வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

வாய்மூர்நாதர் திருக்கோவில் - நாகப்பட்டினம்

From மரபு விக்கி

Jump to: navigation, search

* அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோவில்

                                                                                                        
T 500 925.jpg

மூலவர் : வாய்மூர்நாதர்
அம்மன்/தாயார் : க்ஷீரோப வசனி, பாலின் நன்மொழியாள்
தல விருட்சம் : பலா
தீர்த்தம் : சூரியதீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருத்தென் திருவாய்மூர்
ஊர் : திருவாய்மூர்
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், அப்பர்

தேவார பதிகம்


பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணராநஞ்

கண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில் உடனானவார்

சுண்ணப் பொடி நீறணி மார்பர் சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற

வண்ணப் பிணையோடி வராணீர் வாய்மூரடிகள் வருவாரே.

-திருஞானசம்பந்தர்.

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 124வது தலம்.



தல சிறப்பு:

சூரியன் வழிபட்ட தலம். பங்குனி மாதத்தில் 12, 13 ஆகிய இரு நாட்களில் சூரியக் கதிர்கள் சுவாமி, அம்மன் மேல் படுவதைக் காணலாம். விடங்கலிங்கம் என்பது கடைகளில் விற்கப்படும் லிங்கம் போல மிகச்சிறிதாக இருக்கும். இதை ஒரு பாத்திரத்திற்குள் வைத்திருப் பார்கள். அர்ச்சகரிடம் சொன் னால் அதை எடுத்துக் காட்டுவார். இதை தரிசித்தால், சொர்க் கம் உறுதி. அகால மரணம் ஏற்படாது என்பது நம்பிக்கை. நவக்கிரகங்கள் இங்கு நேர் வரிசையில் உள்ளன. அஷ்ட பைரவர்: காசியில் எட்டு பைரவர்கள் உள்ளனர். அதுபோல், இக்கோயிலிலும் எட்டு பைரவர்கள் உள்ளனர். இவர்களை தரிசித்தால் பயம் விலகும். திரியம்பகாஷ்டமி நாளில் சிவன் முப்புரம் எரித்ததாக கருதப்படுகிறது. நான்கு பைரவர் சிலைகளுடன், நான்கு தண்டங்கள் பைரவ அம்சமாக உள்ளன. மூலவர் வாய்மூர்நாதர் அம்பிகை பாலினும் நன்மொழியாளுடன் அருள்பாலிக்கிறார்.


கோயிலுக்கு எதிரில் குளம் உள்ளது. கரையில் விநாயகர் உள்ளார். மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. வெளிச்சுற்றில் நால்வர், பைரவர் சந்நிதிகளும் சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், மகாலட்சுமியும் உள்ளனர். நடராசசபை உள்ளது. நடராசர் அழகான மூர்த்தி, இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன.

மூலவருக்குத் தென்பால் தியாகராஜா - நீலவிடங்கர் சந்நிதியுள்ளது. வடபால் வேதாரண்யேஸ்வரர் தரிசனம் தருகிறார்.

கல்வெட்டுக்கள் பல உள்ளன. ஆதியில் பல்லவ, சோழ மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.


தலபெருமை:


கோஷ்டத்தில் உள்ள தஷிணாமூர்த்தி ரிஷபத்தின் மேலுள்ளார்.

வாய்மூர் என்பது வாய்மையர் ஊர் என்பதன் மருஉ மொழியாகக் கொள்ளலாம்.

சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். தியாகராசர் - நீலவிடங்கர், நடனம் கமல நடனம், சிம்மாசனம் ரத்தினசிம்மாசன மாகும்.

பிரமன் முதலிய தேவர்கள் தாரகாசுரனுக்குப் பயந்து பறவை உருவ மெடுத்து சஞ்சரிக்கையில் இத்தலத்திற்கு வந்து பாபமேக பிரசண்டமாருத தீர்த்தத்தில் நீராடிப் பெருமானை வழிப்பட்டுப் பாவம் நீங்கப்பெற்றனர்.


தல வரலாறு:


சிவபெருமான் சொர்க்கத்தில் வீற்றிருக்கும் வடிவமே விடங்க வடிவமாகும். இந்த வடிவம் பூலோகத்திலும் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார்.

