ஶ்ரீதர ஐயாவாள் 4மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:41, 21 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் சதாசிவ பிரம்மேந்திராள் மற்றும் கோவிந்தபுரம் போதேந்திராளின் சமகாலத்தவர் ஶ்ரீதர ஐயாவாள். ஐயாவாள் அவர்கள் கங்கையைத் தம் வீட்டுக் கிணற்றுக்குக் கொண்டு வந்தவர். அது எப்படி என அறிவதற்கு முன்னர் ஐயாவாளின் பிறப்பு குறித்தும், அவரின் மற்றப் பெருமைகள் குறித்தும் பார்ப்போம். ஐயாவாளின் தந்தையார் ஶ்ரீ லிங்கார்யர் என்பார் மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்துவானாக இருந்து வந்தார். ஐயாவாள் அவருக்கு ஏக புத்திரராக அவதரித்தார். சதா சிவநாமத்தையே ஜபித்துக்கொண்டிருந்த ஐயாவாளுக்குச் சிறு வயதிலேயே அனைத்து வித்தைகளும் கைவரப் பெற்றன. வித்தைகளால் ஏற்பட்ட தேஜஸ் அவரைச் சுற்றி வியாபித்தது. சிறந்த சிவபக்தராக விளங்கிய ஐயாவாளுக்கு விரைவில் விவாஹமும் ஆயிற்று. தந்தை மரணமடைய, தந்தையின் வேலை மகனை நாடி வந்தது. ஐயாவாளின் மகிமை புரிந்த மன்னன் திவான் பதவியையே மனமுவந்து அளிக்க அதில் ஈடுபாடில்லாமல் இருந்த ஐயாவாள் அவர்கள் விரைவில் தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் தன் தாயார், மனைவி ஆகியோரின் பரிபூரண சம்மதத்தோடு தானமாக அளித்துவிட்டார். இனி இவ்வுலகில் வாழவேண்டித் தாம் பிக்ஷாடனம் செய்ய வேண்டும், இறைவன் புகழைக் காலக்ஷேபம் செய்து பரப்ப வேண்டும். பல புண்ணிய தீர்த்தங்களுக்கும் சென்று தீர்த்தாடனம், க்ஷேத்திராடனம் செய்து காலம் கழிக்க வேண்டும் என நிச்சயித்துக்கொண்டு தன் மனைவியோடும், தாயோடும் மைசூரை விட்டுக் கிளம்பினார். பல க்ஷேத்திரங்களுக்கும் போய் பக்தி, ஞானம் ஆகியவற்றைக் குறித்து உபதேசம் செய்து கொண்டு திருச்சிக்கு வந்தார். திருச்சியில் சில காலம் தங்க நினைத்தார். அப்போது அங்கே நாயக்க வம்சத்தைச் சேர்ந்த அரசன் ஒருவன் ஆண்டு கொண்டிருந்தான். ஐயாவாளின் சிவபக்தியைக் குறித்து அசூயை கொண்ட பண்டிதர்கள் சிலர் மன்னனிடம் ஐயாவாளுக்கு சைவ சித்தாந்தத்தின் மேல் பற்று அதிகம் என்று குறை கூறினார்கள். என்றாலும் அவரின் மகத்துவமும் அவர்களுக்குப் புரிந்தது. மன்னனோ இத்தகையதொரு மகானைக் குறை கூறுவதா என எண்ணினான். எனினும் பண்டிதர்களின் எண்ணத்தை அறிந்து கொண்ட அவன் ஶ்ரீமாத்ருபூதேஸ்வரரை ஶ்ரீ கிருஷ்ணனாக அலங்கரித்து வீதிவலம் வரச் செய்ய, மலைக்கோட்டை வீதியில் குடியிருந்த ஐயாவாள் வீட்டு வாசலுக்கு வீதி வலம் வந்து சேர்ந்தது. ஆழ்நிலை தியானத்தில் இருந்த ஐயாவாள் உள்ளுணர்ச்சியால் உந்தப்பட்டு தியானத்தினின்று எழுந்தார். மாத்ருபூதேஸ்வரர் கண்ணனாக அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு "க்ருஷ்ண துவாதச மஞ்சரி" என்னும் துதியை மனமுருகப் பாடினார். மன்னன் அவரின் பக்தி கண்டு மெய் சிலிர்த்தான். அதே ஊரில் வசித்த அந்தணன் ஒருவனுக்குப் பல வருஷங்கள் பிள்ளைப்பேறில்லாமல் பிறந்த ஓர் ஆண் குழந்தைக்குத் திடீரென்று மாந்தம் வந்து மூச்சுப் பேச்சற்று மரணநிலைக்குத் தள்ளப்பட்டது. தலைசிறந்த ஜோசியக்காரர்கள் அனைவராலும் தீர்காயுசு என்று கூறப்பட்ட பிள்ளை இறக்கப்போகிறான் என்ற எண்ணத்தில் பெற்றோர் கதறி அழுது கொண்டிருந்தனர். காவிரியில் குளித்துவிட்டு அந்தப் பக்கமாக