வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:015

From மரபு விக்கி

Jump to: navigation, search

 

தமிழ் சினிமாவில் நான் காணும் பாமரத்தனமும் அருவருக்கத் தக்கதுமான விஷயங்களே தமிழ் சினிமாவின் குணத்தை நிர்ணயிக்கும் அளவு முழுமையாக ஆக்கிரமித்துள்ளதால், அந்த பாமரத்தனத்துக்கும் அருவருப்புக்கும் உருவம் தந்து உலவும் சில பெரிய தலைகளைப் பற்றிப் பேசவேண்டும். இப்படிச் சிலரை மாத்திரம் தனித்துச் சொல்லி, அதுவே தமிழ் சினிமா மொத்தத்தையும் சொல்வதாகும் என்று சொல்வது நியாயமற்ற காரியமாகத் தெரியலாம். ஆனால், இந்தப் பெரிய தலைகள் என்ன செய்கின்றனவோ அதைத்தான் மற்றவர் அனைவரும் தம் இயல்புக்கும், பலத்துக்கும் ஏற்ப செய்துவருகிறார்கள். அவர்களின் ஒட்டு மொத்தச் செயல்பாடும் ஆளுமையும் தான் தமிழ் சினிமாவின் குணமாகின்றது. ஆனால் இந்த குணத்திற்கு உதாரணமாக அதைப் பெருமளவில் தன்னுள் கொண்டுள்ள அந்தப் பெரிய தலைகளைப் பற்றித் தான் பேசமுடியும். தமிழ் சினிமாவில் இந்த வகையில் உள்ள ஆயிரக்கணக்கான நடிகர்கள்/நடிகைகளை, இயக்குனர்களை, தொழில் நுட்பம் சார்ந்தவர்களை ஒவ்வொருவராக எடுத்துப் பேசிக்கொண்டிருப்பது சாத்தியமல்ல.


முதலில் உலக நாயகன். முதலில் ஒன்றை மறு பேச்சுக்கிடமில்லாமல் ஒப்புக்கொள்ளவேண்டும். இது வரை தமிழ் சினிமாவில் நாம் பார்த்த பெரிய பெரிய நக்ஷத்திரங்கள் அனைவரிலும், நடிப்பு என்றால் என்ன என்று தெரிந்தவர், அத்திறன் கைவரப் பெற்றவர் கமலஹாஸன் தான். சந்தேகமே இல்லை. இதை நான் அனேக தருணங்களில் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். கவனிக்கவும். தருணங்கள் என்று சொன்னேன். படங்கள் என்று சொல்லவில்லை. அவருக்கு ஈடான மற்றொரு திறனை நான் கண்டதில்லை. இருக்கக் கூடும் தான். ஆனால் அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். உதாரணமாக, தேவயானி, பாரதி படத்தில் செல்லம்மாளாக நடித்திருந்தது. தன் கனவுக் கன்னி இமேஜை முன்னிருத்தாது, மிக அமைதியாக பயந்து ஒடுங்கும், ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக செல்லம்மாளை நம் முன்னிருத்தியது, நம் சினிமா ஒரு கலைசார்ந்த மரபாக இருந்திருக்குமானால், தேவயானி, பாரதிக்கு முன்னும் பின்னும் டான்ஸ் ஆடி, கவர்ச்சிக்கன்னியாகவே தன் சினிமா வாழ்வை முடித்திருக்க மாட்டார். இது போல் தான் அர்ச்சனாவா, பாலு மகேந்திராவின் வீடு படத்தில் நடித்திருந்தது?