இந்திரன் ஒருமுறை சிவனின் விடங்க வடிவத்தை யாசித்தான். விடங்கம் என்றால் சிறிய சிவலிங்க வடிவமாகும். இந்த லிங்கத்தை போக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கஷ்டம் என சிவன் கூறினார். இருப்பினும் இந்திரன் வற்புறுத்தியதால், சிவன் விடங்க வடிவத்தை அவனிடம் கொடுத்து விட்டார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான்.

சிவபெருமான் அந்த லிங்கம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என விரும்பினார். முசுகுந்த ரவர்த்தி என்பவர் பூவுலகை ஆண்டு வந்த போது, மக்கள் மிருகங்களால் துன்பப்பட்டனர். எனவே அவர் வேட்டைக்குச் சென்றார். வடபகுதியில் வேட்டையை முடித்து விட்டு, காவிரிக்கரைக்கு அவர் வந்தார்.

ஒரு சிவராத்திரி இரவில், முசுகுந்தன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, சில முனிவர்கள் அவ்வழியே சென்றனர். அவர்கள் சிவராத்திரி பூஜைக்காக வில்வாரண்யம் எனப்படும் பகுதிக்கு சென்று சிவலிங்க பூஜை செய்யப்போவதாகக் கூறினர்.

சிவராத்திரியன்று மிருகங்களை வேட்டையாடுவதை சாஸ்திரம் அனுமதிப்பதில்லை. இதனால், வருந்திய அரசன், தன் ராஜ கோலத்தை கலைத்து விட்டு, ராஜரிஷி போல் வேடம் தரித்து, முனிவர்களுடன் சென்றான். தவறை உணர்ந்த அவனுக்கு சிவன் காட்சி கொடுத்தார்.

இந்திரனிடம் இருக்கும் சிவலிங் கத்தை எப்படியேனும் வாங்கி, பூலோகத்தில் வழிபாட்டுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
அச்சமயத்தில் இந்திரன் வாலாசுரன் என்பவனைக் கொல்பவர்களுக்கு தன்னிடமுள்ள ஐராவத யானை, வெண்குடை நீங்கலாக எதைக் கேட்டாலும் தருவதாக சொல்லியிருந்தான்.

வாலாசுரனைக் கொன்று அதை வாங்கி வரும்படி யோசனையும் சொன்னார். சமயோசிதமுள்ளவன் கடவுளையும் வெல்வான். முசுகுந்தன் சிவனிடம், ""அப்படியே செய்கிறேன். ஆனால், அவன் விடங்கரைப் போலவே உள்ள வேறு லிங்கத்தைக் கொடுத்து என்னை ஏமாற்றி விடலாம். எனவே, விடங்க வடிவம் என்றால் எப்படியிருக்கும் என்பதைத் தனக்கு காட்ட வேண்டும்,' என்றான்.

சிவனும் அவ்வாறே செய்ய, அங்கு பெரும் ஒளிவெள்ளம் எழும்பியது. முசுகுந்தனுடன் வந்த முனிவர்கள் மட்டுமின்றி, தேவலோகமே அங்கு திரண்டு வந்து விட்டது.

உணர்ச்சிவசப்பட்ட முசுகுந்தன், ""ஐயனே! தாங்கள் இந்திர லோகத்திலும் இருங்கள். இங்கேயும் அப்படியே இருங்கள். இங்கு நான் உனக்கு கோயில் எழுப்புகிறேன்,' என்றான். மற்றவர்களும் வற்புறுத்தவே, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அத்தலத்தில் தங்கியுள்ளார்.



சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி மாதத்தில் 12, 13 ஆகிய இரு நாட்களில் சூரியக் கதிர்கள் சுவாமி, அம்மன் மேல் படுவதைக் காணலாம்.

திருவிழா:

சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை வைகாசி விசாகம் பிரமோற்சவமாக நடத்தப்படுகிறது. வழக்கமான விழாக்கள் உண்டு. பைரவருக்கு அஷ்டமியில் பூஜை உண்டு. ஐப்பசி மாதப்பிறப்பன்று தியாகராஜருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறுகின்றது.

திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 01:42, 28 மே 2011 (UTC)

நன்றி - தின மலர்.









Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 28 May 2011, at 01:45. This page has been accessed 1,562 times.