தலித்துகளும் தமிழ் இலக்கியமும் - 7மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:29, 7 ஜூன் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் வெங்கட் சாமிநாதன்
இமையம் முற்றிலும் வேறான மனிதர், எழுத்தாளர். தலித் சித்தாந்தத்தை, தனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது போல அதை முற்றிலும் மறுப்பவர். அவர் ஒரு சாதாரண ஏழை பள்ளி வாத்தியாராக இருந்தது, சித்தாந்திகளுக்கு மிகவும் சௌகரியமாகப் போயிற்று. தம் சித்தாந்தத் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களுக்கு சரியான குறியாக இமையம் வாய்த் தார் என்று தான் சொல்லவேண்டும். இமையத்தை தம் சித்தாந்தத் தாக்குதல்களுக்கு இரையாக்கினால் அது ஒரு சிறந்த முன்னுதாரணமாகி, எட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற தலித் எழுத்தாளர்களையும் சித்தாந்தத்தைச் சொல்லி மிரட்ட சௌகரியமாக இருக்குமே, அவர்களும் . பயந்து தானே அடங்கிப் போவார்களே.. சொல்வதைக் கேட்காது தம் இஷ்டத்துக்கு எழுதிக் கொண்டிருக்கும் தலித் எழுத்தாளர்களிலேயே இமையம் தான் அதிகம் முரண்டு பிடிப்பவர். தன் சுதந்திரத்தை உரக்கக் கூவி அறிவிப்பவர். பூமணி போல, சோ. தருமன் போல இவருமல்லவா, தலித் பட்டைகளெல்லாம் எனக்குத் தேவை இல்லை. நான் தலித் எழுத்தாளர் இல்லை என்று போகுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார் என்று அவர்களுக்குக் கோபம். இது சுத்த அடங்காபிடாரித்தனம் இல்லையா? கோவேறு கழுதைகள் அவரது முதல் நாவல். நாவல் என்னவோ தலித்துகளின் அவல வாழ்க்கையைப் பற்றியது தான். இங்கு அவலப்படுவது ஒரு பிரிவு தலித் கிறித்துவர்கள். அவர்கள் அடிமை சேவகம் செய்வது அவர்களை விட சற்று பொருளாதார முன்னேற்றம் அடைந்து விட்ட இன்னொரு பிரிவு தலித் குடும்பங்களுக்கு. அவர்கள் வாழ்வது அரசு குடியிருப்புகளில். . கொஞ்சம் படித்து அரசு உத்யோகத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். குடிசைகளில் வாழும் கிறித்துவ தலித்துகள் அரசு குடியிருப்புகளில் வாழும் தலித்துகளின் வீட்டு துணிகளை சலவை செய்து கொடுப்பவர்கள்.
இரத்தின கரிகாலன் தலித் இல்லை தான். ஆனாலும் அவரும் தலித் மேடையில் மிகுந்த ஆர்வத்துடன் அமர்ந்து கொள்கிறார். அவருக்கு வரவேற்பும் மிகுந்த உற்சாகத்துடன் தரப்படுகிறது. அது எப்படியோ போகட்டும். அவரது கவிதைகள் ஏதோ சர்ச்சில் மன்னிப்புக்கோரும் சடங்காக மண்டியிட்டு இது காறும் தானும் தன் முன்னோர்களும் தலித்து மக்களுக்கு இழைத்து விட்ட பாவங்களையெல்லாம் மன்னித்து பாப விமோசனம் கேட்கும் பாவனை கொண்டவையாக இருக்கின்றன. அவர் தலித்துகளுக்கு ஒரு படியோ இரண்டு படியோ மேல் தட்டு சாதி என்று எண்ணுகிறேன் அந்த மன்னிப்புக் கோரல் தன் சாதியினரது மட்டுமல்லாமல் எல்லா உயர் சாதியினரையும் குறித்தது என்பதால், இத்தகைய சுய விமரிசனம், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரகள் அவ்வப்போது வலியுறுத்துவது போல, தாம் எத்தகைய தவறுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று தீவிரமாக நம்பும் தலித் சித்தாந்திகளுக்கும் தேவையான ஒன்று தான்.
