வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சித்திரம் பேசுதடி! எல்லோரா குகைகள் 3

From மரபு விக்கி

Jump to: navigation, search
1344454224 1f6240139b.jpg

புத்தர் தன் கைவிரல்களை இவ்வாறு வைத்திருப்பது தான் அவர் போதனை செய்யும் வடிவமாய்க் கருதப் படுகின்றது. இப்போ மெதுவா அடுத்த குகைக்கு வந்துட்டோமே??? அட, இது என்ன இங்கே ஒரு பெரிய வராந்தா மாதிரி இருக்கோ? அதோ, அது தான் குபேரன் சிற்பம் என வழிகாட்டி சொல்லுகின்றாரே??? செல்வத்துக்கு அதிபதியான குபேரனை, "பஞ்சிகா" என்ற பெயரால் அழைத்துள்ளனர். அருகே அவர் மனைவி, "ஹரிதி" என்று அழைக்கப் படுகின்றாள். உள்ளே நுழையும்போது வாயிற்காவலர்கள் போன்ற உருவச் சிலைகளின் அமைப்புடன் விளங்குகின்றது. சுவர்களின் ஒவ்வொரு பக்கமும் புத்தர்களே ஆக்கிரமித்திருப்பதையும் காண முடிகின்றது. விண்ணில் இருந்து தேவர்களும், தேவதைகளும் வந்து புத்தரை ஆசீர்வதிப்பதும், போதிசத்துவர் என்று அழைக்கப் படும் புத்தரின் உருவமும், இன்னும் புத்தர் ஆகக் காத்திருக்கும் துறவிகளும் காணக் கிடைக்கின்றனர்.


புத்தரின் மகா பெரிய உருவம் உட்கார்ந்த நிலையில் காண்கின்றோம். அதை அடுத்து நாம் செல்லும் குகையில் முற்றுப் பெறாத புத்தரின் உருவம் உள்ள சிலையுடன் கூடிய குகையைக் காண்கின்றோம். அதை அடுத்த நான்காவது குகை, இரண்டு தளம் கொண்ட அமைப்புடன் விளங்குகின்றது. ஏற்கெனவேயே முதல் தளத்துக்கே பல படிகள் மேலே ஏறி வந்திருக்கின்றோம். வந்து பார்த்தால் இந்தக் குகை சற்று, இல்லை, இல்லை, நன்றாகவே சிதிலமடைந்த நிலையில் உள்ளது எனப் புரிகின்றது. கடவுளே??? எதை நாம் உருவாக்க முடியும் இது போல்?? என்றாவது நினைத்துப் பார்த்தோமா??? குறைந்த பட்சம் காப்பாற்றிப் பாதுகாத்து வைக்கவாவது தெரியுதா நமக்கு??? எத்தனை அரிய பொக்கிஷங்கள்??? வருத்தம் மேலிடுகின்றது. பார்க்கும்போதே. கீழத்தளத்தில் ஒரு பெரிய விசாலமான கூடமும், உட்கார்ந்த நிலையில் உள்ள பெரிய புத்தர் சிலையும், சிலையின் இரு மருங்கிலும், புத்தருக்கு உதவி செய்யும் துறவிகளும் காணப் படுகின்றனர். மேல் தளத்தில் அதே போல் இருந்தாலும் சற்றே சிறியதான சிற்பங்கள் காணப் படுகின்றன.

C4 3abudha.jpg

ஐந்தாவது குகையில், இன்னும் மேலே ஏற வேண்டி உள்ளது. ஒரு கல்லால் ஆன தளத்தை குடைந்து உருவாக்கப் பட்ட படிகளில் மேலே ஏறிச் செல்கின்றோம். அப்பா, எவ்வளவு பெரிய குகைக் கோயில்??? வியப்பை அடக்கவே முடியவில்லை, அதுக்குள் நமக்குக் களைத்து விடுகின்றது. ஆனால் இம்மாதிரித் தினமும் மேலே ஏறி வந்து வெறும் உளியையும், சுத்தியலையும் மட்டும் வைத்துக் கொண்டு, இந்த குகைக் கோயில்களையும் சிற்பங்களையும் செதுக்கி இருக்கின்றார்களே, எத்தகைய உழைப்பு இது???? நாம் இருந்து அனுபவிக்கப் போகின்றோமா என்று அவர்கள் சிறிதாவது நினைத்திருந்தால் இம்மாதிரியான அற்புதங்கள் தோன்றி இருக்காது.


