மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 10

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:49, 6 ஜூலை 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீ உன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்= இங்கே பகவானின் குழந்தைகளாக ஆண்டாள் தங்களை முன்னிறுத்துகிறாள். அப்பா, அம்மா நம்மைக் கவனிக்காமல் தூங்கினால் நாம எல்லாம் என்ன சொல்வோம்? எங்களைக் கவனிக்காமல் தூங்கறீங்களேனு கேட்க மாட்டோமா?? இங்கேயும் கண்ணனின் அநுகிரஹம் வேண்டுமெனில் அதற்கு முன்னார் தாயார் ஆன நப்பின்னைப் பிராட்டியின் அநுகிரஹம் தேவை. அவள் உடனே வந்து பக்தர்களுக்குத் தன் கருணா கடாக்ஷத்தைத் தரச் சித்தமாய் இருக்கிறாள் தான். ஆனால் இங்கே இருவருக்கும், நீ முந்தி, நான் முந்தி எனப்போட்டி வந்துவிடுகிறது போல! கண்ணன் அவளை எழுந்திருக்கவிடாமல் அவள் தோள்களைப் பற்றி அங்கேயே நிறுத்திவிட்டுத் தானே குழந்தை போலாகிறான். இங்கே கொங்கைகள் என மார்பகத்தைச் சுட்டி இருப்பது, தாயினும் பரிந்தூட்டும் அன்னையின் பெருமையைச் சுட்டுவதற்கே அன்றி வேறொரு பொருளில் அல்ல. ஆகவே கவனமுடன் பொருள் கொள்ளவேண்டும்.

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் = அழகாய்க் குத்துவிளக்கு முத்துப் போல் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்க தந்தத்தினால் ஆன நான்கு கால்கள் பொருத்திய கட்டிலில்

மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்= மெத் மெத்தென்ற பஞ்சால் நிரப்பப் பட்ட பட்டு மெத்தை போட்ட சயனத்தின் மேலே ஏறிப் படுத்துக்கொண்டு

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா!= அழகான மணம் பொருந்திய மலர்களைச் சூடிய நீண்ட கூந்தல் உடைய நப்பின்னைப் பிராட்டியின் மார்பின் மேல் படுத்துக்கொண்டு அவளை எழுந்திருக்கவிடாமல் செய்து கொண்டிருக்கும் தாமரை மலர்கள் அணிந்த மார்பை உடைய கண்ணனே!

வாய் திறவாய்= வாயைத் திறக்கமாட்டாயா?

மைத்தடங்கண்ணினாய்= அழகாய் மை எழுதப் பட்ட விழிகளால் உன் பார்வை ஒன்றாலேயே செய்யவேண்டிய கருணையைச் செய்யாமல் இருக்கிறாயே அம்மா!

நீ உன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்= தாயே என்ன இது?? நீயே எழுந்து வந்து எங்களுக்கு அனுகிரஹம் செய்வாய் என நாங்கள் உன்னை வேண்டிக் காத்திருக்க நீயோ உன் மணாளன் ஆன அந்தப்பரம்பொருளையும் எழுந்திருக்க விடாமல் இருக்கின்றாயே? அம்மா என்ன இது? உன் கடைக்கண் பார்வையால் எங்களுக்கும் உன் கருணா கடாக்ஷம் கிட்டச் செய்வாய்!

எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!= தாயே நீ உன் மணாளனைப் பிரிந்துவிடுவாய் என நினைக்கிறாயா? இல்லை அம்மா, இல்லை, நீயும் அவனும் சேர்ந்து வந்தே எங்களுக்கு வேண்டிய அநுகிரஹம் செய்யவேண்டும். உன்னிடம் சரணாகதி என நாங்கள் வந்தபின்னரும் எங்களுக்குப் பிரியமானதையே நீ செய்வாய் என்றல்லவோ நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் உங்கள் இருவரின் குழந்தைகள் அன்றோ?

இங்கே ஆண்டாள் பகவானை மட்டுமின்றித் தாயாரின் கருணா கடாக்ஷமும் வேண்டும் எனச் சொல்கிறாள்.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!
செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!
உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!= கண்ணன் தனக்கென வாழாதவன், பிறர்க்கு அருளும்பொருட்டே தோன்றிய பூர்ணாவதாரம் கண்ணனுடைய அவதாரம். அவனோ முப்பத்து மூன்று தேவாதி தேவர்கள் கஷ்டப்படும்போதெல்லாம், அவர்களுக்குத் தீங்கு நேராமல் காக்கும் பொருட்டுச் செல்வதையே தன் தொழிலாய்க் கொண்டிருக்கிறான். அரக்கர்களுக்கும் தேவர்களுக்கும் நடக்கும் போரில் இவனே முன்னின்று அரக்கர்களை ஒழிப்பதைத் தன் கடமையாய் கொண்டிருக்கிறாய். இத்தகைய கஷ்டத்தை ஓடி ஓடி வந்து ஏற்கும் பரமாத்மாவே, எங்கள் துயர் தீர்க்க இப்போது நீ எழுந்து வரமாட்டாயா?? இங்கே பரமாத்மா துயில்கின்றான், அவனை எழுப்ப இத்தனை பாடா என்றெல்லாம் எண்ணினோமானால் அது இந்தப் புற உலகில் நாம் தினசரி தூங்கும் தூக்கத்தைக் குறிப்பதாய் அமையும். ஆண்டாள் கூறுவதோ நம் மனம் விழித்துக்கொண்டதையும், அது பரமாத்மாவோடு ஒன்றுபடக் காத்திருப்பதையும், பக்தியாகிய பொய்கையில் முழுகி நீராடி, மனம் முழுதும் தூய்மையான எண்ணங்களோடு பகவத் பக்தி ஒன்றே குறியாக வந்திருப்பதையும் குறிக்கும். தங்களை ஆட்கொள்ளுமாறு கேட்பதுவே துயில் எழுப்புவது என்ற பொருளில் ஆண்டாள் கூறுகிறாள்.


செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!= செப்பம் என்பது இங்கே பரமாத்மாவின் பாரபட்சம் பார்க்காத தன்மையைக் குறிக்கும். அவனுடைய ராஜ்ஜியத்தில் ஏழை, பணக்காரர் என்பதோ கீழோர், மேலோர் என்பதோ கிடையாது. அவனுக்குத் தேவையானது பரிபூரண அன்பைச் செலுத்தும் பக்தர்களே. ஆகவே அவனுக்கு எவரிடமும் எந்தவிதமான வேறுபாடுகளையும் காட்டத் தெரியாது என்கிறாள். திறல் இங்கே வெற்றியைக் குறிக்கும். மேன்மேலும் வெற்றி அடைந்தவன் பரம்பொருள். அவன் அனைத்தையும் கடந்தவன் என்றாலும் பக்தர்களின் மனத்தைத் தன்பால் ஈர்த்து அவர்களை ஆட்கொள்கிறானே. அடுத்து வெப்பம் கொடுக்கும் விமலா என அழைக்கிறாள். காக்கும் அவனே சிலசமயம் சிக்ஷிக்கவும் செய்கிறான். தண்டிக்கவும் வேண்டி இருக்கிறதே. பிரஹலாதனுக்காக நரசிம்மமாய் வந்து ஹிரண்யனைத் தண்டித்தான். மஹாபலியைத் தண்டிக்க இஷ்டமில்லாமல் அவனைச் சிரஞ்சீவியாக்கினான். அதே பரசுராமனாக வந்து க்ஷத்ரிய குலத்தையே பூண்டோடு அழித்தான். ஸ்ரீராமனாக வந்து பல அரக்கர்களையும், அனைத்துக்கும் மேல் ராவணனையும் சம்ஹரித்தான். அதே சமயம் அதே ராவணனை ஆயுதம் இன்றி இருந்தபோது, "இன்று போய் நாளை வா!" என்று சலுகையும் காட்டினான். இப்படி அவனால் தேவைப்படும் நேரம் கோபம் கொண்டு தண்டிக்கவும் முடியும், அதே சமயம் தன் பக்தர்களுக்குக் குற்றங்களை மன்னித்து ஆட்கொள்ளவும் தெரியும்.

செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!= எழுப்பி எழுப்பிப் பார்த்தோம் அம்மா, நப்பின்னைப் பிராட்டியே, திருவே, லக்ஷ்மிதேவியே, உன் கணவன் எழுந்திருக்கவில்லை. ஆஹா, என்ன காரணம் என யோசித்தோம், நீ அல்லவோ முதலில் எழுந்து உன் திருமுகத்தைக் காட்டி அவனை ஆசுவாசப் படுத்தி எழுப்பி அனுப்பவேண்டும். முதலில் நீ துயிலில் இருந்து எழுந்திரு அம்மா. பரமாத்மாவிடம் நேரிடையாக விண்ணப்பம் வைத்தும் பலன் இல்லை என்பதால் தாயாரிடம் விண்ணப்பம் வைக்கிறாள் ஆண்டாள். அம்மா, தாயே, உன் கணவனை நீ இன்முகம் காட்டி எழுப்பு என்கிறாள்.

பொதுவாய்க் கணவன் காலை எழுந்ததும் மனைவியின் முகத்தைப் பார்ப்பது நன்மை பயக்கும் என்பார்கள். ஆனால் அந்த நேரமும் மனைவியும் தூங்கி வழிந்த முகத்தோடு இருந்தால் எப்படி?? அதனால் தான் நப்பின்னையை முதலில் எழுப்பித் தன்னைச் சீர் செய்து கொண்டு, அவள் கணவனை எழுப்பி அவனை விசிறியால் விசிறி ஆசுவாசப் படுத்தித் தன் முகமாகிய கண்ணாடியில் அவனைப் பார்க்க வைத்து, அவனுக்கு இன்முகம் காட்டி அனுப்பச் சொல்கிறாள்.

உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!= கணவன் எழுந்ததும் மனைவி முகத்தைப் பார்த்தால் மட்டும் போதாது. மனைவி முகம் இன்முகமாயும் இருக்கவேண்டும். அதுவும் தூங்கும் கணவனை எழுப்பும்போது மனைவிக்குப் பொறுமை வேண்டுமே. ஆகவே அவள் இன்முகத்தோடு இருந்தால் தான். அப்போது தான் அதன் பிரதிபலிப்பு கணவனிடத்தில் தெரியும். மனைவியின் இதயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி கணவன் அல்லவா? கண்ணாடி உள்ளதை உள்ளபடி காட்டும் அல்லவா?? இல்லாததைக் காட்டாது. ஆகையால் நீ உன் இன்முகத்தைக் காட்டி உன் மணாளனை எங்களோடு அனுப்பி வைத்து எங்களுக்கும் முக்தியைக் கொடுப்பாய். அவன் வந்து எங்களை ஆட்கொள்ளுமாறு செய்வாய் என தாயாரிடம் வேண்டுகிறாள். இன்னொரு பொருளில் விசிறி தானம் செய்வார்கள், கண்ணாடியும் வெற்றிலை , பாக்கு, மஞ்சளோடு வைத்துக்கொடுக்கப் படும். அதனால் நோன்பிற்கு வேண்டிய பொருட்களைக் கேட்டுப் பெற்றாள் என்றும் கூறலாம்.


--Geetha Sambasivam 09:49, 6 ஜூலை 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam