பழமொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்மரபு விக்கி இருந்துதமிழ்த்தேனீ (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:58, 4 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் அன்புள்ள நண்பர்களே பழுத்த அனுபவம் வாய்ந்த பெரியவர்களால் ஒவ்வொரு அனுபவத்தின் வாயிலாகவும் அடிக்கடி உபயோகப் படுத்தப் படும் சொல் வழக்குகள் பழமொழிகள் என்று பெயர் பெற்றன. எவ்வளவு அருமையான பழமொழிகள், பல பெரியவர்கள் அவ்வப்போது பல அருமையான பழமொழிகளைச் சொல்லுகிறார்கள், இப்போது காலம் இருக்கும் இருப்பில், நவீன யுகத்தில்,விஞ்ஞான வளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் இந்தக்காலத்தில், பெரியவர்கள் சொல்லுவதையெல்லாம் யார் காது கொடுத்து கேட்கப் போகிறார்கள், என்கிற எண்ணம் தலை தூக்கினாலும், நல்லதை சொன்னால் எப்போதும் நம்மவர்கள் புரிந்து கொள்வார்கள், ஏற்றுக்கொள்வார்கள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையால் எழுந்த பக்குவத்தோடு எழுதுகிறேன் .
பழமொழி 1 " நடந்தால் நாடெங்கும் உறவு எந்த ஒரு விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்திலே மக்கள் ஒரு ஊர் விட்டு மற்றொரு ஊருக்குப் போக, அல்லது தாங்கள் போகவேண்டிய இடங்களுக்கு போய்ச்சேர நடந்து தான் செல்லவேண்டும் என்னும் கட்டாயத்தில் இருந்தனர். கால்நடை யாளர்களாகவே வாழ்ந்தனர்,அதற்குப் பிறகு தங்களின் தேவைகளை மனதில் கொண்டு உண்மையான கால்நடைகளாகிய குதிரை, மாடுகள், எருது, கழுதை போன்ற கால்நடைகளின் மேலேறி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். மன்னர்கள் ஆண்ட காலத்தில் முப்படைகளின் பிரிவில் யானைப்படை, குதிரைப்படை போன்றவை இருந்தாலும் எளிதில் ஊடுருவக் கூடிய காலாட்படையை மன்னர்கள் பெரிதும் நம்பினர். நாம் வாழும் இந்தப் ப்ரபஞ்சம் அடுத்த வினாடி என்ன நடக்கப் போகிறது என்றே நமக்குத் தெரியாமல் நம்மை எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறது, அதனால்தான் நாம் வாழக்கையில் ஆயிரம் ப்ரச்சனைகளை எதிர்கொண்டாலும் அவற்றிலிருந்து மீண்டு ஓரளவு இயல்பான, சுவாரஸ்யமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழமுடிகிறது. "நேற்று நடந்ததும் இன்று நடப்பதும் நாளை நடக்கப் போவதும்” அனைத்தும் நன்மைக்கே என்று தினமும் நடப்போர் சங்கம் ஒன்றிற்கு தட்டி வாசகமாய் நான் எழுதிக் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது....! நடகக வேண்டும், நல்லவை எல்லாம் நடக்கவேண்டும். நடப்பன எல்லாம் நன்மையாகவே நடக்கவேண்டும் என்று நம் மனது அடிக்கடி நினைக்கிறது, நடக்கும்....நிச்சயம் நடக்கும், நம்பிக்கைதானே வாழ்க்கை,எதாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம் என்பது பெரியோர் வாக்கு. ”நடந்தால் நாடெங்கும் உறவு” உண்மைதான் ...