பிறகு நாவல் அழகிரி என்னும் செருப்பு தைப்பவனின் வாழ்க்கையைச் சொல்கிறது. அழகிரிக்கு இன்னொரு கிராமத்திலிருந்து அழைப்பு வரவே அங்கு செல்கிறான். அழகிரி மிகவும் அடக்கமானவன். அமைதியான குணம் கொண்டவன். அவனுக்கு என்ன இன்னல் வந்தாலும், யாரென்ன கெடுதல் செய்தாலும், இது தான் தனக்கு விதிக்கப்பட்டது என்று ஏற்று அமைதி அடைபவன். தணிந்து போவதையும் ஒரு புன்சிரிப்போடு, கௌரவத்தோடு ஏற்பவன். கருப்பன் என்று ஒரு அநாதைச் சிறுவன் அவனை வந்தடைகிறான். அந்தச் சிறுவனையும் அழகிரி தன் அணைப்பில் பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறான். கருப்பன் ஒரு சிறுவன் தான். அனாதை தான். பலமற்றவன் தான். ஆனாலும், அவனை வந்து சேரும் துன்பங்களையெல்லாம் கிண்டலோடு, கவலையற்று சந்திப்பவன். எதுவும் அவனை நிலைகுலையச்செய்வதில்லை. மாறாக, அவனது கேலியும், பயமின்மையும் மற்றவர்களைத்தான் நிலைகுலையச் செய்யும். ஒரு தலித் இப்படித்தான் தனக்கு விதிக்கப்பட்டுவிட்ட அவல வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டி யிருக்கிறது. கருப்பனின் குணச்சித்திரம் ஒரு ஆர்க்கிடைப் ஒரு விதி விலக்காக, வரவேற்கத்தக்க ஒரு ஆச்சரியமாக, கருப்பன் தலித் சித்தாந்திகளுக்கும் பிடித்துப் போய்விட்டான். அவனுடைய கிண்டல் தான் அவனிடமிருக்கும் பலமான ஆயுதமும். அரசியல் போராட்டத்துக்கான ஆயுதம். தன் எதிரிகளை முறியடிக்கும் ரகசிய ஆயுதம். என்று தலித் சித்தாந்திகள் மறுபடியும் ஒரு விதி விலக்காக சரியாகச் சொல்கிறார்கள். நிறைய தலித் எழுத்துக்களில் கருப்பன் என்னும் ஆர்க்கிடைப்பை வேறு வேறு பெயர்களில், சற்று மாறிய சாயல்களில் சற்று மாறிய குணச் சித்திரத்தில் காணலாம்,. ஆனால் எல்லாரும் கருப்பன்கள் தாம்.
பூமணியும் கூட மிக அமைதியான, சாதுவான, எதற்கும் கவலைப் படாத, மனிதர். தலித் முகாம்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் எனபதற்கெல்லாம் அவர் கவலைப் படுவதில்லை. பதிலும் சொல்வதில்லை. ஆனால் பூமணியை யாரும் அலட்சியம் செய்துவிட முடியாது. கொஞ்சம் வேண்டா வெறுப்புடன் தான், தவிர்க்கமுடியாது, அவரை அங்கீகரிக்கிறார்கள் சித்தாந்திகளும். ஆனால் பூமணிக்குரிய அளவில் அல்ல, முழுமையாகவும் அல்ல.
சோ தருமனும் அப்படித்தான். அவருடைய ஆரம்ப நாட்கள் தீப்பெட்டி, பட்டாசு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் சொற்ப சம்பளத்துக்கு நாள் முழுதும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் சிறுவர்களிடையே கழிந்தன. அச்சிறுவர்களீண் ஏழ்மை சுமத்திய வாழ்க்கை அது. சோ. தருமனின் நசுக்கம் என்ற சிறு கதை இச்சிறுவர்கள் ஒரு இரவில் பட்டாசு வெடித்துச் சாவதைச் சொல்லும் சிறுகதை கதா பரிசு பெற்று மிகப் பரவலான கவனம் பெற்றது. அடுத்ததாக அவரது நாவல் தூர்வை நம் நினைவுகள் மறந்த ஒரு பழங்காலத்திய தலித் விவசாயிகளின் வாழ்க்கையைச் சொல்வது. வாய் மொழி மரபில் கதை சொல்வது போல, துண்டு துண்டான காட்சிகளையும், சம்பவங்களையும் பாத்திரங்களையும் நூல் கோர்த்தாற்போல் தருமன் அக்கால வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறார். நம் பெரியோர்களிடம் கேட்கும் வாய்மொழி மரபு கதை போலவே இதுவும் ஒளிவு மறைவு, பூடகமாகச் சொல்வதை பச்சையாகவும் வெளிப்படையாகவும் எவ்வித தயக்கமுமின்றி சொல்லிச் செல்கிறார் தருமன். அதுவே அந்த வாழ்க்கையின் வண்ணத்தையும் சுவாரஸ்யத்தையும் கூட்டிச் சொல்கிறது. பூமணியைப் போலவே சோ தருமனும் தலித் லேபிளை எவ்வித தயக்கமுமின்றி மறுப்பவர். மறுபடியும் பூமணிக்குச் சொன்னது போலவே சோ தருமனும் எவ்விதத்திலும் ஒதுக்கி விடக் கூடியவரும் இல்லை.
