அருள்மிகு கூடலழகர் திருக்கோவில்
மூலவர் : கூடலழகர்
உற்சவர் : வியூகசுந்தரராஜர்
அம்மன்/தாயார் : மதுரவல்லி (வகுளவல்லி, வர குணவல்லி, மரகதவல்லி)
தல விருட்சம் : கதலி
தீர்த்தம் : ஹேமபுஷ்கரிணி.
-
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கூடல்
ஊர் : மதுரை
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மங்களாசாஸனம்
அடியோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
-பெரியாழ்வார்
தல சிறப்பு:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்ற "திருப்பல்லாண்டு' பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை. இவ்வூரில் கூடலழகர் என்ற பெயரில் பெருமாள் அருளுகிறார். மார்கழி மாதத்தில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பு. அஷ்டாங்க விமானம் : பெருமாள் கோயில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும். இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகக் கருதப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.
பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜ கோபுரம், எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் எட்டு பிரகாரங்களுடன் அமைந்த கோயில் இது. ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகம், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், மணவாள மாமுனிகள், விஸ்வக்ஷேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமிநாராயணன், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. சூரிய மண்டலத்தில் சூரியன் அஷ்டாங்க விமானத்துடன் கூடிய ரதத்தில் வலம் வருவார். இந்த ரதத்தின் மாதிரி சிற்பம் கோயிலின் சுற்றுச்சுவரில் வடிக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு:
பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரருக்கு, பெருமாளை அர்ச்சாவதார (மனித ரூபம்) வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பம் நிறைவேற, இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்குக் காட்சி தந்தார். பின்பு சனத்குமாரர், தேவசிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்து தான் கண்ட காட்சியை அப்படியே வடிவமைக்கச் செய்தார். அதை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டைசெய்தார். அவரே கூடலழகர் எனப்பட்டார். இத்தலம் கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டு விட்டது. கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்குகிறது. எனவே இத்தல பெருமாள், "யுகம் கண்ட பெருமாள்' எனப்படுகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்ற "திருப்பல்லாண்டு' பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை. இவ்வூரில் கூடலழகர் என்ற பெயரில் பெருமாள் அருளுகிறார். மார்கழி மாதத்தில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பு. அஷ்டாங்க விமானம் : பெருமாள் கோயில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும். இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகக் கருதப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:38, 22 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி - தின மலர்.