சோழர் காலத்துச் சட்டம், ஒழுங்கு தண்டனைகள் 1

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:24, 10 ஆகஸ்ட் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

என்னுடைய திருப்பதி கல்வெட்டுக் கட்டுரையில் சட்டம் ஒழுங்கு முறை பற்றி நண்பர் செல்வமுரளி தன் வக்கீல் நண்பர்களிடம் தெரிவித்ததாகவும் (இராஜேந்திர சோழன் திருப்பதியில் சட்டத்தைக் காட்டித் திருத்தியது) அவர்கள் மேலும் இது போன்ற விவரங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்ததாகவும், அவர் தெரியப்படுத்தினார். ஏன் இதைப் பற்றி விரிவாக எழுதக் கூடாது என்று தோன்றியது. இன்றைய நிலையில் நாம் (இந்தியாவில்) அனுபவித்து சட்டம் ஒழுங்கு நிலைமையும் தண்டனை என்பது கூட கேலிக்குரியதாகப் போய்விட்டதையும் நினைத்துப் பார்த்து இக் கட்டுரையை வடிவமைத்திருக்கிறேன்.


ஆகவே இந்த சட்டம் - ஒழுங்கு - தண்டனை இவை சோழர் காலத்தில் எப்படி இருந்தது என்பது நமக்கு முதலில் தெரியவேண்டும். நான் படித்தவரையில் சோழர்களின் ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம் என்பதில் எனக்கு அதிக உடன்பாடு உண்டு. ஏன் அது பொற்காலம் என்றால் ராஜ்ய பரிபாலனை என்பது ஏறத்தாழ தர்மத்துக்கு உட்பட்டு இருந்தது. அரசாங்கத்தின் நேர்மை, கிராமம் வரை பரவி இருந்தத்தால், ‘ஊர்’ எனச் சொல்லப்படும் கிராம சபைகள் (இப்போதைய பாணியில் அரசமரத்தடி பஞ்சாயத்து), அந்த அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு தலை வணங்கி நேர்மையான் முறையிலேயே தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்புகளை கல்வெட்டில் பதித்து விட்டு சென்றனர்.


முதலிலேயே ஒன்றைச் சொல்லிவிடவேண்டும். இந்தக் கட்டுரை முழுவதும் கல்வெட்டுகள், செப்பேடுகள் இவைகளின் அடிப்படையிலேயே எழுதி வருகிறேன். அந்தக் கல்வெட்டு விவரமும் செப்பேடு விவரமும் முடிந்த வரையில் அடிக்குறிப்பாகத் தந்து விடுகிறேன். சில விவரங்கள் குழப்பமானதாகவும் சில விவரங்கள் சில ஜாதிகளுக்கு சாதகமாகவும் இருக்கலாம். ஆனால் இவை அக்காலத்தில் அக்கால சூழ்நிலையை மனதில் கொண்டும், அந்தந்த வகுப்பினரின் தியாகங்கள், நேர்மை, நிர்வாகம், கல்வியறிவு, ஆளுமை இவைகளுக்காகவும் கொடுக்கப்பட்ட சலுகையாகவே அவை காண்பிக்கப்படுகின்றன. அதே சமயத்தின் இந்த சட்டம் - ஒழுங்கு - தண்டனை என்பது பொது மக்கள் அனுபவித்ததை முன் வைத்தது என்பதையும் ஞாபகத்தில் கொள்ளவும். ராஜ வம்சத்தினர் சம்பந்தப்பட்ட வரை இந்த சட்டம் ஒழுங்கு சில பலவீனங்களையும், சில நேர்மையான முடிவுகளையும் சந்தித்த நிகழ்ச்சிகள் உண்டு.


போரில் கொல்லப்பட்ட எதிரி நாட்டு மன்னனை தம் கோட்டைக் கொடிக் கம்பத்தில் தலையைச் செருகி பயமுறுத்திய காட்சிகளும் உண்டு. முடிந்த வரை இப்படிப்பட்டவைகளை தவிர்த்து விடலாம் என்றிருக்கிறேன். காரணம் யுத்தத்தில் ஏற்பட்ட மரணங்கள் கொலைகள் இவைகள் குற்றக் கணக்கில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் நேற்றைய தினங்களில் ஈழத்தில் நடந்த யுத்தத்தில் பொது ஜனங்களை இரக்கமின்றிக் கொன்றார்களே, அவை போல கோழைத்தனமான நடவடிக்கைகள் அந்தக் கால கட்டத்தில் இல்லை என்பதை மட்டும் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். இருந்திருக்கலாம்.. மிகச் சிறிய அளவே நடந்திருக்கலாம், ஆனால் ஆதாரங்கள் இல்லை.

