பெரியவங்க எலக்குவனார், சுப. அண்ணாமலெ ... அவுங்களெயெ எடுத்துக்குவமே. அவங்க ரெண்டு பேரும் தொல்காப்பியம், நன்னூல் அல்லாத்தெயும் மனப்பாடம் பண்ண வச்சாங்க அந்தக் காலத்துலெ. எவ்வளவு மக்கான கேள்வி கேட்டாலும் அன்போடெ வெளக்கம் சொல்லுவாங்க. ஒரு கிண்டல், நக்கல், கேலி இருக்காது.


இப்ப, சுப. அண்ணாமலை ஐயா மட்டும்தான், வயசாகிப்போய், உடல் மட்டும் தளர்ந்து இருக்கார். மனதோ. அறிவோ, நினைவோ ... தளர்ச்சி என்பதை அவரிடம் காட்டவேயில்லை! வள்ளலாரெப் பத்திப் பேசச் சொல்லுங்க ... மணிக்கணக்காப் பேசத் தயாரா இருக்கார். கேக்கத்தான் ஆளில்லெ.

சமீபத்துலெ நான் பாத்தப்பொ ... அந்தக் காலத்துலெ (1961-1963) எங்க வகுப்புலெ அவர் வெளக்கின "முன்னிலை முன்னர் ஈயுமேயும் ..." என்ற நன்னூல் நூற்பாவை எப்படி அவர் இரட்டுற மொழிந்து எங்களைச் சிரிக்கவைத்தார் என்பதை நினைவுபடுத்தினேன்; அவருக்கும் நினைவு வந்தது. இருவரும் மகிழ்ந்தோம், சிரித்தோம் நெடுநேரம். ஆச்சிக்கும் என் தோழிக்கும் ஒரே வியப்பு, மகிழ்ச்சி!



சரி, இப்பொ "வடசொல்"லுக்கு வருவோம். என் ஆசிரியர்களுடன் வாதாட எனக்கு வாய்ப்பில்லை. அதனால் ... தனித்து விடப்பட்டேன்.


நமக்குத்தான் இருக்கிறாரே தொல்காப்பியர் என்று ஒருத்தர் ... அவரைக் கேட்போம் என்று மனதில் அவரை வணங்கிச் சிந்தனை செய்தேன். அட, இந்தக் காலக் கலப்பு மொழியில் meditation செய்தேன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். தொல்காப்பியர் சொன்னார் ... "ஏ, பிள்ளாய்! யாம் எம் நூலில் எச்சவியல் என்ற இயலில் முதல் ஆறு நூற்பாக்களில் இயம்பிய கருத்தை மறந்தாயா? அன்றி யாம் சொன்னது நின் அறிவுக்கு எட்டவில்லையா? இதுவரை இல்லையெனில் இனியேனும் அறிய முயல்க!"


"ஓ, அப்படியா ஐயா, மறந்தேபோனேனே. மீண்டும் போய்ப் பார்க்கிறேன், ஐயா" என்று அவருக்கு உறுதியளித்துவிட்டு ஆழ்சிந்தனையிலிருந்து நல்ல வேளையாகத் தப்பித்தேன்!

உண்மை என்ன?


தொல்காப்பியர் தமிழ் மொழியில் வழங்கும் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கிறார், இரண்டு முறை!


முதலில், அந்தச் சொற்களை அவற்றின் இலக்கண அடிப்படையில், "பெயர், வினை, இடை, உரி" என்று பிரிக்கிறார்.


பிறகு அந்தச் சொற்களின் வழக்காறு பற்றி, "இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்" என்று பிரிக்கிறார்.


இதில் குறிப்பாகப் பார்க்கவேண்டியது என்ன என்றால் ...


"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"


என்று சொல்லிவிட்டார்!


அடடா, அப்படியானால் "வடசொல்"லும் தமிழ்ச்செய்யுளை உருவாக்கும் ஒன்றுதானா?"


அப்றம் ஏன் சில பல மக்கள் "வடசொல்"லை வெறுக்கிறார்கள்?


தொகாப்பியத்தையே பிடித்துக்கொண்டிருக்கிற மக்கள் ... தொல்காப்பியர் சொன்ன "செய்யுள் ஈட்டச் சொல்" ஆகிய வடசொல்லை வெறுத்தால் ... தொல்காப்பியர் காலத்திலிருந்து கிடைத்ததாக நம்பப்படும் "தமிழ்ச் செய்யுள்"களையும் அல்லவா அவர்கள் வெறுக்கவேண்டும்?



ஒண்ணுமே புரியல ... "இலக்குவன் இன்றுளனாயின் நன்றுமன்." எங்க எலக்குவனார் மட்டும் இன்னிக்கு இருந்தா ... அவரோடெ பிறர் போடாத சண்டெயெல்லாம் நான் போட்டு, திறந்த மனதோடு கருத்துரையாட முடியும். அவ்ளோ நல்லவர் அவர், தெரியுமா.
நிற்க.


இனி, தேவை என்றால் ... தொல்காப்பியர் சொன்ன அந்த 4-வகைச் சொற்களின் வரையறையை முடிந்தபோது பார்க்கலாம்.

--Ksubashini 22:13, 5 நவம்பர் 2011 (UTC)

Contributors

Ksubashini

This page was last modified on 12 November 2011, at 17:40. This page has been accessed 3,024 times.