பொருளியல், புள்ளியியல், உளவியல் போன்ற துறைகளில் புகுந்து அட்டஹாசமாகக் கருத்துக்களை, கொள்கைகளை, கோட்பாடுகளை எரைந்து உரைப்பவர்களை நாம் அன்றாடம் காண்கிறோம். அது அவரவர் முரசொலி உரிமை, படிக்காத மேதையாக/ கவைக்குதவாத சுரைக்காயாக இருந்தாலும். அரசியல் என்றால் அது பட்டிமன்ற உரிமை. இலக்கிய விவாதங்களில், கண்காணாத தேசங்களில் சஞ்சாரம். ஆதாரம் கேட்டால் அசாத்திய கோபம்! ஆன்மீகமென்றால், வெறும் வாயும் மெல்லும். இத்தனை பேச்சு ஏன் என்று கேட்டால், நானும் உங்களில் ஒருவன் தானே என்ற சால்ஜாப்பு. அத்துடன் அதை விடுங்கள்.
ஒரு நண்பரின் 10 வயது மகனின் போக்கு சரியாக இல்லை. அவனுக்கு 20 வயது ஆகும் வரை பெற்றோர் அடுத்த வீட்டு கிழவனையும், எதிர்வீட்டு வாத்தியையும், கீரைக்காரி முத்தம்மாவையும், அருள்வாக்கு அமுதவல்லியையும், ஆரூடம் குப்பைய்யரையும், மயான பூசை மாயாண்டியையும் அணுகினார்களே தவிர, அப்பாணை ஒரு உளவியல் வல்லுனரை அணுக மறுத்து விட்டார்கள். ‘நாலு பேருக்கு தெரிஞ்சுடுமே’ என்று அஞ்சினார்கள். இன்று 35 வயதில் அவனை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. மனநல மருத்துவமனையில் அவன் காகிதக்கூடையும், மெழுகுவர்த்தியும் செய்து கொண்டு இருக்கிறான். படிச்சது என்னமோ பீ.ஈ.! இவன் ஒரு கற்பனை பாத்திரம். ஆனால், எத்தனையோ அன்பர்கள் அவனை/அவளை அடையாளம் கண்டு கொள்வார்கள். பெற்றோர்கள் அவனுக்கு/ அவளுக்கு இழைத்த அநீதியை பிரத்யேகமாக ஒத்துக்கொள்வார்கள். ‘ஜல்ப்’ பிடிச்சா ஜல்தியா நுரையீரல் வைத்தியரிடம் ஓடுபவர்கள், மனநலம் போற்றுவதில்லை. இத்தனை பீடிகை ஆகஸ்ட் 9, 1896 இல் ஜனித்த ழான் பியாழே (Jean Piaget:(ʒɑ̃ pjaʒɛ )என்ற பன்முக ஆய்வாளரும், சிறார்களின் உளவியல் ஆராய்ச்சியில், மனநல மருத்துவத்தின் பிதாமகரான சிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்களுடன் ஒப்புமை செய்யப்பட்ட, வல்லுனரின் புகழ் பாடவே.
அவர் எடுத்துக்கொண்ட ஆராய்ச்சி எளிதிலும் எளிது. வெள்ளிடை மலை. அதாகப்பட்டது: ‘ஒரு குழந்தை எப்படி கற்றுக்கொள்கிறது; அறிவை ஏற்றுக்கொள்கிறது?’. கொஞ்சம் விஞ்ஞான பரிபாஷையில் உலவினாலும், அவருடைய ஆய்வின் மையக்கருத்து: அவன்/அவள் படிப்படியாக கற்றுக்கொள்கிறான்/ள். வயது ஏற, ஏற, சிக்கலவிழ்த்து கற்றுக்கொள்ளும் திறன் கூடுகிறது. இவ்வாறு செயல்படுவதில் முதல் காரணி, அந்த சிறுவன்/ சிறுமி. அவருக்கு மூன்று குழந்தைகள். அவர்களின் பன்முக வளர்ச்சியை பல வருடங்களாக ஆய்வு செய்வதில் தொடங்கி, கிட்டத்தட்ட 60 வருடங்கள் இடை விடாமல், தன்னுடைய உளவியல் கோட்பாடுகளை, படிப்படியாக அடுக்கி, உலகம் பாராட்டும் உளவியல் அறிஞராக 84 வயது வரை தொண்டு செய்தார். 70 வருட ஆய்வுக்களமாம், அவரது பணி. 13 வயதில் ஒரு வெளுத்த குருவியை பற்றி ஒரு சிறிய ஆய்வு. அது தான் அடித்தளம். உயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற இந்த தத்துவஞானி தற்செயலாகத்தான், உளவியல் பக்கம் திரும்பினார். சமூகவியல், விஞ்ஞானத்தின் வரலாறு, உளவியல், வம்சபரம்பரையும் அறிவுப்பாதையின் தடங்களும்’ என்ற ஆய்வு பன்முக ஆற்றல்களின் அறுவடை, பற்பல உயர்கல்வி மையங்களுக்குக் கிடைத்தது. உலகெங்கும் ‘சென்றவிடமெல்லாம் சிறப்பு.’ வடைமாலை போல் முனைவர் விருது மாலைகள்.
வம்சாவளியின் ஆளுமையும், சூழலின் கட்டுக்கோப்பும் தான் அறிவு வளர்ச்சியின் அடித்தளம் என்ற பழங்கொள்கைக்கு மாறாக, இவருடைய கூற்று: ஜனித்த க்ஷணத்திலிருந்து, ஒவ்வொரு குழவியும் தன்னுடைய உலகை சிருஷ்டிக்கிறது. அந்த படைப்பு பொழுதொரு வண்ணமாக, நாளொரு மேனியாக, வளர்கிறது; அவனுடைய/அவளுடைய, மனிதர்களுடனும், பிராணிகளுடனும், பொருள்களுடனும், எண்ணங்களுடனும், துரிதமாக வளரும் சிந்தனாசக்தி அறிவை கூட்டுகிறது. அனுபவம் வாழ்வியல் உண்மைகளாகவும், அவை போதனைகளாகவும், அவை தத்துவங்களாகவும், அவை புத்தம் புதிய பாதைகளாகவும் அமைகின்றன. புரிகிறதா, வாழ்நெறி இலங்கும் காட்சி? அறிஞர்கள் இதை புரட்சிகரமானது, விடுதலை நோக்கியது என்றெல்லாம் பாராட்டுகிறார்கள். ஐயா!
ஒன்று கவனித்தீர்களா/ இவரின் உளவியல் ஆய்வு கல்வித்துறையின் ஆணி வேர். ஆசிரியபெருமக்கள் வினாக்களை வரவேற்கவேண்டும். பொறுமையுடன் பதிலளிக்கவேண்டும். திறந்தமனம் வளர உதவவேண்டும். கசடு களைவதற்கு உற்சாகம் அளிக்கவேண்டும். ‘சவாலே. சமாளி’ என்பதை ஆதரிக்கவேண்டும். பெற்றோர்களுக்கும் இந்த கடமை உளது.
வரட்டா?
http://colnect.com/en/stamps/stamp/23633-Piaget_Jean-Switzerlandஇன்னம்பூரான்
09 08 2011
உசாத்துணை:
http://www.piaget.org/aboutPiaget.html
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:11, 15 ஆகஸ்ட் 2011 (UTC)