வழக்கமான இடமின்மையையே காரணமாகச் சொல்ல வேண்டும், நான் இந்த மலரில் சேர்க்க விரும்பி ஆனால் சேர்க்க முடியாது போன சில விஷயங்களுக்கு. இக்கட்டுரையின் ஆரம்பத்திலிருந்து நான் சர்ச்சித்திருக்கும் ஆழ்வார்கள், நாயன்மார்கள், குரு பரம்பரைப் பிரபாவம், நந்தன் கதை, பெரிய புராணம் இத்யாதியிலிருந்து சர்ச்சிக்கப்பட்ட பகுதிகளை மேற்கோளாகத் தர விரும்பினேன். புதுமைப் பித்தனும், பாரதியாரும் தலித் பிரசினையை மையமாகக் கொண்டு எழுதிய கதைகளும் என் மனத்தில் இருந்தன. இது மட்டுமல்லாமல், நாடகத் துறையில் தலித் பிரசினையை முன் வைத்து இயங்கும் புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் ஜீவா, முனைவர் குணசேகரனின் நாடகம் பற்றிப் பேசியிருக்கலாம். குணசேகரனின் நாடகத்திலிருந்து சில பகுதிகளைத் தந்திருக்கலாம். அத்தோடு தலித் சிற்பிகளின், ஒவியர்களின் படைப்புகளும் கூட இம்மலரை அலங்கரிக்கச் செய்யலாம் என்று எண்ணியிருந்தேன். இவையெல்லாம் சேர்ந்தால் இம்மலர் மிகவும் அளவு மீறிப் பெரிதாகியிருக்கும். எனவே அவையெல்லாம் சாத்தியமாகவில்லை. எது வரை சாத்தியம் என்று ஒரு சமரசத்திற்கு வரவேண்டியதாயிற்று. எது சாத்தியமாயிற்றோ அவை பின் வரும் பக்கங்களில்
Introduction
Poems Ila Murugu – Poisoned shadows Imayam - You and I, The Rattle and the Cow that changed hands. Palamalai - Seeking Advice, Self Respect, Smiling stupidly, Paraveeran
Short stories Bama – Annaachi Perumal Murugan – The Mound Vizhi Pa Idaya Vendan – Livelihood Unjai Rajan – Anger Pavannan – The Well The Writers Speak Imayam .- The Dalit issues here Cho Dharuman – What is said and What ought to have been said Perumal Murugan – Expression of Distress Bama – Dalit Literature Karikalan – For a Time when Distances get less… T.Palamalai – About Myself and my poetic concerns) (Indian Literature No. 193 – Sept. Oct. 1999)
Novels ( excerpts ) Imayam – The Mules Sivakami – Anandaayi Cho Dharuman- Thoorvai Poomani – And Then (Indian Literature No. 201 Jan-Feb, 2001) (பின் குறிப்பு): தலித் எழுத்தாளர்கள் தம் அனுபவத்தை எழுதுவது தான் தலித் இலக்கியமாககும் மற்றவர்களது மனிதாபிமானும் எட்டி நின்ற பார்வையுமே ஆகும் என்று எழுதியிருந்தேன். இந்த பாகுபாடு ஒரு இடைப்பட்ட கால கட்டத்துக்கே பொருந்துவதாகும். பின்னர் தலித் என்ற அடைமொழி அழிந்து பொது இலக்கிய பிரவாஹத்தில் அவ்வெழுத்துக்கள் சேர்ந்து கொள்ளும், அதில் பெருமாள் முருகனும் சோ தருமனும், இலக்கியாசிரியர்களாகவே அடையாளம் காணப்படுவார்கள். இந்த விளக்கத்தை தலித்துகள் எழுதுவது தான் தலித் இலக்கியமா? என்று கட்டுரையின் ஆரம்பத்தில் கேட்டவரகளுக்கு கடைசியில் தரலாம் என்று நினைத்தேன். இலக்கியாசிரியர்கள் தம்மை தலித் என்று எண்ணி எழுதுவதில்லை. அவர்கள் வாழ்க்கை தலித் வாழ்க்கையானதால் அது எழுதப்படுகிறது. அப்படித்தான் சோ தருமன், பூமணி, இமையம் எல்லாம் தம்மை தலித் என்று அடையாளப்படுத்தப் படுவதை விரும்புவதில்லை. – வெங்கட் சாமிநாதன்.
--Ksubashini 17:29, 7 ஜூன் 2011 (UTC) |