Indexmoovendhar.jpg

சரி, ஆரம்பிப்போமா?


சோழர்காலக் கல்வெட்டுகளைப் பார்க்கையில் அவர்கள் மிக முக்கியத்துவம் கொடுத்தது ஒரு குற்றம் மறுபடியும் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார்கள் என்பதுதான். மதவேற்றுமையின்மை, பிரிவுகளிலும் ஒற்றுமையைக் காண்பித்து சேர்த்து வைப்பது, நாடெங்கிலும் உள்ள ஜனங்களின் வாழ்வாதரங்களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்வது, பஞ்சம் வரும்போதும் வெள்ளம் வரும்போதும் களத்தில் இறங்கி சாதாரண ஜனங்களைப் பாதுகாத்தது, இவை எல்லாவற்றையும் விட வெகு ஜன வாழ்க்கையில் தொல்லையில்லா வாழ்வும், அப்படியும் மனிதர்கள் திருடர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளர்களாக மாறி தொல்லை தந்த சமயத்தில் அவர்களைத் திருத்த எத்தகைய வழி வகைகளைச் செய்தது என்பதையும் குறித்துக் கிடைத்த கல்வெட்டுகளையெல்லாம் பார்க்கையில் மறுபடி நம் தமிழகத்துக்கு இப்படி ஒரு நீண்டகால நிலையான அரசு கிடைக்குமா என்ற ஏக்கம் வரத்தான் செய்யும்.


ராஜத்துரோகமும் மரணதண்டனையும்:

Imagesrajaas.jpg

குற்றங்களிலேயே உயரிய குற்றம் என்பது ராஜத் துரோகம்தான். கொலைக் குற்றம் கூட இதற்கு அடுத்தபடிதான். எதைப் பொறுத்தாலும் ராஜத்துரோகத்தைப் பொறுக்கவில்லை என்பதற்கு எளிதான காரணம், ஆளும் தலைமையை அனைவரும் மதித்து நடக்கவேண்டும் என்பதற்குதான். ராஜத் துரோகம் என வரும்போது அன்றிருந்த சில சூழ் நிலைகளை நாம் முதலில் கவனித்தில் கொள்ள வேண்டும். கணக்கிலடங்கா அரசுகள். இந்த சிற்றரசுகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஒரு பலமான அரசாங்கத்தின் கீழ் ஆள வேண்டிய சூழ்நிலை. மனிதர் மனங்கள் விசித்திரமானவை. பலவான் பலமாக இருக்கும் வரையில் பயந்துகொண்டே இருப்பவை, அந்தப் பலவான் பலவீனனாகத் தெரியவரும் பட்சத்தில் இதுவரை கண்ட அவனுடைய பலங்களைப் பொடிப் பொடியாக்கிய சிற்றரசர்கள் ஏராளமானோர் இருந்தனர். விஜயநகரப் பேரரசு பலமாக இருந்தபோது அடங்கி நடந்தவர்கள் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் என்ற பலமான அரசன் போனபின் தங்களுக்குள் எப்படியெல்லாம் சண்டையிட்டு மாண்டு போய் சுல்தான்களிடம் சரணடைந்தும், ஐரோப்பியர்களின் காலில் விழுந்தும் அழிந்தார்கள் என்பது நேற்றைய செய்திதான்.

ஆனால் பராந்தக சோழன் முதல் மூன்றாம் குலோத்துங்கன் மத்திம காலம் (கி.பி 900 முதல்கி.பி 1178-1200 என்று வைத்துக் கொள்வோம்) ஏறத்தாழ முன்னூறு வருடங்களுக்கு தமிழகத்தில் ஒரு தர்ம பரிபாலனமே நடந்துள்ளது.சோழராஜாங்கம் பலத்தை அப்படியே முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக தக்க வைத்துக் கொண்டே பாரதத்திலேயே ஒரு உயரிய அரசு என்ற பெயரைப் பெற்றது.


எழுத்தும் ஆக்கமும்: திரு வி.திவாகர்


படங்கள் நன்றி: தேவர் தளம்


--Geetha Sambasivam 10:21, 10 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 10 ஆகஸ்ட் 2011, 10:24 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,252 முறைகள் அணுகப்பட்டது.