அண்ணன் பெருமாள் திருக்கோவில் - நாகப்பட்டினம்மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:39, 10 மே 2011 அன்றிருந்தவாரான திருத்தம் அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோவில்.
மூலவர் : அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன் பாடியவர்கள்: திருமங்கையாழ்வார் கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய் நண்ணார்முனை வென்றி கொள்வார் மன்னுநாங்கூர் திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள் அண்ணா! அடியேன் இடரைக் களையாயே. -திருமங்கையாழ்வார் தல சிறப்பு: மணவாள மாமுனிகளுக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம். 12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத்தான் "அண்ணா' என அழைத்து பாடியுள்ளார். ஒன்று திருப்பதியில் உள்ள பெருமாள். மற்றொன்று இத்தல பெருமாள். இதில் திருப்பதிக்கு முன்பே இத்தலத்து பெருமாளை "அண்ணா' என பாடியதால் இங்குள்ள பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு "அண்ணன்' ஆகிவிடுகிறார். எனவேதான் இங்குள்ள சீனிவாசப்பெருமாளின் திருநாமம் "அண்ணன் பெருமாள்' என்றும் இத்தலம் "அண்ணன் கோயில்' என்றும் வழங்கப்படுகிறது. திருப்பதியைப்போன்றே இத்தலத்திலும் பெருமாளின் திருநாமம் "சீனிவாசன்', தாயாரின் திருநாமம் "அலர்மேல்மங்கை'. திருமங்கையாழ்வார் இத்தலத்தை பூலோக வைகுண்டம் என்று பாடியுள்ளார் ஆழ்வாராக மாற்றிய அம்மன்: இங்குள்ள குளத்தில் குமுத மலர்களை பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அப்படி வந்த போது ஒரு மனிதனின் பார்வை பட்டு இவர்களில் குமுதவல்லி தேவ லோகம் செல்லும் சக்தியை இழக்கிறாள். இதனை கேள்விப்பட்ட நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கை இவளை திருமணம் செய்ய விரும்புகிறார். குமுதவல்லி தன்னை திருமணம் செய்ய பல நிபந்தனைகள் விதிக்கிறாள். இவரும் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றினார். கடைசியில் வைணவ அடியார்களுக்கு அன்னம் பாலிக்கும் நற்செயலில் ஈடுபடச்செய்தார். இதனையறிந்த பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து "திரு' மந்திரத்தை உபதேசித்து ஆழ்வாராக மாற்றினார். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறியதால் "திருமங்கை ஆழ்வார்' என அழைக்கப்பட்டார். குமுதவல்லி நாச்சியார் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தல வரலாறு: மனத்தூய்மை மிகவும் அவசியம் - ராமானுஜர். இறைவனை மகிழ்விப்பதை விட அடியார்களை மகிழ்விப்பது சிறந்தது; இறைவனிடம் செய்யும் குற்றங்களை விட அடியார்களிடம் செய்யும் குற்றம் மிகவும் கொடியதாகும். இறை வடிவமாக வழிபடப் பெறும் திருவுருவங்களைக் கல், மரம் என்பதும், ஆசாரியனைச் சாதாரண மனிதன் என்பதும், அடியார்களை பழித்துப் பேசுவதும் , துளசித் தீர்த்தத்தை வெறும் நீர் என்பதும் கூடாதவையாகும். பிரபத்தி நெறியில் எம்பெருமானைச் சரணாகதி அடைந்து கடவுள் பக்தியில் ஆழ்ந்திருக்கும் அடியவர்களோடு இடையறாது பேசியும் பழகியும் வர வேண்டும். நீங்கள் எந்த கடமையைச் செய்வதாக இருந்தாலும் உங்கள் நன்மையை மட்டுமே கருதாமல் இறைவனின் திருவுள்ளம் உவப்பதற்காகவே செய்யுங்கள். நாள்தோறும் சிறிது நேரமாவது மனத்தூய்மையுடனும், நம்பிக்கையுடனும் திருவாய்மொழி முதலான நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி மகிழுங்கள். எப்போதும் பிறர் மீது குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பவர்களோடு பேசுதல் கூடாது. பக்தியின்றி பொறி புலன்கள் வழிச் செல்லும் வஞ்சகர்களோடு பழகுதல் கூடாது.
பவள சங்கரி திருநாவுக்கரசு தேதி - 22 - 02 - 2011 நன்றி - தின மலர். |