மூன்று பாகமாய்ப் பிரிக்கப் பட்ட இந்தக் குகையின் நடுவே இரு பக்கமும் சிறிய சிறிய அறைகள் இருக்கின்றன. மேலே "காலம்" என அழைக்கப் படும் உத்திரங்கள் எல்லாம் நன்கு அலங்கரிக்கப் பட்டு விளங்குகின்றது. வித, விதமான அழகுணர்ச்சியோடு கூடிய குறிப்புகளால் வரையப் பட்ட வித விதமான இலைத் தொகுதிகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. தரையில் இருந்து சிறு சிறு கல்லால் ஆன பெஞ்சுகள் எழுப்பப்பட்டுள்ளது. நடுவில் புத்தரை வணங்குமிடம் உள்ளது. உள்ளே பெரிய புத்தரின் திருவுருவச் சிலை உள்ளது. அடுத்து வரும் ஆறாவது குகை செவ்வக வடிவில் உள்ளது. இதிலும் பானைகள், இலைகள், பூக்களால் ஏற்படுத்தப்பட்ட வடிவங்கள் காணக் கிடைக்கின்றது. எத்தனை நுண்ணிய வேலைப்பாடுகள் என மனம் வியப்பதோடு அல்லாமல், இத்தகைய நாகரீக வளர்ச்சி எப்போவோ நம் நாடு அடைந்துவிட்டதை எண்ணும்போது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தாலும், இப்போதைய நிலைமையை நினைத்து வருத்தமாயும் இருந்தது.


இந்தக் குகையின் சுவர்களில் போதி சத்துவர் தவிர, மற்றக் கடவுளர்களும் இடம் பெறுகின்றனர். கல்விக்கு அதிபதியாகச் சொல்லப் படும் "மஹா மயூரி" என்னும் தேவதையும், "தாரா" என்னும் தேவதையும் காணப்படுகின்றனர். இன்னொரு பக்கம் மஹா மயூரி தன் மயில் வாகனத்தில் காணப்படுகின்றாள். அருகிலேயே "அவலோகேதேஷ்வர்" கையில் வைத்திருக்கும் தாமரைப் புஷ்பத்துடன் காணப் படுகின்றார். புத்தருக்கான ஒரு சிறிய வழிபாட்டுக் கூடமும் இருக்கின்றது. இங்கே பெரிய புத்தரை, பல சிறிய புத்தர்கள் சூழ்ந்துள்ளனர். அடுத்துள்ள ஏழாம் குகை சாதாரணமாய்க் காணப் படுகின்றது. ஆகவே இதில் எல்லாம் அதிகம் காட்டுவதில்லை. இனி அடுத்த குகைக்குப் போவோம்.

2652942540054053522erVaGa fs budha.jpg

புத்த மதக் குகைகள் மொத்தம் 12 என்று சொல்லப் படுகின்றது. பனிரண்டும் இருந்தாலும் வழிகாட்டிகள் காட்டுவது முக்கியமான மூன்று அல்லது நான்கு குகைகள் மட்டுமே. மற்றவை சிதிலமடைந்து வருகிறபடியால் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உலகத்தரத்துக்கு மேற்பட்ட ஒப்பற்ற அமைப்புகளுடன் கூடிய இந்தக் குகைக்கோயில்கள் பாதுகாக்கப் பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். நம்முடைய நாகரீகமும், கலாசாரமும், ஆடை, அலங்காரமும், கட்டிடக் கலைத் திறமையும் இந்தக் குகைக்கோயில்களின் மூலம் நன்கு வெளிப்படுகின்றது. வெறும் உளியும், சுத்தியும் வைத்துக் கொண்டே, இவ்வளவு திறமையாக யோசித்து அமைத்திருப்பது இந்தியர்களின் கட்டிடக் கலைத் திறமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது.


