அருள் தரும் அன்னை மாரி!மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:58, 6 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் அருள் தரும் அன்னை மாரி!
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா மாரியம்மனை, காவல் தெய்வமாக வழிபட்டாலும், மழையைக் கொடுக்கும் மாரி அன்னையல்லவா அவள்.பார்வதி தேவி மற்றும் துர்காதேவியரின் அம்சமாகவே கருதப்படும் அம்மன், பெரும்பாலும் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் என்று, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்ட்டிரம் போன்ற அனைத்து நாடுகளிலும் மாரியமன் , ரேணுகா தேவி, எல்லையம்மன், ஸ்ரீ சௌடேஸ்வரி தேவி, ஸ்ரீ தைலூரம்மா தேவி, மன்ச்சம்மா தேவி, சௌடம்மா தேவி போன்ற பல பெயர்களிலும் வழிபடப்படுகிறார். வழிபாட்டு முறைகள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகிறது.
மாரியம்மன் குறித்த பல விதமான கதைகள் பரவலாக உள்ளது. மதுரையை எரித்த கண்ணகி கூட மாரியம்மனின் அம்சம் என்று கூட சொல்வார்கள். மாரியம்மன் திருவிழாக்கள் பெரும்பாலும் கோடைக்காலங்களிலேயே கொண்டாடப்படுகிறது. கொளுத்தும் கோடையினால் வருகின்ற அம்மை போன்ற பல்வேறு நோய்களின் பிடியிலிருந்து தங்களைக்காப்பாற்ற வேண்டுமென்ற வேண்டுதலின் பேரில் அம்மனை குளிர்விக்கும் பொருட்டு புனித நீரில், மஞ்சள் போட்டு அதில் வேப்பிலையும் போட்டு அப்புனித நீரையும்,பாலையும் ஊற்றி குளிரச் செய்வது தொன்று தொட்ட வழக்கமாக இருந்து வருகிறது.
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சென்ற 15 ஆம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 19ம் தேதி மூன்று கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து மூன்று கோவில்களிலும், பக்தர்கள், குறிப்பாக பெண்கள் விரதமிருந்து, புனித நீராடி, பால், புனித நீர் ஊற்றி வழிபட்டனர். 23 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி நடந்தது. 24ம் தேதி மாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் 29ம் தேதி குண்டம் விழா நடந்தது. 30ம் தேதி சின்னமாரியம்மன் கோவிலில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அன்று காலை பொங்கல் விழாவும் நடந்தது. 31ம் தேதி மாலை 4 மணிக்கு தேர் வடம்பிடித்தலும், இரவு 9.30க்கு பெரியமாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலாவும் நடந்தது.
ஏப்ரல் 1ம் தேதி மாலை 4 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுத்து சின்ன மாரியம்மன் கோவில் நிலையம் சேர்க்கப்பட்டது. அன்று இரவு 10மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா நடந்தது.
2ம் தேதி காலை மஞ்சள் நீராட்டுடன் கம்பம் எடுக்கும் விழா நடந்தது. கோவில் கம்பத்திற்கு புனித நீர் ஊற்ற அன்றே கடைசி நாளான அன்று, அதிகாலை 3 மணி முதலே பெண்களும், ஆண்களும் அம்மன் அருள் வேண்டி பெரிய மாரியம்மன் கோவிலில் குவியத் தொடங்கினர். இறுதி நாளான இன்று அதி காலையிலிருந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்திற்கு நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர்.
மாலை 3 மணியளவில் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலிலிருந்து முதன் முதலாக கம்பம் எடுக்கப்பட்டு, சின்ன மாரியம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து இரு மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் மணிக்கூண்டு வழியாக ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, வழியாக பிரப்சாலை வந்தது. பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் எடுக்கப்பட்டு, மூன்று கம்பங்களும் ஊர்வலமாக ஈஸ்வரன் கோவிலை அடைந்தன. அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு, உப்பு, மிளகு ஆகியவற்றை தூவினர்.
பின்னர், பிரப்சாலை, மேட்டூர் சாலை, பஸ்ஸ்டாண்டு, சத்தி சாலை, மணிக்கூண்டு, அக்ரஹார வீதி வழியாக காரை வாய்க்காலுக்கு இரவு 7.30க்கு கம்பங்கள் சென்றடைந்தன. மூன்று கம்பங்களும் காரை வாய்க்காலில் விடப்பட்டன. ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள், பங்கேற்றனர் மக்கள் வெள்ளம் கரைபுரண்டது.
ஈரோடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு அண்டாக்களில் மஞ்சள் நீரை வைத்து , தெருவில் வாகனங்களிலும் மற்றும் நடந்து செல்வோரின் மீதும் மஞ்சள் நீரை ஊற்றினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி வந்து அன்னைக்கு நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். மேலும் பலர் பூக்கூடை [அக்கினிச் சட்டி] ஏந்தி வந்தும், பால் குடம் சுமந்து வந்தும் அன்னையின் அருள் வேண்டி குழுமியிருந்தனர். பல நிறுவனங்கள் சார்பாகவும், பக்தர்கள் தனிப்பட்ட முறையிலும், நீர் மோர் பந்தல் , கூழ் மற்றும் அன்னதானம் அளித்தும் அன்னையைக் குளிர வைத்தார்கள்.
பவள சங்கரி திருநாவுக்கரசு தேதி - 06/04/2011
-- |