திருப்பள்ளி எழுச்சி அறிமுகம் 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Indexதவம்.jpg
திருப்பள்ளி எழுச்சி மூன்றாம் பாடல்
:

கூவின பூங்குயில்கூவினகோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவநல் செறிகழல் தாள் இணை காட்டாய்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்= அதிகாலை நேரம் குயில் கூவித் துயில் எழுப்பும், கோழிகள் கொக்கரக்கோ எனக் கத்தும். அப்படி திருப்பெருந்துறையிலும் குயில்கள் கூவ, கோழிகள் கூவ, மற்றப் பறவைகளும், நாரைகளும் ஒலி எழுப்ப, கோயில்களிலும் வீடுகளிலும் எம்பெருமானின் வழிபாடலுக்கான சங்கங்கள் ஆர்ப்பரித்தன.


ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்=விண்ணிலே நக்ஷத்திரங்களின் ஒளி மங்கிக்கொண்டு உதய காலத்து அருணோதயத்தைத் தொடர்ந்து சூரியனின் ஒளி பரவத் தொடங்குகிறது. இந்நிலையில் இவ்வுலக வாழ்க்கையில் பற்றும், பாசமும் கொண்டிருந்த எங்களுக்கு உன்னிடம் விருப்பமும், பக்தியும் ஏற்பட்டிருக்கிறது, எங்கள் ஈசனே.


தேவநல் செறிகழல் தாள் இணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே= திருப்பெருந்துறையில் உறையும் எங்கள் ஈசனே, சிவனே, எங்களின் இந்த பக்தியைக் கண்டு எங்கள் மேல் அன்பு பூண்டு எம்மை ஆட்கொள்ள உன் திருவடித் தாமரைகளை எங்களுக்குக் காட்ட மாட்டாயா? உன்னை எங்கள் ஐம்பொறிகளாலும், அறிவாலும், மனத்தாலும் ஆழ்ந்து அநுபவிக்க முடியாது. அருள் அநுபவம் பெற்றாலே அநுபவித்து உணர முடியும். அத்தகைய அநுபவத்தை எங்களுக்குக் கொடுத்து எங்களை ஆட்கொண்டு அருள் புரிவாய்.


யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.= அனைவராலும் அறிய முடியாதவனே, ஆனால் உன் அடியார்கள் மட்டுமே அறியக் கூடிய தன்மை கொண்டவனே, எமக்கு என்றும் எளியவனாக இருப்பவனே, இறை அருள் அநுபவம் இல்லை எனில் உன்னை அறிவது எங்கனம்?? பக்குவம் அடைந்த ஆன்மாக்களால் மட்டுமே இறைவனை அறியவும் உணரவும் முடியும். மாணிக்க வாசகர் உணர்ந்து அறிந்திருந்தார்.


திருப்பள்ளி எழுச்சி நான்காம் பாடல்


இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னியதிணை மலர்க்கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந்துறை உறை சிவ பெருமானே

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளியெழுந் தருளாயே


நம்மைப் போல் ஈசனும் தூங்குவான் என எண்ணி அவனையும் பள்ளியறைக்கு அனுப்புவதை ஒரு மரபாகப் பின்பற்றி வருகிறோம். உண்மையில் ஈசன் எந்நேரமும் இயங்கிக்கொண்டே அல்லவா இருக்கிறான்?? பஞ்சபூதங்களால் ஆன இந்த மானுட உடல் அல்லவோ ஓய்வுக்குப் போகிறது?? அவ்வாறு உடலுக்கு ஓய்வு கொடுக்கும் நாம் நமது உள்ளத்துக்கும் ஓய்வு கொடுக்கக் கூடாது என்பதே இந்தப் பள்ளி எழுச்சியின் முக்கிய நோக்கம். நம் உள்ளே குடி கொண்டிருக்கும் ஈசனை எழுப்புவதான் ஐதீகத்தை முன்னிட்டு நம் உள்ளத்துள்ளே உறையும் இறை உணர்வை அன்றோ தட்டி எழுப்புகிறோம்.


இந்த அதிசயக்காட்சியில் வீணை இசைக்கிறது. யாழ் இசைக்கிறது. அதோடு வேத கோஷங்கள் எழும்புகின்றன.


இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்


இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்= வீணைகளைக்கையில் எடுத்துக்கொண்டும், யாழை மீட்டிக்கொண்டும் இசை பாடுகிறவர்கள் ஒருபுறமும், ரிக் முதலான வேதங்களில் இருந்து வேத கோஷங்களைப் பாடுபவர்கள் ஒருபக்கமும்,


துன்னியதிணை மலர்க்கையினர் ஒருபால்= இறைவனுக்குச் சூடுவதற்கெனவே மலர்மாலைகளை ஏந்தியவண்ணம் சிலரும்,


தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்= மலர்மாலைகள் இல்லாமல் தங்கள் பக்தியையே அவனுக்கு மாலையாகச் சூட்டி தங்களை மறந்த பக்தியில் ஈசனின் திருவுருவைப் பார்த்து அழுது, தொழுது, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குபவர்களும்


சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்


திருப்பெருந்துறை உறை சிவ பெருமானே= தங்கள் சிரத்துக்கும் மேல் இரு கைகளையும் கூப்பியவண்ணம் வணங்குபவர்கள் இன்னொரு புறமுமாகக் காண்கின்றனர். திருபெருந்துறை உறையும் சிவபெருமானே,


என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்= இவ்வளவு பக்தர்களின் பக்திக்கு முன்னால் என் போன்ற சாமானியர்களின் பக்தியையும் ஏற்றுக்கொள்ளும் எம் ஈசனே, என்னையும் ஆட்கொண்டு அருளி, எனக்கென இன்னருளைப் பொழியும் தலைவனே,

Imagesநடராஜா.jpg

எம்பெருமான் பள்ளியெழுந் தருளாயே=என்னுள்ளே உள்ள இறை உணர்வைத் தட்டி எழுப்பச் செய், எம்பெருமானே பள்ளி எழுந்தருள்வாய், என்னுள்ளே நீ உனக்குரிய இடத்தில் அமர்வாய்.


--Geetha Sambasivam 11:25, 5 ஏப்ரல் 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 5 ஏப்ரல் 2011, 11:25 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,992 முறைகள் அணுகப்பட்டது.