எட்டாவது குகையின் புனிதக் கோயில் பின்பக்கத்துச் சுவற்றில் இருந்து சற்றே தனித்துக் காணப்படும் ஒரே மடாலயம் ஆக உள்ளது.வட்டவடிவமான பாதையுடன் கூடிய இந்தக் குகையின் மூன்று தங்கும் அறைகளும், மற்றவை முடிக்கப்படாமலும் காண்கின்றோம். அடுத்துள்ள ஒன்பதாவது குகைக்கு மேல்தளம் இருக்கின்றது. என்ன ஆச்சரியம்?? அந்தத் தளத்தில் பால்கனியும் இருக்கு!!!! மேலும் தேவதையான தாரா, பக்தர்களைப் பாம்பு, கத்தி, யானை, நெருப்பு, மற்றும் கடல்புயலினால் ஏற்பட்ட கப்பல் சேதம் போன்றவற்றிலிருந்து காப்பாற்றும் காட்சியை முன்பக்கத்தில் காணலாம். பத்தாவது குகை விஸ்வகர்மா என்ற தேவலோகச் சிற்பியின் பெயரால் ஏற்படுத்தப் பட்டுள்ளது.


இந்த குகை புத்த சைத்தியங்கள் அந்தக் காலங்களில் எவ்வாறு அமைக்கப் பட்டிருக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. விஸ்வகர்மாவை தேவதைகளின், அல்லது கடவுளரின் சிற்பி என்றே சொல்கின்றனர், என்பதில் இருந்து கலாசாரம் அன்றே எவ்வாறு இருந்திருக்கின்றது என்றும் புரிந்து கொள்ள முடிகின்றது. மிகப் பெரிய கூடத்தின் மூன்று பக்கங்களும், மிருகங்களின் சிற்பங்களால் ஏற்படுத்தப்பட்ட அஸ்திவாரத்தின் மேலேயே எழும்பி உள்ளது. மிருகவேட்டை ஆடுவோரின் தோற்றங்கள் உள்ள ஓவியம் மேலே காணப்படுகின்றது. ஒரு பெரிய ஸ்தூபம் பக்கத்துச் சுவரின் நடுவே காணப்படுகின்றது. அழகிய புத்தரின் சிற்பமும் அதில் உள்ளது.


வெராந்தா என்று சொல்லப் படும் இடத்தில் இருந்து படிகள் மேலே செல்கின்றன. மேலேயும் அழகான ஒரு சைத்தியம் காண்கின்றோம். போதி சத்துவர்களும், தெய்வ உருவங்களும் பெண் உதவியாளர்களும் காண்கின்றோம். தாமரைப் பூக்களும், பெண்கள் அணிந்திருக்கும் உடை அமைப்பும், தலை அலங்கார அமைப்பும், போட்டிருக்கும் நகைகளில் இருந்தும் அன்றைய கலாசாரம் புரியவருகின்றது. அதே சமயம் ஆப்பிரிக்க இனத்தவர்கள் போன்ற சிலரும் ஓவியங்களில் காணக் கிடைக்கின்றனர். 11-ம் குகை இரண்டு தளங்கள் உள்ளது. கீழ்த்தளம் முழுக்க இடிந்துவிட்டதாயும், தற்சமயம் காணக்கிடைக்கும் தாழ்தளம் புத்தரின் போதிக்கும் சிற்பத்துடனும், இரண்டு அறைகளுடனும், , நடுத்தளம் முடிவடையாத நிலையிலும் உள்ளது. இதனுள் செல்ல அனுமதி இல்லை, எனினும் இது பின்னாட்களில் இந்துக்களால் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது. ஏனெனில் இங்கே துர்கை, விநாயகர் காணப்படுகின்றனர். பனிரண்டாம் குகை மூன்று தளங்கள் உள்ளது.


கீழ்த் தளம் இருபக்கமும் அறைகளுடன், ஒரு மடாலயமாகக் காணப்படுகின்றது. அடுத்து வரும் நடுத்தளமும் கீழ்த்தளம் போன்றே இருக்கின்றது. மேல் தளத்தில் ஏழு வகையான புத்தர் சிலைகள் சுற்றிலும், தெய்வ உருவங்களுடன் காண்கின்றோம். மேலும் உள்ளே சென்றால் பனிரண்டு தேவதைகள், ஈரிதழ்த் தாமரையில் அமர்ந்த கோலத்தின் காணலாம். பதின்மூன்றாம் குகை சாமான்கள் மட்டும் வைக்கும் இடமாக இருந்திருக்கும் வாய்ப்பு உண்டு. இனி நாம் காணப்போவது இந்துமதக் குகைகள்.

--Geetha Sambasivam 10:30, 6 ஜூலை 2011 (UTC)



Contributors

Geetha Sambasivam

This page was last modified on 7 July 2011, at 10:19. This page has been accessed 2,834 times.