பொன்னேர் பூட்டுதல் என்றால் என்ன!மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:08, 17 ஜூலை 2011 அன்றிருந்தவாரான திருத்தம் மாயவரம் ஏரு இல்லை பொன்னேர் பூட்டுதல்
இங்கே நீங்க பார்க்கிறது மண்ணால் செய்யப் பட்ட பூமித்தாய். மேதினி அன்னை. எங்க ஊர்க் கோயில்க்கும்பாபிஷேஹத்தின் போது யாகசாலை பூஜை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகர் பூஜை முடிச்சுட்டு மேதினித் தாய்க்கும், கடப்பாரை, மண்வெட்டி, ஏர்க்கலப்பை போன்றவற்றிற்கும் பூஜைகள் முடித்துவிட்டுப் பின்னரே ஆரம்பித்தனர்.
அதற்கு பட்டாசாரியார் சொன்னது ஒவ்வொரு வருஷமும் பொன்னேர் பூட்டுகையில் எடுக்கும் மண்ணைக் கோயிலின் திருப்பணிக்கு எனக் கொடுப்பார்களாம். அப்புறமாய்ப் பொன்னேர் பூட்டு விழா முடிந்ததும், வயலில் விதைத்து, நட்டு, அறுவடை செய்து வந்த முதல் தானியக் கதிர் எல்லாக் கோயில்களுக்கும் வரும். அந்த தானியங்களின் விளைச்சலில் வந்த பணத்தைக் கொண்டு திருப்பணிகள் செய்வார்களாம். இப்போது பொன்னேர் பூட்டும் வழக்கமும் போய்விட்டது. தானியங்களின் விளைச்சலைக் கோயிலுக்குக் கொடுப்பதும் இல்லை. கோயிலின் நிலத்தின் விளைச்சல் கூடக் கோயிலுக்குச் சேர்வதில்லை. அது போகட்டும். பொன்னேர் பூட்டுதல் என்றால் என்ன??
தை மாதம் அறுவடை முடிந்ததும், உழவர்களுக்கு நான்கு மாதம் வயல் வேலை இருக்காது. கோடைக்காலமான சித்திரையில் கோடை மழையில் பயறு, உளுந்து விதைப்பார்களாம். அதற்கு முன்னர் வரும் அக்ஷய த்ரிதியை தினத்தன்று கிராமங்களில் வயல் இருப்பவர்கள் எல்லாரும் காலையிலேயே எழுந்து, மாடுகளைக் குளிப்பாட்டி வயலுக்கு அழைத்துச் செல்வார்கள். கூடவே இயற்கை எரு, வீட்டுப் பெண்கள், அங்கே குடிக்க நீராகாரம், பூக்கள், தேங்காய், பழம் போன்றவற்றை எடுத்துச் செல்வார்கள். ஏர்க்கலப்பை, மண்வெட்டி, கடப்பாரை போன்றவையும் கொண்டு செல்லப் படும்.
அங்கே வயலில் ஈசான்ய மூலையில் ஒரு திட்டாணி கட்டி, அதில் சாணம் அல்லது மண்ணால் பிள்ளையார் பிடித்து வழிபட்டு, மாடுகள், ஏர்க்கலப்பை, கடப்பாரை, மண்வெட்டி போன்றவற்றுக்கும் வழிபாடுகள் முடிந்து முதலில் குடும்பத் தலைவர் அல்லது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஏரைப் பூட்டி உழப் பின்னர் வீட்டின் நண்டு, சிண்டுகள் உட்படப் பெண்களும் சேர்ந்து சம்பிரதாயமாகச் சிறிது நேரம் உழுவார்களாம். அதன் பின்னரே உழவுத் தொழில் அந்த வருஷத்துக்காக ஆரம்பிக்கும். இதுவே பொன்னேர் பூட்டுவது என்பது.முதல் முதல் அந்த வருடம் உழும் இடத்தின் பள்ளத்தில் வசதி படைத்தவர்கள் தங்கக் காசுகள், ரத்தினக் கற்கள் என்றும் வசதியற்றவர்கள் குறைந்த பக்ஷமாக நாணயங்களையும் போட்டு மூடுவார்கள். இதனாலேயே அன்று ஏர் பிடித்தலைப் பொன்னேர் பூட்டுதல் என அழைத்தனர். இப்போதெல்லாம் ஏர் பிடித்து உழுவதே இல்லை.
ஒரு சிலர் அன்று பஞ்சாங்கம் படிப்பது, சாப்பாடு போடுவது, தானம் கொடுப்பது என்றும் செய்வார்கள். இதெல்லாம் மாறி இன்று அக்ஷய த்ரிதியை நகைக்கடையில் கூட்டம் போடும் நாளாக ஆகிவிட்டது. பொன்னேர் பூட்டுவதா? அப்படின்னா என்று கேட்கும் அளவுக்கு ஏர் பூட்டி உழுவது என்பதே மறந்தும் போய்விட்டது. எவ்வளவு இழந்து வருகிறோம்?? :(((((((((( --Geetha Sambasivam 08:08, 17 ஜூலை 2011 (UTC) |