பசித்திரு!,தனித்திரு!,விழித்திரு!மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:23, 31 ஆகஸ்ட் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் பவள சங்கரி
இசையில் இனிமையும், இறைமையையும் ஒருங்கேக் கண்ட வள்ளல் பெருமான்! இசை என்பது மனித வாழ்வில் உடன் பிறந்த ஒரு சங்கதியாகும். குழந்தை பிறந்தவுடன் முதன் முதல் கேட்கும் தாலாட்டுப் பாடலின் ஓசையே முதல் இசையாகும் அந்த ஆழ்ந்த இசை நம்மை இறை இன்பத்தை நோக்கிச் செலுத்தும் அன்றோ? அதற்கு நல்லதோர் சான்றாக நம் முன்னே நிற்கும் பெரியார்கள் தியாகராயரும், அருணகிரிநாதரும் மற்றும் வள்ளல் பெருமான் போன்றோரும் ஆவர். ஸ்ரீ தியாகராயரின் இசைக் கீர்த்தனைகளின் சக்தி நாம் அறிந்ததே. அவர்தம் கீர்த்தனைகளால் ஸ்ரீராமபிரானையே நம் கண் முன் நிறுத்துபவர். அடுத்து தம் இசையின் மூலம் இறைவனையே தாலாட்டும் வல்லமை பெற்ற அருணகிரியார்! அவர் பாடலை மனமுறுக பாட ஆரம்பித்தாலே அந்த முருகப் பெருமான் கண் முன்னே தோன்றியது போன்ற உணர்வையே ஏற்படுத்தக் கூடியதாகும்!
அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித் தத்தத் தத்தத் …… தருவோர்தாள் அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத் தொக்குத் திக்குக் …… குடில்பேணிச் செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச் செத்துச் செத்துப் …… பிறவாதே செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச் செச்சைச் செச்சைக் …… கழல்தாராய் துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத் துட்கத் திட்கப் …… பொரும்வேலா சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச் சொர்க்கத் தத்தைக் …… கினியோனே கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக் கத்தக் கத்தக் …… களைவோனே கற்புச் சத்திப் பொற்புச் சத்திக் கச்சிச் சொக்கப் …… பெருமாளே.
“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மைபேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்பிடியா திருக்க வேண்டும் மருவுபெண் ணாசையை மறக்கவேண்டும் உனைமறவா திருக்க வேண்டும் மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும்நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும் தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலமோங்கு கந்தவேளே! தண்முகத் துய்யமணி உன்முகச் சைவமணிசண்முகத் தெய்வ மணியே!”
'ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்யாவர்அவர் உளந்தான்'சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடம்எனநான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்சிந்தைமிக விழைந்த தாலோ!
சுத்த சன்மார்க்க சங்கத்தின் வாயிலாக ஐயன் வள்ளலார் உபதேசித்த மூன்று இன்றியமையா மந்திரங்களே, பசித்திரு! தனித்திரு!விழித்திரு! என்பதாகும்.
நல்லுணவு கொடுத்தென்னைச் செல்வம் உறவளர்த்தே ஊன் பசித்த இளைபொன்றும் தோன்றாத வகையை ஒள்ளியதென் அமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே!” என்றருளுகிறார்.
மற்றொன்று வருமோஅறியேன் எம் கோவே துன்றுமல வெம்மாயை அற்றுவெளிக்கு வெளிமிடத்துசும்மா இருக்கும் சுகம்”.
அடுத்து வருவது “விழித்திரு” என்பதாகும். தூங்குவதை முற்றும் துறக்க வேண்டுமென்பது இதன் பொருளல்ல. அளவாகத் தூங்கி, வளமான விழிப்பு நிலையில் மனதையும் , அறிவையும் செம்மையாக வைத்துக் கொள்ளல் என்பதாகும்………ஆன்மீக ஞானிகள் தூக்கத்தை அறவே ஒழித்த மகான்களாயினும் அவர்கள் நூறாண்டுக் காலங்கள் உயிர் வாழ்ந்துள்ளனர். ஆண்டவனின் பூரண அருளைப் பெறும் பொருட்டு, ஊன், உறக்கம் அனைத்தும் துறந்தவர்களாகவே இருந்துள்ளனர். வள்ள்ல் பெருமான் இதையே:
“தூங்குகநீ என்கிறாய் தூங்குவனோ எனதுதுரைவரும் ஓர்தருணத்தில் தூக்கமுந்தான் வருமோஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்என்னுடைத் தூக்கமெலாம் நின்னுடையதாக்கிஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழிஎன்னிரு கண்மணி அணையாரெனை அணைந்த உடனேஓங்குறவே நான் அவரைக் கலந்தவரும் நானும்ஒன்றானபின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே!” என்கிறார்.
ஆக பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்கிற தாரக மந்திரங்கள், ஆன்மீக ஞானிகளுக்காக மட்டுமல்லாது, சாமான்ய மனிதருக்கும் நன்மையளிப்பதாகும். வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க இயக்கங்கள் மூலம் இன்றும் அவருடைய சன்மார்க்கத் தத்துவங்கள் பரவலாக போற்றப்படுகின்றன. இன்றும் வடலூரில் அன்னதானங்கள் வள்ளலார் சோதியில் ஐக்கியமான தினத்தன்று பெரிய அளவில் நடை பெறுகின்றன.
”தேசகத்தி லினிக்கின்ற தெள்ளமுதே – மாணிக்க வாசகனே யானந்த வடிவான மாதவனே மாசற்ற நீ திருவாய் மலர்ந்த தமிழ் மாமறையின் ஆசகன்ற வனுபவந் தனுபவிக்க வருளுநீயே!”
“ வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்சுவைகலந்தென் ஊன்கலந்து வுயிர் கலந்து வுவட்டாம லினிப்பதுவே வருமொழிசெய் மாணிக்கவாசகநின் வாசகத்தில் ஒருமொழியே யென்னையுமென் நுடையனையு மொன்றுவித்துத் தருமொழியா மென்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன் குருமொழியை விரும்பியியல் கூடுவதேன் உறுதியே வாட்டமிலா மாணிக்கவாசகத்தின் வாசகத்தைக் கேட்டபொழு தங்கீருந்த கீழ்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளு மெய்ஞ்ஞான நாட்டமுறு மென்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!”
இததகைய ஆன்மீக ஞானம் பெற்ற வள்ளலாருக்கும் சோதனை ஏற்படாமல் இல்லை. ஆம் சோதனைகள் தானே மனிதரின் வாழ்க்கையை புடம் போட்ட தங்கமாக மின்னச் செய்கிறது. வள்ளல் பெருமான் மனித வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு வழி வகுக்கும் வகையில் திரு அருட்பா, இயற்றி போதித்து வந்த வேளையில், பல சர்ச்சைகள் ஏற்பட்டது. ‘மருட்பா’ என்கிற அமைப்பில் ஓர் அணி திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மருட்பா என்கிற போராட்டம் 1873 ஆம் ஆண்டு தொடங்கி 1907 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்த எதிர்ப்பு வள்ளலாரின் இறுதிக் காலங்களில் கனன்று, தீம்பிழம்பாய் எரிந்து, ஐயன சோதி வடிவாக கரைந்த பின்பும் கங்காய் கனன்று கொண்டிருந்தது. பல அறிஞர்கள் இப்போராட்டத்தின் ஆரம்பத்தில் கலந்து கொண்டாலும், போகப் போக பகலவனைக் கண்ட பனித்துளியாய் உறுகிப் போயினர். அருட்பாவில் அமிழ்ந்து போயினர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அந்நிகழ்வைப் பற்றிக் கூறுகிறார். இலக்கிய உலகில் முன்பின் காணாத ஓர் வித்தியாசமான வழக்கு என்பார். வழக்கைத் தொடுத்தவரோ ‘தமிழ் செம்மல் – சைவப் பெரியார்’ என்றழைக்கப்பட்ட, வையகமே போற்றும், வாழ்வாங்கு வாழ்ந்த பெரியார், ஆறுமுக நாவலர் ஆவார். வழக்குக்கான அடிப்படை ஆறுமுக நாவலரின் உள்ளம், வள்ளல் இராமலிங்க அடிகளாரின் சன்மார்க்க நெறியை ஏற்றுக் கொள்ள இயலாமையே காரணமாகும்.மஞ்சக் குப்பம் நீதி மன்றத்தில் நடந்த வழக்கைக் காண மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர். ஆறுமுக நாவலர் வழக்கறிஞர் வைத்து வாதாட, இராமலிங்க அடிகளாரோ, அன்பே கடவுள் என்றுணர்ந்த தன்மையால், வழக்கறிஞர் மூலம் எவர் மனதையும் புண்படச் செய்ய விரும்பாமல் ஆன்ம ஞானமே துணையாகக் கொண்டு தானே வழக்காட எண்ணி நீதி மன்றம் வந்த வேளை, தெய்வீக ஒளி வீசும், வெண்ணிற ஆடை கொண்டு மெய்யுணர்வுடன் தேவனைப் போன்று வந்து நின்ற அடிகளாரைக் கண்ட மனிதர் அனைவரும் எழுந்து நின்று கைகூப்ப, நீதிபதியும் தன்னிலை மறந்து எழுந்து கைகூப்பி நிற்க, வழக்கு தொடுத்த ஆறுமுக நாவலரும் எழுந்து நின்று இரு கரம் கூப்பித் தொழுதாராம்! “ உங்களுடைய அனிச்சை செயலே இராமலிங்கனாரின், அருட்செயலை எமக்குத் தெளிவாக உணர்த்துகிறதே” என்று நீதிபதி கூறியதும் மன்றமே மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, வழக்கு நிறைவடைந்தது……….சைவப் பெரியாரான ஆறுமுக நாவலர் திருமறைக்குட்பட்டது அல்ல ‘திரு அருட்பா’ என்ற உணர்வு கொண்டவராக இருந்தது மட்டுமே இவ்வழக்கிற்கான காரணமாக இருந்தது. ஆனால் இன்று மருட்பா என்ற பொய்மை மறைந்து, அருட்பா என்ற மெய்ம்மை ஒளிவிட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. வள்ளலார் காட்டிய வழி, அன்பும், கருணையும் இணைந்த ஆன்மீக நெறி என்பதை உணர்ந்து அம்மெய்வழி நடந்தவர் அனைவரும் வாழ்வில் சிறப்புற்று, அமைதியும், வெற்றியும் பெற்று வாழ்வதையும் காண முடிகிறது. நம்மிடமுள்ள அஞ்ஞானமாகிய ஆணவம், கன்மம், மாயைகளாகிய திரைகள் நீங்கப் பெற்றால் அருட்பெரும் சோதியை தரிசிக்கலாம்! அருட்பெருஞ் சோதி, அருட் பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை அருட் பெருஞ் சோதி
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:17, 31 ஆகஸ்ட் 2011 (UTC) நன்றி - வல்லமை மின்னிதழ். |

