ஶ்ரீ விஜயீந்திர தீர்த்தர் 1மரபு விக்கி இருந்துவிஜயநகரப் பேரரசில் கிருஷ்ண தேவராயருக்கு குருவாகத் திகழ்ந்த பெரியார் வியாச ராஜர். இந்த வியாச ராஜர் ஶ்ரீவியாசராஜ மடத்தின் பீடாதிபதியாக விளங்கியதோடு 700-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்தார். தேசம் முழுதும் யாத்திரை செய்து இறை உணர்வை மக்களிடம் பரப்பினார். அப்போது ஒருமுறை ஒரு கிராமத்துக்கு விஜயம் செய்த இவரை அந்தக் கிராமத்து வயதான தலைவர் தன் மனைவியோடு வந்து வரவேற்று உபசரித்தார். மிக வயதான அவரைப் பார்த்து வியாச ராஜர், “விரைவிலேயே உங்களுக்குக் குழந்தைப் பேறு உண்டாகும்; ஆண் மகன் பிறப்பான்.” என ஆசிர்வதித்தார். திடுக்கிட்டுப் போன தலைவர், “ஐயா, நானோ வயது ஆனவன். பல வருடங்களாய்க் குழந்தைப் பேறு இல்லாமல் போனாலும் எங்களை நாங்களே சமாதானம் செய்து கொண்டோம். ஆனால் தாங்களோ எனக்கு மகன் பிறப்பான் என ஆசிர்வதிக்கிறீர்களே, இதை நான் எப்படி எடுத்துக் கொள்வது?” என்று கேட்டார். வியாசராஜர், இதைத் தாம் சொல்லவில்லை எனவும், தனக்குள் வியாபித்து இருக்கும் மூல கோபால கிருஷ்ணன் கூறுவதாயும், ஒன்றல்ல இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கும் எனவும் கூறுகிறார்.
பின்னர் தலைவரைப் பார்த்து, “உங்களுக்குப் பிறக்கும் முதல் குழந்தையை ஶ்ரீமடத்துக்குக் கொடுத்துவிட வேண்டும்.” என்று வாக்குறுதியும் பெற்றுக் கொண்டார். வியாசராஜரிடம் அவ்வாறே வாக்குறுதி கொடுத்தார் தலைவர். சில நாட்களில் கிராமத்துத் தலைவரின் மனைவி கருவுற்றாள். உரிய காலம் வந்ததும் அழகான இரு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். முதலில் பிறந்தவர் தான் விட்டலன் என்ற பெயரைக் கொண்ட விஜயீந்திரர். அடுத்த மகனுக்கு குரு பிரசாத் என்ற பெயர் வைத்தனர். வியாசராஜருக்கு வாக்குக் கொடுத்த படியே 5 வயது வரை வளர்த்த விட்டலனை வியாசராஜருக்குக் கொடுத்தனர் பெற்றோர். வியாசராஜர் விட்டலனுக்குக் கல்வி புகட்டினார். எட்டு வயதாய் இருக்கையில் “விஷ்ணு தீர்த்தர்” என்னும் தீக்ஷா நாமம் அளித்து சந்நியாச ஆஸ்ரமத்தை அளித்தார். குருவருளோடு திருவருளும் சேரப் பல்வேறு கலைகளைக் கற்றுத் தேர்ந்தார் விஷ்ணு தீர்த்தராகிய வீஜயீந்திரர். தினம் தோறும் குருவோடு சேர்ந்து மடத்து வேலைகளுக்கு உதவுவதோடு வழிபாடுகளிலும் உதவினார். சில காலம் சென்றது.
ஒரு முறை மத்வ மடத்தின் பீடாதிபதியான ஶ்ரீசுரேந்திர தீர்த்தர் என்பவர் விஜயநகரம் வந்து வியாசராஜ மடத்தில் எழுந்தருளினார். அவரை வரவேற்று உபசரித்த வியாசராஜர் அவருக்கு பிக்ஷை செய்விக்க அழைத்தார். சுரேந்திரரோ, தமக்கு வேறொரு பிக்ஷை வேண்டுமெனச் சொல்ல, வியாசராஜரும் புரிந்து கொண்டு, “தாங்கள் கேட்கும் பிக்ஷையை என்னால் கொடுக்க முடிந்தால் கட்டாயம் தருகிறேன்.” என்று சொல்ல வியாசராஜரின் அருமைச் சீடரான விஷ்ணு தீர்த்தரை ஶ்ரீமடத்துக்கு பிக்ஷையாகத் தரக் கேட்டார் சுரேந்திரர். மூல கோபாலகிருஷ்ணனின் பூஜைக்கு வேறு ஆளா? சரி, அதுதான் அவன் திருவுளம் என்றால் என்ன செய்வது! அவனுக்கு இனி மூல ராமனுக்கு பூஜை செய்யும் பேறு கிட்டப் போகிறது.” என்று ஶ்ரீசுரேந்திரரைப் பார்த்துச் சொன்ன வியாசராஜர் தாங்கள் கேட்ட பிக்ஷையைத் தந்தேன் எனச் சொல்லி விஷ்ணு தீர்த்தரை வியாச மடத்தில் இருந்து தாரை வார்த்து ஶ்ரீமத்வ மடத்துக்கு அளித்தார்.
