வட இந்திய உணவுகள்- பானி பூரிமரபு விக்கி இருந்துஅடுத்து நாம் காணப்போவது பானிபூரி. இதற்கும் பூரிகள் தேவை. அதோடு காரச் சட்னிபோல் சட்னி செய்து அதை நீர்க்கக் கரைத்துக்கொள்ளவேண்டும். பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும். இதற்கும் உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும். தேவையான பொருட்களை இப்போது பார்க்கலாமா??
பானிபூரிக்கான பூரிகள் செய்ய:
மைதா ஒரு கிண்ணம், கால் கிண்ணம் உளுந்துமாவு, ஒரு கிண்ணம் ரவை, தேவையான உப்பு, பிசைய நீர்.
மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இவற்றையும் ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம். அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்கக் கரைப்பதைக் குறிக்கும்.
ஒரு கட்டுப் புதினா இலைகள், ஒரு கட்டுக் கொத்துமல்லி இலைகள், ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு, இரண்டு டீஸ்பூன் ஜீரகம், ஒரு கிண்ணம் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.) இஞ்சி ஒரு துண்டு. இவை தவிர சட்னி அரைத்ததும் கலக்க வறுத்த ஜீரகப் பொடி இரண்டு டீஸ்பூன்.
மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பதத்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்ததைச் சற்று நேரம் வைக்கவும்.
இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த பயறு, நறுக்கிய உருளைக்கிழங்குத் துண்டங்களை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.
--Geetha Sambasivam 09:11, 11 ஏப்ரல் 2011 (UTC)
|