வந்த ஐயாவாள், இதை அறிந்து கொண்டு தம் அந்தக்கரணத்தில் பகவானை தியானம் செய்தார். "தாராவளி" என்னும் நக்ஷத்ர சங்க்யை உள்ள ஸ்லோகத்தினால் பரமேஸ்வரனைப் பாடி தீர்த்தத்தைக் குழந்தை மீது ப்ரோக்ஷித்தார். தம் கரங்களால் விபூதியைக் குழந்தைக்கு இட்டுவிட்டார். குழந்தை சற்று நேரத்தில் மயக்கத்திலிருந்து விழித்து எழுந்தது. இது போன்ற செயல்களாலும், ஐயாவாளின் பாண்டித்தியத்தாலும் அவரின் பக்திபூர்வமான காலக்ஷேபங்களாலும் மனம் மகிழ்ந்த அரசன் அவரை அங்கேயே தங்கச் சொல்லத் தம்முடைய நிலைக்கு ஒரே இடத்தில் தங்குவது சரிப்பட்டு வராது என்று ஐயாவாள் அன்றிரவே திருச்சியை விட்டுப் புறப்பட்டார். அரசன் மனம் வருந்த அவன் கனவில் ஐயாவாள் நாகாபரணத்தோடு ஈசன் உருவில் காட்சி கொடுத்துத் தாம் வந்த காரியம் தடைப்படாது நிறைவேறத் தாம் ஒரே இடத்தில் தங்க இயலாது என்றும் பக்தியைப் பரப்புவதே தமக்கு முக்கியம் எனவும் கூற மன்னனும் தெளிந்தான். க்ஷேத்ராடனம் செய்து வந்த காலத்தில் ஐயாவாளின் தாயார் மரணமடைந்தார். அதன் பின்னர் ஐயாவாள் தஞ்சைக்கு வந்து சேர்ந்தார். அங்கே அப்போது மஹாராஷ்டிர அரசர்கள் வம்சத்தில் வந்த ஷஹாஜி அரசன் ஆண்டு வந்தான். சிலகாலம் தஞ்சையில் தங்கிய ஐயாவாள் அங்கே இருந்த சப்தமும், ஆரவாரமும் தமக்கு இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்து கொண்டு சிற்றூர்களுக்குப் பயணமானார். கும்பகோணம், திருபுவனம், திருநாகேஸ்வரம் போன்ற ஊர்களைத் தரிசித்துக்கொண்டு திருவிசலூர் வந்து சேர்ந்தார். அந்த ஊரின் அமைப்பும் சூழ்நிலையும் அவருடைய தியானம் செய்யும் மனதுக்கு நிம்மதியை அளிப்பதாக உணர்ந்ததால் ஐயாவாள் அங்கேயே அக்ரஹாரத்தில் தங்கினார். என்றாலும் அடிக்கடி மன்னன் அவரையும் மற்ற வேதவித்துவான்களையும் தஞ்சைக்கு அழைத்து வாதவிவாதங்கள் செய்ய வைத்தான். அனைவரிலும் ஐயாவாளே சிறப்பாக இருந்து வந்தார். எத்தனை முக்கிய ஸ்தானம் வகித்தாலும் அரசவைக்கும் அரசன் அளிக்கும் கெளரவத்துக்கும் ஐயாவாள் மயங்கவே இல்லை. சமஸ்கிருதத்தில் பதமணி மஞ்சரி என்னும் நிகண்டையும், "ஷஹாஜி சரித்திரம்" என்னும் நூலையும் எழுதினார். மற்ற வித்வான்களுக்கு இவர் மேல் பொறாமை வளர்ந்தது. ஒருநாள் வீட்டில் இவர் நாம சங்கீர்த்தனம் செய்யும் வேளையில் மன்னனிடமிருந்து காவலாள் வந்தான். இவரை பாகவதர் என நினைத்துக்கொண்டு, "பாகவதரே! உள்ளே திவான் இருந்தால் கூப்பிடுங்கள்!" என்று அதிகாரம் செய்ய, இவரோ, "திவான் இறந்துவிட்டார்; பாகவதர் தான் இருக்கிறார்." என்று மன்னனுக்குச் செய்தி அனுப்பினார். அவருடைய மனம் அரசபதவிகளில் மயங்காமல் இருப்பது கண்டு மகிழ்ந்த மன்னன் அவரை இருக்குமிடத்திற்கே வந்து வணங்கிச் சென்றான். அப்போது அந்த ஊருக்கு போதேந்திர ஸ்வாமிகள் விஜயம் செய்தார். போதேந்திர ஸ்வாமிகள் தம் குருவின் ஆக்ஞைப்படி நாம சித்தாந்தம் செய்ய வேண்டித் தல யாத்திரையாக சேதுவுக்குக் கிளம்பினார். ராமேஸ்வரத்தில் தங்கி நாம சங்கீர்த்தனம் செய்துவிட்டுப் பின்னர் வ்ருஷபாத்ரி, பழநி, ஶ்ரீரங்கம், திருவானைக்கா போன்ற க்ஷேத்திரங்கள் வந்தவர் ஐயாவாளின் புகழைக் கேட்டு அவரைக்காண விரும்பி திருவிசலூர் வந்து சேர்ந்தார். தொடரும்.
--Geetha Sambasivam 20:41, 21 அக்டோபர் 2011 (UTC) Category:தெய்வீகப்_பெரியார்கள் |