கி.பி. 1530—ஆம் ஆண்டு விஷ்ணு தீர்த்தருக்கு, “ஶ்ரீவிஜயீந்திர தீர்த்தர்” என்ற தீக்ஷா நாமம் வழங்கி தான் அமர்ந்த பீடத்தில் அமர்த்தினார் சுரேந்திரர். பின்னர் பல ஸ்தலங்களுக்கும் தீர்த்த யாத்திரையாகப் போனார் விஜயீந்திர தீர்த்தர். காஞ்சி, கோலார், தும்கூர், திருமலை, திருப்பதி, மாஞ்சாலம் என அந்நாளில் அழைக்கப் பட்ட இப்போதைய மந்த்ராலயம், நஞ்சன் கூடு, ஶ்ரீரங்கம், மதுரை, தஞ்சை, பல இடங்களுக்கும் சென்று கடைசியில் கும்பகோணம் வந்தார். திருக்கோயில்கள் அதிகம் உள்ள கும்பகோணத்தில் பல கோயில்களின் நிர்வாகப்பொறுப்பை ஏற்றுச் சிறப்புற நிர்வகித்தார். அவற்றில் ஶ்ரீ ஆதிகும்பேஸ்வரர் கோயில், ஶ்ரீசாரங்கபாணி கோயில், ஶ்ரீசக்ரபாணி கோயில், ஶ்ரீராமஸ்வாமி கோயில் ஆகியன குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை. ஶ்ரீ விஜயீந்திரரின் காலத்துக்குப் பின்னரும் பீடத்தை அலங்கரித்த ஶ்ரீராகவேந்திரரின் காலம் வரை மேற்படி கோயில்கள் ஶ்ரீமடத்தின் நிர்வாகத்திலும் கட்டுப்பாட்டிலும் இருந்து வந்தன.
சுரேந்திரரின் அருமை, பெருமைகளை அறிந்த கும்பகோணம் மக்கள் அவரை தரிசிக்க தஞ்சைக்குப் புறப்பட்டனர். அவரைக் கும்பகோணத்துக்கு அழைத்தனர். லிங்க ராஜேந்திரரைக் குறித்துக் கூறி அவர் முதலில் இருந்த சாத்விகமான மனோநிலையையும் தற்சமயம் இருக்கும் அகம்பாவமான மனோநிலையையும் கூறித் தம்மை எவராலும் வெல்ல முடியாது என இருக்கும் அவரை அடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். ஶ்ரீசுரேந்திரரும், விஜயீந்திரரைப் பார்த்து, “ஆன்மிகத்தில் ஈடுபட்டவனுடைய அகங்காரம் நாசத்தை விளைவிக்கும். இதை அவரும் அறிய வேண்டும். உலகத்தாரும் அறிய வேண்டும். ஆகவே நீ இப்போதே கும்பகோணம் சென்று லிங்க ராஜேந்திரரை வெல்வாயாக! உனக்கு வெற்றி நிச்சயம்.” என ஆசிகளை வழங்கி அனுப்பி வைத்தார். கும்பகோணத்தில் ஶ்ரீ விஜயீந்திரருக்குப் பிரமாதமான வரவேற்பு வழங்கப் பட்டது. லிங்க ராஜேந்திரருக்கும் அவரை வெல்லவே விஜயீந்திரர் வந்திருக்கும் செய்தி சொல்லப் பட்டது. சற்றும் கலங்காமல் அவர் போட்டியை ஶ்ரீ ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் வைத்துக் கொள்ளலாம் எனச் சொன்னார்.
ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மங்களாம்பிகையைத் தரிசித்து, அன்னை அளித்த ஜயமாலையைப் பெற்றுக் கொண்டு விஜயீந்திரர் தன் இடத்தில் வந்து அமர்ந்தார். பல ஊர்களிலிருந்தும் மக்கள் செய்தியறிந்து இந்தப் போட்டியைக் காண வந்து கூடி இருந்தனர். போட்டிக்கு நிபந்தனையாக விஜயீந்திரர் ஜெயித்தால் லிங்க ராஜேந்திரர் வசமிருக்கும் கோயில் நிர்வாகங்கள் விஜயீந்திரர் வசமும், லிங்க ராஜேந்திரர் ஜெயித்தால் விஜயீந்திரர் ஶ்ரீ மடத்தை விட்டுவிட்டு லிங்க ராஜேந்திரரிடம் வரவேண்டும் என்பதே. இரு தரப்பிலும் ஒத்துக் கொண்டு போட்டி ஆரம்பிக்கப் பட்டது. வாதங்கள் ஆரம்பித்து, ஒன்பது நாட்களுக்கும் மேல் ஆனது. போட்டி முடிவுக்கு வரவில்லை. வாதம் தொடர்ந்து நடந்தது. விஜயீந்திரரை வெல்ல லிங்க ராஜேந்திரரால் முடியவில்லை. தன் சீடனின் திறமையைக் காண வேண்டி ஶ்ரீசுரேந்திரர் வந்திருந்தார்.
