அன்றொரு நாள்: டிசம்பர் 12From மரபு விக்கிஇன்னம்பூரான்
கரீக்ட்டா இன்னிக்கு நூறு வருஷம் ஆயிடுத்து, மாரியப்பா! சொல்லி வச்சமாதிரி 11 11 ’11 அன்று பக்கிங்காம் அரண்மணையிலிருந்து, குஞ்சும், குளவானுமாக, காலை பிடிக்கறவன், கையை பிடிக்கறவள் எல்லாரும் கூட வர, மிலிடரி புடை சூழ, சம்ச்சா, சம்ச்சிகள் வால் பிடிக்க,கூஜாக்கள் வலம் வர, மாட்சிமை தங்கிய சக்ரவர்த்தி தாடி மவராசாவும், பட்டமகிஷி மேரி மாமியும், லோக்கல் நாதமுனி பேண்ட் இங்கிலீஷ் நோட் வாசிக்க, சாரட் வண்டிலெ விக்டோரியா ஸ்டேஷன் வந்தாங்களா!. ‘குப்’ ‘குப்’ னு கரும்புகை கக்கிக்கிணே, நாலு மைல் வட்டாரத்தெலெ கேக்றாப்லே ஊதிக்கிணு, ரயில் வண்டியும் நம்ம வீட்டுக்குப் பக்கத்திலெ இருக்கற போர்ட்ஸ்மத் ஹார்பெர்லெ (திரு.நரசைய்யாவுக்கு தெரியும்) அவுகளை கொண்டு வந்து விட, ‘மெடினா’ என்ற அழகிய கப்பலில் ( கப்பல்லெ கூட அழகு உண்டா என்ன? ஒடிசா பாலுவெ கேட்டா, ஆமாம்பாரு.) மெடினா பாண்டு கோஷ்டி கானம் ஊத, ராசாவும் ராணியும், தொப்பியை களட்டிப்பிட்டு தூங்கிப்போய்ட்டாஹ. உண்ட களைப்பு. உண்டதோட, ‘க்ளுக்’ க்ளுக்’னு தண்ணி போட்டாங்களா. அது வேற ஆளை அமுக்கிடிச்சு. தெனோம் ஆட்டம் பாட்டம் தான். ஒரு பாடா எகிப்து வந்தாங்களா. லோக்கல் ராசா, பாஷா, கிச்சனரு, பிரபுக்கள் எல்லாரும் வந்தாஹ. கும்மாளமெல்லாம் போட்டு முடிஞ்சப்றம், மெடினாவும் பாம்பே (அதான்ப்பா மும்பை) நோக்கி மிதந்தாளே. அப்போலோ பந்தர் (பந்தர்னா குரங்கு. இல்லைங்கலெ. பந்தர்னா துறைமுகம் என்றும் அர்த்தம். கணேசனாருக்கு ஐயமெழுந்தால், தேவ்விடம் கேட்கலாம்.) வந்ததும், கோலாகலமான வரவேற்பு. அது இன்னாடா, பீரங்கியாமே? ‘தொப்’ ‘தொப்’னு குண்டு போடுது. அது தான் ராஜமரியாதையாம். காது ஜிவ்வு கிளிஞ்சு போச்சுடா, கண்ணா. பம்பாயி இம்மாம் பெரிய பட்டணம். லச்சுமி கோயில் இருக்கா. தெருவெல்லாம் காசு கொட்டிக்கிடக்குமாம்லெ. மூட்டை மூட்டையா காசு. நம்ம பார்ட்டி சொகுசா சில நாட்கள் அங்கே கொஞ்சி குலாவினாகளா, அப்றம் ரயிலேறி டில்லிக்கு போனாஹ.
