வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்! 5

From மரபு விக்கி

Jump to: navigation, search
ShriMayureshwar Morgaon.jpg
விநாயகருக்கு அருகம்புல் ஏன் சாத்துகிறார்கள் என்பதற்குப் புராணங்கள் சொல்லும் கதை என்னவென்றால், அனலாசுரனைத் தன் பேழை வயிற்றில் அடக்கிக் கொண்டதால் அவர் வயிற்றினுள் இருந்த மூவுலகமும் வெப்பம் தாங்கமாட்டாமல் தவித்த காரணத்தால் குளுமையைக் கொடுக்கும் அருகைச் சாற்றி வெப்பத்தைத் தணித்தார்கள் எனச் சொல்லுவது உண்டு. ஆனால் விஞ்ஞான பூர்வமாய்ப் பார்த்தோமானால் இந்த மண்ணில் முதன் முதல் தோன்றியது புல் தான். ஆகவே தான் அவரின் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பெறுகிறது. மண்ணின் நாயகர் ஆன அவர் இந்த மண்ணில் விளைந்த எளிய பொருட்களைக் கொடுத்தாலே போதும், திருப்தி அடைவார். அந்தப் பூமியையே வழிபடும்போது அதில் விளைந்த தானியங்களையும், பழங்களையும், உணவு வகைகளையும் தானே அவருக்கு நிவேதனமாய்ப் படைக்க வேண்டும்.


தவிர, யானைக்குக் கரும்பு பிடிக்கும். இனிப்பு வகைகளில் பிரியம் கொண்டது யானை. அதனாலேயே கரும்புத் துண்டங்களும், அரிசியில் செய்த அன்னம், பாயாசம், கொழுக்கட்டை போன்றவையும் படைக்கிறோம். மேலும் கொழுக்கட்டையானது நம் உடலின் உள்ளே உள்ள மகத்தான பூரணத்துவத்தையும் அதன் இனிமையையும் மறைமுகமாய் நமக்கு உணர்த்துகிறது. எவ்வாறு வெறும் அரிசிமாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும். தேங்காய் உடைப்பது என்பதும் மிக அரிய ஒரு தத்துவத்தைக் காட்டுகிறது. அந்த ஈசனுக்கு எவ்வாறு மூன்று கண்களோ அவ்வாறே தேங்காய்க்கும் மூன்று கண்கள். ஈசனைப் போன்ற உயர்ந்த தேங்காயைப் பிள்ளையாருக்குப் படைப்பதின் மூலம் நம்மிடம் உள்ள எல்லாவற்றிலும் உயர்ந்த வஸ்துவை இறைவனுக்குக் கொடுக்கிறோம். மேலும் தேங்காயின் ஓடு மிகவும் கெட்டியாய் நம் மண்டை ஓட்டைப் போல் இருக்கிறது. அதன் பருப்பும், உள்ளே உள்ள இனிப்பான நீரும் நம் உடலினுள் மூளைக்கு மிக அருகில் அமைந்துள்ள அமிர்தமய கோசத்தைக் குறிக்கும். நம் மண்டையையே சிதற அடிக்க்கிற பாவனையிலும், நம் அகங்காரம் அதன் மூலம் அகன்று உள்ளே உள்ள அமிர்தானந்த மய நிலையை நாம் அடைய வேண்டும் எனக் குறிப்பால் உணர்த்தவும் தேங்காய் உடைக்கப் படுகிறது.


விநாயகரை நாம் வழிபடுவது போல் விநாயகர் யாரையாவது வழிபட்டிருக்கிறாரா என்றால் ஆம். விநாயகரின் குரு சூரியன். அந்த சூரியனிடமே நேரில் வேத சாஸ்திரங்களைக் கற்றவர் இருவர். ஒருவர் விநாயகர், மற்றவர் அனுமன். வாயு புத்திரன் ஆன அனுமன் வாயு வேகத்தில் சுழன்று, சுழன்று சூரியனின் ரதத்திற்கு முன்னே கை கூப்பி நின்று கொண்டே அதே வேகத்தில் பின்புறமாய் நடந்து கொண்டும், பாடங்களைக் கற்றார் என்றால் விநாயகரோ சூரியன் ஸ்ரிமன்நாராயணனை வலம் வரும்போது, சூரியனை வலம் வந்து வேத சாஸ்திரங்களைப் பயின்றார். அதனால் தான் மஹா கணபதி ஹோமம் செய்பவர்கள் சூரியோதயத்தில் செய்வதும் வழக்கம். இதைக் காரணம் வைத்தே தான் எந்த ஒரு பூஜையோ, வழிபாடோ, பஜனையோ ஆரம்பிக்கும்போது விநாயகரில் ஆரம்பித்துப் பின்னர், அனுமனில் வந்து முடியும்.


நம் தமிழ் ஆண்டுகள் முற்காலத்தில் "ஆவணி" மாதத்துக்கு முன்னர் ஆரம்பித்ததாய்ச் சொல்லுவார்கள். இது பற்றி நேற்றுக் கூட ஒரு செய்தி படித்தேன். அது போல ஆவணி மாதம் வரும் விநாயக சதுர்த்தியுடன் நம் பண்டிகைகளும் ஆரம்பித்து ஆண்டு இறுதியில் ஹனுமத் ஜெயந்தியுடன் முடிவடையும். இதைத் தான் பிள்ளையாரில் ஆரம்பித்து அனுமனில் முடிக்கவேண்டும் என்பதை "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது" எனச் சொல்லி இருக்கிறார்கள். காலப் போக்கில் பழமொழியின் அர்த்தம் மாறியதைப் போல் ஹனுமத் ஜெயந்தி கொண்டாடும் மாதமும் மார்கழிக்கு மாறி விட்டது. ஆனால் இங்கே அமெரிக்காவிலும், இன்னும் சில குறிப்பிட்ட இந்தியக் கோவில்களிலும், பங்குனி கடைசியிலோ அல்லது சித்திரை மாதத் தொடக்கத்திலோ தான் ஹனுமத் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். இந்த வருஷம் மெம்பிஸ் கோவிலில் "மே"மாதம் தான் அனுமத் ஜெயந்தி மிக விமரிசையாக நடந்தது.


பிள்ளையாரைக் கடலிலோ அல்லது நீரிலோ கரைக்க வேண்டும். ஏன்? சமுத்திரங்களால் நிரப்பப் பட்டிருந்த் இந்த பூமியானது, சமுத்திரம் உள்ளே போனதால் தான் தெரிய ஆரம்பித்து உள்ளது. அந்த சமுத்திரம் மீண்டும் பொங்கினால்? இந்த பூமி எங்கே? சமுத்திரத்தில் இருந்து வந்த இந்தப் பூமி சமுத்திரத்துடன் மீண்டும் கலப்பது என்றோ ஒரு நாள் நடக்கப் போவது நிச்சயம். அந்த நிலையாமையைத் தெரிவிக்கவும், ஒரு வகையில் இன்றளவும் சமுத்திரம் தன் கட்டுப்பாட்டை மீறாமல் பூமித் தாயைக் காத்து வருவதற்கும் நன்றி சொல்லும்விதமாய், உன்னிலே இருந்து வந்தோம், உன்னிலேயே அடங்கவும் போகிறோம், அது வரை பொறுத்திரு என்று சொல்லி "விசர்ஜனம்" செய்கிறோம்.


--Geetha Sambasivam 09:19, 27 ஆகஸ்ட் 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 27 August 2011, at 09:22. This page has been accessed 2,084 times.