தஞ்சை மன்னனும் விஷயத்தைக் கேள்விப் பட்டு தன் பரிவாரங்களோடு வந்திருந்தான். ஒன்பதாவது தினத்தன்று ஶ்ரீவிஜயீந்திரரின் திறமைக்கு முன்னர் தான் தோற்றதாக லிங்க ராஜேந்திரர் ஒப்புக் கொண்டார். மக்கள் ஆரவாரத்துக்கு இடையே கோயில் நிர்வாகங்கள் அனைத்தும் ஶ்ரீவிஜயீந்திரரிடம் வந்து சேர்ந்தது. தற்காலத்தில் ஆலய நிர்வாகம் அரசு கையில் இருந்தாலும் முக்கியமான நிகழ்வுகள் விஜயீந்திரர் மடத்தில் நடக்கையில் கோயில்களில் இருந்து மரியாதை செய்வதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர். விஜயீந்திரரைக் குறித்துப் பல அதிசயமான செய்திகள் கூறுவார்கள். அவற்றில் தெருவில் வித்தை காட்டிப் பிழைக்கும் வித்தை காட்டி ஒருவனைப் போல் இரு பக்கமும் கம்புகள் கட்டி நடுவே இருக்கும் கயிற்றில் நடக்கும் வித்தை. விஜயீந்திரர் கயிற்றுக்குப் பதிலாக நாரைக் கட்டி நடந்து காட்டியதாய்ச் சொல்வார்கள்.
இன்னொரு முக்கியமான நிகழ்வு வடநாட்டில் இருந்து வந்த தான்சேனின் மாணவர் ஒருவர் இசைப் போட்டியில் விஜயீந்திரரிடம் தோற்றது. இந்துஸ்தானி இசையில் வடநாட்டுப் பாடகனைப் போல் பாடிய விஜயீந்திரரின் திறமையைக் கண்டு அதிசயித்தாலும் தோற்றுப் போனோம் என ஒப்புக்கொள்ள விரும்பாத அந்தப் பாடகர் தீபக் ராகம் பாடி விளக்கை எரிய வைக்க முடியுமா உங்களால்? என் குருநாதர் அப்படிப் பாட வல்லவர் எனக் கேட்க, உடனே ஐந்து முக விளக்கு ஒன்றைக் கொண்டு வரச் செய்து நெய்யை ஊற்றித் திரிகளைப் போட்டுவிட்டுச் சீடர்களை அகலச் சொன்னார். விளக்கில் தீபத்தை ஏற்றவே இல்லை. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே தீபக் ராகத்தை விஜயீந்திரர் இசைக்க ஆரம்பிக்க பாடலில் வேகம் கூடக்கூட ஐந்து முக விளக்கின் ஒவ்வொரு திரியும் தானாக எரிய ஆரம்பித்தது. சுடர் விட்டுப் பிரகாசமாய் எரிந்தது. அந்த வடநாட்டுப் பாடகன் விஜயீந்திரரின் கால்களில் விழுந்து வணங்கினான்.
அதன் பின்னரும் விஜயநகர சாம்ராஜ்யப் பண்டிதர் ஒருவரது வேண்டுகோளின் பேரில் அமிருத வர்ஷிணி ராகத்தைப்பாடி இடி, மின்னலுடன் கூடிய கன மழையைக் கும்பகோணத்தில் பொழியச் செய்தார் விஜயீந்திரர். கும்பகோணத்திலேயே காவிரிக் கரையில் கி.பி. 1614-ஆம் ஆண்டு பிருந்தாவன வாசியானார். இவருடைய பிருந்தாவனம் சோலையப்பன் தெருவில் காவிரிக்கரையின் ஓரத்தில் அமைந்துள்ளது. விஜயீந்திரரின் உபாசனா தெய்வம் ஆன ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஶ்ரீராமர், ஶ்ரீ கிருஷ்ணர் ஆகிய மூவரையும் சமாதி மேடையின் மூன்று பக்கங்களிலும் காண முடியும். ஆனி மாதம் தேய்பிறை துவாதசி அன்று ஶ்ரீவிஜயீந்திரரின் ஆராதனை உற்சவம் நடைபெறுகிறது. ஶ்ரீராகவேந்திரரின் பிருந்தாவனம் ஆன மந்த்ராலயத்தில் இருந்து பீடாதிபதிகள் நேரில் வந்து கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். அன்னதானம், ஶ்ரீமூலராமருக்கு அபிஷேஹ ஆராதனைகள் எனச் சிறப்பாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.
--Geetha Sambasivam 11:53, 25 மே 2012 (UTC) |