நன்மக்களைப் பெறப்போகும் மகராசிகளே!மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:30, 18 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் கொஞ்சம் கவனியுங்கள்!
ஸ்வர்ணா குழந்தை பிறக்கும் முன் உள்ள சில சம்பிரதாயங்களையும், குழந்தை பிறந்த பின்னர் உள்ள சில சம்பிரதாயங்களையும் கேட்டிருந்தார். செல்வமுரளியும் குழந்தைக்கும், தாய்க்கும் உள்ள வீட்டு மருத்துவ முறைகள் குறித்து சமீபத்தில் குழந்தை பெற்றிருக்கும் அக்காவுக்காக அடிக்கடி கேட்பார். ஆகவே சில மருத்துவக்குறிப்புகள் இங்கே கொடுக்கப் படுகின்றன. இவை பாரம்பரிய உணவுகள் என்ற பகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
கர்ப்பம் உறுதியானதும் தாய்க்கு மசக்கை ஏற்படும். சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, எழுந்திருக்க முடியாமல் எப்போதும் தூக்கம் என இருக்கும். சிலருக்கு எதுவும் இருக்காது. சிலரின் வாந்தி கட்டுப்படுத்த முடியாமல் போய் மருத்துவமனையில் சேர்த்து உடலுக்கு க்ளூகோஸ் ஏற்றும் அளவுக்குப் போய் விடும். அவர்களுக்கு ஏற்ற கை மருந்து மாதுளம்பழம்.
மாதுளம்பழத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது சாறு எடுத்துக் குடிக்கலாம். தோலையும் வீணாக்காமல் அரைத்து மோரில் கலக்கிக் குடித்தால் வயிற்றுப் பிரட்டல், தலை சுற்றல் குறையும்.ஆயுர்வேத மருந்துகளில் இந்த மாதுளையின் ரசத்தோடு வேறு சில மருந்துகளையும் சேர்த்து ஒரு டானிக்காகக் கொடுப்பார்கள். அதையும் தினம் இரு வேளைகள் ஒவ்வொரு டீ ஸ்பூன் சாப்பிடலாம். ஆல் பகோடா என்னும் ஒரு வகைப் புளிப்புப் பழமும் வாயில் அடக்கிக் கொள்ளலாம். எல்லாப் பழங்களையும் அப்படியே சாப்பிடுவது நன்மை தரும் என்றாலும் பழச்சாறு பிடிக்கிறது எனில் பழச்சாறாகக் குடிக்கலாம். ஒரு சிலர் அன்னாசி, பப்பாளி போன்ற பழங்களைத் தவிர்க்கின்றனர். இதனால் கர்ப்பம் கலையாது என மருத்துவ ரீதியாகச் சொன்னாலும் நூறு சதவிகிதம் பெண்கள் இதைத் தவிர்க்கின்றனர். வாய்க்கு ருசியாக ஏற்கப் படும் எந்த உணவையும் தாராளமாக உட்கொள்ளலாம்.
நாரத்தங்காய் சாதம் மசக்கையை ஓரளவு கட்டுப் படுத்தும். எலுமிச்சை சாதம் போலவே தான் இதன் தயாரிப்பும். எலுமிச்சை ரசம் சேர்ப்பதற்குப் பதிலாக நாரத்தை ரசம் சேர்க்கவேண்டும். நாரத்தங்காயைக்குழம்பாகப் பண்ணி வைத்துக்கொண்டும் சாப்பிடலாம்.
நல்ல ஜாதி நாரத்தங்காயைக் கழுவி நறுக்கிக் கொட்டைகளை நீக்கித் துண்டங்களாக்கிக் கொள்ளவேண்டும். அடுப்பில் கல்சட்டி அல்லது வெண்கல உருளி அல்லது வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், பச்சை மிளகாய், பெருங்காயம், கருகப்பிலை தாளிக்கவும். மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய நாரத்தங்காய்த் துண்டங்களை வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும், புளிக்கரைசலைச் சேர்த்து உப்பையும் சேர்க்கவும். நன்கு புளி வாசனை போக நாரத்தங்காய்த் துண்டங்கள் வேகும் வரை கொதிக்க விடவும். இறக்குகையில் வெல்லத்தைச் சேர்த்து ஒரு கொதி விட்டுக் கீழே இறக்கவும். சாதத்தோடும் சாப்பிடலாம், மோர் சாதம், கலந்த சாதம் போன்றவற்றிற்குத் தொட்டுக்கொள்ளவும் பயன்படுத்தலாம்.
அடுத்து வேப்பிலைக்கட்டி என்னும் நார்த்தை இலைப்பொடி: இதை வேப்பிலைக்கட்டி என்ற பெயரில் அழைத்தாலும் இது தயாரிக்கப் படுவது உண்மையில் எலுமிச்சை இலைகளிலும், நார்த்தை இலைகளிலுமே.
தேவையான பொருட்கள்: நாரத்தை இலைகள் இரண்டு பெரிய கிண்ணங்கள், எலுமிச்சை இலையும் சம அளவு. செடிகளிலிருந்தும் கொடிகளிலிருந்தும் பறித்துச் சுத்தம் செய்து நரம்பை நீக்கி வைத்துக்கொள்ளவும்.
மேலே சொன்ன அளவிற்குக் காரம் வேண்டுமெனில் 15 முதல் 20 மிளகாய் வற்றல், ஓமம் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னக் கட்டி அல்லது தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
மேலே சொன்ன சாமான்களை நன்கு வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். வாணலிச் சூட்டிலேயே நாரத்தை, எலுமிச்சை இலைகளைப் போட்டுக்கொண்டு சூடானதும், எல்லா சாமான்களையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். அல்லது இடித்தும் வைத்துக்கொள்ளலாம்.
இதைத் தவிரவும் சோம்பு வெறும் வாணலியில் வறுத்து நீர் விட்டுக் கொதிக்க வைத்தும் குடிக்கலாம். இதுவாந்தியைக் கட்டுப் படுத்தும். அதோடு சில சமயங்களில் ஏற்படும் பொய்யான வலியையும் கட்டுப் படுத்தும். ஐந்து மாதங்களுக்குள் வாந்தி கட்டுப்பாட்டில் வந்துவிடும். அதன் பின்னரும் உணவு உண்பதில் ஈடுபாடு இல்லை என்றாலோ, வாந்தி குறையவில்லை என்றாலோ மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. --Geetha Sambasivam 07:30, 18 ஏப்ரல் 2011 (UTC) |