மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் 9

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

Gopika.jpg

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!= அம்பரம் என்றால் வானம் என்ற பொருள் மட்டுமில்லாமல் கடல், ஆடை, படுக்குமிடம் என்றும் வருகிறது. இங்கே எது பொருத்தம் என்று பார்த்தால் ஆடை பொருந்தும்னு நினைக்கிறேன். நந்தகோபன் அறம் செய்கிறானாம். அதுவும் எப்படிப்பட்ட அறம்? ஆடை, ஆபரணங்கள், தண்ணீர்ப் பந்தல் வைத்தல், பசித்தவருக்குச் சோறு அளித்தல் என பலவகைப்பட்ட தானங்களையும் அளிக்கிறான். அதுவும் மனிதருக்கு முக்கியமான நீர், உணவு, ஆடை மூன்றையும் அளிக்கிறான். இப்படிப்பட்ட திவ்யமான கொடைகளைச் செய்யும் நந்தகோபனே , எழுந்திரப்பா என்கிறாள் ஆண்டாள்.


கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!= ஆயர்குடிப் பெண்கள் அனைவருமே வஞ்சிக்கொடி போன்ற மென்மையான தேகம் படைத்தவர்கள் அவர்கள் அனைவரிலும் கொழுந்தைப்போன்ற மிக மென்மையான தேகம் படைத்த யசோதையே, அவளை குல விளக்கு என்றும் கூறுகிறாள். ஆயர் குலமே அவளால் பெருமை அடைந்ததன்றோ? ஆயர் குலத்து விளக்கான கண்ணனைப் பாலூட்டித் தாலாட்டி, குளிப்பாட்டிச் சீராட்டி வளர்த்தவள் அன்றோ? பெற்றவள் ஆன தேவகிக்கும் கிடைக்காத மாபெரும் பேறைப் பெற்றவள் குலவிளக்கல்லாமல் வேறு என்ன? எங்கள் பெருமாட்டியே, யசோதா, அதென்ன அறிவுறாய்?? கண்ணனின் தாயல்லவா அவள்? கண்ணன் அவளுக்கு எத்தனை முக்கியம்? அத்தகைய கண்ணனை ஆயர்குலப் பெண்களுக்காகத் தரச் சொல்லிக் கேட்கிறாள். எங்கள் கஷ்டத்தைப் பெண்ணான நீயே புரிந்து கொள்ளவேண்டாமா தாயே! கண்ணனை எங்களோடு அனுப்பி வைப்பாய்!


அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!= இங்கே வரும் அம்பரம் வானத்தையே சுட்டும். அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமான் என்கிறாள் ஆண்டாள். மஹாபலியிடம் தானம் கேட்ட கதை ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா? தானம் தந்தேன் என்று மஹாபலி தாரை வார்க்கும் நீரைப் பெற்றுக்கொள்ளும் முன்னே ஒரு காலானது விண்ணையும் தாண்டி ஏழு உலகங்களையும் தாண்டி வளர்ந்து கொண்டே செல்கிறது. இப்படி ஓங்கிக் காலை வைத்து உலகளந்த உத்தமன் என்று கூறுகிறாள் ஆண்டாள். அத்தகைய உத்தமனே எழுந்திரப்பா! என்கிறாள். ஆனால் கண்ணனோ பலராமன் அருகே படுத்திருக்க அண்ணனைக் கட்டிக்கொண்டல்லவோ படுத்திருக்கிறான்?? அடடா? மறந்துட்டோமே,


செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!=கருநீல நிறக் கண்ணனை அணைத்துப் படுத்திருக்கும் பலராமனோ சிவந்த நிறம் படைத்தவன். செம்பொன்னைப் போல் சிவந்த அவன் திருப்பாதங்களைப் பார்த்துக்கொண்டே அத்தகைய பொலிவு படைத்த பாதங்களை உடைய பலராமா, பலதேவரே, எங்கள் செல்வரே, உன் தம்பியோடு தூங்குகிறாயே? தம்பியையும் எழுப்பிட்டு நீயும் எழுந்திரப்பா என்கிறாள்.


இங்கே கண்ணனே உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என ஏற்கெனவே ஆழ்வார் கூறியபடி கண்ணனே எங்களுக்கு ஆடை, கண்ணனே எங்களுக்குச் சோறு, கண்ணனே எங்களுக்குத் தண்ணீர் என்று கூறி இருப்பதாயும் பொருள் கொள்ளலாம்.


உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!


