வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 17

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான்


திரு.வி.க.

Thiruvika.jpg
தோப்பனார் போய்ட்டார். அஸ்தி கரைச்சுட்டு ஆயாசத்துடன் அமருகிறான், பிள்ளை. பத்து நாள் ஆஸ்பத்திரி ட்யூட்டி. தள்ளலெ. அவனுக்கும் வயசாறதே. யாரோ காஃபி தர்றா. திக்கா, நன்னா இருக்கு. தோன்றது: அப்பாவுக்கு இந்த காஃபி பிடிக்கும். கண்லெ ஜலம். அப்படித்தான் இருக்கு. தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்களுக்கு நான்கு வாரிசுகள் ~ மு.வ., வெ.சாமிநாத சர்மா, ஏகலைவ சிஷ்யன் 1:அகிலன், ஏகலைவ சிஷ்யன் 2: நானும். ஸெப்டம்பர் 17, 1953 மாலை நினைவை விட்டு அகலாது. ஐயா காலமாகிவிட்டார். செய்தி பறந்தது. முதல்வர் ராஜாஜி வந்தார், பேப்பர்களில் செய்தி மறு நாள் காலை. எழுத முடியப்போறதில்லை. த.ம. அ. அவருடைய பெருமைகளை போற்றி, ஒலிப்பதிவுகள், கட்டுரைகள், மின்னாக்கம் செய்த நூல்கள் எல்லாம் வைத்திருக்கிறது. உசாத்துணையில் நோக்கவும்.


உரிமை கேட்கிறது. நாலு வரியாவது எழுதவேண்டாம் நீ? சரி. எழுதுகிறேன்.

மறுநாள் காலை இடியும், மின்னலும், மழையும். பொருட்படுத்தாமல் ஒரு தொழிலாளர் பட்டாளம் வருகிறது, ஏழு-எட்டு மைல்கள் கடந்து, சூளையிலிருந்து. இந்த தலைமுறைக்கு இறந்த கிழவரை தெரியாது. அப்பனும், பாட்டனும் சொல்லிக் கேள்வி. ஓ! தெரியுமே. போன வருடம் மார்ச் 29 (1947) சங்கத்தலைவர் எஸ்.சி.சி. அந்தோனி பிள்ளை கைது. இந்த பெரியவர், தள்ளாத வயதில் மறுபடியும் தலைமை ஏற்கிறார். அவர் 1927ல் தலைமை வகித்த காங்கிரசாரின் அரசு அவரை இற்செறித்து வீட்டுக்காவலில் வைக்கிறது. பேஷ்! வெள்ளைக்காரன் செய்யாதது.


இதெல்லாம் யாருக்கு புரியும்? கீர் ஹார்டீ இங்கிலாந்தின் முதல் தொழிற்ச்சங்கத்தலைவர். இந்தியாவின் நண்பர். அவருடைய தரிசனம், திரு,வி.க.வுக்கு ஒரு சக்ஷு தீக்ஷை. ஏழை, எளியவனுக்கு பாடு படு, ஒரு மார்க்சிஸ்ட்டாக. கார்ல் மார்க்ஸ்ஸின் ‘தாஸ் கேபிடால்’ முதல் பகுதி 1867லும் இறுதி பகுதி 1894லிலும் வந்தன. சோவியத் புரட்சி 1917ல். அதற்குள் காந்தியவாதியாகவும் திகழ்ந்த திரு.வி.க. 17 தடவை ‘தாஸ் கேபிடால்’ முழுதும் படித்து விட்டாராம்.


அதற்கு முன்னாலேயே, 1917ல் சென்னையில் பேச்சு வார்த்தை. முதலாளித்துவத்தின் திருமகனாகிய பொமன்ஜி பெஸ்டோன்ஜி வாடியாவின் மனத்தை மாற்றியவரை பற்றி பிறகு. வாடியா தான் சென்னையில் தொழிலாளிகளின் நலன் நாடி, திரு.வி.க. வையும் தன் பக்கம் கொணர்ந்தவர். மார்ச் 2, 1918 சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஏப்ரல் 27, 1918 அன்று வெங்கடேச குணாமிர்த வர்ஷினி சபையில் சென்னை லேபர் யூனியன் ஸ்தாபனம்: வாடியா தலைவர். திரு.வி.க.வும், இன்னொருவரும் உப தலைவர்கள். இந்த சபை இருந்த மாளிகையும் தோட்டமும் லாட் கோவிந்த தாஸ் குடும்பத்தை சார்ந்தது என்று படித்த நினைவு. திரு.வி.க. சொல்கிறார்,” ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வந்திருந்தனர். சிலர் கட்டாம்தரையில். சிலர் மதில் மேல். சிலர் மரங்களில். அன்று தற்காலிகத்தலைமை ஏற்ற அரசு அதிகாரி திரு.வி.க. வின் பேச்சை கேட்டு பயந்து விட்டார். ‘ஜூட்’ என்றார். கூட்டம் ‘ஹூட்டிங்க்’. போலீஸ் கபர்தார் ஜாஸ்தி. கூட்டமோ அமைதி. யூனியன் வேண்டுமென்றனர். (திரு.வி.க.(1944) வாழ்க்கைக் குறிப்புக்கள்: பக்கம் 352-353.)

தகனம் நடக்கும் முன் சைவத்திருமுறைகள் ஓதுவதாக திட்டம். நாத்திகர் பெரியார் நிற்கிறார், சடலத்தின் அருகே, ஒரு பையன் ஒரு சட்டியில் சிறுநீர் பிடித்த வண்ணம். அவருக்கும் உபாதைகள் பல. அதே தினத்தில் (ஸெப்டம்பர் 17, 1879) பிறந்த முதியவர் அல்லவா! மு.வ. அவர்கள் அவரிடம் சென்று ஏதோ ஒரு விதமான அனுமதி கேட்கிறார். அவரின் சம்மதம், “கல்யாணம் அப்படி சொல்லிச்சா?” அதற்கு விளக்கம் அளிக்க, இன்னொரு புத்தகம் எழுத வேண்டும்.


ஆம். இது எல்லாம் வரப்போகும் என் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி. மூன்று வருடங்களாக சொல்லி வருகிறேன். வேளை வரவில்லை.

நாலு வரிக்கு மேலேயே எழுதியாச்சு.

இன்னம்பூரான்

17 09 2011


உசாத்துணை:

http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=103&Itemid=153

http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=58&Itemid=84








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:14, 19 செப்டெம்பர் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 19 September 2011, at 12:16. This page has been accessed 1,504 times.