அன்றொரு நாள்: ஜூலை 11: 11 நிமிடங்கள்.

மரபு விக்கி இருந்து

Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:59, 11 ஜூலை 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான்

                                                                                                                
Innamburan768.jpg


கஃபூர் என்னை தள்ளிவிட்டான்! அவனுடைய வாப்பா ஜனாப் மஜீத்கான் ‘நீயும் கறி சாப்பிடு ராஜூ. பலம் வரும்’ என்று சொல்லி சிரித்தார். நான் முறைத்தேன். வயது மூன்று இருக்கலாம். அதற்கு மேல் நினைவில்லை.


கண் கலங்க வந்த அப்பா, பிருத்வி ராஜ் கபூரின் ‘படோசி’ சினிமாவை பற்றி சொன்னார். மதகின் வெளிப்புறம் சாய்ந்த நிலையில் ஹிந்து-முஸ்லீம் அண்டை வீட்டுக்காரர்கள், சடலமாக. சூழ்ச்சி செய்தது ஆங்கிலேயன் என்று அப்பா சொன்னதாக நினைவு. அப்பா ஏன் கலங்கினார்? ஆப்த நண்பன் மஜீத்கானிடம் துக்கம் விஜாரித்து விட்டு வந்திருந்தார். வீட்டிற்குள் போகக்கூட அனுமதியில்லை. வைசூரியில் அவரது குழந்தைகள் மாண்டு போயினர். எந்த குழந்தை? நினைவில் இல்லை. கஃபூரை பிறகு பார்க்கவும் இல்லை. என்ன வாழ்க்கை இது?


தாயாதி சண்டை கொடிது என்பர். அண்ணன் - தம்பி அடிச்சுண்டா ஆகாயமே கவுந்துடும்டா என்பாள் அந்த நூத்துக்கிழவி. அந்த மாதிரி தான் இருக்கு, இந்த இந்தோ-பாகிஸ்தான் உரைசல். தீவிர வாதம் என்ற சொல்லே தப்பு. தீவிரம் ஒரு வாதம் ஆகலாமோ? பயங்கரம் ஒரு வாதம் ஆகலாமோ? இரண்டுமே அநியாயம், அட்டூழியம், அதர்மம். அநாகரீகம், அசிங்கம். ஆபத்பாந்தவா! நீ தான் இந்த பூலோகத்தை ரக்ஷிக்கணும்.


ஐயா! ஹிந்துக்களுக்கு ‘ஓம்’ எப்படி தாரகமந்திரமோ, அதே மாதிரி ‘ரஹம்’ ஒரு இஸ்லாமிய தாரகமந்திரமையா. அதற்கு ‘கருணை’ என்று பொருள் ஐயா! மிகவும் இக்கட்டான நிலையில், பகையும், புகைச்சலும் பேயாட்டம் ஆடக்கூடிய வேளையில், ஒரு ஹிந்துவும், ஒரு இஸ்லாமியரும் ஆரத்தழுவிய நிகழ்வு ஒன்று உண்டு. தருணம் வரும்போது ( அதாவது, வந்தால்? ஒத்தரை தவிர யாராவது படித்தால் தானே, எழுத கை வரும்?) சொல்கிறேன். திசை மாறவேண்டாம். பார்த்தீர்களா? எனக்குள்ளேயே நானே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்! அது போகட்டும்.


ஜூலை, 11, 2006: பதினோறு நிமிடங்களில்: 18 24/கார்; 18 24/பாந்த்ரா;18 25; ஜோகேஷ்வரி; 18 26: மாஹீம்: 18 9: மீரா ரோட்; 18 30: மாதுங்கா: 18 35: போரிவிலி => விரைந்தோடும் லோக்கல் ரயில்களில் ஐந்து குண்டுகள்; ஸ்டேஷன்களில் இரண்டு. 210 பயணிகள் கொலை.714 படுகாயம்.


இதே மும்பையில் மார்ச் 1993ல் 13 வெடிகுண்டுக்கள் பல இடங்களில் வடித்து 250 மக்கள் கொலை. கோவையில் ஃபெப்ரவரி 1998ல் 33 பேர் கொலை. ஜூலை 11, 2006 குண்டுவெடிப்புக்கு லஷ்கர் ஏ காஹ்ஹர் என்ற தீவிர அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.


அன்றிரவே ரயில்வே தன் பணியை தொடங்கியது. பொழுது விடிந்ததும், ஊழியர்களும், மாணவர்களும் ரயிலை பிடிக்க, வழக்கம் போல் ஓடினர். இருந்தும், நூற்றுக்கணக்கானவர்கள், ரேகை படிந்த நெற்றியும், வாடிய முகமும் ஆக, தொலைந்த உறவினர்களையும், நண்பர்களையும், தேடி, தேடி, அலைந்தனர். சவக்கிடங்குகளில் கிடந்த உருக்குலைந்த சடலங்களின் சட்டையில் சலவைக்குறி, உடைந்த பல், கைவளை, கால் கொலுசு என்றெல்லாம், தொட்டு, தொட்டு, தேடினர். உணர்ச்சி மரத்துப்போய், இயந்திரமாக, நடை பிணமாக, இயங்கியவர்களை கண்டு, மற்றவர்கள் குரலெடுத்து அழுதார்கள்.


குருதி வெள்ளப்படங்களை போட மனம் வரவில்லை. ரத்ததானம் வாங்கும் போது, இனமும், ஜாதியும், குலமும், கோத்திரமுமா கேட்கிறார்கள், இந்த மனித ஜந்துக்கள்? ஒரு மனித நேயப்படம் போதுமடா, சாமி!


இன்னம்பூரான்

11 07 2011







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:55, 11 ஜூலை 2011 (UTC)








பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 11 ஜூலை 2011, 10:59 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,065 முறைகள் அணுகப்பட்டது.