நடந்தே நாடெங்கும் உறவை ஏற்படுத்திக் கொண்ட பல பெரியோர்களின் அனுபவ பூர்வமான உண்மை வாசகம், நல்ல நோக்கத்துடன் நடந்து,நல்லவிதமாக நடந்து தாய்நாட்டுப் பாசத்துடன் ஜாதி மத பேதமில்லாமல் அனைத்து மக்களின் மேலும் நேசத்துடனும்,பாசத்துடனும் மனித நேயத்தை மனதிலே தேக்கி அறவழியை உணர்த்தும் வண்ணமாக சத்திய வழியில். அஹிம்சாவழியில் நடந்தே அடிமைப்பட்டிருந்த நம் தேசத்துக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க காரணமாய் இருந்தவர்கள் பலர் அவர்களில் மஹாத்மா காந்தி அவர்கள், வினோபாபாவே அவர்கள்,ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள். நடந்தே ஒரு நாட்டுக்கு விடுதலை வாங்கி கொடுக்க முடியுமென்றால் நடக்கலாமே, நடக்க நடக்க நாடெங்கும் உறவு, உலகமே உறவு என்று எல்லைகள் விரிந்துகொண்டே செல்லும் வாய்ப்பு இருக்கிறது, நடப்போம்.. நடப்பதால் மற்றும் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது.? எல்லா மனிதர்களுக்கும் நம் உடலில் கொழுப்பு, சர்க்கரை, போன்ற பொருட்கள் இருக்கின்றன ,ஆனால் அவைகள் இருக்க வேண்டிய விகிதாசார அளவு குறைந்தாலோ,அதிகரித்தாலோ அதை நோய் என்கின்றனர் மருத்துவர்கள், இருக்க வேண்டிய அளவுக்கு குறைந்தாலோ,அதிகரித்தாலோ, அது அளவுக்கு மிஞ்சுதல் என்று பொருள் கொள்ளலாம். "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்" அல்லவோ, அப்படி அளவுக்கு மிஞ்சினால் உடனே வைத்தியர்கள் ”நான் சொல்வதைக் கேட்டு நட” என்கிறார்கள். அதாவது நடந்தாலே அனேக வியாதிகள் குணமாகி விடுகின்றன என்று பொருள் கொள்ளலாம். ”ஆகவே நடந்தால் நாடெங்கும் உறவு” நாம் இருந்தால்தானே நடப்போம், நடந்தால்தானே இருப்போம். உறவுகள் பெருக வேண்டுமானால்,நடக்க வேண்டும், நல்லது நடக்கவேண்டும், நம்மால் அடுத்தவருக்கும் அடுத்தவரால் நமக்கும், நல்லது நடக்கவேண்டும். இளங்கோவடிகளார் சிலப்பதிகாரத்தில்“நடந்தாய் வாழி காவேரி” என்று புகழ்ந்திருக்கிறார்,அந்தப் பாடலை திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ”நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் கொழிக்க நடந்தாய் வாழி காவேரி” என்று வெங்கலக் குரலில் பாடியதைக் கேட்டிருக்கிறோம். ஆறு பொங்கிப் ப்ரவாகமாய் ஓடுவதைக்கூட நடந்தாய் என்று வர்ணிக்கிறார்கள்,அப்படி காவிரி நடந்தே எத்தனை ஊர்களை,கிராமங்களை செழிக்க வைத்திருக்கிறாள், பதினெட்டாம் பெருக்கு என்றும் ஆடிப்பெருக்கு என்றும் கொண்டாடும் நாளில் பலவித சித்ரான்னங்களை படைத்து காவிரிக்கரையில் கொண்டு சென்று பல மக்களோடு பகிர்ந்து அருந்தி பொதுவுடமையை நம் மக்கள் வளர்த்துக்கொள்ள உதவுகிறாள், நடந்தால் பொதுவுடமை வளரும் என்றும் நிரூபிக்கிறாள். நடந்தே மூவுலகும் சுற்றி நன்மை விளைவித்தவர் நாரதர் என்று சொல்வார்கள், நாரதருக்கு நாரதர் என்று