இப்படி தேவயானி, அர்ச்சனா பற்றி ஒரு முழுப் படத்தையும் அவர்கள் நடித்து உயிர் கொடுத்து உலாவ வைத்த பாத்திரங்கள் பற்றியும் பேசமுடிகிறதே, அப்படி நான் சிறந்த நடிப்புத் திறன் கைவரப் பெற்ற கமலஹாஸனின் ஒரு படத்தைக் கூட, ஒரு பாத்திரத்தைக் கூட என்னால் உதாரணத்துக்குக் கூட முன் வைக்க முடியவில்லை. அனேகப் படங்களில் அவரை முழுமையாக ஒதுக்கிவிட முடிகிறது. அனேகமாக அவை யெல்லாம் அவர் மற்றவர்களுக்காக நடித்துக் கொடுத்தது அவையெல்லாவற்றிலும் அவர் ஒரு சினிமாக் காதலன். சினிமாக் காதலன் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்னவெல்லாம் பேசவேண்டும் என்னென்ன ஸ்டைலெல்லாம் காட்டவேண்டுமோ அதெல்லாம் காட்டவேண்டும். இது எல்லா தமிழ் சினிமா நடிகர்களுக்கும் பொருந்தும் சமாசாரம். ஆனால் கமலஹாஸனே தனக்கெனத் தன்னை மையப்படுத்தி உருவாக்கிக் கொள்கிறாரே, தான் உலக நாயகனாக பவனி வருவதற்கு வேண்டிய கதை, கதை சம்பவங்கள், சுற்றித் தன்னை வலம் வரக் குட்டி தேவதைகளை உபரிகளை எல்லாம் யோசித்து யோசித்து கதையும் வசனமும் உட்கார்ந்து எழுதித் தானே உருவாக்கிக் கொள்கிறாரே அம்மாதிரியான படங்களில், சில சம்பவத் துணுக்குகளில் சில சம்பாஷணைகளில், அந்தச் சில நிமிஷங்களில், அவரது நடிப்புத் திறனைக் காணமுடிகிறது. இத்துண்டுக் காட்சிகளோடு நம் பாராட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும். முழுப் படத்தையும் நாம் மறந்துவிடவேண்டும். அவற்றையெல்லாம் நாம் நினைவு படுத்திக் கொண்டால், உலக நாயகனாகும் ஆசையில் அந்த மயக்கத்தில் ஒரு மனிதன் என்னென்ன கூத்தாட்டமெல்லாம் ஆடுகிறான், என்ற பரிதாபமும் பித்தலாட்டமும் நிறைந்த ஒரு உலகுக்குத் தள்ளப்பட்டு விடுவோம்.


படம் முழுதும் ஒரு பாத்திரம் வியாபித்திருக்கும் கதைகளும் இருக்கக் கூடும் தான். ஆனால், அந்த மாதிரிப் பாத்திரங்களில், தானே எங்கும் நிறைந்த நாயகனாக இருக்கும் ஆசை கொண்ட உலக நாயகன் நடிக்க விரும்புவாரா என்பது கேள்வி. மாட்டார். ஏனெனெனில் அந்தப் பாத்திரமாகும் விருப்பத்தை உடையவரல்ல நமது கமலஹாஸன். அவரை மாத்திரம் குறை கூறிப் பயனில்லை. தமிழ் சினிமாவின் எந்த ஹீரோவும் ஒரு பாத்திரத்தில் தன்னை அழித்துக்கொள்வது என்பது நினைத்தும் பார்க்க இயலாத ஒன்று. எல்லாவற்றிலும் தன் ரசிகர்கள் தன்னைக் காணவேண்டும், தானே உலக அழகனாக, உலக சாகஸவீரனாக, அதே சமயம் தானுமாக (அதாவது சிம்புவாக, சரத்குமாராக, சூர்யாவாக) ரசிகர்கள் அடையாளம் காண வேண்டும். அந்த இமேஜை, எல்லாக் கதைகளிலும் எல்லா சம்பவங்களிலும், எல்லாப் பாத்திரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும். என்பது தமிழ் சினிமாவின் கல்லில் பொறிக்கப் பட்ட விதி. அதை யாரும் மீறுவது கிடையாது. அப்படியிருக்க, ஒரு சிம்பு அப்படி நினைக்கும்போது உலக நாயகன் கமலஹாஸன் ஏன் நினைக்க மாட்டார். உண்மையில் இன்று வந்த சிம்புக்கள் இந்த விதியைக் கற்றுக்கொண்டது, உலக நாயகனிடமிருந்தும் சூப்பர் ஸ்டாரிடமிருந்தும் அதற்கு முன்னால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜியிடமிருந்தும் தானே. இந்த விதி வழி வழியாக, பரம்பரை பரம்பரையாகப் பேணப்படும் விதி. ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


இதில் கமல் ஸாரின் தனித்துவம் அவர் புரட்சி செய்த காரியம் பத்து வேடங்களைச் சுமப்பது. தானே எல்லாவற்றிலும் வியாபித்திருக்க வேண்டும் என்ற ஆசை. இது கலை சார்ந்த சிந்தனை அல்ல. ஒரு திறனும் ( CRAFT வெற்று CRAFT } வியாபாரமும், சுயமோகமும் எல்லாம் சேர்ந்த கலவை.