டிசம்பர் 12, 1911 அன்று அங்கே, காரனேஷன் மைதானம் என்ற இடத்தில் தர்பார் ஒரே தடபுடல் போ. படோடாபம்னு சொல்லாதெடா, நிலக்கரி நாக்கு. எல்லாமே ஸூப்பருடா. சொல்லுக்கடங்கா சண்டியர் பசங்க. ஆனை, குதிரே, ஃபீட்டன் வண்டி (என்னா பேச்சுபேசறெ, வடிவு. ஜட்கா வண்டி இல்லெடீ. ஷோக்கு வண்டி. ரண்டுப்பக்கமும் லாந்தர் விளக்கு, அலங்காரமா. போட் மாதிரி இருக்கும். சர்க்கஸ்க்காரன் சைகிள் சக்ரம் மாதிரி, இம்மாம் பெரிசு சக்ரம். கலர் படம்லாம் வரஞ்சு இருப்பாஹ. நாலு குதிரை, அடீ, வடிவு. ஹூக்கும்! எல்லாம் அரபிக்குதிரை. எல்லா ராசா ராணியெல்லாம் வந்திருந்தாஹ. ஆம்பளையெல்லாம் பொம்பளெ மாதிரி ஜரிகையும், பட்டுமா, கவுனு. நம்ம பேட்டை ரவுடி மாதிரி ஜ்வெல்லரி ~ சங்கிலிகள், தோடா, தோடு, பதக்கம், தலைப்பாலெ வைரம், வைடூர்யம். கும்பிடு போடத்தானெ வந்திருக்காஹ. எதுக்குன்னு கத்தியும் கப்டாவும்! எல்லாம் ஃபில்ம்லெ காட்றாஹ. ஆனாப்பாரு. பரோடா மவராசா தான் விறைப்பா நின்னாராம். மத்த இஸ்பேட்டு மாதிரி, வணங்கிய திருக்கோலமா பின்னடை நடக்கல்லையா. ஜார்ஜ் மவராசாவுக்கு பத்திக்கிணு வந்ததாம்.
நமக்கென்னடா, அங்க ஜோலி? பாத்தோமோ, வந்தோமான்னு இருக்குணும். ராசா நேபாலுக்கு போயிட்டாரு. புலி சுட. ராசாவாச்சே, பினாமி கூட வச்சுக்லாம், சுடறத்துக்கு. ராணியம்மா ஆக்ரா போயி தாஜ் மஹால்லெ கும்பிட்டுப்பிட்டு ( ஒரு பேச்சுக்கு சொன்னேண்டா, பேமானி. சமாதினா கும்பிட்ணுமில்லெ.) ஜெய்ப்பூர் போனாங்களா, அந்த ஊர் ராசா. நாங்களெல்லாம் தோல்வியூர் என்று அடக்கமா சொல்லிட்டு!, பள பளா கத்தியை தொரசானியம்மா காலடிலெ வச்சு கும்பிட்டாருமெல. கூட வந்த தொரைமார் எல்லாம் மெச்சிக்கிட்டாஹ.
போதும்! போதும்! என்று நீங்கள் அலறுவது காதில் விழுகிறது. இது நிற்க. வரலாற்றை பார்ப்போம்.இது மூன்றாவது கலோனிய ராஜ தர்பார். 1876, 1903 & 1911. 1911வது தர்பாரில் தான் சக்ரவர்த்தி தரிசனம். நேரில் வந்து ராஜமரியாதைகளை ஏற்றுக்கொண்டது. ஒரு விஷயம் கவனிக்கப்படவேண்டும். இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியை ஒடுக்கி, விக்டோரியா மஹாராணி இந்தியாவின் சக்ரவர்த்தினியாக பிரகடனம் செய்த இருபது வருடங்களுக்குள், 1876ம் வருட தர்பாரிலேயே, துல்லிய கதராடை அணிந்திருந்த கணேஷ் வாசுதேவ் ஜோஷி அவர்கள், ‘மஹாராணியிடம் நாங்கள் கேட்பது எல்லாம், உங்களுடைய பிரிட்டீஷ் மக்களுக்கு இருக்கும் அரசியல்/சமூக அந்தஸ்து இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதே...’.
டில்லி தர்பாரை சாக்கிட்டு, மின் தமிழரன்பர்கள் யாவருக்கும் விழாக்காலத்து வாழ்த்துக்கள். இவ்வருடத்தின் எஞ்சிய நாட்களில் இன்பம் பொங்குக. 2012 வருட புத்தாண்டு வாழ்த்துக்கள். பொங்கிய இன்பம் பெருக்கெடுத்து திளைக்கட்டும், வருஷம் முச்சூடும். அதற்கு பிறகு, என்றென்றும். துரை படம் போடுவாருங்க.
இன்னம்பூரான்
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:16, 13 டிசம்பர் 2011 (UTC) |