ஸ்ரீராமாநுஜர் துறவறம் வாங்கிக் கொண்டதும் தினமும் உஞ்சவ்ருத்தி எடுத்தே உணவு உண்டு வந்தார். தினமும் எல்லாப் பாசுரங்களையும் பாடிக்கொண்டே உஞ்சவ்ருத்தி எடுப்பது வழக்கம். மார்கழி மாதமென்றால் கேட்கவே வேண்டாம். ஆண்டாளின் திருப்பாவைக்குத் தான் முன்னுரிமை. தினந்தோறும் எல்லாத் திருப்பாவைகளையும் பாடினாலும் அந்த அந்த நாளுக்குரிய திருப்பாவையை விஸ்தாரமாக அநுபவித்துப் பாடி வந்தார். அன்றும் அப்படித்தான்,

ImagesRamanujar.jpg

இந்த" உந்துமதகளிற்றன்" பாடலைப் பாடிக்கொண்டே பிக்ஷைக்கு வந்தார். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு வீடாக பிக்ஷை எடுக்கிறார். அப்போது, "பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட" முடிந்து அடுத்து "செந்தாமரைக்கையால் சீரார் வளையொலிப்ப" என்னும் அடி பாடிக்கொண்டே ஒரு வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். சந்நியாசிகளுக்கே உரிய நிதானத்தோடும், கண்ணியத்தோடும் குனிந்த தலை நிமிரவில்லை. காதுகளில் சீரார் வளை ஒலிக்கும் சப்தம் கேட்கிறது. மீண்டும் செந்தாமரைக்கையால் சீரார் வளையொலிப்ப எனப் பாடுகிறார். செக்கச் சிவந்த தாமரை வண்ணக் கை ஒன்று கதவைத் திறக்கிறது. கையில் பிக்ஷை போட வைத்திருக்கும் பாத்திரம்.


பதினாறு வயது கூட நிரம்பாத ஒரு அழகிய மங்கை வந்து தன் செந்தாமரைக்கைகளால் சீரார் வளை ஒலிப்ப பிக்ஷை இட வந்தாள். ராமாநுஜர் பார்த்தார். பார்த்த கண்கள் நிரம்பின. பிக்ஷா பாத்திரம் கீழே நழுவிற்று. "என் அம்மா, என் தாயே!" என்றாராம். அப்படியே மூர்ச்சித்துக் கீழே விழுந்துவிட்டார். அந்தப்பெண் பதறிப் போக உள்ளிருந்து வந்தார் அந்தச் சிறுமியின் தந்தை. அவர் வேறு யாரும் இல்லை. திருக்கோஷ்டியூர் நம்பி என்னும் ஸ்ரீராமாநுஜரின் குருவே ஆவார். ஆசாரியர் வந்து பார்த்துவிட்டுச் சீடன் இருக்கும் நிலை புரிந்ததும், புன்னகை புரிந்தார். கூட வந்தவர்களைப் பார்த்து, "உந்து மத களிற்றனில், சீரார்வளை ஒலிப்ப " என்ற வரிகளில் அநுசந்தானமோ?" என்று கேட்டாராம். உடன் வந்தவர்கள் ஆச்சரியத்தால் திகைத்துப் போய் ஆமெனத் தலை அசைக்க, திருக்கோஷ்டியூர் நம்பி விளக்குகிறார்.


"இந்தப் பாடல் ஆண்டாள் ஸ்ரீமஹாலக்ஷ்மியைக் கண்ட நிகழ்வைப் பற்றிப் பாடியது. அதுவும் அவள் தன் பதியோடு சேர்ந்திருக்கும் சமயம் பார்த்து அவள் கருணா கடாக்ஷம் இருந்தாலே நமக்கு உய்வு என்பதை உணர்ந்து பாடியது. கண்ணனை யாசித்த ஆண்டாள் அவனைத் தனக்குத் தரக்கூடிய வல்லமை கொண்டவள் ஸ்ரீயாகிய மஹாலக்ஷ்மித் தாயே என்பதை உணர்ந்து அவளிடம் விடுத்த வேண்டுகோள் இது. அத்தகைய பாடலை உணர்ச்சியோடு பாடி வந்த ஸ்ரீராமாநுஜர் இங்கே என் பெண்ணைப் பார்த்ததும், ஸ்ரீயையே நேரில் கண்ட உணர்வைப் பெற்றிருக்கிறார். அதனால் வந்த மயக்கம் இது." என்று கூறிவிட்டு சீடரை ஆசுவாசப் படுத்தி எழுப்பினாராம். அத்தகைய அபூர்வமான பாசுரம் இது.


உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!= நப்பின்னைப் பிராட்டி நந்தகோபனுக்கு மருமகள் என்றும் ஏழு எருதுகளை அடக்கிவிட்டுக் கண்ணன் அவளை மணந்தான் என்றும் செவிவழிச் செய்திகள் பல கூறுகின்றன. பாகவதத்திலோ, மற்றக் கண்ணன் கதைகளிலோ இது பற்றிக்குறிப்புகள் இல்லை எனினும் தமிழ்நாட்டு மரபை ஒட்டி ஆண்டாள் நப்பின்னையைப் பற்றிக் கூறி இருக்கிறாள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். யசோதையின் அண்ணன் ஸ்ரீகும்பன் என்பவரின் மகள் என்றும் சொல்வார்கள். ஸ்ரீமஹாலக்ஷ்மியைக் குறிப்பதாயும் பொருள் கொள்வார்கள்.


இது வரைக்கும் தோழிகளை எழுப்பிக்கொண்டு, பின்னர் நந்தகோபன் அரண்மனைக்கு வந்து வாயில்காப்போனிடம் அநுமதி பெற்று உள்ளே நுழைந்து நந்தகோபனை எழுப்பிப் பார்த்து யசோதையையும் எழுப்பிப் பார்த்தாயிற்று. ம்ஹும், ஒண்ணும் அசையலை. பலராமனுக்கும் அசையவே இல்லை. ஒரே வழி, கண்ணனின் மனைவி காலில் விழுவது தான். நப்பின்னையின் கருணை துளி கிடைத்தால் போதுமே! நம்ம வீட்டிலேயே நமக்கு ஏதானும் வேணும்னா நேரடியா அப்பாகிட்டே கேட்பது வெகுசிலர்தான் இருப்பார்கள். எல்லாருமே அம்மா மூலமாத் தானே அப்பாவிடம் விண்ணப்பம் வைப்போம்.


பலமுள்ள பல களிறுகளை, யானைகளை அடக்கும் தோள்வலிமை கொண்ட நந்தகோபனின் மருமகள் ஆன நப்பின்னைப் பிராட்டியே

கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்= நல்ல நறுமணமுள்ள பூக்களைச் சூடி, வாசனாதித் திரவியங்களைப் பூசிக்கொண்டதால் எப்போதுமே மணம் வீசும் குழலைக் கொண்டவளே, அல்லது எந்நேரமும் கண்ணனைப் பிரியாமல் இருப்பதால் கண்ணனின் அருளாகிய நறுமணம் பூராவும் உன்னிடமும் நிறைந்திருப்பதால் நீயே நறுமணமுள்ளவளாய் இருக்கிறாயே என்றும் கொள்ளலாம். வாசல் கதவைத் திற அம்மா, எனக் கேட்க, அவளோ என்ன அவசரம் விடிந்துவிட்டதா? என்று கேட்கிறாள்

.

ஆஹா விடியாமல் என்னம்மா? கோழிகள் கத்துகின்றனவே, தெரியலையா? உன் வீட்டு மாதவிக்கொடி படர்ந்து இருக்கும் மாதவிப் பந்தல் மேல் பலவேறு விதமான தொனிகளில் குரல் கொடுக்கும் குயிலினங்கள் கூவிக்கொண்டிருக்கின்றனவே கேட்கவில்லையா?


பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!= எல்லாம் சொல்லியும், கேட்டுக்கொண்டு இருக்கும் அவளிடமிருந்து பதிலே இல்லை. கொஞ்சம் எட்டிப் பார்க்கிறார்கள். அவள் ஒரு கையில் பந்தை வைத்துக்கொண்டு இன்னொரு கையால் கண்ணனை அணைத்துக்கொண்டு படுத்திருக்கிறாள். அவள் எழுந்து கண்ணனை அனுப்பவேண்டும். கண்ணனும் வரவேண்டும், அவளும் வரவேண்டும். என்ன செய்யலாம்?? பந்தை வைத்துக்கொண்டு கண்ணனோடு விளையாடிக்கொண்டிருந்துவிட்டு அப்படியே தூங்கிட்டாள் போல, "அடி பந்தை வைத்துக்கொண்டிருக்கும் பெண்ணே, உன் மைத்துனன் ஆகிய பலராமன் சிறப்பையும், கூடவே கண்ணனின் சிறப்பையும் பாடவேண்டி, நீ உடனே வா. உன் அழகான செந்தாமரை மலர்போன்ற கைகளால் உன் கைகளில் நீ அணிந்திருக்கும் வளைகள், ஜல் ஜல் என ஒலி எழுப்ப, ஓடி வந்து கதவைத் திறந்தால் நாங்கள் அனைவரும் மகிழ்வோம் அம்மா. உன் கருணா கடாக்ஷம் ஆகிய கதவைத் திற. பகவானின் திவ்ய செளந்தரியத்தில் அதன் அழகில் நாங்கள் எங்களை மறந்து பாடி ஆடுகிறோம்.


--Geetha Sambasivam 09:47, 6 ஜூலை 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 7 ஜூலை 2011, 10:37 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,822 முறைகள் அணுகப்பட்டது.