இதற்கு ஹிந்தி சினிமாவிலிருந்து ஒரு உதாரணம் கொடுக்கிறேன். ஒரு படத்தில் திலீப் குமாரும் நாஸருதீன் ஷாவும் சேர்ந்து நடிக்கிறார்கள். அதில் ஒரு இடத்தில் இருவரும் வாக்கு வாதத்தில் மோதிக்கொள்ளும் காட்சி ஒன்று. திலீப் குமார் இயக்குனரிடம் சொன்னாராம். முதலில் நாஸருதீன் ஷாவை வைத்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமெடுத்து வாருங்கள். அதைப் பார்த்து நான் சம்பந்தப்பட்ட பகுதியை நடிக்கிறேன். நீங்கள் படமெடுத்துக்கொள்ளலாம். முதலில் நாஸருதீன் ஷாவிடம் போங்கள் “ என்றாராம். இதில் விளையாடியிருப்பது திலீப் குமாரின் (Ego) இந்தக் காட்சியில் நாஸருதீன் ஷா தன்னை மீறி நடித்துவிடக்கூடாது என்றஎண்ணம் தான் செயல் பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் அவசியமே இல்லை. நாஸருதீன் ஷா திலீப் குமாரை தன் முந்திய தலைமுறையின் மிகச் சிறந்த நடிகர் என்று எப்பவும் ஒப்புக்கொள்வார். தன் ஓய்ந்த காலத்தில் இந்தக் கவலைகள் அவருக்கு அவசியமில்லை.


வேடிக்கை என்னவென்றால், உலக நாயகனான கமல் ஸார், திலிப் குமாரைச் சிறந்த நடிகர் என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்லியிருக்கிறார். இங்கு தான் சிக்கல்கள் எல்லாம் பிறக்கின்றன. திலீப் குமார் சிறந்த நடிகர் என்று ஒருவர் ஒப்புக் கொள்ளும்போது, அது உண்மையானால், அத்தோடு வித்தியாசமான பார்வைகளும், ரசனைகளும், மதிப்பீடுகளும் கொண்ட ஒர் உலகத்தைக் கேட்பவர் முன் வைத்தாய் விட்டது. அந்த உலகத்துக்கும், கலைஞரின் முன்னோக்கிய சினிமா கலைத்துவம் பராசக்தி வசனத்தில் தான் பார்த்து இப்போதும் வியப்பதாகச் சொல்வதும், இயக்குனர் சிகரத்தைப் போற்றுவதும், ரஜனி சார் சினிமாவில் இன்னும் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது என்று சொல்வதும், தான் நடிக்கப் பத்து வேடங்களை வலிய உருவாக்கிக் கதை எழுதிப் பெருமைப்படுவதும், மொத்தத்தில் தான் உலக நாயகனான தமிழ் சினிமாவுமே முற்றிலும் வேறு உலகத்தைச் சேர்ந்தது தான். இரண்டையும் ஒரு மனிதனின் சிந்தனையில் இருக்க முடியாது. சேமியாவைத் தரம் பார்த்து வாங்குகிறவன், வைக்கோல் போரை மாங்கு மாங்கு என்று தின்றுகொண்டிருக்க முடியாது இல்லையா? இரண்டையும் ஒரே இடத்தில் ரசனையில் பார்க்க முடியுமோ?.