ஏன் பெயர் தெரியுமா? நா--ரதம் ,அதாவது வாகனம் இல்லாதவர் என்று பொருள் , அவரே நடந்துதானே பல கலகங்களை செய்து நன்மை செய்திருக்கிறார் ஆகவே பெரியோர் சொல் கேட்டு நடப்போம்.. கலகம் செய்ய வேண்டாம் நாரதர் கலகம் செய்தாலும் நல்ல நோக்கத்திலே செய்வதால் நன்மை விளைகிறது,நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது சொல்வழக்கு . நாம் கலகம் செய்தால் அது நன்மை விளைவிக்காது. நல்லதைமட்டும் எடுத்துக் கொள்ளுவோம் நடப்போம், "அதே போல் படுத்தால் பாயும் பகை," ஒவ்வொரு மனிதரும் படுக்கவேண்டுமென்றால், ஒன்று இரவிலோ அல்லது பகலிலோ ஓய்வெடுக்க வேண்டிய அவசியத்தை முன்னிட்டுப் படுக்கலாம் வயதான பின்னரும் படுத்தால், அதாவது நோயில் படுத்தால் பாயும் பகையாகும்.பாய் எப்படிப் பகையாகிறது....? நோயினால் தாக்கப்பட்டு தன் சுய உணர்வே இல்லாமல்,அல்லது விபத்தில் அடிபட்டு சுயநினைவில்லாமல் ஒரே நிலையில் படுத்திருக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது அப்படிப் படுத்திருப்பவர்களுடைய உடலுறுப்புகளின் சீரான இயக்கம் தடைப்படுவதால் உடலில் பல இடங்களிலும், முதுகிலும் புண்ணாகும், இவற்றை படுக்கை காயங்கள் என்று மருத்துவத்திலே சொல்லுவார்கள் அதற்காக தண்ணீர் படுக்கை, காற்றுப் படுக்கை, என்றெல்லாம் எத்துணையோ விஞ்ஞான வசதிகள் வந்துவிட்டாலும், படுக்கையில் இருப்பவர்களுக்கு நாம் படுக்கையில் இருக்கிறோமே என்னும் நினைவே வியாதிகளை அதிகரிக்கும் மனோவியாதியாக துன்புறுத்தும் இங்கு படுத்தால் என்பது சோம்பினால் என்றும் பொருள் கொள்ளலாம், நாம் கொஞ்ஜம் அசந்தால் நம்மைக் கவிழ்க்க ஏராளமான சதி நடக்க ஆரம்பித்துவிடும் அப்படி இருக்க படுக்கலாமா...? தன்னுடைய மரணத்தை தக்ஷிணாயண காலத்திலிருந்து உத்திராயண காலம் வரையில் தள்ளிப் போட நினைத்த பீஷ்மர் கூட தரையில் படுக்கவில்லை சரப் படுக்கையில் படுத்தார், ஏனென்றால் அவருடைய உடற்புண்கள் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து மீளவும், மற்றும் சரங்களின் உறுத்துதல் இருந்து கொண்டே இருந்தால்தான் சோம்பாமல் இருக்க முடியும் என்றும், அதையும் தவிர அவருடைய தீர்க்க தரிசனம் மரணத்தையே தள்ளிப் போட்டிருக்கிறது என்னும் மஹாபாரத செய்தி ஆகவே படுக்காதீர்கள் ,அப்படிப் படுக்க வேண்டுமானால், நம்மை எப்போதும் எச்சரிக்கையாக இருக்கப் பணிக்குமாறு செய்யப்பட்ட படுக்கையில் படுக்கலாம் ஆகவே “படுத்தால் பாயும் பகை” ஆமாம் படுத்தாலே காத்திருக்கும் பகை எல்லாம் பாயும் என்பதைத்தான் பெரியவர்கள் நடந்தால் நாடே உறவு படுத்தால் பாயும் பகை என்று நம்மை எச்சரித்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது
ஸ்ரீமன் நாராயணன் கொண்டிருப்பது யோக நித்திரை என்று சொல்லுவார்கள், யோக நித்திரை கொண்டிருக்கும் நாராயணனையே எழுப்பிக்கொண்டே இருக்கிறார்களே அன்புடன் |