உலகத்தின் சிறந்த கலைப் படங்களையெல்லாம் பார்க்கும் ஆசை கொண்ட ஒரு சினிமா நடிகன் இருப்பது சந்தோஷமான விஷயம். அது கலைப் பசியின் காரணமா இல்லை, எதைக் காபி அடித்து இங்கு தன் மூக்கை ஆகாயத்துக்கு உயர்த்திக்காட்டவா என்பதைப் பிறகு ஆராயலாம். இப்போதைக்கு அது கலைப் பசி என்றே கொள்வோம். அந்தக் கலைப் பசி கொண்டவன் திலீப் குமாரை சிறந்த நடிகனாகக் கண்டால் அது புரிகிறது. ஆனால் அந்த மனிதனுக்குச் சுயமோகம் உலக நாயகனிடம் காண்பது போல் இருக்குமோ?. என்றாவது இந்த சீரழிந்த தமிழ் சினிமாவிலாவது, ஒரு நல்ல படத்தை தமிழ் வாழ்க்கையை அதன் வாழும் வண்ணத்தில் காட்டும் படத்தில், அதில் தன்னை ஒரு நம்பத்தகுந்த வாழும் பாத்திரத்தில் தன்னை அழித்துக்கொண்டு உருவாக்கிக் காட்டவேண்டும் என்ற ஆசை எழாதா, அவ்வளவு உலகத்தின் சிறந்த படங்களையும் பார்க்கும் ஒரு தமிழ் சினிமா நடிகனுக்கு.? நடிப்பு என்ற தொழில் திறனை தன் சிந்தனையில் தன் நீண்ட காலப் பயிற்சியில் வளர்த்துக்கொண்ட நடிகனுக்கு அந்த ஆசை எழாதா என்ன? அப்போது தானே நடிப்பு என்னும் தொழில் திறனைக் கொண்டவன் ஒரு கலைஞனும் ஆவான். தனக்கென ஒரு பார்வை, ஒரு தவம், ஒரு அர்ப்பணிப்பு இல்லாத வெற்றுத் திறன் மாத்திரம் ஒரு கலைஞனை உருவாக்காது.


அந்தக் கலைஞன் தன் கலையில், மக்கள் வாழ்க்கையில், சுற்றியுள்ள உலகில் ஆழ்ந்திருப்பான். அவன் தான் சுற்றியுள்ள சூழலைப் பாதிப்பான். அதைத் தான் ஷாப்னா அஸ்மியிடம், நாசருதீன் ஷாவிடம், அக்கால கே.பி.சுந்தராம்பாளிடம், என்.எஸ் கிருஷ்ணனிடம் வெள்ளை ஆட்சியை எதிர்த்து நாடகம் போட்டுச் சிறை சென்ற நாடக மேடையிலேயே உயிரை விட்ட அக்கால நாடக நடிகர்களிடம் காண்கிறோம். அதிகார நாற்காலி கண்டவிடமெல்லாம் காலில் விழுபவனிடம் அதைக் காணமுடியாது. அவன் வெறும் கூத்தாடி. சுய மோகம் எவ்வளவு இருந்தாலும் அது அதிகாரத்தைக் கண்டதும் காலில் விழத் தயாராகிறது. தன் பலத்தை அறிந்தவனின் தலை நிமிர்வு அல்ல அது.


உலக நாயகன் என்று தன்னைக் கண்ணாடியில் பார்த்து மகிழும் மனம் தான் இயக்குனர் சிகரம் மக்கள் திலகம் நாமம் கேட்கும் போதெல்லாம் பொது மேடைகளில் லக்ஷார்ச்சனை செய்யத் நிர்பந்திக்கிறது. அது தான் மனதார நம்பும் உண்மை அல்ல என்பது தெரியும்,. நான் முன்னர் சொன்ன சிறந்த நடிப்புத் திறன் வெளிப்படும் தருணங்கள் என்று முன்னே சொன்னேனே, அந்தத் திறன் கொண்ட நடிகன், உலகில் சிறந்த திரைப்படங்களை யெல்லாம் பார்த்து மகிழும் ஒரு நடிகன், திலீப் குமாரை சிறந்த நடிகனாகக் காண்பவன், கலைஞரிடம் தான் தான் தமிழ் கற்றதாகச் சொல்ல மாட்டான். பராசக்தியில் காலத்தை முந்திய சினிமா கலை நுட்பங்களைக் கண்டு வியப்பதாகச் சொல்ல மாட்டான்.


--Ksubashini 19:13, 23 செப்டெம்பர் 2011 (UTC)

Contributors

Ksubashini, Na.Kannan மற்றும் Geetha Sambasivam

This page was last modified on 11 August 2012, at 13:44. This page has been accessed 2,730 times.